Wednesday, April 15, 2015

கசப்பும் இனிப்பும்


“ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா “ என்பதெல்லாம் சரிதான். பழந்தமிழர் நாகரிகத்தையும் ,பண்பாட்டையும் நினைக்கும் பொது பெருமிதமாகத்தான் இருக்கிறது. தலை நிமிர நிற்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் படிக்கும்போது ( ? ) பெருமை அடைகிறோம். கபாடபுரம் என்ற மிகப்பழமை வாய்ந்த பகுதி கடலால் பிளவுபட்டு அழிந்தது என்று வரலாறு சொல்லும்போது அந்நிலத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் கர்வம் கூடப் படுகிறோம். ஆனால் இன்றைய நிலையை நோக்கும்போது தலை நிமிர்ந்த காலம் போய், தலை குனிய வைத்து விடுவார்களோ என்ற  அச்சம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக நாம் நடந்துகொள்ளும் விதம் பாராட்டும் விதமாக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சுயநல வாதிகளின் பிடியில் நமது தொன்மையான பண்பாடு சிக்கித் தவிக்கிறது. மனம் போனபடி எல்லாம் மாற்றம் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.அதில் முதல் பலி ஆனது விவசாயம். அடுத்தபடியாகக் கல்வி. மூன்றாவதாகக் கலாசாரம். இம்மூன்றும் நமது பண்பாட்டின் அடிப்படைத் தூண்கள். அவை ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. மொத்தமும் ஆடி அழிவதைக் கண் முன்னே காணச் சகிக்காதவர்கள் வேறு இடம் தேடிக் குடிபுக ஆரம்பித்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் எப்படிப்பட்டவர்கள் எஞ்சுவார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

வெளி மாநிலத்திற்கும்,வெளி நாட்டிக்கும் சென்று திரும்புபவர்கள் அங்கெல்லாம் பிறர் நம்மைப் பற்றிப் பேசும் ஏளனப் பேச்சையே கேட்க வேண்டி இருக்கிறது.இதற்குக் காரணம் நாம் பெருமைப் படும்படியாக இன்றைய சூழ் நிலையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாதததுதான். இதையும் மீறி ஒரு சில சாதனையாளர்கள் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு,போராட்டம்,புரட்சி,வன்முறை, அநாகரீகம் போன்ற செயல்கள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகும்போது பிறர் நம்மைப்பற்றித் தாழ்வாகவே நினைப்பர்.
நிலைமை விபரீதம் ஆவதற்குள் அதைச் சீர் செய்ய முனைய வேண்டும்.

மக்களால் ஆளப் படுவதே அரசாங்கம் என்று இருந்தபோதிலும் , அந்த முறை பணம் சம்பாதிக்கும் வழியாக  சாதகப்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே அரசாங்கம் வழியாக சீர்திருத்தம் வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். காலம் வேகமாக நகர்வதால் கால தாமதங்களால் நிலைமை மேலும் சீர்குலைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கும்போது ஒவ்வொரு தனி நபரும் நம்மால் இம்மண்ணுக்கு எப்படிப் பெருமை சேர்க்க முடியும் என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

வேலைக்குச் செல்பவர்கள் உற்பத்தி,வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் முன்னேற்றம் காண முடியும். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஏதேனும் ஒரு சேவை செய்தே ஆக வேண்டும். அது இலக்கியத் துறையாகவோ,ஆன்மீகமாகவோ, சமூக நலத் திட்டமாகவோ, இருக்கலாம். ஓய்வு பெற்றவர்கள் ஒன்று கூடிப் பூங்காக்களில் தேவையில்லாதவற்றை விவாதித்துக் கொண்டிருப்பதை விட, ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, நீதிக் கதைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது,கணினியின்மூலம் பொது அறிவை வளர்ப்பது, தோத்திர வகுப்புக்கள்,போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது, அருகிலுள்ள புராதனக் கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைப்பது, நந்தவனம் அமைத்து மரங்களை வளர்ப்பது, திருக்குளங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பது, சோலார் சக்தி  மின்சாரம்,எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பால் பண்ணைகள் அமைப்பது, கோபார் வாயுவைக் கொண்டு எரிபொருள் உற்பத்தி செய்வதோடு,பசு பராமரிப்பது பற்றி உணர்த்துவது என்று எத்தனையோ இருக்கும்போது தனது விருப்பத்திற்கேற்றபடி ஏதாவது ஒன்றிலாவது ஈடுபட்டுத் தொண்டு செய்யக் கூடாதா ?

கிராமங்கள் நலிவடைந்தால் நாடு நலிவடையும். விளை நிலங்களை நல்ல விலையில் விற்று விடுபவர்கள் நாளை உணவுக்குக் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அப்போது சமூகம் நம்மை மன்னிக்காது. ஒவ்வொருவரும் மனதைத்தொட்டுப் பார்த்து, நான் ஏதாவது ஒரு தொண்டு செய்கிறேனா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். இல்லை என்று பதில் வந்தால் இனியும் தாமதிக்காமல் இன்றே செய்யத் துவங்க வேண்டும். இதையே புத்தாண்டு தின உறுதி மொழியாக நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். முகநூலில் ஒரு நண்பர் தான் சென்ற ஆண்டில் ஈடுபட்ட நல்ல பணிகளை அழகாகப் பட்டியலிட்டிருந்தார். அதில் அடுத்த ஆண்டிலும் அப்பணிகளைத் தொடர வேண்டும் என்ற அவரது ஆர்வம் தெரிந்தது. அதுபோல் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் வெறும் வாழ்த்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை. சென்றதை நினைவுபடுத்தி, இனி செய்ய வேண்டியதை ஏற்கவேண்டிய நன்னாளாகவே புத்தாண்டு தினத்தை அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கலாம். இனிமேல் அவை இனியதாக இருக்கட்டும் என்ற எண்ணத்தாலோ என்னவோ நமது முன்னோர்கள் கசப்பான வேப்பம்பூ பச்சடியையும் இனிப்பான பாயசத்தையும் அன்றைய உணவில் சேர்த்தார்கள்.

                                                                 

No comments:

Post a Comment