Thursday, October 26, 2017

தீர்த்தம் என்பதும் இறை வடிவமே

இராமேசுவரம் ஆலய தீர்த்தங்கள் சில - இணையதளப் படம் 
" சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று பாடி அருளினார் அப்பர் ஸ்வாமிகள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. உலகம் யாவையும் படைத்த பெருமான் தீர்த்தங்களையும் படைத்தான் என்பது அதில் அடங்குவது தானே என்று நினைக்கலாம். ஏழண்டத்திற்கும் அப்பால் நின்ற பரம்பொருள் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான் அல்லவா? அப்படி இருக்கும்போது தீர்த்தத்தைத் தனியாகக் குறிப்பிடுவானேன் என்று தோன்றும். மறுபடியும் மேலேசொன்ன அவரது வாக்கைப் படித்தால் அதற்கு  விளக்கம் கிடைக்கும். தீர்த்தங்கள் படைத்தார் என்று குறிப்பிடாமல், " ஆனார் "   என்று அல்லவா   சொல்லியிருக்கிறார்!  அதேபோல , " வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் " என்பதால் வேதமும் தமிழும் இறைவனது வடிவங்களே என்று தெரிகிறது. 

 தீர்த்தம் வேறு,  சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. காரணம் , ஈசுவரன் எப்படிப் புண்ணிய மூர்த்தியோ அதேபோல தீர்த்தமும் புண்ணிய தீர்த்தம் எனப்படுகிறது. எல்லா நீர் நிலைகளையும் நாம் புண்ணிய தீர்த்தமாகவா கருதுகிறோம்? புண்ணிய தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்களையும் , கிணறுகளையும்,ஆறுகளையும் மட்டுமே அந்தந்த ஊர்த் தல புராணங்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. தீர்த்தப் படலம் என்றும்,தீர்த்தச் சிறப்பு என்றும் தலங்கள் மீது அமைந்துள்ள  புராணங்களில் பாடப்பெற்றிருப்பதைக் காணலாம்.  " தீர்த்தனை, சிவனை சிவலோகனை " என்று அப்பர் பாடுவதை, கங்கை என்னும் தீர்த்தத்தை முடி மேல் கொண்டவன் என்று மட்டும் பொருள் கொள்ளாமல், எல்லா தீர்த்தங்களையும் தன் வடிவாகவே கொண்டவன் என்று பொருள் உரைப்பது இன்னும் சிறப்பாக அமையும். 

தீர்த்த யாத்திரை என்ற சொல்லை நோக்கும்போது, தீர்த்தங்களில் நீராடுவதன் பொருட்டு யாத்திரை மேற்கொள்ளுதல் என்ற விளக்கத்தைப் பெற முடிகிறது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றுமே யாத்திரை செய்பவர்களுக்குக் கிடைத்து  விடுவதால் அன்னோர்க்கு சற்குருவும் கிடைத்து விடுவார் என்கிறார் தாயுமானவர். திருவிழாக்களிலும் தீர்த்தவாரி முக்கிய நிகழ்ச்சியாக இன்றும் கருதப்படுகிறது. அப்போது, திருக்கோயிலில் இருந்து எழுந்தருளும் அஸ்திர தேவருக்கும் அப்புண்ணிய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

காசியில் கங்கா நதி ஒன்றிலேயே பல கட்டங்கள் இருப்பதால், யாத்ரீகர்கள் அங்கெல்லாம் சென்று நீராடி நற்பலனைப் பெற்று வருகிறார்கள். ஒரே நீர்தானே எல்லாக் கட்டங்களிலும் வருகிறது என்றும் ஒரு துறையில் நீராடினால் போதாதா என்றும் குறுக்குக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல இராமேசுவரம் ஆலயத்திற்குள் உள்ள எல்லாக் கிணறுகளிலும் மக்கள் நீராடி யாத்திரையின் பயனைப் பெறுகிறார்கள். சில தீர்த்தங்கள் . அருகருகே இருந்தாலும் சுவை , நிறம் ஆகியவை வேறுபடுவதை அங்கு சென்றவர்கள் கவனித்து இருக்கலாம். 

விழாக் காலங்களில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக வடக்கு ப்ராகாரத்திலுள்ள ஆறு தீர்த்தங்களைக் கோயிலுக்குள் இடமாற்றம் செய்ய இருப்பதாகச்  செய்தி வந்துள்ளது. இது துரதிருஷ்டமான முடிவு என்றே கூறலாம். கிணறு வேண்டுமானால் மனிதன் தோண்டலாம். அப்படித் தோண்டப்பட்டவற்றைத்  தீர்த்தம் என்று நாம் அழைப்பதில்லை. தோண்டிய கிணற்றிலிருந்து கங்கையை வரவழைக்க நாம் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அளவிற்குத் தவம் செய்யவில்லை. நமது ஊனக் கண்களுக்கு எல்லாமே சமமான நீர் நிலைகளாகவே தெரிவதால் ஏற்பட்டுள்ள விபரீதம் இது. அந்த புண்ணிய தீர்த்தங்களை மூடி விட்டு அதேபெயரில் கோயிலுக்குள் வேறு இடத்தில் கிணறு தோண்டி விடுவதால் எவ்வாறு அவை பழையபடி தீர்த்தங்கள் ஆக முடியும் என்று தெரியவில்லை. ஆன்மீகப் பெரியவர்கள் சிலரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்ற செய்தி  உண்மையாக இருந்தால் அதை என்னென்று சொல்வது? மக்களது நம்பிக்கையைப்  பயன் படுத்திக்கொள்ளும் செயலாக இது அமைந்து விடக்கூடாது. ஆன்மீகப் பெரியவர்களாகட்டும், அற  நிலையத் துறையாகட்டும், இது பற்றிய விரிவான அறிக்கையை மக்கள் நலனுக்காக வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக. 

Wednesday, October 18, 2017

தவ வலிமை

காஞ்சி காமகோடி பெரியவர்கள் 
                     ஒரு காலத்தில் விருத்திராசுரனால் தேவர்கள் அனைவரும்  துன்புறுத்தப்பட்டபோது அவனைப்  போரிட்டு வெல்ல முடியாமல் போன தேவேந்திரன், திருமாலின் அறிவுரைப்படி ததீசி முனிவரை அணுகினான் . பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்களின் ஆயுதங்கள்  ததீசி முனிவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அவற்றை எவரும் திரும்பக் கேளாது போகவே, ததீசி முனிவர் அவ்வாயுதங்களை விழுங்கி விட்டார். அவை யாவும் ஒன்று சேர்ந்து அவரது வஜ்ஜிரமான முதுகுத் தண்டாக ஆயின. அந்த வஜ்ஜிரப்படையை முனிவரிடம் பெற்றுப் போரிட்டால் அசுரனை அழிக்கலாம் என்று திருமால் கூறியிருந்தபடியால் அதனை முனிவரிடம் தேவர்கள் யாசித்தனர். 

ததீசி முனிவர் தேவர்களிடம் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம்: "  இந்த உடல் அழியும் தன்மையை உடையது. அவ்வாறு அழிந்தபின், அதை நாய்கள் தமக்குச் சொந்தம் என்கின்றன. .இயமனோ அது என்னுடையது என்று கைப்பற்றுகிறான். காட்டிலுள்ள பேய்களோ தமக்கே உரிய இரையாகக் கருதிக் குதூகலிக்கின்றன. ஆனால் அத்தருணம் வரையில் நாம் இவ்வுடல் நம்முடையது என்று நினைக்கிறோம்.இப்புழுக் கூட்டை நம்முடையது என்றும்  எல்லாம் நமக்கே சொந்தமானது என்றும்  கருதி , பிறருக்கு இம்மி அளவும் தானம் செய்யாமலும் உதவாமலும் கல் நெஞ்சர்களாக இருக்கிறோம். நீங்கள் அசுரர்களால் துன்பம் அனுபவிக்கும் இந்நேரத்தில் இவ்வுடம்பால் உங்களுக்குத்  தீமை விலகி  நன்மை ஏற்படப்போகிறது என்றால் அதை விட இவ்வுடல் எடுத்ததன் பலன்  எனக்கு வேறு என்ன இருக்கப் போகிறது " என்று கூறி சமாதியில் அமர்ந்து,  கபாலம் திறக்கப்பெற்று,விமானமேறி, சிவலோகம் அடைந்தார். அவரது பூதவுடலிலிருந்து எடுக்கப்பெற்ற வச்சிராயுதம் மூலம்  இந்திரன் விருத்திராசுரனைப் போரிட்டு வென்றான். இதை வள்ளுவரும் " என்பும் உரியர் பிறர்க்கு " என்று சிறப்பிக்கிறார். 

நான்கு ஆசிரமங்களுள் சந்நியாச ஆசிரமம் பிறர்க்கெனவே தன்னை அர்ப்பணிப்பதாக அமைவது. இதையே வேறு விதமாகச் சொல்லப்போனால், பிறர் செய்வதற்கு  அரிய தருமத்தை இராப் பகலாகச் செய்வதற்காகவே ஏற்பட்டதாகக் கூடக் கொள்ளலாம். ஆகவேதான் அதனைப் புனிதமானது என்கிறோம்.சராசரி மனிதன் செய்வதையே தானும் செய்தால் அவர் எப்படி சந்நியாசி ஆக முடியும்? பிறர் ஆனந்தமாக வாழ்வதற்குத் தவம் செய்பவரே  தவசி. நம் நாட்டில் இத்தனை கஷ்டங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் கேட்டபோது அதற்கு அவர், " நான் செய்யும் தவம் போதவில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே நான் மேன்மேலும் கடும் தவத்தை மேற்கொள்ள வேண்டும். உலக நன்மைக்காக பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும் " என்றார்களாம். 

தவம் சிறக்க வேண்டும் என்றால் நாட்டின் மூலை  முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று தவமும் பூஜையும் செய்து அங்கு சில நாட்கள் தங்கி ,மக்களை ஆட்படுத்த வேண்டும். காஞ்சிப் புராணம் அப்பர் பெருமானைக் குறிப்பிடுகையில் " நடை அறாப் பெருந்துறவு "அவர் பூண்டு ஒழுகியதாகக் கூறுகிறது. இங்கு நடை என்பது காலால் நடந்து வருவது என்பதை விட ஒழுக்கம், தவம் என்றெல்லாம் பொருள் கொள்வதே சிறப்பு. இதைத்தான் காஞ்சிப் பெரியவர் அனுசரித்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் நம்மைப் போல் பண்டிகை கொண்டாடுவதில் நமக்கு நிகராக இருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வாணங்கள் கொளுத்திக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீப ஒளியில் இறைவனைக் கண்டு நமக்கும் காட்டும்  கருணை பாலிப்பவர்களாகவே இருப்பார்கள். 

நாட்டில் மழை பொய்க்கிறது. ஆறுகள் வற்றிப் போகின்றன. குளங்களும்,நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இப்படி இருந்தும், நா வற்றும் அளவுக்கு சிலர்  நாத்திகம் பேசி மக்களைக்  கெடுக்கின்றனர். ஒற்றுமை இன்மையின் உச்ச கட்டத்தைப் பார்க்கிறோம். தீயவற்றைச் செய்வதில்  பயம் போய் விட்டது. அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகின்றன. துறவறம் மேற்கொள்வோரும் வாய்ப் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தவ வலிமையால் மக்களின் துயர் தீர்க்க முன் வருவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மக்களது நம்பிக்கையை விரைவில் இழக்கக் கூடும். இப்போதாவது அவர்கள் தவத்திற்கும் பூஜைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்களா?   

Sunday, October 1, 2017

பண்டிகைகள் வியாபாரிகளின் பிடியிலா?

நவராத்திரி ஒன்பது நாளும் உபவாசத்துடன் அம்பிகையை வழிபடுவோர் பலர் . வீடுகளிலும்,கோயில்களிலும் இப்பண்டிகை  ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும்,பக்தியையும்  தங்களுக்குச்  சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகளைக் காணும் போது வருத்தமும்  ஏமாற்றமும் ஏற்படுகிறது.  வேறு எந்தப் பண்டிகை வந்தாலும் இதே நிலை தொடர்கிறது.    பூஜை செய்வதற்குப் பூவும் நீரும் இருந்தாலே அதனை செய்து விடலாம். அவ்வளவு எளிதாக நமக்குப் புண்ணியம் கிடைக்க விடுவார்களா நமது வியாபாரிகள்? நாளைக்கு ஒரு பண்டிகை வருகிறது என்றால் அதைக் காரணமாகக் கொண்டு விலையைக் கடுமையாக உயர்த்தி விடுகிறார்கள். பூ வரத்து குறைந்து விட்டதாம். இவர்களுக்கு மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் வானளவு லாபம் வந்தே தீர வேண்டும். அமோக விளைச்சலால் விலை சரிந்து விட்டால் விவசாயிகள் வேதனை என்றுதானே செய்தி வெளியிடுகிறார்கள்! பாமரர்கள் வேதனைப் படுவதற்கு யார் கவலைப் படப் போகிறார்கள்? 

நவராத்திரி கொலு பொம்மை விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டு பொம்மை வாங்கப்போனவர்களுக்குத் தெரியும், எத்தனை கடுமையாக விலையை ஏற்றி விற்கிறார்கள் என்பது. ஒரு சாண் அளவு கூட இல்லாத பொம்மைகளை சுமார் எண்ணூறு ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் ஜீ.எஸ்.டி வரியை அபத்தமாகக் காரணம் காட்டுகிறார்கள். எப்படியும் நம் வழிக்கு வந்து பொம்மைகளை வாங்கத்தானே வேண்டும் என்ற தைரியத்தால் இவ்வாறு விற்கப்படுகிறது.


இங்கு நீங்கள் காணும் இரண்டடி உயர பொம்மையின் விலையைக் கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். முதலில் அது என்ன பொம்மை என்று பலருக்குப் புரியாத நிலையில், கையில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியின் பொம்மை அது என்றார் ஒருவர். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். பதினெட்டாயிரமாம்! என்னதான் வேலைப்பாடாக இருந்தாலும்  ஊரை உலையில் போட்டுப் பணம் சம்பாதிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு ஏழையோ, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரோ வாங்க முடியாதபடி பொம்மையின் விலை எட்டாக் கனி ஆக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுத பூஜை என்றால் நெருங்க முடியாத அளவுக்குப் பழங்களின் விலையும்,பூக்களின் விலையும்  ஏறி விடுகின்றன. பாவம் மக்கள்! ஆண்டுக்கு ஒரு முறை தானே என்று இந்த விலை உயர்வை சகித்துக் கொண்டு வாங்குகிறார்கள். முதலில் ஆயுதங்களுக்குப் பூஜை என்று ஆரம்பித்து, சைக்கிள், பைக்,கார் என்று எல்லாவற்றிற்கும் வாழை ,தோரணம்,பூ ஆகியவற்றைக் கட்ட ஆரம்பித்து விட்டதால், வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம் தானே! 

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது என்று சொல்லிக்கொண்டு,இப்படி ஏற்றிக்கொண்டே போனால் ஒரு நாள் தாங்கவே முடியாத நிலை வந்து, இந்த பூஜைகளுக்குக் குந்தகம் வராது என்பது என்ன நிச்சயம்? மக்களும் இன்று பூத்து நாளை வாடும் மலருக்கு சேர் ஆயிரம் என்று கொடுத்து வாங்குவதை முடிந்த வரை தவிர்த்து, விலை குறைவான பிறவற்றை வாங்கினால் இவர்களின் கொட்டம் கொஞ்சமாவது அடங்கும். இல்லாவிட்டால், தெரு ஓரம் முளைத்துக் கிடக்கும் அருகம் புல்லையும், எருக்கம் பூவையும் பறித்துக் கொண்டு வந்து விட்டு, சிறிய ஒரு கூறையும் பத்து ரூபாய்க்கு விற்றாலும் அதனை  வாங்கும் நிலை தொடரும். பூஜை செய்யும் அன்பர்கள் சிந்திப்பார்களா? இப்பொழுதாவது வீட்டில்,காய்கறி, பூ ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்பத் தொட்டிகளில் பயிரிடலாம். அதை விட்டுவிட்டு, அரசாங்கத்தையும், வியாபாரிகளையும் நம்புவதோ,குறைகூறுவதோ எந்தப் பலனையும் தரப்போவதில்லை.