Wednesday, December 23, 2015

சமூக நீதி

நீதி மன்றங்களில் பல்லாண்டுகளாகக் குவிந்து கிடக்கும் வழக்குகள் முடிவுக்கு வரவே பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழ்நிலையில் அரசு தரப்பிலும்,எதிர் தரப்பிலும் தொடுக்கப்படும் வழக்குகள், சமூக நீதி கேட்டும்,ஊழலுக்கு எதிராகவும், அவதூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கேட்கும் வழக்குகள் என்று இப்படிப் பலவகையான வழக்குகளை நீதி மன்றம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வாதங்கள்,பிரதி வாதங்கள்,சாட்சியங்கள் ஆகியவற்றை சீர்தூக்கி ஒரு தீர்ப்பு சொல்வதற்குக் கால அவகாசம் மிகவும் தேவைப்படுகிறது. அப்படிச் சொல்லப்பட்ட தீர்ப்பு சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததால் மேல் மன்றத்திற்கு முறையீடு செய்கிறார்கள். அங்கும் பல ஆண்டுகள் ஆனபிறகு தீர்ப்பு வந்தாலும் உச்ச நீதி மன்றத்தை அணுகுகிறார்கள். அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பையாவது ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா? அதையும் அப்பீல் செய்யத் தொடங்குகிறார்கள். " யார் அர்ச்சகர் ஆகலாம்" என்பது பற்றிய வழக்கை ஒருவகையாக உச்ச நீதி மன்றம் தீர்த்து வைத்துள்ளது. அதைப்பலரும் வரவேற்கும் நிலையில்  ஒரு சிலர்   தீர்ப்பைக் குறை கூறுவதோடு மேல் முறையீடு செய்யவும் எண்ணுகின்றனர்.

இதுபோன்ற சர்ச்சைகளுக்காகவே காத்துக் கொண்டிருக்கும் மீடியாக்களின் காட்டில் மழை. மக்கள் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலத்தான் இதுவும் இருக்கும்போலத் தோன்றுகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் காலம் இது. கட்டுரை எழுதுவதும் கார்டூன் போடுவதும் ஒரு வரையறைக்குள் இருந்தால் நல்லது. மேலே  உள்ள கார்டூனில் சொல்லப்படும் அரசியல் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எதற்கு எதை உவமானம் காட்டுவது என்ற விவஸ்தை கூட இல்லாமல் போய் விட்டதா? மார்க்கண்டேயன் மீது கால பாசம் வீச எமன் எருமையில் வந்ததும் சிவபெருமான் இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டுக் காலனைக் காலால் உதைத்துத் தனது பக்தனைக்   காப்பாற்றினார் என்ற புராணக் கதையை இங்கு எப்படி சித்தரித்திருகிறார்கள் பாருங்கள்!  மத்திய அரசு எமனாம்!  அவன் கையில் இருப்பது பாசக் கயிறு சி.பி.ஐ யாம்! ஊழல் அதிகாரி மார்க்கண்டேயனாகவும் .டெல்லி  முதல்வர் சிவலிங்கப்பெருமானாகவும்  கார்ட்டூனில்  காட்டப்பட்டிருக்கிறார்.கள்.  இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? கேட்டால் தமாஷ் பண்ணினோம் என்பார்கள்! கார்டூனை சீரியசாக  எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உபதேசம்பண்ணவும் ஆரம்பித்து விடுவார்கள். இவர்களது கிண்டலுக்கெல்லாம் புராணக் கதைகளும் கடவுளர்களுமா கிடைத்தார்கள்?

மீண்டும் அர்ச்சகர் விஷயத்திகு வருவோம். சில அரசியல் கட்சிகள் செய்யும் சதியால் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மக்களைத் திசை திருப்பி ஆக்கபூர்வமாகச்  சிந்திக்க விடாமல் ஒட்டு ஒன்றையே குறி வைத்து நடக்கும் துரோகச் செயல் இது. மக்கள் என்று தான்  உணரப்           போகிறார்களோ தெரியவில்லை. மனதைத் தொட்டுச் சொல்லட்டும். கிராமக் கோவில்களில் நானூறு ரூபாய் சம்பளத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் எத்தனை பேர் அர்ச்சகராக முன் வரத் தயாராக இருக்கிறார்கள்? இருக்கும் சிலரை வயிற்றில் அடித்து ஊரை விட்டுத் துரத்துவதில் இவர்களுக்கு என்ன இன்பமோ தெரியவில்லை!கால நிலைமையால் அர்ச்சகர் தொழிலுக்கு ஆள் குறைந்து வரும் கால கட்டத்தில்  நாட்டில் வேறு தொழிலே இல்லாமல் போய் விட்டது போல அர்ச்சகர் தொழிலுக்குக் குறி வைப்பதன் நோக்கம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பயபக்தியோடு அணுகவேண்டிய தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதன் விளைவை மேலுள்ள படமே விளக்கும். முக நூலில் வெளியான இப் படத்தின்  முழு விவரங்களும் தெரியாவிட்டாலும் படமே ஓரளவு கதையைச் சொல்லி விடுகிறதே!

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வதுண்டு. பத்திரிகைகளைப் படிப்பதையும், சமூக வலைத் தளங்களைப்  பார்ப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்  என்பார். நியாயம்தான். அதனால் மனம் படாத பாடு படுவதுதான் மிச்சம்.. நல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ தெரியவில்லை அப்பழக்கம் தொடர்கிறது. நிறுத்தும்  வழி தெரியவில்லையே!

Wednesday, November 25, 2015

ஆண்டவனுக்கு அழுக்கு ஆடையா ?

ஐயோ தெய்வமே உனக்கா இப்படிப்பட்ட ஆடை!
" கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு "  என்பார்கள். முதலில் உடையிலும் உடலிலும்  அழுக்கடையாமல் பார்த்துக்   கொண்டால் உள்ளத்தில் அழுக்கடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அடுத்ததாக ஏற்பட வேண்டும். அவ்வாறு அந்த எண்ணம் ஏற்பட்டவுடனேயே இறைவனது அருள் அதற்குத் துணை செய்கிறது. " அழுக்கடையாமல் ஆண்டு கொண்டு அருள்பவன் " என்று இறைவனைத் துதிக்கிறார்  மாணிக்க வாசகர். இது உள்ளத்து அழுக்கைக் குறிப்பது. அகத்தில் உள்ள அழுக்கு களையப்பட்ட பின்புதான் அகக் கண் திறக்கப்படுகிறது. நம் உடல்,பொருள்,உடைமை எல்லாம் அவன் தந்தது என்ற ஞானம் பிறக்கிறது.

ஞானம் கைவரப்பெற்ற ஆன்றோர்கள் வகுத்துத் தந்த பூஜை முறைகளின் படி  நாம் நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஐசுவர்யமான  பசுவிடமிருந்து பெறப்பெற்ற பொருள்களால் இறைவனுக்கு அபிஷேகிக்கிறோம். பழங்கள்,மலர்கள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறோம். இவ்வாறு நன்றி தெரிவிக்கும் செயலாக நமது பூஜை அமைந்துள்ளது. இந்நிலை வந்துவிட்டால் உள்ளம் பெரும் கோவிலாக மாறுகிறது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும்  கொண்டு  அவனுக்குச் சேவை செய்து  அவற்றை அர்ப்பணிப்பது என்ற  உன்னத நிலையை  அடைவது  சாத்தியமாகிறது.

பல கோவில்களில் நாம் இன்று காண்பது என்ன ?  அதிலும் குறிப்பாகக் கிராமக் கோயில்களில் காண்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மூலவருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்கள் முறையாகத் தோய்க்கப்படாமல் எண்ணெய் பிசுக்கு எடுத்துத்  துர்நாற்றம் வீசுகிறது. அபிஷேகம் ஆனவுடன் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே வஸ்த்திரம் மீண்டும் போர்த்தப்படுகிறது.

அகிலாண்ட நாயகியை இப்படியா அலங்கரிப்பது!
சிவாசாரியப்பெரு மக்களைக்  கேட்கிறோம். இது போன்ற எண்ணெய் நாற்றத்துடனும் அழுக்குடனும் இருக்கும் வஸ்திரத்தை நாம் ஐந்து  நிமிடமாவது உடுத்திக்கொள்வோமா?  மாற்று வஸ்திரத்தைப் பயன்படுத்தி விட்டு அழுக்கு வஸ்திரத்தை அலசித் துவைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? அதற்கு ஆளுக்கு எங்கே போவது என்ற கேள்வி உடனே எழும். நமக்கு அந்த நிலை   எற் பட்டால் நம் கை தானே நமக்குத் துணை செய்கிறது ? பிறரையா நாடுகிறோம்?  சுவாமியைக் கல்லாகப் பார்த்தால் அலட்சியமே மிஞ்சும்.

ஒருக்கால் வேறு வஸ்திரமே இல்லாத கோயிலாக இருந்தால் சேவார்த்திகளாகிய நாம் முதல் வேலையாகப் புதிய வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டியதை நமது கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்தால் அந்த சிவ தருமத்தின் பலனாகப்   பல தலைமுறைகளுக்கு உணவுக்கும்  உடைக்கும்  பஞ்சம் இல்லாதபடி நம்மைத் தூக்கி விடும். இன்று முதலாவது செய்யத் துவங்கலாம் அல்லவா?  நமக்கு வாங்கிக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளாதபோது நமது முன்னோர் செய்து வந்த இதுபோன்ற தருமங்களையாவது  கை விட்டுவிடாமல் மறுபடியும் துவங்கலாமே! .

 தறி  வைத்திருப்பவர்களும் , ஜவுளிக் கடைக் காரர்களும் இந்த தருமத்தைச்  செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு கோயிலிலாவது அழுக்கு வஸ்திரத்தோடு தெய்வ வடிவங்களைத் தரிசிக்கும் நிலை ஏற்படாது. பிறருக்கும் அச்செயல் ஈடுபாட்டை வரவழைக்கும். அதற்காகவாவது அன்பர்கள் தங்கள் சுற்று வட்டாரத்திலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நமது கோயில்கள் மீண்டும் பொலிவு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Monday, November 9, 2015

கொட்டும் மழையில் திருவாரூர் கும்பாபிஷேகம்

தமது வாழ்நாளில் ஒருமுறையாவது கும்பாபிஷேக தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் ஏங்கும்  கோயில்களில் திருவாரூரும் ஒன்று.  தியாகேசனின்  ஆழித்தேர்  பவனியைக் காண  ஆயிரமாயிரம் பேர் கூடும் போது கும்பாபிஷேகத்தைக் காண  வருவோரது எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியும்? மூலாதாரத் தலமான திருவாரூரில் நடக்கும் இவ்வைபவத்தைக் காண வேண்டும் என்று தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து வருகை தருவோர் ஏராளம்.

பூங்கோயில் எனப்படும் தியாகப் பெருமானது திருக்கோயில் மிகப் பெரியது என்பதால் திருப்பணிகள் ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே துவக்கப்படுகின்றன. முதலில்  ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் கும்பாபிஷேகத் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேகமாக நடைபெறுவது எல்லா ஊர்களிலும்  நடைபெறுவது தான். ஆனால் இங்கோ ஆழித்தேர் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததும் வெள்ளோட்டம் விடப்பட்டது. ( ஆனால்  லட்சக் கணக்கில் செலவழித்துத் தயாரிக்கப்பட்ட தேர், வெளி வீதியில் மழையிலும் வெய்யிலிலும் வீணாவது ஏன் என்பது விளங்கவில்லை)

திருவாரூர் கோயிலில்  உபயதார்களது முயற்சியாலும்,ஆதரவாலும் எல்லா சன்னதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோபுரங்களும், விமானங்களும் செப்பனிடப்பெற்று வண்ணப்பூச்சு பூசப்பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று யாக சாலை தயாரானது.

திருவாரூர் நகர மக்களும் வெளியூர் அன்பர்களும் கும்பாபிஷேக தினத்தை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், 8.11.2015 ஞாயிற்றுக் கிழமை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. பொதுவாகக் கும்பாபிஷேகம்  உத்தராயணத்தில்( தை மாதம்  முதல்  ஆனி மாதம் வரை )  செய்வதை சிவாகமங்கள் உத்தமமாகப் பரிந்துரைக்கின்றன. அதிலும் சுக்ல பக்ஷத்தில் ( வளர் பிறையில்) செய்வது உத்தமம் என்கின்றன. ஆனால் இப்போது நடைபெற்றதோ  தட்சிணாயணத்தில் ,கிருஷ்ண பக்ஷத்தில் . இதற்கு ஆயிரம் சமாதானங்களும் விளக்கங்களும் இருக்கலாம்.

கொட்டும் மழையில் கும்பாபிஷேக தரிசனம் 
நடைமுறையில் இப்படித் தேதி நிர்ணயிப்பதால் ஏற்படும்   அசௌகர்யங்களைப் பற்றிச் சற்று சிந்திப்பது நல்லது. ஐப்பசியில் அடை மழை பெய்யும் என்பது எல்லோரும் அறிந்தது தான். அதிலும் இந்தத் தேதியை ஒட்டி தீபாவளிப் பண்டிகை வரும்போது, வெளியூர்மக்கள் எப்படி வர முடியும்? கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால் கிடைத்த பேருந்துகளில் வழி நெடுகிலும் மாறி மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் ஊர்களிலும் பேருந்து நிலையங்களிலும் நிரம்பி வழியும் போது மேலும் சங்கடம் நேர்வது தவிர்க்க முடியாததாகிறது. பேருந்து  நிலையத்தை ஒட்டியுள்ள உணவுக் கூடங்களிலும்  ஏராளமான மக்கள் கூட்டம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மழையினால் சேதமடைந்த சாலைகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடக்க வேண்டியுள்ளது. சாலை ஓர அசுத்தங்கள், கழிவுகள் இந்நீரில் கலந்து வருவதை நகராட்சி ஆண்டுதோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை ஓரங்கள் பொதுக் கழிப்பிடங்களாக மக்களால் சீரழிக்கப்படுகின்றன. எங்கும் நாற்றம், எதிலும் துர்நாற்றம் என்ற நிலை!! இப்படிப்பட்ட சுகாதாரமற்ற நிலையில் ,  கொட்டும் மழைக் காலத்தைத் தவிர்த்துத் தை மாத வளர்பிறையில் கும்பாபிஷேகத்தை வைத்துக்  கொண்டிருக்கலாம் அல்லவா? தை மாதத்திற்கு இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்படி என்ன  அவசரம்?

கும்பாபிஷேகத் தேதியை நிர்ணயிப்பது சிவாகமத்தை ஒட்டியே நடை பெற வேண்டும். ஆகம விற்பன்னர்கள் கூறும் பரிந்துரையை கும்பாபிஷேகக் குழுவினரும்,அரசாங்கமும் முழுவதுமாக ஏற்க வேண்டும். இதில் பிற தலையீடுகள் இருக்கலாகாது. திருப்பணிகளை உபயதாரர்களே செய்யும்போது அறநிலையத்துறையும் ஒத்துழைப்புத் தருவதே நல்லது. கும்பாபிஷேக தேதியை விருப்பம்போல மாற்றுவது ஆகம விரோதமானது மட்டுமல்ல. மக்களுக்கும் பல இன்னல்களை விளைவிப்பதாக முடிந்து விடுகிறது.

கோபுரங்களிலும் விமானங்களிலும்  யாக சாலையிலிருந்து தலையில் கடங்களைச் சுமந்தவாறு சாரத்தில் ஏறி உச்சிக்குச் செல்லும் சிவாச்சாரியப் பெருமக்களில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள். கொட்டும் மழையில் சாரப் படிகளில் சறுக்கி விழாமல் மிகுந்த எச்சரிக்கையாக ஏற வேண்டும். அடை மழையால் சாரப் படிகளைக் கட்டியுள்ள கயிறுகள் தளர்ந்து விட்டாலும் ஆபத்துத் தான்.    அத்தனை உயரத்திலிருந்து ...... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

லட்சக் கணக்கானோர் கண்டு ஆனந்திக்க வேண்டிய வைபவம் கொட்டும் மழையாலும், தீபாவளி தொடர்வதாலும் சில ஆயிரம் அன்பர்கள் மட்டும் தரிசிப்பதாகி ஏனையோருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இனியேனும் சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா?
  

Thursday, November 5, 2015

இயலும் இசையும்

மயிலாடுதுறை கடைமுகத்தில் நாதஸ்வர வித்துவான்கள் 
புகழ் ஏணியின் உச்சியில் ஏறிவிட்டால் எதை வேண்டுமானாலும் மக்களிடம் பேசலாம் என்னும் காலம் இது. அப்படி இருக்கும்போது,தான் மேலே ஏறிவந்த படிகளை மிகச் சிலரே திரும்பிப் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பணிவோடு பேசுபவர்கள் பெறும்  மதிப்பைக் காட்டிலும் வித்தியாசமான அணுகுமுறை என்று கூறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களே பத்திரிகைகள் மூலமும் தொலைக் காட்சி மூலமும் அதிக வரவேற்பையும் மதிப்பையும்  பெறுகிறார்கள் !

இசைக்கு ஆதாரமாக விளங்குவது இயல். அதுவும் பக்தி பாவத்தோடு இசைக்கப்படும் போது மேலும் மெருகூட்டப்படுகிறது.   ஒரு முன்னணி     கர்நாடக சங்கீதக்காரர்  ஒரு தினசரிக்கு சமீபத்தில் தந்துள்ள  பேட்டியில் இசைதான் பிரதானம் என்றும் பக்தி , சாகித்தியம் ஆகியவை அடுத்தபடிதான் என்றும் சொல்லியிருக்கிறார். இவர் பாடும் பாடல்கள் பக்தியோடு பாடப்பெற்றவை . பணத்திற்காகப் பாடப் பெறாதவை. அழியா வரம் பெற்றவை. ஒரே பாடலைத் திரும்பத்திரும்ப எத்தனை பேர் எத்தனை முறை பாடினாலும் அலுப்பைத் தராதவை. வாய்ப்  பாட்டின் மூலம்   பக்தியைக்  கேட்பவருக்கு ஊட்டக் கூடியவை. அவற்றோடு இசையும் சேரும்போது  கேட்போரைப் பரவசப் படுத்துபவை. இவர் சொல்லும் இக்காலப் பாடல்களுக்கு  இந்தப் பெருமைகள் உண்டா? அவை தற்காலிகமாகக் கேட்போரை  லயிக்க வைப்பது உண்மைதான். ஒரு  கால கட்டத்திற்குமேல் அவை தாமாகவே மக்களிடமிருந்து விலகிக் கொள்ளக் கூடியவை என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு கருத்துக் கூற மாட்டார்கள்.

எல்லா இசையும் இசை ஆகி விட முடியாது. தற்காலிகமாக மக்களைத் தன்  பக்கம் ஈர்க்கும் இசையையும், காலம் காலமாக நிலைத்து நின்று மக்களை இறை உணர்வு ஊட்டி நல்வழிப் படுத்தும் இசையையும் ஒன்றாகவே கருதுவதால் ஏற்பட்ட குழப்பம் இது. " நல்லிசையாளன்  புல்லிசை கேளா நற்றமிழ் ஞான சம்பந்தன் " என்று  தேவாரம் கூறுகிறது. நல்லிசையும் புல்லிசையும் வேறு வேறு என்று இப்பொழுதாவது உணருவார்களாக.
படித்ததெல்லாம் / கற்றுக்கொண்டதெல்லாம்  பக்திப் பனுவல்கள். ஆனால் வெளியிலோ  இறை நம்பிக்கை தனக்கு  இல்லை என்று கூறிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அப்படியானால் பணம் சம்பாதிப்பதற்காகப் போடும் வேஷம் என்று கருதலாமா? என்னவோ இவர்கள் இல்லாவிட்டால் கர்நாடக இசை குடிமுழுகிப் போய் விடுவதுபோல அறிக்கை விடுவதும் , மக்களும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கொடுமையிலும் கொடுமை. சபாக்காரர்களும் ரசிகர்களும் தன்  காலில் வந்து விழவேண்டும் என்ற இறுமாப்பில் பேசுவதாகத்தானே அர்த்தம்? கொஞ்சம் நாள் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைத்தால்   தானாகவே  திருந்தி விடுவர். ஆனால் அது நடக்கக் கூடியதா? இவர்களைத்தான்  அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் உட்பட எல்லோரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்களே!

தன்னால் ஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகத்தை யாழில் இசைக்க முடியவில்லை என்றவுடன் அந்த யாழையே முறிக்கச் சென்றார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவ்வாறு இசைக்குள் அடங்காதது தெய்வப் பனுவலாகிய இயல் என்பதைக் காட்டி அருளியவர் ஞானசம்பந்தர்.  இசை ஒன்றே போதும் என்பவர்கள் வெறும் ஆலாபனை செய்து கொண்டு இருக்க வேண்டியது தானே! இயல்,இசை இரண்டும் இறைவனின் கொடைகள். இரண்டும் இணைந்து பக்தி உணர்வோடு இசைப்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. கொட்டும் மழையிலும் பக்தியோடு சுவாமி புறப்பாட்டில் மல்லாரி வாசிக்கும் நாதஸ்வர வித்துவான்கள் எங்கே, இவர்கள் எங்கே!  உள்ளம் உருகி ,சொற்ப வருமானம் இருந்தபோதும் இறைவனது சன்னதியில் பக்திப் பாடல்களைப் பாடும் ஒதுவா மூர்த்திகள் எங்கே,இவர்கள் எங்கே!

எனது வழி  தனி வழி என்று பேசுபவர்களை ஒருக் காலும் திருத்த முடியாது. கருத்து சுதந்திரம் அவர்களுக்குத் துணை நிற்கும். அக்கருத்துக்களைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் பிறருக்கும் திணித்து அவர்களைத்  திசை மாறச் செய்வதைச் சுட்டிக் காட்டாமல் இருக்கலாமா?  

Wednesday, October 28, 2015

பாடல் பெற்ற தலங்கள் பொலிவிழக்க விடலாமா?

திருக்கருப்பறியலூர் என்பது திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப்  பாடல் பெற்ற சிவஸ்தலம். தற்போது தலைஞாயிறு என்று மக்களால் அழைக்கப்பெறும் இத்தலம், வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பட்டவர்த்திக்கு முன்பாக உள்ள சர்க்கரை  ஆலையை ஒட்டி வடக்கெ செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுவாமிக்குக் குற்றம் பொறுத்த நாதர் என்றும் அம்பிகைக்குக் கோல்வளை நாயகி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சுவாமி-அம்பாள் சன்னதிகள் சற்று உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளன. சுவாமியின்  கர்ப்ப  கோஷ் டங்களில் விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,துர்க்கை ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் கட்டுமலை அமைப்பைக் காணலாம். இது சீர்காழி ஆலயத்தை நினைவு படுத்துவதாக உள்ளது. படி ஏறிச்  சென்றால், தோணியப்பர் சன்னதியும் அதற்கும் மேலே மரப்படிகளில் ஏறினால்  சட்டநாத சுவாமியின் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.  அற்புதமான சோழர்காலக் கட்டிடக்  கலையைக்  கண்டு வியக்கிறோம். படிகளில் இறங்கி வந்து பிராகாரத்தை  வலம் வரத் துவங்கினால் ஸ்தல விருக்ஷமான முல்லையையும் அதன் அருகில் சிவலிங்க மூர்த்தியையும் தரிசிக்கிறோம்.

இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.  நுழை வாயிலில் உள்ள மூன்று நிலைக்  கோபுரம் மரங்கள் வேரூன்றியதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்நிலை நீடித்தால் கோபுரமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயில் திருப்பணியும் கும்பாபிஷேகமும் கண்டு  ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என அறிகிறோம். அதாவது , நான்கு கும்பாபிஷேகங்கள் நடந்திருக்க வேண்டிய இவ்வாலயம் ஒரு கும்பாபிஷேகத்தைக் கூட இக்கால  கட்டத்தில்     காணவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. மேல்தளமும் மழைக்காலங்களில் ஒழுகுவதாக அறிகிறோம். இதே போன்று ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகமும் திருப்பணியும் காணாது பழுது பட்ட நிலையில் இவ்வாதீனக் கோயில்கள் பல உள்ளன. எனவே  தனது நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகத் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சைவ உலக அடியார்  பெருமக்கள் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம். 

Wednesday, October 14, 2015

பெண்மையைப் போற்றுவோம்


கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், பிரமச்சாரி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை,சுமங்கலி பூஜை ஆகியவை  நடைபெறுவது வழக்கம். அதுபோலவே நவராத்திரியின் போதும் கன்னிப் பெண்களையும் சுமங்கலிகளையும் அம்பிகையாகவே பாவித்துப் பூஜிப்பது நடைபெறுகிறது. அம்பாளைப்  பத்து வயது உள்ள இளம் சிவப்பு நிறம் வாய்ந்த " கௌரி" என்றும், சதாசிவ பதிவ்ரதை என்றும் , சதாசிவ குடும்பினியாக லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இவ்வாறு பாலாயை என்றும், சுமங்கல்யை என்றும் சொல்லும் சஹஸ்ரநாமம், " சுவாசின்யர்ச்சன    ப்ரீதாயை"  என்று  பரமேசுவரி விளங்குவதாகக்  கூறுவதை ஒட்டி,  நாமும் பழங்காலம் தொட்டே பெண்களைப் பராசக்தியின் அம்சமாகப்  போற்றி வருகிறோம். நமது ஆலயங்களிலும் , அறம் வளர்க்கும் அன்னையாய் தர்ம   ஸம்வர்த்தனி என்றும் , மங்களத்தைத் தரும் மங்களாம்பிகையாகவும், அஞ்சேல் என்று அபயமளிக்கும் அபயாம்பிகையாகவும், கருவைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையாகவும் , ஞானம் அளிக்கும் ஞானாம்பிகையாகவும் பலப்பல நாமங்களோடு அம்பிகை காக்ஷி அளிக்கிறாள்.

இன்று ஆலய வழிபாடுகளில் அதிகமாகப் பங்கேற்பவர்கள் பெண்கள் என்பது உண்மை. பிரதோஷம்,வெள்ளிக் கிழமை ,பௌர்ணமி, நவராத்திரி போன்ற நாட்களில் பெண்கள் அதிக அளவில் ஆலய தரிசனத்திற்கு வருகிறார்கள். இந்த ஸ்திரீ தர்மத்தால் தான் ஓரளவாவது நமது கலாசாரம் பாதுகாக்கப் படுகிறது. சைவத்தைப் பாதுகாத்தவர்களில் மங்கையர்க்கரசியாரும், அப்பரது தமக்கையான திலகவதியாரும் ஆற்றிய தொண்டை நாம் நினைவு கூர  வேண்டும்.  காலக் கோளாறினால் பல பெண்கள் தொலைக் காட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டாலும் ஆலய வழிபாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியைத் தரும் விஷயம். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே எழுந்து விடுகிறது.

பெண்கள் பெருவாரியாகப் பங்கேற்கும்  நவராத்திரி நாட்களில் வயதானவர்களே அதிகம் காணப்படுவதால் இம்மாற்றம் தற்காலக் கல்வி முறையால் ஏற்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. வீடுவீடாகச் சென்று தேவியின் மீது கொலுவின் முன் அமர்ந்து பாடிவிட்டுப் பெரியவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்த குழந்தைகள் இப்போது எங்கே? முன்கூட்டியே இத்தனை மணிக்கு வருகிறோம் என்று " அப்பாயின்ட் மென்ட் "  வாங்கிக்கொண்டல்லவா போக வேண்டி இருக்கிறது!  அப்படியே போனாலும் எல்லாமே செயற்கையாக , பக்தியில்லாத, வெளி -வேஷம் கொண்ட  படாடோபமாகவே எஞ்சுவதைப் பார்க்கிறோம்.

பெண்ணடிமை என்ற விலங்கை உடைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பற்ற சுதந்திரத்தை அல்லவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம்! மேற்கத்திய கலாச்சாரமும், நவீனக் கல்வியும் இவ்வாறு புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டு  அஞ்ச வேண்டிய நாம் ,  ஆனந்தப் படும் பெற்றோர்களைத்தான்  பார்க்க வேண்டியிருக்கிறது.

தொலைக் காட்சியில் தொல்லைக் காட்சிகளே அதிகம்.   மனத்தைக் கெடுப்பதும் , குற்றங்கள் புரியத் தூண்டுவதும் இதனால் முன்பை விடத்  துரிதமாக்கப் படுகின்றன.வீட்டில் உள்ள பெண்களை உருப்படியான வேலை செய்ய விடாமல் மதியம் முதல் நள்ளிரவு வரை அடிமைப் படுத்தி விடுகிறார்கள்.  ஆம்! இதுவும் ஒருவகையில் அடிமைத்தனம் தான். பெண்ணடிமை பற்றிப் பேசுபவர்கள் இந்த அடிமை விலங்கை உடைக்கக் காணோமே! இதன் பாதிப்பு அவரவர்கள் வீடுகளில் நடக்கும்போதுதான் உணருவார்களோ என்னவோ! அப்படிப்பட்ட நிலையும் பல குடும்பங்களில் நடைபெறுவது ஆரம்பமாகி விட்டது.

முன்பெல்லாம் பள்ளிக்கூட அளவில் தவறுகள் அவ்வளவாக நடை பெறவில்லை. இப்போது அதுவும் சீரழிந்து வருவது பரிதாபம். ஒருவேளை ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில் படிப்பதால் இவ்வாறு நடக்கிறதா என்று தெரியவில்லை. தனித்தனியே பள்ளிகள் இருந்தது போக, மேலை நாட்டுக் கல்வியை இருபாலாரும் ஒரே பள்ளியில் கற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது அதோடு நிற்காமல் சினிமா பாணியில் உடை அணிவதும் ஊர் சுற்றுவதும் பெற்றோரை அவமதிப்பதுமாக  அதிகரித்து வருவதை யாராவது மறுக்க முடியுமா ?  கோடியில் ஒரு பெண் குழந்தைக்குக் கூட இதுபோன்ற நிலை வர நாம் அனுமதிக்கலாமா?  இவற்றை நியாயப் படுத்துபவர்கள் இருப்பதால் தான் தவறுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.  அக்கிரமங்கள் நாளடைவில்  தொடர் கின்றன.  போலீஸ் ஸ்டேஷன்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவற்றைச் சுட்டிகாட்டுபவர்களைப் பத்தாம் பசலிகள் என்றும், அடிப்படைவாதிகள் என்றும் பெயர் சூட்டி விட்டுப்  , பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டிப்பதாக அறிக்கை விட்டு விட்டுக் கண்களை மூடிக் கொண்டு இருப்பது இன்றைய அலங்கோலம்!

ராஜராஜனின் பெரியன்னை செம்பியன்மாதேவியார் போன்ற சிவபக்தியும் பதிபக்தியும் மிக்கவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் புண்ணிய பூமி இது. அது கறை  பட்டு விடக் கூடாது. சைவ மறு மலர்ச்சிக்காகத் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்த மங்கையர்க்கரசியார்  சேக்கிழார் பெருமானால் " குல தெய்வம்" என்று போற்றப்படுகிறார். அத்தனை பெருமை மிக்க நமது பாரம்பர்யம் வீணாகாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்கும் பெற்றோர்களாகப் பெற்றோர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொண்டு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் அவ்வழியையே பின்பற்றுவார்கள். நமது பாரம்பரியமும் காப்பாற்றப் பட்டுவிடும். ஈசனைப் பிரியா நாயகியான அம்பிகையின் அருள் முன் நிற்பதாக.

Thursday, October 1, 2015

எல்லாப் பிழையும் பொறுப்பாய்

பெரியவர்கள் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த காலம் போய் தற்போது ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு புதிய வழியை அமைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இதற்குத் தனி மனிதர் சுதந்திரம் என்று பெயர் இட்டு விடுகிறார்கள்! தற்கால நீதியும் இதற்குத் துணை செய்வதால் எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் என்ற எண்ணம் தலை தூக்குகிறது. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகளைப் பொறுப்பாயாக என்று இறைவனிடம் வேண்டிய காலம் போய் விட்டது. வேண்டுமென்றே தவறுகள் செய்யும் காலம் இது. என்னைப் பொறுத்தவரையில் அது தவறு அல்ல என்ற எதிர் வாதம் வேறு! ஆகவே யாரும் யாரையும் திருத்த முடியாது என்ற நிலை இப்போது உருவாகி விட்டது.

தான் வேறு வழியில் போவதோடு நிற்காமல் மற்றவரை ஏளனம் செய்வதையும்  குறை  கூறி எழுதுவதையும்  தொழிலாகக் கொண்டவர்களையும்  பார்க்கிறோம். இதனால் பழைய நெறி முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். நாகரீக உலகம் அவர்களை ஏற்பதில்லை. எளிய வாழ்க்கை முறை  நாகரீக வாழ்க்கைக்கு முன் அடி பட்டு விடும் போல் இருக்கிறது. சமூகத்தில் ஒரு அந்தஸ்தை நாடுபவர்கள்  இந்த நாகரீகப் போர்வையைப் போர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எப்பொழுது இந்த நாகரீகம் வீட்டிலேயே ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே பழைய வாழ்க்கை முறைகள் திரும்பிப் பார்க்கப் படுவதில்லை.

இந்த மாற்றங்கள் ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. " வேத நெறி தழைத்து ஒங்க " என்று திருமுறை பாடி விட்டு மறுகணமே " புரியாத பாசை நமக்கு எதற்கு? "  என்று கேள்வி எழுப்புகிறார்கள். வடமொழி புரியாத பாஷையாகவே இருக்கட்டும். தமிழை முற்றிலும் பொருள் உணர்ந்து இவர்கள் படிக்கிறார்களா? இந்த மொழி துவேஷம், கோயில் வழிபாட்டிலும் சடங்குகளிலும் காட்டப்பட்டுத் திருமுறைகளை ஓதிக் குடமுழுக்கு செய்வதும் , திருமணங்கள் செய்வதும், இறுதிச் சடங்குகள் செய்வதும் சில இடங்களில் ஆரம்பமாகி இருக்கிறது. இவை எல்லாம் மொழியின் மேல் உள்ள பற்று என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை. தமிழில் செய்து வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களை அல்லவா  பார்க்கிறோம்!

திருவாசக முற்றோதல் , கயிலாய வாத்தியம் ஒலித்தல் என்பன போன்ற மாற்றங்களும் அண்மைக் காலத்தில் அரங்கேறியுள்ளன. திருவாசகத்தை முற்றோதுவது சிறப்பானது தான். அதனை ஒரே மூச்சாக அரை நாளில் வாசிப்பதால் எத்தனை பேருக்கு அதன் பொருள் புரியும்? இதை விடக் கொடுமை என்னவென்றால் உயிர் நீத்தவர்களின் அந்திமக் கிரியைகளுக்கும் திருவாசகம் ஓதப் படுவதுதான். இதுபோன்ற தவறான வழி காட்டுதல்களை மடாதிபதிகள் திருத்த வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தான் நினைத்ததை எல்லாம் செய்வது என்று ஆகி விட்டால் சமயத்திற்கென்று ஒரு  நெறி இல்லாது போய் விடும். ஊர் ஊராக அவர்கள் விஜயம் செய்து மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். கயிலாய வாத்தியக் குழுக்கள் வந்தவுடன் நாதஸ்வரங்கள் உறையில் இடப்படுகின்றன. மந்திர ஒலியோ தேவார இசையோ கேட்பதில்லை. இவையெல்லாம் ஆரம்பத்திலேயே திருத்தப்படாவிட்டால் ஆல  விருட்சம்  ஆகி சமயத்திற்கே ஆபத்து விளைவித்து விடும்.

மாற்றங்கள் கால நிலைமையால் ஏற்படுபவை என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் மூலம் தலை கீழான மாற்றங்கள் ஏற்படுமானால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக் கூடும். ஆலயங்களை  பயபக்தியுடன் அணுகாவிட்டால்  அதிகாரம்,ஆணவம், ஆகியவை தலைதூக்கி விடும். இறைவனுக்கும் தலை வணங்காதபடி அகம்பாவம் நம்மைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

திருநாவுக்கரசரது  தேவாரப் பாடலின் ஒரு பகுதியை நாம் இங்கு நினைவு கூர்வோம்:
...." எ(ன் )னை  ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் ; பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்  பிழைத்தனகள்  எத்தனையும் பொறுத்தாய் அன்றே..."

  நாம் அன்றாடம் செய்யும் அக்கிரமங்களை இறைவன் ஒருவனால் மட்டுமே பொறுக்க முடியும். ஆனால்  பிழைகள் நாளடைவில் எல்லையில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. " எல்லாப்  பிழையும்  பொறுத்து அருள்வாய்" என்று  இப்போதாவது பிழை பொறுத்து மன்னிக்க வேண்டி நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். நம்மைப் பிடித்த ஆணவ மலம் அப்போதுதான் அகலும்.

Thursday, August 27, 2015

கிராமக் கோயில்களின் புனிதம் காப்போம்

நாம் கோயிலுக்குச் செல்வதால்  நமக்கு என்ன  நன்மை என்பதைவிடக்  கோயிலுக்கு என்ன நன்மை என்று  எண்ண வேண்டியிருக்கிறது. தனியாகச் சென்றாலோ குழுவாகச் சென்றாலோ உண்டியலிலோ தட்டிலோ சில்லறைக் காசுகளைப் போட்டுப் புண்ணியம் தேடுவதும்,பரிகாரம் தேடுவதும்  வழக்கமாக ஆகி விட்டது. ஆனால் கோயிலின் நிலையோ அல்லது சிப்பந்திகளின் நிலையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஜோதிடர் சொன்னார் என்பதாலோ, பத்திரிகைகள் மூலம் படித்ததாலோ  கோயில்களைத் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தும் இந்த நிலை தொடர்கிறது. புராதனச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் பார்ப்பது போல ஆலயங்களில் பார்த்துவிட்டுப் போவோரும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் பக்தி உணர்வோடு ஆலயம் தொழுவோர்  குறைந்து சுயநலம் மேலோங்குவதையே காண்கிறோம்.

ராஜராஜனின் ஆயிரமாண்டு,ராஜேந்திரனின் ஆயிரமாண்டு என்று விழாக்கள் எடுத்தும், அம்மன்னர்கள் கட்டிய/ பராமரித்த  கோயில்களும் தருமங்களும் பராமரிக்கப்படாமலே உள்ளன. கிராமங்களில் ஒருகால பூஜை நடப்பதே சிரமமாக இருக்கிறது. அந்த ஒருகால பூஜையிலும் அன்றாடம் பங்கேற்கும் உள்ளூர் வாசிகள் எத்தனை பேர்?? இந்நிலை தொடர்ந்தால் ஒருகால பூஜையும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பூர்வீக கிராமங்களை விட்டுச் சென்றவர்களில் மிகச் சிலரே தங்கள் கிராமக் கோயில்களைப் பற்றி அக்கறை காட்டுகிறார்கள்.

நில வருவாயைப் பெற்றுத்தருவதில் நிர்வாக அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது அரசாங்கத்திற்குத் தெரிந்தும்  என்ன பயன்? சொற்ப மாத சம்பளத்தையும் தராமல் அர்ச்சகர்களை வாட்டும் அறநிலையத்துறையின் பிடியில் கிராமக் கோயில்கள் சிக்கித் தவிக்கின்றன. இவ்வாறு வருமானமே இல்லாமல் எத்தனை காலம் தான் சிப்பந்திகள் துன்பப்படுவார்கள் ?  சமயத்தைக் காப்பதற்கென்றே ஏற்பட்ட மடாலங்கள் இதற்கு என்ன  செய்யப் போகின்றன?  அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லாது போகும் நிலை வந்தபிறகு விழித்துக் கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை. இப்போதே அதன் அறிகுறிகள் பல இடங்களில் தெரிய ஆரம்பித்து விட்டன.

சிரத்தை குறைந்தால் ஆலயங்களில் இறைவனின் சாந்நித்தியம் குறையவே செய்யும். அப்படிக் குறையக் கூடாது என்பதற்காகவே, ஆகம விதிகளின்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  கும்பாபிஷேகம் நடத்தினர் நமது முன்னோர். முந்திய கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் எத்தனையோ கோயில்கள் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருக்கின்றன. . இதில் மடாலயங்களின் பராமரிப்பில் உள்ள கோயில்களும் இருப்பது நமது துர்பாக்கியம்.

நித்திய பூஜைகள் இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப் பட்ட நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று உண்டு. சாநித்தியம் குறையாமலிருக்க அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும், பாராயணங்களும் செய்யலாம். இவை எல்லாம் நமது பிழை பொறுக்குமாறு  இறைவனை வேண்டும் மனப் பாங்குடன் நடைபெற வேண்டும்.

அண்மையில் திருவிசைப்பா பதிகம் பெற்ற சாட்டியக்குடி ஸ்ரீ ருக் வேத நாத சுவாமி ஆலயத்தில் ஆர்த்ரா பவுண்டேஷனின் சார்பில் ருத்ர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக சுவாமிக்கும் வேத நாயகி அம்பாளுக்கும் கலசங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றன. இதுபோலப் பலரும் முன்வந்து தமது ஊர்க் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறச் செய்ய வேண்டும். அதனால் ஊரார் ஒன்று கூடுவதோடு, கோயிலும் பொலிவு பெறும். சிப்பந்திகளும் உற்சாகத்தோடு பணி ஆற்றுவர். எடுத்துச் சொல்பவர்கள் இருந்துவிட்டால் கேட்கத் தயாராக மக்கள் இருக்கிறார்கள். நகரத்தை விட்டு நல்ல மனம் படைத்தவர்கள் கொஞ்சம் கிராமப்புறம் எட்டிப் பார்க்க வேண்டும். எத்தனையோ பணிகள் அங்கு காத்திருக்கின்றன. செய்வதற்கு மனமும் இறை அருளும் வேண்டுமே!! 

Friday, July 24, 2015

ஏகாம்பரநாதருக்குப் புதிய உற்சவரா?

எத்தனையோ ஆலயங்களில் பல்லாண்டுகளாக விக்கிரகங்கள் களவாடப்பட்டிருந்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் நமது அரசாங்கம் அலட்சியம் காட்டி வருவதை 23.7.2015 தேதியிட்ட   அமெரிக்க நாளிதழான " நியூயார்க் டைம்ஸ் " சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் கூட்டுச் சதிக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த இத்தனை காலதாமதம் ஆவதும் வியப்புக்குரியது என்று அதில் கருத்துத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என பெயரில் சுற்றிலும் உள்ள ஊர்களின் விக்கிரகங்களை ஒரு கோவிலில் வைத்துப் பூட்டியுள்ளதை இந்து  அறநிலையத்துறை செய்துவரும் நிலையில், சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மூர்த்திகளோடு , அருகிலுள்ள  கிராமக் கோயில்களின் விக்கிரகங்களும் அந்த ஊர்ப் பெருமாள் கோயிலில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தும், கொள்ளையர்கள் அவற்றைக் களவாடிச் சென்றதையும் இப்பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. நம்மவர்கள் எச்சரித்தால் அதை ஏற்றுக்கொள்வதில் கெளரவம் பார்க்கும் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. இதனைப் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைத்தாலும் அக் கமிட்டியின் பரிந்துரைகள் தயார் ஆகப் பல மாதங்கள் ஆகும். அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் கிடங்கில் பல்லாண்டுகள் போட்டுக் கிடத்தப்படும் . அது வரையில் விக்கிரகங்கள் எவ்வாறு பாதுகாக்கப் படும் என்பதே கேள்வி.

பாதுகாப்பான ஆலயங்களிலும் விக்கிரகங்களின் பழமை காரணமாகத் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. அவ்வாறு முற்றிலும் தேய்ந்தபிறகே அதனைப் பழுதுபார்ப்பதா அல்லது அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய விக்கிரகத்தை வார்த்துக் கொள்வதா என்று யோசிக்கிறார்கள். அவ்வாறு விக்கிரகங்கள் தேய்வதன் முக்கிய காரணம் தினமும் அபிஷேகங்கள் செய்வதும், அவ்வாறு செய்தபின் அவற்றில் ஒட்டியுள்ள நீரை முற்றிலும் அகற்றாமல் விடுவதுமே ஆகும். ஒருவேளை மூர்த்தியை உலர்ந்த வஸ்திரத்தால் துடைத்தாலும், மூர்த்தியின் பீடத்திலும்,அதன் கீழும் உள்ள ஈரம் துடைக்கப்படாமல் அப்படியே விட்டு விடப் படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் அரிப்பு ஏற்பட்டுப் பசுமை ஆகிவிடுவதைக் காண முடியும்.  நாளடைவில் அவ்விடங்கள் வேகமாகத் தேய ஆரம்பித்து விடுகின்றன. காற்றுப்பட்டே கறுத்துவிடும் விக்கிரகங்களும் உண்டு. ஒரு விக்கிரகம் தேய ஆரம்பித்த உடனே ,அதனை மேலும் தேயாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. விசேஷ தினங்களில் மட்டுமே உற்சவருக்கு அபிஷேகங்கள் நடத்துவது தேய்மானத்தைத் தாமதப் படுத்தும். தினந்தோறும் நீரால் புரோக்ஷணம் செய்யலாம். ஆகம வல்லுனர்கள் கவனத்திற்கு இதனை விட்டு விடலாம். வைணவக் கோயில்களில் இம்முறை பின்பற்றப்படுகிறது.  சிவாலயங்களிலும் நடராஜ மூர்த்திக்கு ஆண்டில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

விக்கிரகங்கள் பலம் குறைவதற்கு மற்றொரு முக்கியமான  காரணம் அவற்றைக் கையாளும் முறை. ஆர்வம் காரணமாகப் பல ஊர்களில் சுவாமியைத் தோளில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்( குதிக்கிறார்கள் என்று  கூடச் சொல்லலாம்). வாகனத்தில் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் விக்கிரகத்தின் அடிப் பாகம் ஏற்கனவே பலவீனமாக இருந்தால், அதை இச்செயல் மேலும் வலி  இழக்கச் செய்யக் கூடும். சில ஊர்களில் நடனம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 90 டிகிரிக்கு சுவாமியைத் தோளில் வைத்தபடி சுழற்றுகிறார்கள் . அப்படிச் செய்யும்போது தோளில் இருந்து தவறிப் பல்லக்கோடு சுவாமி வீதியில் விழுந்ததையும்  பலர் அறிவர். தூக்குபவர்களின் நிலையோ சொல்லும் தரமன்று! இப்படி இருக்கும்போது இந்த ஆட்டம் எதற்காக? மெதுவாக அசைந்தாலே போதும் அல்லவா?

பின்னணி இவ்வாறு இருக்கும்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமியின் (உற்சவ மூர்த்தியின்) பீடம் பழுதடைந்ததாகவும் அதனால் வசந்த உற்சவம் நின்று விட்டதாகவும் , வேறொரு புதிய மூர்த்தியை காஞ்சி சங்கர மடம் செய்து  உற்சவத்திற்காகத் தருவதாகவும், அதன்படி செய்வதா அல்லது பழைய விக்கிரகத்தைப் பழுது பார்ப்பதா என்று யோசித்து வருவதாகவும்  பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகிறது.
இதனால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. பீடம் முற்றிலுமாகப் பழுது அடைவதை ஏன் முன்னரே கண் காணிக்கவில்லை?

2 கண்காணித்திருந்தால் தடுப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை?

3 பங்குனி உற்சவத்தில் வீதி உலா சென்ற மூர்த்தி ஒரு சில மாதங்களிலேயே முற்றும் பழுதாகி விட முடியுமா?

4 சுவாமியின் நெற்றியில் பல்லாண்டுகளாக சந்தானம் இடப்பட்டதால் அதிலுள்ள நீர் அப்பகுதியை ஆழமான வடுவாக்கி விட்டது தெரிந்தும், தினந்தோறும் அந்த வடுவை அடைப்பதுபோலப் பெரிய அளவில் சந்தனம் இடப்படுவதால் அப்பகுதி மேலும் பாதிக்கப் படாதா? நெற்றியில் அவ்வடுவை மறைக்கக் கல் இழைத்த நெற்றிப்பட்டை வைக்கலாமே! பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். சந்தனத்தை சிறிய பொட்டாக வைத்து நெற்றிப் பட்டையை வைப்பதால் மூர்த்திக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் செய்ய முடியும்.                   ( இதனை  " சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு " என்று சம்பந்தரும் பாடி இருக்கிறார்.)

5  எக்காரணம் கொண்டும் மூர்த்தியைக் கோயிலுக்கு வெளியில் அனுப்பிப் பழுது பார்க்கக் கூடாது. அவ்வாறு அனுப்பப்படும் மூர்த்திகள் களவாடப்பட்டுப் போலியான மற்றொரு விக்கிரகம் கோயிலுக்கு வந்து சேரும் அபாயம் இருக்கிறது. இதனை மேற்கூறிய அமெரிக்க நாளிதழ் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

6 கோயிலுக்குள் தக்க ஸ்தபதியாரைக்  கொண்டு பழுது பார்க்கும்போது ஆலய நிர்வாகிகளும், சிவாசார்யர்களும் உடன் இருத்தல் மிக மிக முக்கியமானது. அவ்வாறு துவங்கும் முன்பாக மூர்த்தியைக்  கலசத்தில் ஆவாகனம் செய்தும், வேலை முடியும் வரை ஸ்ரீ ருத்ரம்- திருமுறைப்  பாராயணங்கள் சன்னதியில் பாராயணம் செய்யப்படவேண்டும். இந்நிகழ்ச்சி பக்தி பூர்வமாகச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.. வேலை பூர்த்தியானதும் கலச நீரால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். ஆகம விற்பன்னர்கள் ஆகம வழி நின்று இதற்குத் துணை புரிய வேண்டும்.

7 புதிய விக்கிரகம் செய்து கொண்டு மாற்று வழி தேடுவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய விக்கிரகமும் பூம்புகார் விக்கிரகமும் ஒன்றே என்று ஆகி விடும். பழைய மூர்த்திக்கு அதன் சாந்நித்தியம் பெருமை சேர்க்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. காஞ்சியிலும் பிற ஊர்களிலும் உள்ள சிவனடியார்கள் இக்கருத்தை ஏற்பர் என நம்புகிறோம்.

பலமுறை எழுதியும் பத்திரிகைகள் விக்கிரகத்தை தெய்வமாகக் கருதாமல் உலோகச் சிற்பமாகவே காண்பது வேதனைக்கு உரியது. அதன் மதிப்பு எவ்வளவு என்பதிலும் எந்த  உலோகத்தினால்  செய்யப்பட்டது என்பதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வத்தால் அடியார்களே வலைத்தளங்களில் கோயில்களில் உள்ள மூலவர்  மற்றும் உற்சவர் படங்களை அடிக்கடி வெளி யிடும்போது , பரபரப்பான செய்திக்காகக் காத்திருக்கும் செய்தித் தாள்களைப் பற்றிச் சொல்வானேன்? இத்தனைக்கும் காரணம் நம்மிடையே தெய்வத்திடம் பக்தியும் பயமும் இல்லாமல் போனதுதான்.    

Thursday, July 16, 2015

சிலைத் திருட்டைத் தடுக்காதது ஏன் ?

சுமார் அறுபதாண்டுகள் முன்னர்  தமிழகக் கோயில்கள் ஓரளவு நன்கு பாமரிக்கப்பட்டு வந்தன என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக, ஆதீனங்களால் பராமரிக்கப்பட்டவை நன்கு திருப்பணி செய்யப்பட்டும் ,நிர்வாகிக்கப்பட்டும் நித்திய பூஜைகள், விழாக்கள் முதலியன  நடத்தப்பட்டும் எல்லோரது பாராட்டையும் பெற்று விளங்கின. நாளடைவில், நில வருவாய் குன்றியதால் நிலை சீர்குலைய ஆரம்பித்தது. இருந்தாலும்,பரிகாரம் செய்து கொள்ளவும் , மணிவிழா போன்ற வைபவங்களை நடத்திக் கொள்ளவும் மக்கள் கூட்டம் பெருகி வருவதால் அத்  தலங்களுக்கு  கட்டண வசூலும் உண்டி வசூலும் பெருகி வருவதை மறுக்க இயலாது. இப்படி, வருமானம் உள்ள கோயில் அதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மற்ற  கோயில்களுக்கு உதவ முடியும்.

துரதிருஷ்ட வசமாக நாம் காணுவது வேறாக இருக்கிறது. ஆதீனக் கட்டுப்பாட்டில் வரும் பல ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஐம்பதாண்டுகள் மேலாகப் பொலிவிழந்து இருக்கின்றன. சில இடங்களில் இடிபாடுகளோடு இருப்பதையும் பார்க்கிறோம். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கோயில்களைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது நிச்சயம் அவர்களால் முடியும். அதனைத் திருவாவடுதுறை ஆதீனம் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து காட்டியுள்ளது. அவர்களது ஆலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றுக் குட முழுக்கு நடத்தப் பட்டுள்ளன. பிற மடங்களில் ஏன் இது சாத்தியமாகவில்லை என்பது தெரியவில்லை.

திருப்பணி நடைபெறாதது ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்குப் பாதுகாப்பாவது போதிய அளவு வழங்கக் கூடாதா?

விக்கிரகங்களும்,கலசங்களும்,ஆபரணங்களும்,உண்டியலும்  திருடப்படும் இக்காலத்தில் முன்னைவிட அதிக விழிப்பாக இருக்கக் காணோமே!! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் திருட்டுக்கள் குறைக்கப்படலாம் அல்லவா? மெய்க்காவல் புரியும் சிப்பந்திகள் பெரும்பாலும் முதுமை அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். தகுந்த நபர்களை நியமித்து, தக்க ஊதியம் அளித்து, உறுதியான  கதவுகளும் எச்சரிக்கை மணியும் அமைத்துத் தர வேண்டியது தானே?

சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதீனக் கோயிலில் கொள்ளையர்கள் புகுந்து முக்கியமான மூர்த்தியை எடுத்துச் சென்று விட்டதாகப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. ஆலயத்தின் பாதுகாப்பு குறித்துத் தணிக்கை நடைபெற்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்க முடியாது. வருமானம் அதிகம் இல்லாத தேவஸ்தானம் என்பதால் நிர்வாகமே இப்படி அலட்சியப் படுத்தலாமா? ஆதீன கர்த்தரும்,தம்பிரான்களும்,பிற மடத்து அதிகாரிகளும் ஆண்டுக்கு எத்தனை முறை வருகை தருகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அடியார்களாகிய நாம் செய்யக் கூடியவை என்ன என்பதை சிந்திக்கலாம். விக்கிரகங்களுக்குப் பாதுகாப்பு அறைகள் கட்டித்தர முன் வரலாம். அவற்றில் தொங்கு பூட்டைத் தவிர உள் பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். திருடர் அலாரம் அமைத்துத் தரலாம். இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம்.
இறைவன் தன்னை வைதாரையும் வாழ்விப்பவன், குற்றம் பொறுப்பவன்  என்றெல்லாம் புகழப் படுகிறான். அதனால்தான் உரிமையோடு இப் பாதகங்களைச் செய்கிறார்களோ தெரியவில்லை!  காமனைக் கண்ணால் விழித்தவன் இப்பாவியர்களைத் தண்டிக்காதது ஏன் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கேவலம் பணத்திற்காகக்  கோவிலைக் கொள்ளையடிக்கும் கும்பல் முற்றிலும் ஒழிக்கப் படும் வரை இக்குற்றங்கள் நீடிக்கும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அடியார்கள் செய்த பாவம் தான் என்ன?  கண்களும் காதுகளும் செய்த பாவம், இக் கொடுமைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேலும் எங்களுக்குத் தாங்கும் சக்தி இல்லை. நீயே கதி என்று இருக்கும் அடியார்கள் படுவது இதுவேயானால் உமக்கே பழி வந்து சேரும். அதற்காகவாவது,பிரிந்து சென்ற நீர் மீண்டும் திருக் கோயிலுக்கு எழுந்தருளி எங்களை வாழ்விக்க வேண்டும் என்று உனது பொன்னர் திருவடிகளுக்கு விண்ணப்பம் செய்வதைத் தவிர எங்களால் வேறென்ன செய்ய முடியும்? 

Monday, July 13, 2015

எதிலும் தமிழ் என்பது கோவிலுக்கு மட்டுமா?

"  எந்நாட்டவர்க்கும் இறைவா"  என்று திருவாசகம்  சிவபெருமானைத் துதிக்கும்போது, இறைவன்  எல்லா உயிர்களுக்கும் ,எல்லா மொழியினர்க்கும் பொதுவானவன் என்பது அறியப்படும். அதிலும் புண்ணிய பூமியாகிய பாரத நாட்டைப் பெரிதும் விரும்பி அருள் செய்பவன் அவன். அதைக்காட்டிலும் தென் தமிழகத்தை சிவலோகமாக்கியவன் என்றெல்லாம் அவனது பெருமைகள் பேசப்படுகின்றன.  இருப்பினும் எல்லா மொழியாலும் வணங் கப்படுபவன் என்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குள்தான் விருப்பு வெறுப்பு ஆகியவை இருக்கின்றன. ஆனால் பெருமானோ, " வேண்டுதல் வேண்டாமை இலான் "  என்று புகழப்படுகிறான்.
நாம் பிறரைப் போற்றத் தவறினாலும் ஒருநாளும் இகழ்ந்து ஒதுக்கத் தவறுவதில்லை. தமிழே தமது மூச்சும் பேச்சுமாக வாழ்ந்தவர்களை  மறந்து விட்டு, என்னால் தான் தமிழ் வாழ்கிறது என்று சொல்பவர்களைத் தான்  நாம் இன்று போற்றுகிறோம். இந்த ஒரு நூற்றாண்டு கால  மாறுதல்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், துவேஷமே முதலிடம் பெறுகிறது என்பதைக் காணும் போது அதிர்ச்சி அடைகிறோம்.

பிறமொழிகளின் ஆதிக்கத்தால் தமிழ் வழக்கொழிந்து விடும் என்று பேசுபவர்கள் நிறைய உளர்.  வீட்டிலேயே தமிழில் பேசுவது குறைந்து வருகிறது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. பிழைக்கும் வழி தேடிப் பிற நாட்டு மொழிகளைப் பள்ளிகளிலேயே கற்று விட முன் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நமது தமிழ் பாடத்திட்டம் எவ்வளவு கீழ்த் தரமாகப் போய் விட்டது என்று எவ்வளவு பேர் கவலைப் படுகிறோம்? பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எத்தனை பேர்  பிழை இல்லாமல் தமிழ் எழுதுகிறார்கள்?  தமிழ் உச்சரிப்பே சரிவராத நிலை அதைவிடக் கொடுமை! லகரம் ,ளகரம் ,ழகரம் , ணகரம் போன்றவை படும் பாட்டைத்தான் அன்றாடம் கேட்கிறோம்! முதலில் அதை யார் சரி செய்யப்போகிறார்கள்? வெறும் வீர வசனம் பேசி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவர்?  

அண்மையில் நடைபெற்ற " உலக யோகா தினம் "  அயல் நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு நாடும் ' யோகா " என்ற சொல்லைத்  தங்கள் மொழியில் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. காரணம் இதுதான்.  இந்த ஒரு செயலால் தங்கள் மொழிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதாததுதான். இதைப் பார்க்கும்போது நமக்கு மட்டும்    ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை வருகிறது என்று புரியவில்லை. நவீன யுகத்தில் விஞ்ஞானச் சொற்கள் ஏராளமாக உண்டாக்கப்படும் நிலையில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் நமது மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டு விடாது.

தமிழகத்தில் ஒரு கண்டுபிடிப்பைச் செய்து அதை புதிய ஒரு சொல்லால் அழைத்தால் உலகம் ஏற்காமலா போய் விடும்?  பிற நாட்டுப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் பெயரிட்ட படியே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கஷ்டப்பட்டாவது அதை மொழி பெயர்த்து மக்களிடம் திணிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?  உலகத்திலேயே மிக அதிகமான  எழுத்துக்களை       ( 237)  வைத்துக் கொண்டும் பழக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை வைத்துக் கொண்டுதானே மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது? அப்படியானால் ஞ , ங, போன்ற எழுத்துக்களுக்கு விடிவு காலமே கிடையாதா?

நிலைமை இப்படி இருக்கும்போது, அடுத்த மொழியின் மீது நாம் காட்டும் துவேஷத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை! அதிலும் ஆன்மீகத்தில் இந்த துவேஷம் அதிகமாகவே காட்டப்படுகிறது. உலகிற்கே நாயகனாகிய கடவுளை எவ்வாறு தமிழ்க் கடவுள் என்ற குறுகிய வலைக்குள் கட்டுப் படுத்த முடியும்?  வடமொழியை விரட்டுவது என்ற எண்ணம் வந்து விட்ட பிறகு , தமிழ் வேள்வி, தமிழில் அர்ச்சனை , தமிழில் வழிபாடு என்று ஒவ்வொன்றாக வந்து மக்களைப் பிளவு படுத்துகின்றன. எத்தனையோ தலைமுறையாக வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களும் அங்கு எழுந்தருளியுள்ள தெய்வங்களின் பெயர்களும் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். சென்னை- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள பழைய சிவத்தலம் திண்டிவனம் என்பது. புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்ததால் திந்திரிணி வனம் எனப்பட்டது. ஆகவே சுவாமிக்குத் திந்திரிணீசுவரர்  என்று பெயர் வந்தது.  அதை ஒரு சாரார்  புளியங்காட்டு ஈசர்  என்று தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள். கோவிலில் மட்டுமே தமிழ் இருந்தால் போதாது. இதெல்லாம் தாழ்வு மனப்பான்மையால் வந்த விளைவு.

 ஏதேதோ நவீனப் பெயர்களை ஏற்கிறோம்,நவீனப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கிறோம், குழந்தைகள் மம்மி,டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கொள்கிறோம் என்ற நிலையில் தமிழைப் பற்றிக் கவலைப் படாதவர்கள்,  கோவிலைக் குறி வைப்பதன் நோக்கம் தான் என்ன ?  பிரதோஷம் என்று சொன்னால் இப்போது பட்டி தொட்டிகளில்  எல்லாம் புரிந்து கொள்கிறார்கள். இடபதேவர் திருநாள் என்று மாற்றுவதால் குழப்பமே ஏற்படுகிறது. அபிஷேகம் என்று தான் மக்கள் சொல்வார்களே தவிர நீராட்டல் என்று யார் சொல்வார்கள்? இப்படி ஏட்டிக்குப் போட்டியாகச்  செய்வதால் பிற சமயத்தவர்களுக்குச்  சாதகமாகப் போய் விடுகிறது. தமிழ் மறை என்பது போன்ற சொற்களை நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் நூல்களுக்கு வேதாகமம் என்று பெயர் இடுகிறார்கள்.

இப்படி எழுதுவதால் நாம் எவருக்கும் தமிழார்வத்தில் குறைந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் மொழியை பலப் படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கில் வெளிநாட்டிலுள்ள  சர்வகலாசாலையில் தமிழ்ப் பிரிவை ஏற்படுத்தி விட்டால் மட்டும் போதாது. மக்களுக்குப் புரியும் எளிய சொற்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்  இல்லாவிட்டால் , வட்டாச்சியாளர், கோட்டாட்சியாளர், இயக்குனர் ,பேருந்து,உந்து வண்டி  போன்ற  சொற்கள் பலகையில் மட்டுமே இருக்குமே தவிர மக்கள் வாயில் இருக்காது. நமது வீடுகளில் நவராத்திரியின்போது கலைவாணியின் திருவுருவத்திற்கு முன்பாக நாம் படிக்கும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களோடு நம் குழந்தைகள் படிக்கும் ஆங்கில நூல்களையும் வைத்து, அனைவரும் கல்வி அறிவு  பெற வேண்டும் எனத் துதிக்கிறோம். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்த அவளுக்கு எல்லா மொழிகளும் ஏற்புடையதுதானே? ஆகவே,தமிழ்த் தாய் நமக்கு முத்தான சொற்களையும், நற்பண்புகளையும் வழங்கி அருளுவாளாக.

Friday, June 19, 2015

நகரத்தார் சிவத்தொண்டு தொடரட்டும்

திருக்காறாயில் சிவாலயம் 
சிவாலயத் திருப்பணி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர்கள் சோழ மன்னர்கள். அதற்கு அடுத்தபடியாக நாம் மறவாது நினைவு கூற வேண்டியது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த மாபெரும் சிவாலயத் திருப்பணிகள். அதிலும்,கருங்கல்லே கிடைக்காத சோழ நாட்டில் உள்ள ஆலயங்களைத் திருப்பணி செய்யக் கருங்கற்களை நெடுந்தூரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து, ஸ்தபதிகளைக் கொண்டு திருப்பணி செய்வித்தனர். இதற்கு மூலகாரணம் ,சிவபெருமானிடமும் சைவத்  திருமுறைகளிடத்தும்  அவர்களுக்கு இருந்த பக்தியே ஆகும். பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செய்யும்போது, அவற்றில் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்த கோயில்களைத் தாங்களே முன் வந்து கருங்கல் திருப்பணியாகவே செய்து தந்தனர்.

திருக்களர் பிராகாரக் கருங்கல் மதில் 
அப்படித் திருப்பணி செய்யப்பட்டவைகளில் உள்ளடங்கியுள்ள ஊர்களும் அடங்கும். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்  சைவத் திரு ராய.சொ.  அவர்கள் வெளியிட்ட தேவாரத் தலயாத்திரை பற்றிய நூலில் நகரத்தார்கள் செய்த கோயில்களின் விவரம் தரப்பட்டுள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பல லக்ஷம் ரூபாய் செலவில் பல கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன.

திருக்காறாயில் திருக்குளம் 
திருக்கோயிலை  மட்டுமல்லாமல் திருக்குளங்களுக்கும் கருங்கல் படித்துறை அமைத்துத் தந்தனர்.உதாரணமாகத் திருக்காரவாயில், திருக்களர் போன்ற ஊர்த் திருக்குளங்களைக் கூறலாம்.  அது மட்டுமல்ல. வேதபாடசாலைகள், தேவார-ஆகம பாடசாலைகள்,பசுமடங்கள்,நந்தவனங்கள்   ஆகியவற்றையும் அமைத்தனர். சிவாகம நூல்கள் பலவற்றை அச்சில் ஏற்றித்தந்த பெருமையும் இவர்களைச் சாரும். இப்பணிகள் எல்லாம் சுமார் எழுபது ஆண்டுகள் முன் வரை தொடரப்பட்டது என்று  சொல்லலாம்.  அவர்களது பரம்பரையினர் இன்றும் தம்மால் முடிந்த அளவில் அக்கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டைப் பார்க்கும்போது, புராதனக் கோயில்களைப் புதுப்பிப்பதில் நகரத்தாரின் பங்கு பற்றி அறிய ஆர்வம் ஏற்படுகிறது. நாம் அறிந்தவரையில் ,பல கோயில்களின் திருப்பணிக்கு இன்றும் உதவுகிறார்கள். ஆனால் அவர்களது முன்னோர்களைப் போன்று, மிகவும் பழுது அடைந்த சிவாலயங்களில் கருங்கல் திருப்பணி மேற்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. பண்டைக் காலம் போல் இன்றும் திரைகடல் தாண்டித்  திரவியம் ஈட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அப்படியும், புதியதாக எந்த சிவாலயத்திலும்  முழுமையாகக் கருங்கல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழ்க்கை நடத்துபவர்கள் முன்வந்தால், முன்னைக் காட்டிலும் அதிக அளவில்  சிவத் தொண்டாற்ற முடியும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சங்கங்கள் அமைத்துத் தங்கள் சமூகத்திற்கு உதவி புரிந்து வருவதை மறுக்க முடியாது. அதில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலய வைபவங்களிலும் பங்கேற்கிறார்கள். அதோடு, சுற்றுலா போன்றவைகளும் இடம் பெறுகின்றன. முன்னோர்கள் காட்டிச் சென்ற சிவாலயப் புனரமைப்பு , முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இடம் பெறாதது பெரிதும் ஏமாற்றத்தை  அளிக்கிறது.

தமிழகக் கோயில்கள் பலவற்றின் தற்போதய நிலை என்ன என்பதைத் தலயாத்திரை செய்பவர்கள் நன்கு அறிவார்கள். அரசாலும்,ஊர் மக்களாலும் கைவிடப்பட்டு, மரம் முளைத்துப் போன ஆலயங்கள் ஏராளம். ஆண்டுக்கு நூறு கோயில்களைப் புனரமைத்தாலும்,எல்லாக் கோயில்களையும் சீர் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. சுற்றுச் சுவர்கூட இல்லாததால் மூர்த்திகள் களவாடப்படும் அவலம் வேறு ! இதை எல்லாம் யாரிடம் சொல்வது? பரம்பரையாக சிவபக்தி உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சொல்ல முடியும்.

நிலங்களிலிருந்து வருமானம் இல்லாததால் நான்கு காலம் பூஜைகள் நடந்த கோயில்கள் ஒரு கால பூஜை செய்யப்படுவதையும், விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத நிலையையும் கண்டு எத்தனை பேர்  மனம் உருகுகிறார்கள்? அற்ப சம்பளத்தை மாதக் கணக்கில் தராமல் இழுக்கடிக்கப்பட்டும் பூஜையை விடாமல் செய்யும் அர்ச்சகர்களை எவ்வளவு பேர் ஆதரிக்கிறோம்? இந்நிலை நீடித்தால் ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வரக்கூடிய நிலை தூரத்தில் இல்லை.

எஞ்சியது சிவனார் மட்டுமே 
எல்லா சமூகத்திலும் வசதி உள்ளவர்களும் பக்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நகரத்தார் போல முழுக் கோயிலையும் கருங்கற்களால் திருப்பணி செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. இந்த நற்பெயர் நீடித்து நிலைக்க வேண்டும். தற்கால சந்ததியினரும் தங்கள் முன்னோர் போல அத்  தொண்டைச் செய்து வரவேண்டும் என்பதே நமது கோரிக்கையும் விருப்பமும் ஆகும். பல துறைகளிலும் இன்று பிரபலமாக விளங்கும்  நகரத்தார் சமூகம் இவ்வேண்டுகோளை ஏற்கும் என நம்புகிறோம்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர்  கூடலையாற்றூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்குத் திருப்பணி செய்வதற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு செட்டியார் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தாராம். கருங்கற்கள் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்தனவாம். இருட்டில் வழி மாறி, விடியற்காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, வேறு ஒரு சிவத்தலத்தில் (கடம்பூர் என்று நினைவு) வண்டி வந்து சேர்ந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் சிவாலயமும் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்ததைக் கண்டு இரங்கிய செட்டியார், அக்கற்களை அங்கேயே இறக்கச் சொல்லி, அக்கோயிலைத் திருப்பணி செய்து தந்தாராம். பின்னர் கூடலையாற்றூர்  ஆலயமும் திருப்பணி செய்யப்பட்டது. அப்பொற்காலம் மீண்டும் வருமா?  

Tuesday, June 16, 2015

பாரம்பரியமும் முன்னேற்றமும்

வாழ்க்கையில் முன்னேற ஆசை யாருக்குத்தான் இல்லை? இங்கேதான் ஒரு  நெருடல்  ஏற்படுகிறது. முன்னேற்றம் என்று நாம் எதை நினைக்கிறோம்?   அதற்கு அளவுகோல் எது? அந்த அளவை எட்டியவுடன்  முன்னேறியது போதும் என்ற எண்ணம் ஏற்படுமா?  வாழ்க்கைத் தரம் என்று  சொல்கிறோமே, அது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது? தனி மனிதனின் வருமானத்தையா? அப்படியானால் பணவசதி ஒன்று மட்டுமே அளவுகோல் என்று தானே அர்த்தம்? இதை வைத்துப் பார்த்தால் "கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு " என்பது ஏட்டு அளவில் மட்டுமா?  படித்தும் வேலைக்கு அலைபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒருவேளை வேலை கிடைத்தாலும், வருமானம்  பலருக்குப் போதுமானதாக இல்லை.

தேவைகள் நாளடைவில் பெருகவே, கடைகளில் விற்கப்படும் நவீனப்போருள்கள் அத்தனையும் நம்மிடம் இருந்து விட்டால் அதையே முன்னேற்றம் என்று எண்ணுபவர்கள் உண்டு. அப்படிப்பட்ட பொருளாதாரம் எற்படுவதற்குப் பல்வேறு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு குரல் கொடுக்கிறார்கள். அதுவே ஒற்றுமை என்றும் அந்த ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள். அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தை இழக்கவும் துணிந்து விட்டதுதான் துரதிருஷ்டம். கைப்புண்ணுக்கு மருந்து போடலாம். மருந்து வாங்கப் பிறர் உதவலாம். கையையே வேண்டாம் என்று சொல்லலாமா?

மேலை நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்றது உண்மைதான். இந்த வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் வீழ்ச்சியையும் அவர்கள் சந்திப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனையோ குடும்பங்களில் பெற்றோரிடமிருந்து பதினெட்டு வயதுக் குழந்தைகள் பிரிந்து தனித்து விடப்படுகிறார்கள் என்பதைப் பலர் அறிவர். அப்படி வெளி வந்தவர்களில் பலர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆவதையும் , மண வாழ்க்கைகள் முறிவதையும் காண்கிறோம். பணக்கார நாடுகளிலும் ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். அங்கும் வீடற்றோர் ஏராளம். இந்நிலையை நாமும் சந்திக்கத் தயாராகி வருகிறோமா?  

அரசியல் ரீதியாக நம்மிடம் பலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இதற்கு உறுப்பினர் சேர்க்கை, வலைத்தளம் மூலம் கருத்துப் பரிமாறல், சலுகைகள் கேட்டுப் போராட்டம் என்று இப்படிப் பல செயல்கள் அரங்கேறுகின்றன. இத்தனைக்கும் காரணம் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லாததுதான். அதை ஒரு பலவீனமாகவே மக்கள் கருதி இத்தகைய செயல்களில் இறங்குகிறார்கள். இவையெல்லாம்  தனி நபர் உரிமை என்று பறை சாற்றப்படுகிறது. ஓட்டுப் போடுவது உரிமை என்று சொன்ன பிறகு, ஓட்டுப் போட்டவர்கள் உரிமை கேட்டுப் போராடுவது என்பது ஜனநாயகத்தின் கட்டாயம்.

இப்படி மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வா என்று நாம் சிந்திக்க வேண்டும். எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைச் சார்ந்த அத்தனை பேரும் ஏழைகள் அல்ல. அதே சமயம் பணக்காரர்களும் அல்ல. ஏதாவது ஒருசில சமுதாயத்திற்கு அரசு போதிய நீதி வழங்கவில்லை என்றால் அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவது தங்களுக்குள்  உதவி செய்ய முன் வரலாம். ( அடிப்படையில் பார்த்தால் இதுவும் தவறு தான். ஏழ்மையில் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் உதவுவதே முறை.) அப்படிச் செய்யாமல் இருப்பதால் இந்த எளியவர்களை எவரும் கைகொடுக்க முன் வருவதில்லை. ஒருக்கால் சமூக அந்தஸ்து வந்துவிட்டாலும் இந்நிலை அத்தனை எளிதாக மாறாது. நமது பாரம்பர்யங்கள் தேவை அற்றவை என்ற எண்ணத்தையே அவை ஏற்படுத்தும்.

ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் பட வேண்டும்.  அரசுச்  சலுகையை எதிர்பார்த்துக் கொண்டு  இருப்பதால் வசதி உள்ளவர்கள் ஒருநாளும் உதவ முன் வரப்போவதில்லை. காலம் வேகமாக நகர்கின்ற போது, நமது பாரம்பர்யம் காற்றில் விடப் பட்டு விடும். வேடிக்கை பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கும்நிலை மாற வேண்டும்.கருத்துத் தெரிவிப்பதால் காலணாவுக்குக் கூடப் பயன் இல்லை. செயலில் காட்டுகிறோமா, ஒரு குடும்பத்திற்காவது உதவுகிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது. முன்னேற்றம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பது பின்னேற்றத்திற்கு அடிகோலும் என்பதை உணரவேண்டிய தருணம் இது.இல்லாவிட்டால் முன்னேற்றம் என்னும் போர்வையில் மிருக வாழ்க்கை ஒன்றே மிஞ்சும்.

நல்ல குணங்கள் அமைவது இறைவன் கொடுக்கும் வரம். " அடியார்க்கு என்றும் குணங்களைக்  கொடுப்பர்" என்பது   அப்பர் சுவாமிகள் வாக்கு.  இறைவனுக்கு அடிமை செய்யாமல் மனிதனுக்குத்  தலை வணங்கும் சமூகம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாம் சிவன் செயல் என்று இருக்க வேண்டியதுதான். அவரவர்கள் தாங்கள் செய்வதே சரி என்று வாதிடும் இந்தக் காலத்தில் நல்ல வழி காட்டப்போனால் கொள்வார் இருப்பது சந்தேகமே. மாற்றம் ஏற்பட சாத்தியக் கூறுகள் இருப்பது துர்லபம் என்று தெரிந்தும் சொல்லாமல் இருக்கக் கூடாதல்லவா? நமது கடமையை ஆற்றினோம் என்ற திருப்தியாவது இதனால் ஏற்படட்டுமே! 

Wednesday, May 27, 2015

அரசு கைவிட்டால் ஆண்டவனே கதி

மத்திய அரசின் பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த அறிக்கையின் முழு விவரங்களும் இன்னமும் தெரியாவிட்டாலும், அதன் நோக்கம் ஓரளவு தெளிவாகவே புரிகிறது. அதாவது, பழைய கலைப் பொருள்களை வெளி நாடுகளுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் உள்  நாட்டில் அவற்றை விற்க அனுமதி வழங்க யோசிப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு சட்ட திருத்தம் கொண்டு வருவதால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று நம்பினாலும், உள்நாட்டுக்குள் அவற்றை விற்கலாம் என்று அனுமதித்தால் நமது கலைப்பொருள்களுக்கும், பாதுகாப்பின்றி கிடக்கும் நமது கலைச் செல்வங்களுக்கும் ஆபத்து வரும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அதிக சிரமில்லாமல் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் பெருகி வரும் நிலையில் இப்படிப்பட்ட சட்டம் தேவையா ? கபூர் போன்ற கொள்ளைக் காரர்கள் அதிகரிக்கவே இது வகை செய்வதாக முடியும்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தாலே "கலைப் பொருள் "  என்று சட்டம் இருக்கும்போது அதை மேலும் கிடுக்கிப்பிடியாக இறுக்கவேண்டுமே தவிர, தளர்த்தப்படக் கூடாது. கொள்ளைக் காரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும். அவர்களைக் கொள்ளைக் காரர்கள் என்றே அழைக்க வேண்டும். ஆனால் நமது பத்திரிகைகளோ, புழல் சிறையில் இருக்கும் கபூரைக் " கில்லாடி கபூர் "  என்றும்  "  கடத்தல் மன்னன் " என்றும் வெட்கம் இல்லாமல் குறிப்பிடுகிறார்கள்.

நமது கிராமங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆலயங்களின் கலைச் செல்வங்கள் களவாடப் படும் தற்போதைய நிலையில், இதுபோன்ற சட்ட திருத்தம் பேராபத்தையே விளைவிக்கும். மாநில அளவில் அற  நிலையத்துறை  இதுபோன்ற கோயில்களுக்கு மதில் சுவர்களும் , உறுதியான  பாதுகாப்பு அறைகளும் ,பாதுகாவலர்களும் இருக்கும் நிலையை ஏற்படுத்தாமல் காலம் தள்ளுவதால் தான் இது போன்ற திருட்டுக்கள் நடை பெறுகின்றன. அப்படியானால் இந்தத் துறையை அரசாங்கம் நிர்வகிக்கக் கூடாது. நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையில் எழுப்ப வேண்டிய கேள்வி இது. இதுவரை யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை!!

இப்பொழுது நாம் செய்யக் கூடியதெல்லாம் ஒன்று தான். மத்திய அரசு தனது இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மகஜர் தர வேண்டியது ஒவ்வொரு இறைநம்பிக்கை உள்ளவரும் செய்ய வேண்டிய கடமை. யார் எப்படிப் போனால் என்ன; நமக்கு வேண்டியது   பேரும்  , புகழும்,காசும் மட்டுமே  என்று சுய நல வாதிகளாக இருந்தது போதும். உங்களது கருத்தை, மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்து கடமை ஆற்றுங்கள். பிறரையும் செய்யச் சொல்லுங்கள்.


இடிந்து கிடக்கும் கோயில்களின் எஞ்சியவற்றையாவது சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் பழைய நிலை மாறாதவாறு புனரமைப்போம்.மக்களிடம், " நமது கோயில் நமது பண்பாட்டுச் சின்னம் " என்ற கருத்தைத் தெளிவுபட எடுத்துச் சொல்வோம். இனி வரும்  தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டுவோம். இவ்வளவுக்கும் மேல் அரசாங்கம் செவி சாய்க்காவிட்டால் ஆண்டவனே கதி. 

Friday, May 8, 2015

கருத்தும் கண்ணியமும்

கடந்த காலத்தைப் பற்றிப் பேசும்போது அது பற்றிய முழு அறிவு இருக்கவேண்டியது அவசியம். சரித்திரத்தை மேலோடியாகப் பார்ப்பவர்களுக்கு உண்மை வெளிப்படாததோடு தங்களது கருத்தே எல்லோராலும் ஒப்புக்கொள்ள வேண்டியது என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதுவே சில சமயங்களில் ஆணவத்தில் கொண்டு விட்டு விடுகிறது.  அரைகுறையாக சரித்திரம் படித்தவர்களும் தங்கள் கருத்தைச் சொல்வதில்  கண்ணியம் தேவை  என்ற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதது அவர்களாலேயே நியாயப்படுத்தமுடியாத ஒன்று.

சமயப்பொறை என்பது காலம் காலமாக நமது தாய்த் திருநாட்டில் நமது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதைச்  சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் தலைசிறந்து விளங்கிய நம்மைப் பிறர் ஆண்டபோதும், அடிமைப்படுத்திய போதும்   கூட இந்த மார்க்கத்தை விட்டு நாம் விலகியதில்லை. அவரவர் தமது சமயத்தைப் பின்பற்றுவதை நமது அரசர்கள்  போற்றியிருக்கிறார்கள். நாகைப்பட்டினத்து சூளாமணி விகாரத்தை ராஜராஜன் போற்றியதை சரித்திரம் அறிந்தவர்கள் அறிவார்கள். அதே சமயம் பிற சமயத்தவர்கள்  நமது சமயத்தை அழிக்க முற்பட்டபோது நமது மகான்கள் அவ்வாறு அழியாமல் காத்தது தவறா?
திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை நாம் தடுக்கவில்லையாம். சொல்லுவது யாரோ சரித்திரப் பேராசிரியர் என்று நினைக்க வேண்டாம். சரித்திரத்தை அரைகுறையாகப் படித்தவர்களது பிதற்றலே இது. இப்போதாவது சரிவரப் படிக்கட்டும்.

இவர்களுக்கெல்லாம் புரியும்படியாகப் பதில் சொன்னால் தான் புரிந்துகொள்வார்களோ என்னவோ! இவர்கள் யாரிடமாவது பந்தயம் வைக்கும்போது ஜெயித்தாலோ  தோற்றாலோ  என்ன செய்ய வேண்டும் என்று உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள் அல்லவா? தோற்றுப் போனவர்கள் அந்த உடன்படிக்கையின்படி நடந்துகொள்ளும்போது ஜெயித்தவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்களா? பார்வையாளர்கள்தான் இதில் என்ன செய்ய முடியும்? ஜல்லிக்கட்டு போன்ற பந்தயங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். அதிலும் அரசனே அப்பந்தயத்தை நிறைவேற்றும்போது பார்வையாளர் எதுவும் செய்ய முடியாது. அதேபோலத்தான் சமணர்கள் தாங்கள் தோற்றுப்போனால் கழுவேறுவதாக அரசன் முன்பு சபதம் செய்ததால் அரசனும் அதை நிறைவேற்ற வேண்டியதாயிற்று. இதைப் பிறர் நிறுத்த அதிகாரம் எது? நமது உச்ச நீதி மன்ற தீர்ப்பை  பிரதம மந்திரி நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலத்தான்.

இவ்வளவு தூரம் ஆதாரம் அது இது என்று பேசுபவர்கள் சமணர்கள் திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் இட்டதையும், அவருக்கு விஷம் கொடுத்ததையும் , யானையை ஏவி மிதிக்கச் செய்ததையும் அவரைக் கல்லோடு கட்டிக் கடலில் வீசியதையும் படிக்கவில்லையா? அல்லது பாசாங்கு செய்கிறார்களா? அகிம்சையைப் போதிப்பவர்கள் இவ்வாறு செய்யலாமா என்று கேள்வி எழுப்ப மனம் வரவில்லையா?  இத்தனை தூரம் பாதிக்கப்பட்டிருந்தும், நாம் இன்றளவும் அச்சமயத்திடம் சகோதர மனப்பான்மையுடன் பழகி வருகிறோம் என்பதை அந்த அறிவு ஜீவிகள் உணர வேண்டும். அச்சமயத்தவரும் நம்மிடம் அன்போடு பழகி வருகிறார்கள் என்பது நாம் காணும் உண்மை. அதை விட்டு விட்டு ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டவரைப்போல பிதற்றிவிட்டால் அது உண்மை ஆகி விடாது. மாறாக இரு தரப்பினரிடையே நிலவி வரும் சகோதர மனப்பான்மைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விஷமமாக ஆகிவிடும். இனியாவது இவர்கள் நா காக்க வேண்டும்.

கண்ணியம் என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள் சமுதாய சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார்கள். ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் செய்யாத சீர் திருத்தத்தையா  இவர்கள் செய்வதாக நினைக்கிறார்கள்!  கால சக்கரம் சுழலும்போது இதுபோன்ற சிறு மாற்றங்கள் இயற்கையாகவே நிகழக்கூடும். யாரும் தீவர்த்தி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. இவர்களது பேச்சே  விளம்பரத்தை உத்தேசிப்பது என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கே நாயகனாக இருக்கத் தவறியவர்கள்  உலகத்திற்கே நாயகனாகி விட்டது போன்ற மாயையில் பேசும் பேச்சு அது. வேறு எங்காவது வேண்டுமானால் நிழல்கள் நிஜமாகலாம். ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியல்ல. புரிந்துகொள்ளத்தவறுபவர்களுக்கு நீதி மன்றங்கள் புரிய வைக்கின்ற காலம் இது. வணங்காமுடியாக வலம் வருபவர்களும் நீதிதேவதைக்கு வணங்கியே ஆக வேண்டும்.

Tuesday, April 28, 2015

நேபாளத்தில் துயரம்

நேபாளத்தில் நடந்துள்ள நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கும் மேலான சகோதர-சகோதரிகள்  இடிபாடுகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. மேலும் பழங்காலக் கலைச்சின்னங்களும் இந்துக் கோயில்களும் இடிந்து விட்டன என்றும் அறிகிறோம். எத்தனையோ குடும்பங்கள் வீடுகளையும் உற்றார்களையும் இழந்து நடுவீதிகளில் தவிக்கும் படங்களைக் காணும்போது சொல்லமுடியாத துயரம் ஏற்படுகிறது. நேபாள மக்களுக்கு இந்த அதிர்ச்சி , மனத்தை விட்டு  நீங்கமுடியாத சோகமாக ஆகிவிட்டது.

இந்தியாவிலும் இதன் தாக்கத்தால் அறுபது பேருக்கும் மேலானவர்கள் உயிர் இழந்துள்ளார்கள். நேபாளத்தின் துயரத்தில் நமக்கும் பங்கு உண்டு. இரு நாடுகளுக்கும் ஒருமித்த கலாசாரம் உண்டு.ஆகவே,இத்துயர சம்பவம் நடந்த அன்றே , நமது அரசாங்கம் அந்நாட்டிற்குத் தேவையான  உதவிகளைச் செய்ய முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டியதும் நேபாள மக்களுக்கு ஆறுதலை அளிப்பதுமான செயல்.

உயிரிழந்தோருக்காக நாட்டின் பல பாகங்களிலும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்நாட்டு மக்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், நம்மாலான உதவிகளை அப்பரிதவிக்கும் மக்களுக்குச் சேரும்படி செய்ய வேண்டியது அவசியம். பிற நாடுகளின் உதவியை நேபாளம் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் இந்தியா முன்னின்று உதவ வேண்டும்.

ஆயிரக்கணக்கான பொது நலத் தொண்டர்கள் நேபாளம் விரைந்துள்ளனர் என்பது ஆறுதலான செய்தி. நேரில் சென்று உதவுவதுபோல் பணத்தால் செய்து விட முடியாது. இப்புண்ணி யச் செயலில் ஈடுபடுவோரைக் குறை சொல்லுபவர்களும் உளர். அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நம்மால்தான்  செய்ய முடியவில்லை. செய்பவர்களையும் குறை சொல்வானேன்? அவர்கள் தங்களது சொந்தக் காசை செலவழித்துக் கொண்டு துயர்  துடைக்கச் செல்கிறார்கள். நம்மில் அதுபோலப் பணத்தையும் நேரத்தையும், குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விட்டுச்  சமூகப் பணி  செய்பவர்  இல்லையே! இதைக் கூடவா அரசியலாக்க வேண்டும் ? உலகில் குறையே இல்லாதவர்கள்  யார்? புண்ணியவான்களே, தயவு செய்து நிலைமையைப் புரிந்து கொண்டு பேசுங்கள்.

மற்ற நாட்களில்தான் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை. இந்தத் தருணத்திலாவது நமது இலட்சாதிபதிகளும் கோடீசுவரர்களும் மனம் இரங்கி உதவலாம் அல்லவா? உடலை விட்டு உயிர் போகும்போது அவர்கள் சேர்த்து வைத்த  கோடிகள் கூட வரப்போவதில்லை.     இருக்கும்போதே செய்யும் தருமம் தான் அவர்களது தலைமுறையைக்காக்கும். கோடிகளில் புரளும் நமது தொழிலதிபர்களும், திரைப்படத் துறை செல்வந்தர்களும்  , கிரிகெட் ஆட்டக்காரர்களும்,ஊடகங்களும்  மனம் வைத்தால் இடிந்த வீடுகளையும் கோயில்களையும் மீண்டும் புதுப்பிக்கலாம். அதனைப் பொறுப்பான ஒரு அமைப்பு முன்வந்து பொறுப்புடன் செயல் படுத்த வேண்டும்.

பஞ்சாப் ,டெல்லி மாநிலங்கள் தினமும் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை அனுப்புகின்றன. விபத்தில் காயமுற்றோருக்கு மருந்து கம்பெனிகளும்,மருத்துவ மனைகளும் தேவையான மருந்துப் பொருள்களையும் உபகரணங்களையும் தந்து உதவலாம். சுனாமி தாக்கியபோது வீடுகளைக் கட்டித் தந்தவர்கள் இதற்கும் அதே வகையில் உதவி செய்யலாம். சாமானியர்களும் தங்களால் முடிந்த  தொகையையோ, பொருள்களையோ  தந்து உதவ முடியும். இதை எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் சொன்னால் எளிதாக நடைபெற்று விடும். விளம்பரம் பெறும் நோக்கத்தோடாவது உதவி செய்ய முன் வருவார்கள். எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால்  சரி. எதுவும் செய்யாமல் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. பிரார்த்தனையும் முக்கியம் தான். அதோடு உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியம் தானே?

Tuesday, April 21, 2015

சிலை பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் கோயில் மூலவர்களையும் உற்சவர்களையும் தேவ கோஷ்டங்களையும் படத்துடன் செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முகநூலில் சில அன்பர்கள் ஆர்வ மேலீட்டால் இவற்றை வெளியிடுகின்றனர். சிலர் போட்டோ ஆல்பமே வழங்குகிறார்கள். கோயில்களில் பாதுகாப்பற்ற நிலை இருக்கும்போது இவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறினால் அலட்சியம் செய்கிறார்கள். கோயில் விமானங்கள்,கோபுரங்கள் ஆகியவற்றின் படங்களை மட்டும் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம். படங்களைப் போட்டுவிட்டால் மட்டும் என்ன பெரிய பலன் விளைகிறது? அருமை என்று கமெண்ட் போடுவார்கள். இல்லாவிட்டால் லைக் போடுவார்கள். பார்த்ததனால் அக்கோயில்களுக்குப் போவோர் மிகச் சிலரே.

ராமேஸ்வரம் போகும் வழியில் உள்ளது திருவாடானை என்ற சிவஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சில நாட்களுக்கு முன் உற்சவ மூர்த்திகள் களவாடப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியது.எதற்கெல்லாமோ கண்டன ஊர்வலமும்,சாலை மறியலும் நடத்துபவர்கள் இதை மட்டும் கண்டு கொள்ளாதது ஏன்? நாம் சமய உணர்ச்சியே இல்லாத ஜடங்களாக ஆகி விட்டோமா?  களவு போனவை  மீண்டும் கோவிலுக்கே வந்து சேர இறைவனைப் பிரார்த்திக்கும் அதேவேளையில் இதுபோன்ற கொள்ளைகளைத் தடுக்க என்ன செய்திருக்கிறோம் என்று ஆலோசிக்க வேண்டியது முக்கியம். அளவில்  பெரிய இக்கோயி லிலேயே இப்படி நடந்திருக்கும்போது பாதுகாப்பு முழுவதும் இல்லாத கோயில்கள் எம்மாத்திரம்? அரசாங்கத்தைக் கேட்டால் உற்சவர்கள் பாதுகாப்புக்காக பெரிய ஊர்க் கோயில்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று விடுகிறோம் என்பார்கள். இப்படி எல்லாவற்றையும் அன்ன ஆகாரமின்றி வழிபாடின்றி காற்றுப்புகாதபடி ஒரே அறையில் பூட்டி வைப்பதற்காகவா ஊர்தோறும் உற்சவ மூர்த்திகள் செய்து வைத்தார்கள்?

உலகெங்கும் கலைப்பிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு பணத்திமிரால் அவற்றைக் கடத்துபவர்களாலேயே இந்த அக்கிரமம் நடைபெறுகிறது. நட்சத்திர ஹோட்டல்கள் செய்யும் அட்டகாசமோ கொஞ்ச நஞ்சம் இல்லை. விலை ஒரு பொருட்டே இல்லை என்னும்போது திருடப் பட்டவற்றுக்கு விலை பேசி விடுகிறார்கள். இதெல்லாமும் ஒரு பிழைப்பா ? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். அவர்களுக்கு ஊடகங்களும் பத்திரிகைகளும்,கலைப்பிரியர்களும் தரும் படங்களும் செய்திகளும் துணை செய்யாது என்பது என்ன நிச்சயம்?

சோழ நாட்டுக் கோயில்களில் திருடப்பட்ட பொக்கிஷங்களில் அரசாங்கத்தால் எவ்வளவு மீட்கப்பட்டிருக்கின்றன? திருட்டுக் கும்பலைப் பிடிக்கக் கால நிர்ணயம் ஏன் வரையறுக்கக் கூடாது? இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்போர் யார் என்று ஏன் அடையாளம் காட்டப் படுவதில்லை? தனி நபர் ஒருவர் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லிவிட்டுப் போனால் பாதுகாப்புத் தருவது போல உள்ளூர்க் கோயிலுக்கும் பாதுகாப்பு ஏன் வழங்கப்படுவதில்லை? அங்குள்ள விக்கிரகங்களுக்கும்,ஆபரணங்களுக்கும், உண்டியல்களுக்கும் யார் பாதுகாப்பு தர முடியும்? கோயில்களுக்கு வருமானத்தை வாங்கித்தராமல் கை விரித்து விட்ட அற நிலையத்துறையே இதற்கும் பொறுப்பு ஏற்குமா? ஒரு கோவிலில் களவு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பேற்று பணியிலிருந்து விலகுவார்களா? ஆனால் நடப்பது என்ன? கோயில் சிப்பந்திகளின் மீது கை காட்டிவிட்டு விலகிக் கொள்வதை அல்லவா காண்கிறோம் !

ஒவ்வொரு கோயிலிலும் பலத்த பாதுகாப்பு அறை கட்டப்பெற்று அதில் உற்சவ விக்ரகங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். அவற்றுக்குத் தொங்கும் பூட்டு அமைப்பதால் எந்த உபயோகமும் இல்லை. தொட்டிப்பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவு நேரக் காவலாளியும்,பாதுகாப்பு அலாரமும் இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று பொறுப்பான நபர்கள் வெவ்வேறு    சாவிகளைக் கொண்டே பாதுகாப்பு அறைப் பூட்டைத் திறக்கும்படி செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது துணை கமிஷனர் நேரில் வந்து பார்வையிட்டுத் தணிக்கை செய்து அறிவிப்பை அறநிலையத்துறைக்கு அனுப்ப வேண்டும்.   
             
மேற்கூறியவை எல்லாம் நடக்கக் கூடியவைகளா என்று சந்தேகம் எழத்தான் செய்யும். காலம் தாழ்த்துவதால் மேன்மேலும் திருட்டுக்கள் நடந்துவிட்டுப்போகட்டும் என்று நாமே அசிரத்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் ? தஞ்சை மாவட்டத்தில் ஒரு காலத்தில் தோப்பு க்களில் இரவு நேரத்தில் திருட்டுப் போவதைக் கண் காணிக்க ஊரார் தங்களுக்குள் ஒரு முறை போட்டுக் கொண்டு ஒரு குழுவாகக் கையில் டார்ச்சும்,கைத்தடியும் ஏந்தி ரோந்து வருவார்கள். தில்லையில் கோயிலுக்குள் இரவு நேரக் காவல் செய்வதை ஒரு கைங்கர்யமாக தீட்சிதர்களே ஏற்று நடத்தியதைக் கண்டிருக்கிறோம். அதேபோல் ஊரார் சிலராவது கண்காணிப்பு மேற்கொள்வது நல்லது. நம் தெய்வங்கள் கோயிலைத்தான் அலங்கரிக்க வேண்டும். மாறாக மியூசியங்களையும்,வரவேற்பு அறைகளையும், ஹோட்டல்களையும் அலங்கரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.         


Sunday, April 19, 2015

குடந்தை ஏழூர் பல்லக்கு உற்சவம் தடைபடலாமா ?

கும்பகோணம் என்றவுடனேயே அப்பெயருக்குக் காரணமான கும்பேசுவரரின் கோயிலும் மகா மகத் திருவிழாவும் நினைவுக்கு வரும். இங்கு நடக்கும் சப்த ஸ்தானப் பல்லக்கு உற்சவமும் பிரசித்தமானது. அலங்கரித்த பல்லக்கில் சுவாமியும் அம்பிகையும் குடந்தையைச் சுற்றியுள்ள எழூர்களுக்கு விஜயம் செய்யும் இந்த விழா சென்ற ஆண்டு நின்று விட்டதாகவும், இந்த மகா மக ஆண்டிலும் நடைபெறாமல் கைவிடப்பட்டு விட்டதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த சிவத் தொண்டரும் ,நமது முக நூல் அன்பருமான ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இது நமக்கு மட்டும் அல்ல. சைவ உலகிற்கே அதிர்ச்சியைத் தரும் செய்தி.

பல்லக்கு பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் அதனைச் சரி செய்யாமல் உற்சவத்தையே நிறுத்திவிடுவது எந்த வகையில் நியாயம்? நிதி நிலைமை போதுமானதாக இல்லை என்றும் சொல்வதற்கில்லை. கோயில் நகரமான இதற்கு நாள் தோறும் யாத்ரீகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நவக்கிரக பரிகாரத் தலங்களில் சில இதற்கு அண்மையில் இருப்பதால் குடந்தையைத் தங்கும் இடமாகக் கொண்டு அப்படியே இங்குள்ள கோயில்களையும் தரிசிக்க வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் பிராகாரத்தில் முளைக்கும் கடைகளையும், சிறுவர்களுக்கான விளையாட்டுக்களையும் பார்க்கும்போது ஏதோ பொருட்காட்சிக்கு வந்து விட்டதுபோலத் தோன்றும். அதில் கோயிலுக்கு வரும் வருமானம் கணிசமாகவே இருக்கும். அப்படியும், பல்லக்கைப் பழுது பார்க்கவில்லை என்று சொன்னால் அலட்சியம் என்பதைத்தவிர என்ன சொல்வது!

இப்பகுதியில் உள்ள நல்லூர், திருநீலக்குடி,சக்கரப்பள்ளி போன்ற சிறிய கிராமங்களிலும் சப்த ஸ்தான உற்சவம் நடைபெறும்போது கும்பேசுவர சுவாமியின் விழாவை நிறுத்துவது முறையல்ல. திருவையாற்று சப்த ஸ்தானங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறையிலும் பல்லக்கு பழுதாகி இருந்தது கண்டு, அக்கோயில் பரம்பரை டிரஸ்டி, பெரும் முயற்சி மேற்கொண்டு அன்பர்கள் உதவியோடு புதிய பல்லக்கை ஏற்பாடு செய்தும் அதற்காகக்  கோயிலைச் சுற்றி வரும் பாதையை அமைத்தும் சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்தார்கள். அப்பல்லக்கு சென்ற ஆண்டு சப்த ஸ்தான விழாவில் பவனி வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. திருவாவடுதுறை ஆதீன 23 வது மகா சந்நிதானமாக இருந்தவர்கள், ஆதீனக் கோயில்களில் நின்றுபோயிருந்த உற்சவங்களை மீண்டும் துவக்கியும், பிற கோயில்களில் நடராஜர் அபிஷேகம் செய்ய உதவியும் அன்ன தானம் செய்தும் கருணை பாலித்தார்கள்.

கும்பேசுவர சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அலுவலகம் இருந்தும் அதன் பார்வையில் இதெல்லாம் ஏன் படுவதில்லை என்று புரியவில்லை. ஆளுயர உண்டியல் வைத்துப் பொருள் ஈட்டுவதுதான் நோக்கமா? இவ்வளவு பெரிய கோயிலுக்கே இந்த நிலை என்றால் கிராமத்துக் கோயில்களை நிர்வாக அதிகாரிகள் ஆண்டில் எத்தனை முறை திரும்பிப் பார்ப்பார்கள் ? நில வருவாயைக் குத்தகைக் காரர்களிடமிருந்து வசூலிக்காமலும், திருவிழாக்களை நடத்தாமல் நன்கொடையாளர்கள் தலையில் கட்டி விட்டு நமக்கேன் என்று இருப்பதற்கு அறநிலையத்துறை எதற்கு என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது. கோயிலுக்குள் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரங்கள் சம்பாதிக்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டும். திருப்பணியிலும் சுமார் தொண்ணூறு சதவீதத்தை நன்கொடையாளர்களே எற்கிறார்கள். ஆனால் அனுமதி மட்டும் இவர்கள் வழங்க வேண்டுமாம் !! இவர்கள் பெயர்களை ஒன்று விடாமல் பத்திரிகையில் போட வேண்டுமாம். அன்னதானமும் நன்கொடையாளர்களது பங்குதான். கோயில் மரியாதை மட்டும் ஒன்று விடாமல் வாங்கிக் கொள்ள முன் வந்து விடுவார்கள்.

இனியும் அறநிலையத்துறையை நம்பிப் பயன் இல்லை. திருப்பணியை எவ்வாறு நன்கொடையாளர்களே ஏற்கிறார்களோ அவ்வாறு உற்சவங்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். கும்பகோணத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமே. இந்நகரிலும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மடாலயங்கள் ஏன் மனம் வைத்து முன் வரவில்லை என்று தெரியவில்லை. வியாபாரத்தலமாக இருந்தும் இவ்விழா தடைப்பட்டுப் போவானேன்? சென்ற நூற்றாண்டில் குடந்தை நாகேச்வர சுவாமி ஆலயத்தைத் தான் ஒருவராகவே திருப்பணி செய்த பாடகச்சேரி சுவாமிகளைப் போல இன்று யாருமே இல்லையா? அவரைப்போல வீதி வீதியாகச் சென்று “ சிவ தர்மம் “ என்று சொல்லி உதவி கேட்காவிட்டாலும் உரியவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்யக்கூடவா முடியாமல் போய் விட்டது? அவமானமும் வெட்கமும் பட வேண்டிய விஷயம். கும்பேசப் பெருமானது அருள்  எந்த அடியாருக்குக் கிடைக்க இருக்கிறதோ ,நாம் அறியோம்.

Wednesday, April 15, 2015

கசப்பும் இனிப்பும்


“ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா “ என்பதெல்லாம் சரிதான். பழந்தமிழர் நாகரிகத்தையும் ,பண்பாட்டையும் நினைக்கும் பொது பெருமிதமாகத்தான் இருக்கிறது. தலை நிமிர நிற்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் படிக்கும்போது ( ? ) பெருமை அடைகிறோம். கபாடபுரம் என்ற மிகப்பழமை வாய்ந்த பகுதி கடலால் பிளவுபட்டு அழிந்தது என்று வரலாறு சொல்லும்போது அந்நிலத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் கர்வம் கூடப் படுகிறோம். ஆனால் இன்றைய நிலையை நோக்கும்போது தலை நிமிர்ந்த காலம் போய், தலை குனிய வைத்து விடுவார்களோ என்ற  அச்சம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக நாம் நடந்துகொள்ளும் விதம் பாராட்டும் விதமாக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சுயநல வாதிகளின் பிடியில் நமது தொன்மையான பண்பாடு சிக்கித் தவிக்கிறது. மனம் போனபடி எல்லாம் மாற்றம் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.அதில் முதல் பலி ஆனது விவசாயம். அடுத்தபடியாகக் கல்வி. மூன்றாவதாகக் கலாசாரம். இம்மூன்றும் நமது பண்பாட்டின் அடிப்படைத் தூண்கள். அவை ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. மொத்தமும் ஆடி அழிவதைக் கண் முன்னே காணச் சகிக்காதவர்கள் வேறு இடம் தேடிக் குடிபுக ஆரம்பித்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் எப்படிப்பட்டவர்கள் எஞ்சுவார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

வெளி மாநிலத்திற்கும்,வெளி நாட்டிக்கும் சென்று திரும்புபவர்கள் அங்கெல்லாம் பிறர் நம்மைப் பற்றிப் பேசும் ஏளனப் பேச்சையே கேட்க வேண்டி இருக்கிறது.இதற்குக் காரணம் நாம் பெருமைப் படும்படியாக இன்றைய சூழ் நிலையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாதததுதான். இதையும் மீறி ஒரு சில சாதனையாளர்கள் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு,போராட்டம்,புரட்சி,வன்முறை, அநாகரீகம் போன்ற செயல்கள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகும்போது பிறர் நம்மைப்பற்றித் தாழ்வாகவே நினைப்பர்.
நிலைமை விபரீதம் ஆவதற்குள் அதைச் சீர் செய்ய முனைய வேண்டும்.

மக்களால் ஆளப் படுவதே அரசாங்கம் என்று இருந்தபோதிலும் , அந்த முறை பணம் சம்பாதிக்கும் வழியாக  சாதகப்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே அரசாங்கம் வழியாக சீர்திருத்தம் வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். காலம் வேகமாக நகர்வதால் கால தாமதங்களால் நிலைமை மேலும் சீர்குலைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கும்போது ஒவ்வொரு தனி நபரும் நம்மால் இம்மண்ணுக்கு எப்படிப் பெருமை சேர்க்க முடியும் என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

வேலைக்குச் செல்பவர்கள் உற்பத்தி,வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் முன்னேற்றம் காண முடியும். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஏதேனும் ஒரு சேவை செய்தே ஆக வேண்டும். அது இலக்கியத் துறையாகவோ,ஆன்மீகமாகவோ, சமூக நலத் திட்டமாகவோ, இருக்கலாம். ஓய்வு பெற்றவர்கள் ஒன்று கூடிப் பூங்காக்களில் தேவையில்லாதவற்றை விவாதித்துக் கொண்டிருப்பதை விட, ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, நீதிக் கதைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது,கணினியின்மூலம் பொது அறிவை வளர்ப்பது, தோத்திர வகுப்புக்கள்,போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது, அருகிலுள்ள புராதனக் கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைப்பது, நந்தவனம் அமைத்து மரங்களை வளர்ப்பது, திருக்குளங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பது, சோலார் சக்தி  மின்சாரம்,எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பால் பண்ணைகள் அமைப்பது, கோபார் வாயுவைக் கொண்டு எரிபொருள் உற்பத்தி செய்வதோடு,பசு பராமரிப்பது பற்றி உணர்த்துவது என்று எத்தனையோ இருக்கும்போது தனது விருப்பத்திற்கேற்றபடி ஏதாவது ஒன்றிலாவது ஈடுபட்டுத் தொண்டு செய்யக் கூடாதா ?

கிராமங்கள் நலிவடைந்தால் நாடு நலிவடையும். விளை நிலங்களை நல்ல விலையில் விற்று விடுபவர்கள் நாளை உணவுக்குக் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அப்போது சமூகம் நம்மை மன்னிக்காது. ஒவ்வொருவரும் மனதைத்தொட்டுப் பார்த்து, நான் ஏதாவது ஒரு தொண்டு செய்கிறேனா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். இல்லை என்று பதில் வந்தால் இனியும் தாமதிக்காமல் இன்றே செய்யத் துவங்க வேண்டும். இதையே புத்தாண்டு தின உறுதி மொழியாக நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். முகநூலில் ஒரு நண்பர் தான் சென்ற ஆண்டில் ஈடுபட்ட நல்ல பணிகளை அழகாகப் பட்டியலிட்டிருந்தார். அதில் அடுத்த ஆண்டிலும் அப்பணிகளைத் தொடர வேண்டும் என்ற அவரது ஆர்வம் தெரிந்தது. அதுபோல் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் வெறும் வாழ்த்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை. சென்றதை நினைவுபடுத்தி, இனி செய்ய வேண்டியதை ஏற்கவேண்டிய நன்னாளாகவே புத்தாண்டு தினத்தை அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கலாம். இனிமேல் அவை இனியதாக இருக்கட்டும் என்ற எண்ணத்தாலோ என்னவோ நமது முன்னோர்கள் கசப்பான வேப்பம்பூ பச்சடியையும் இனிப்பான பாயசத்தையும் அன்றைய உணவில் சேர்த்தார்கள்.

                                                                 

Sunday, April 12, 2015

நகரத்தார் தொண்டு

திருக்களர் கோயிலும் பாடசாலையும் 
தஞ்சை-திருச்சி மாவட்டங்களில் வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும், தேவார பாடசாலைகளும் பல இடங்களில் நடந்து வந்தன. அவற்றில் சில மடாலயங்களின் நேரடிப் பார்வையில் இயங்கி வந்தன. இது மட்டுமல்லாமல் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் அமைத்துக் கொடுத்த பாட சாலைகளும் இருந்தன. நகரத்தார்களது சிவபக்தியை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்தக்காலத்திலேயே லக்ஷக் கணக்கான ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்தார்கள். மலைகள் இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்களுக்குக் கருங்கற்களை புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து அத்திருப்பணிகளைச் செய்தார்கள். சோழ மன்னர்களுக்கு அடுத்தபடியாக சிவாலயத் திருப்பணி செய்த பெருமை நகரத்தார்களுக்கு உண்டு என்று காஞ்சிப் பெரியவர்களே புகழ்ந்து வாழ்த்தியிருக்கிறார்கள். இந்த பரோபகாரத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.

மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள திருக்களர் என்ற சிவ ஸ்தலத்தில் நகரத்தாரின்  சிவத் தொண்டை நன்றியுடன் குறிப்பிடுகிறோம். ஸ்ரீ பாரிஜாத வனேசுவர சுவாமி கோயிலின் கருங்கல் திருப்பணி மட்டுமல்லாமல்,திருக்குளத் திருப்பணி, தேர் திருப்பணி ஆகியவற்றையும் செய்திருக்கிறார்கள். அதை மனதாரப் பாராட்டுவதற்காகவாவது சிவ பக்தர்கள் ஒரு முறையாவது திருக்களருக்குச் சென்று வர வேண்டும். 

இன்னொரு மகத்தான தொண்டையும் நகரத்தார்கள் இங்கு செய்திருக்கிறார்கள். சுவாமி சன்னதித் தெருவில் இரண்டு புறமும் வேத பாட சாலைகளையும் வெளி வீதியில் தேவார பாட சாலையும் அமைத்துள்ளனர். ஒவ்வொரு பாடசாலையும் ஒரு பெரிய வீடு என்று சொல்லலாம். எல்லா ஊர்களிலும் பாடசாலைகளுக்கு நேர்ந்துள்ள கதி இவ்வூரையும் விட்டு வைக்கவில்லை. அவை பூட்டப்பட்டுக் காட்சி அளிப்பதைக் கண்டால் கலியுகக் கொடுமை இதுதானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.இப் பாரம்பர்யத்தைப் புறக்கணித்து விட்டு வேலைக்காக நகரங்களையும் வெளி நாடுகளையும் நோக்கிச் சென்றுள்ளவர்கள் தங்களின் மூதாதையர் வசித்த கிராமம் நம் கண் முன்னால் நசித்துப் போவதை அனுமதிக்கலாமா? வசதி படித்தவர்களது கவனத்திற்கு இதனை விட்டு விடுகிறோம். வசதி அற்றவர்களும் ஆண்டுக்கொருமுறையாவது தங்கள் பூர்வீக கிராமத்திற்கு வருகை தந்து தங்களால் ஆன உதவியை செய்யலாம். எதற்கும் மனம் வர வேண்டுமே!!

தற்சமயம் பல கிராமங்களில் வீடுகள் கை மாறி விட்டன. எஞ்சியுள்ள சில வீடுகளும் இடிந்தும் மரங்கள் முளைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. விற்பனைக்காக தேதி குறிப்பிட வேண்டியதுதான் பாக்கி. எந்த கிராமத்திலும் மறுபடியும் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் திரும்பி வருவது என்பது துர்லபமாகவே தோன்றுகிறது. இதனால் முதலில் பாதிக்கப்பட்டது அங்கு உள்ள கோயில்களும் அவற்றை நம்பி உள்ள அர்ச்சகர்களுமே. எல்லோரும் வெளியேறிய பிறகும் கோயில் பூஜையைத் தொடர்ந்து செய்து வருபவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது. அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து உதவலாமே! இல்லாவிட்டால் பிறரைப்போல அவர்களும் ஊரை விட்டு நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பாரம்பர்யத்தைப் பற்றிப்  பேசினால் மட்டுமே போதாது. செயலிலும் காட்ட வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியவற்றை மக்கள் செய்யலாம் அல்லவா?