Thursday, December 10, 2020

 

                                மறவாதே நினைக்கின்றேன்             

                                                       சிவபாதசேகரன்


லார்ட் மெக்காலே (Lord Macaulay)என்ற ஆங்கிலேயரைப் பற்றி அநேகர் அறிந்திருக்கக்கூடும். அவர் தனது ஐந்தாவது வயதில் தெருவில் நடந்து செல்லும் போதும் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட்(Paradise Lost) என்ற நூலின் ஒன்பது பகுதிகளையும் படித்துக் கொண்டே செல்வாராம். நாளடைவில் அவ்விளம் வயதிலேயே அந்நூல் முழுவதும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டதாம். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ட்ரவெல்யான் (Trevelyon) என்பவர் கூறுவதைக் கேளுங்கள்:          “ இந்நூலின் அத்தனை பிரதிகளும் உலகில் காணாமல் போய் விட்டாலும், இதோ மெக்காலே இருக்கிறார், தனது நினைவிலிருந்து அதனை அப்படியே கொண்டு வந்து விடுவார்” என்று எழுதியிருக்கிறார். நினைவாற்றல் என்பது ஒருவகையில் வரப்பிரசாதமே.

எதனை நினைவில் கொள்வது, எதனை மறப்பது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. எதற்கு எடுத்தாலும் புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்பதாக  நினைத்து, “ களவும் கற்று மற “ என்று சொல்லியிருக்கிறதே, அப்படியானால் திருடத் தெரிந்து கொள்ளலாமா “ என்று கேள்வி எழுப்ப ஆரம்பிக்கின்றனர். “ நன்றல்லது அன்றே மறப்பது நன்று “ என்று வள்ளுவர் கூறியது ஏனோ நினைவுக்கு வருவதில்லை. ஒரு காலத்திலும் பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது என்பதை “ நன்றி மறப்பது நன்றன்று “ என்ற வள்ளுவம் நினைவுக்கு வர வேண்டும். தினை  அளவு உதவியை ஒருவர் செய்திருந்தாலும் அதனை  ஞாலத்தின் மாணப் பெரிதாக எண்ணி அதன் பயன் அறிபவர்கள் அதனைப் பனை அளவாகக் கொள்வர் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

ஒருவர் செய்த தீமையை மறந்து விடலாமா என்பது அடுத்த கேள்வி. சில நேரங்களில் அதுவும் கடினமாகத்தான் தோன்றுகிறது. தன்னிடம் பொய் சொல்லியும், ஏளனமாகப் பேசியும் கொடிய சொற்களை உமிழ்ந்தும் மனம் நோகச் செய்தவர்களை அத்தனை எளிதாக மறப்பது கடினம் தான். ஒருவேளை மன்னித்தாலும் அந்த செய்கைகளும் சுடு சொற்களும் தொடர்ந்து பல்லாண்டுகள் சிந்தையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவேதான், தீயினால் சுட்ட புண் ஆறினாலும் நாவினால் சுட்டது ஆறாது என்றார் திருவள்ளுவர். குறைவாகப் பேசுபவர்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற சங்கடங்கள் நேருவது குறைவாக இருக்கலாம். “ சும்மா இரு சொல் அற “ என்ற அருணகிரிநாதர் சொல்வதும்,  சும்மா இருப்பதே சுகம் என்பதுவும் எல்லோராலும் கடைப் பிடிக்க முடிவதில்லையே.

“ மௌனம் பரம ஔஷதம் “ என்பார்கள்.  தவம் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். மௌன குருவான தக்ஷிணாமூர்த்தி சன்னதியிலும், ஞானிகளின் சன்னதிகளிலும் நம்மை அறியாமலேயே நாமும் மௌனிகள் ஆகி விடுகிறோம். ஆனால் அதைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகாவது ஓரளவேனும் அதை நாமும் அனுஷ்டிக்க வேண்டும் என்று தோன்றாதபடி உலக மாயையில் மீண்டும் வீழ்கிறோம். காலம் கடந்து ஞானம் வந்தால் என்ன பயன் ? மீதமுள்ள நாட்கள் எத்தனை என்பதை யார் அறிவார் ?

அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். நமது செயல்களும் சிந்தனைகளும் சிவமயமாக ஆக்கிக் கொள்ள முயல இது முதல் படி. இவ்வாறு நினைக்கப் பழக்கிக் கொள்வதால் நடக்கும் போது அண்ணாமலையை வலம் வருவதாக எண்ணுவது என்பது அடுத்த நிலை.  “சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் “ என்று சேரமான் பெருமாள் நாயனார் கூறுவதுபோல மனத்தை முதலில் செப்பம் செய்து கொண்டு விட்டால் இந்த ஊனுடம்பைக் கோயிலாக இறைவன் கொள்கிறான்.         “ உள்ளம் பெரும் கோயில்” , “ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்ற திருமுறை வாக்குகள் இங்கே சிந்திக்கத்தக்கன.

அருளாளர்களோ மிகுந்த அடக்கத்துடன், தாங்கள் அவ்வாறு நினைக்கவே இல்லையே என்று ஏங்குகிறார்கள் என்றால் . நம் நிலையை என் என்பது?    “நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னைப், பேயாய்த் திரிந்து எய்த்தேன் “ என்பது சுந்தரர் தேவாரம். 

இறையுணர்வே இல்லாதவர்களுக்கு அவனை வழிபடும் மனம் எவ்வாறு வாய்க்கும் ? மறவாது நினைப்பவர்க்கே இது கைகூடும். அதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் சம்பந்தர். வலஞ்சுழி வாணனை ஏத்தியும் பாடியும் வழிபட வேண்டும் என்றால் முன்னம் செய்த நல்வினைப் பயனே ஆகும் என்பது அவரது அருள்வாக்கு. ஒருவேளை அவனது நினைப்பு வந்தாலும் நமது தீவினை அதனை உடனே மறக்கச் செய்கிறதல்லவா ? அவனது நாமங்களைப் பலகாலும் ஓதும் அடியார்கள் அவ்வாறு எந்நாளும் மறவாது ஓதும் வரத்தையே பெருமானிடம் கேட்பார்கள். “ உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே “ என்பது சுந்தரர் தேவாரம். இவ்வாறு பலகாலமும் மறவாது வழிபடும் அடியார்களை எவ்வாறு அருளுகிறான் என்றால், அவர்களுக்கு முன்னே வந்து நிற்பான் என்கிறார் அப்பர் சுவாமிகள்.           “ இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே.” என்பது அவர் வாக்கு.

உன்னுதல் என்றால் நினைத்தல் என்று பொருள் படும். உறங்கும் போதும் தெய்வ நினைப்புடன் உறங்க வேண்டும் என்பதை, “ உன்னி உன்னி உறங்குவேன் “ என்ற நாவுக்கரசரின் சொன்மாலை நமக்கு அறிவிக்கிறது. “ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் “ என்று அருளிச் செய்தார் ஞான சம்பந்தர்.

எத்தனையோ தலைமுறைகளாக வேதங்களும் பிற ஞான நூல்களும் குரு முகமாகக் காதால் கேட்டே பயிலப்பட்டுப் பிறருக்கு உபதேசிக்கப்பட்டும் வந்தது. அத்தலைமுறைகளை நாம் நன்றியுணர்வுடன் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அச்சில் ஏறிய பிறகுதான்,  மறந்தாலும் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், இது மறப்பதற்கு வசதியாக அமைந்து விட்டது என்றும் சொல்லலாம். மறக்கக் கூடாது என்பதற்காக அனுதினமும் ஓதி வந்தது போகத் பாராயணம் செய்கையில் புத்தகமும் தேவைப் படுகிறது. போதாக் குறைக்கு மொபைலின் துணை இருக்கவே இருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, என்றோ ஒரு நாள் கோவிலுக்குச் செல்வதும் என்றோ ஒருநாள் தெய்வீக நூல்களைப் பாராயணம் செய்வதும் என்றோ ஒருநாள் இறைவனை நினைப்பதும் வாடிக்கை ஆகி விட்டபடியால் நீராடுபவர்களின் பாவங்களை நீக்கும் சக்தியை நதிகள்இழப்பது போல,  நியமமின்றிச் செய்யப்படும் பாராயணங்கள் ,ஜபங்கள் ஆகியவற்றால் கோரிய பலன் இல்லாது போகுமாறு மந்திரங்களும் வலுவிழக்கின்றன. இவ்வளவு ஏன், கேட்ட வரங்களை வாரி வழங்கும் தெய்வ சன்னதிகளும் மந்திர பலத்தை இழக்கின்றன. கும்பாபிஷேகம் செய்த மறு நாள் முதலே பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன. கை மேல் பலன் இல்லையே என்று சொல்பவர்களுக்கு இதுவே பதில்.       

Monday, November 23, 2020

 

                 கருணையின் மறுபெயர் குரு            

                                         சிவபாதசேகரன்


அருள் என்பது கருணையின் விளைவு. குவலயம் தன்னில் குருபரனாக மாணிக்கவாசகர் பொருட்டு எழுந்தருளினான் இறைவன். நயன தீக்ஷையால் குரு தன்னை நாடியவருக்குக் கருணை பாலிக்கிறார். உபதேசம் பெற வேண்டுமானால் பக்குவப்பட்டோருக்கே அது சாத்தியமாகிறது. ஆனால் கருணைக் கண்களால் அருளப் பெற்றவருக்கோ அனைத்தும் சாத்தியம் ஆகிறது என்றும் சொல்லலாம். அத்தகைய குரு அபக்குவர்களையும் தனது கருணைக் கண்களால் நோக்கி அருளுவார்.

குரு உருவைக் கண்டவுடனேயே மனத்தில் தெளிவும் அமைதியும் பிறக்கின்றன. இதைதான் திருமூல நாயனார், “ தெளிவு குருவின் திருமேனி காண்டல்” என்று அருளினார். இந்நிலையில் குருவானவர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆதி குருவாகிய தக்ஷிணா மூர்த்தியைப் போலவே மௌன குருவாய் இருந்தாலும் தரிசித்த மாத்திரத்திலேயே வேண்டிய அனைத்தும் சித்திப்பதை அனுபவம் மூலம் அறியலாம். அதேபோல அருளை நாடி வந்தவரும் இதைக் கொடுங்கள் என்று வாய் விட்டுக் கேட்க வேண்டிய அவசியமும் இராது. வந்தவரது முகக் குறிப்பே அவர் குருவிடம் ஏதோ கேட்க விழைகிறார் என்று காட்டிவிடும். அதைக் கண்ட குருநாதரும் என்ன வேண்டும் என்று தாமாகவே கேட்பார். மயிலாடுதுறையில் உத்தர மாயூரத்தில் உள்ள சிவாலயத்தில் சுவாமிக்கு வதான்யேச்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. நாம் கேட்கும் முன்பே “ என்ன வேண்டும் கேள் “ என்று கருணையோடு கேட்கும் வள்ளலாகிய பெருமானுக்கு அப்பெயர் ஏற்றதேயாகும். அப்பெருமானைச் சிந்தையில் இருத்தி நியமத்துடன் பூஜிக்கும் குருநாதருக்கும் அக்குணம் ஏற்படுவது இயற்கையே. இவை யாவும் கருணையின் வெளிப்பாடே ஆகும். கயிலாய உபதேச பரம்பரையில் வந்தோர்க்கு இப்பண்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது.

மக்களுக்கு நல்லுணர்வை ஊட்டி, ஞானமும் முத்தியும் பெறும் வழிகளைக் காட்டி உய்யக் கொள்வதற்காகப் பல்வேறு கால கட்டங்களில் குருநாதர்கள் அவதரித்து, மடாலயங்களை நிறுவி, தங்களது உபதேச பரம்பரையைத் தழைக்கச் செய்தார்கள். அப்பரம்பரையில் வந்தோரது பெயர்களை அறிந்தபோதிலும் அவர்களது அருட்செயல்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிய முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்குத் தமது வாழ் நாளில் மடாதிபதிகளாக இருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே அறிய வாய்ப்பு உண்டு. காஞ்சிப் பெரியவர்களைத் தரிசிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களைப் போலத் திருவாவடுதுறை ஆதீன 23 வது சந்நிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்ரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்த போது நேர்ந்த அனுபவங்களையும் கூடவே எண்ணிப் பார்க்கும் வாய்ப்பினை அன்னாரது குருபூஜை நன்னாளாகிய கார்த்திகை சதயத்தன்று பகிர்வதில் பெருமகிழ்வு கொள்ள முடிகிறது.

சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்து இளவரசாவதற்கு முன்பு சில முறை திருவாவடுதுறை ஆலயத்திற்குச் சென்று விட்டு நூல் நிலையத்தில் ஆதீன வெளியீடுகளை வாங்கிக் கொண்டு வந்து விடும் நிலையில், பிறிதொரு சமயம் ஆலய அர்ச்சகரான ஸ்ரீ தண்டபாணி சிவாசாரியார் அவர்கள் , துறைசை ஆதீனத்திற்குச் சின்னப் பட்டமாக ஒருவர் சந்நிதானத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் என்றும் சிவப் பணி செய்து வருவோரைக் கண்டால் பெரிதும் மகிழ்வார் என்றும் கூறி இளைய சுவாமிகளிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போது சுவாமிகள் பசுமடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். முக மலர்ச்சியோடு அவர்கள் பேசியதை என்றும் மறக்க இயலாது. அது முதல், திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம் சின்னப் பட்ட சுவாமிகளைத் தரிசிப்பது வழக்கமாகிவிட்டது. 

 திருவாவடுதுறையிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள திருக் கோழம்பம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் அறநிலையத் துறையைச் சேர்ந்து இருந்தபோதிலும் சரிவரக் கவனிக்கப்படாமல் புதர் மண்டி இருந்தது. ஆனாலும் ஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யார் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும் தினசரி அங்கு சென்று பூஜை செய்து வந்தார். இறைவனது திருவருள் , அக்கோயில் திருப்பணி ஆகிக் குடமுழுக்கு நிகழுமாறு கூட்டுவித்தது. அன்பர்கள் ஆதரவுடன், தலத் திருப்பதிகக் கல்வெட்டை சுவாமியின் மகா மண்டபத்தில் அமைத்து, அதனை அவ்வமயம் மகா சந்நிதானம் ஆகிவிட்ட நம் சுவாமிகளின் திருக் கரத்தால் திறக்க விரும்பியதை அவர்கள்  மனமுவந்து ஏற்றுக் கொண்டதுடன் குடமுழுக்குக்கு நேரில் வந்து கலந்து கொண்டு அருள் வழங்கினார்கள். மேலும், ஆதீனக் கோயில்களான திருவீழிமிழலை, திருமங்கலக்குடி ஆகியவற்றின் கும்பாபிஷேகத்திலும் சுவாமிகளை சந்திக்கும் போது அரிய நூல்களை வழங்கியருளினார்கள். இவ்வளவும் பெரும்பாலும் கண்கள் மூலமாகப்   பேசியவையே. அருகில் நின்று உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

மற்றொரு சமயம், கருவிலி  (கருவேலி) என்ற பாடல் பெற்ற தலத்தின் திருப்பதிகக் கல்வெட்டை அக்கோயிலில் நமது உபயமாக சமர்ப்பித்த வேளையில் அதனை மகா சன்னிதானம் அவர்கள் திறந்து வைத்து அருளாசி வழங்க வேண்டும் என்ற பேரவா உண்டாயிற்று. ஏற்பாடு செய்திருந்த தினமோ குருவாரம். அன்று சுவாமிகள் மௌனம். இருந்தாலும் கோயிலுக்குத்  தரிசனம் செய்ய வருகிறேன் என்றார்கள். முன்னதாகவே அங்கு சென்று சுவாமிகளை எதிர்கொள்ளக் குடை, மேளம், பூர்ண கும்பம், பன்னீர் இலைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு எழுந்தருளினார்கள். ஓதுவாமூர்த்திகள் கூட வராததால் சுவாமி- அம்பாள் சந்நிதிகளில் அடியேனைப் பஞ்சபுராணம் , அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடுமாறு சைகையால் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காகத்  திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் பதிவு செய்யும் கருவியோடு வந்திருந்தார்கள். சுவாமிகள் மௌனமாக இருந்தபடியால் அடியேனைப் பேசுமாறு பணித்தருளினார்கள். அத்தலத் தரிசனத்தில் பெரிதும் மகிழ்ந்தார்கள் என்பது அப்போது தெரியவில்லை.  

தை மாதத்தில் திருவாவடுதுறைக் கோயிலில் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு இறைவர் பொற்கிழி வழங்கும் விழாவைத் தரிசிக்கச் சென்றபோது மகா சந்நிதானம் அவர்கள் அங்கு எழுந்தருளி, விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்த அடியேனை சிப்பந்தி ஒருவர் மூலம் அழைத்து விபூதி அளித்துவிட்டு, “ கருவிலிக்கு மீண்டும் போனீர்களா “ என்று கேட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அக்கோயிலின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு எத்தகையது என்று.

இடையில் சிறிது காலம் அவர்கள் காசியிலே வாசம் செய்திருந்த படியால் நேரில் தரிசிக்க இயலவில்லை. மீண்டும் மடத்துக்குத் திரும்பிவிட்டதை அறிந்தவுடன் நேரில் தரிசிக்க மடத்திற்குச் சென்றேன். காசியிலிருந்து கொணர்ந்த ஸ்படிக மணிகளை வழங்கி ஆசீர்வதித்தார்கள்.

அக்காலத்தில் மாதந்தோறும் பல கட்டுரைகளை எழுதி, சைக்லோஸ்டைல் செய்து, உடன் பணியாற்றிய அன்பர்களுக்குக் கொடுத்து வந்தேன். அதில் வெளியான வேதாரண்யப் புராணத்தைப் படித்த சுவாமிகள் மிகவும் அச்செயலைப் பாராட்டியருளினார்கள். மடத்தின் மாதாந்திர வெளியீடான மெய்கண்டார் இதழிலும் கட்டுரைகள் எழுதிவந்த போது அதனைப் பாராட்டி , அடியேனை  ஊக்குவித்து  மகிழ்ந்தார்கள்.

அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு பாடல் பெற்ற தலத்தின் திருப்பணியில் பங்கேற்றபோது கும்பாபிஷேகத்தை ஒட்டிப் புதியதாக நடராஜர் சிவகாம சுந்தரி உற்சவ மூர்த்திகளைச் செய்து வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினோம். மூலவர் பெயர் நடனத்தை ஒட்டியவாறு இருந்தும் அக்கோயிலில் நடராஜப் பெருமானது திருவுருவம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது.

கும்பாபிஷேகப் பத்திரிகையை மடத்திற்குச் சென்று சுவாமிகளிடம் சமர்ப்பித்து, குடமுழுக்கிற்கு எழுந்தருள வேண்டி நின்றோம். அதற்கு இசைந்ததோடு, அஷ்ட பந்தன மருந்து, அதனை இடிக்க ஆட்கள், பிராகாரம் சுத்தம் செய்ய ஆட்கள் ஆகியவற்றை நாங்கள் கேளாமலேயே தந்தருளினார்கள். நடராஜ மூர்த்தி பற்றி கேட்பதா என்று தயங்கி நின்றபோது, முகக்குறிப்பைக் கண்டு விட்டு “ இன்னும் ஏதாவது செய்துதர வேண்டுமானால் கேளுங்கள்” என்று கேட்டார்கள். ஒருமாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , “ கோயிலில் மூலவர் பெயர் பெருமானது நாட்டியத்தை ஒட்டி இருந்தும் உற்சவ மூர்த்தி இல்லாமல் உள்ளது. நமது மடத்தின் ஆத்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜப் பெருமான் ஆதலால், மடத்தின் சார்பாக நடராஜர்- சிவகாமி விக்ரகங்களை அருட்கொடையாக வழங்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தேன். சுவாமிகள் உடனடியாக அவற்றைச் செய்து தர ஏற்பாடுகள் செய்யுமாறு சிப்பந்திக்குக் கட்டளையிட்டருளினார்கள்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆடல்வல்லான், சிவகாமசுந்தரி மூர்த்திகள் கோயிலுக்கு வந்தவுடன் பூர்ணகும்பம் அளித்துத் தெய்வ  தம்பதியரை வரவேற்றோம். சுவாமிகளும் வருகை தந்து அவற்றைப் பார்வையிட்டு மகிழ்ந்ததோடு, காரைக்கால் அம்மையார் விக்கிரகம் ஒன்றையும் புதிதாக வார்த்து ஆதீன சார்பாக அளித்தார்கள். ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாக ஏற்றதோடு ஆலய சிவாச்சாரியாருக்கும் மாதந்தோறும்  உதவித்தொகை வழங்கிய கருணைத் திறம் அளவிடற்கரியது.  இதுபோலப் பலவிடங்களில் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாகச்  செய்வித்தார்கள்.

மகேசன் பணியோடு மக்கள் பணியும் செய்த கருணையை நாம் இங்கு மறவாது போற்றவேண்டும். எத்தனையோ கோயில்களில் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டியும், மதிய உணவும் ஏழை எளியவர்களுக்கு வழங்கச் செய்த சிறப்பு இக்குருமூர்த்திகளுக்கே உரியது.

இவர்களது ஆட்சிக் காலம் , சைவ சித்தாந்தம் பயிலவும் அரிய பல நூல்கள் வெளிவரவும் , ஆதீனக் கோயில்கள் பலவற்றில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெறவும் சிறப்புற்று விளங்கியதை சைவ உலகம் நன்கறியும். ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் சிறப்பிக்கையில், “ கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி “ எனப் பாடுவார். அத்த ஆனந்த தாண்டவத்தை  ஞானக் கண்களால் காணப் பெரிதும் தவம் செய்திருக்க வேண்டும். மற்றையோரும் உய்ய வேண்டி, குருநாதர்களது கருணையை  நமது ஊனக் கண்களால் காணும் பேற்றை அளித்து நம்மையும் ஒருபொருட்டாக ஏற்று, நாய் சிவிகை ஏற்றி இறைவன் அருளுகின்ற திறம் நம்மை அதிசயப் படுத்தும்.     

Thursday, November 5, 2020

ஆலயங்கள் மறுமலர்ச்சி பெறுமா ?

                                                              சிவபாதசேகரன்

 


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்கலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டு இருந்த நேரம். வீதி உலா சென்று வந்த உற்சவ மூர்த்திகள் கோயிலை அடைந்தபின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளைக் கழற்றி விட்டுப் பத்திரமாக ஓர் அறையில் கோயில் பொறுப்பாளர் வைத்தபின் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு திருடன்,  அவர் அந்த இடத்தை விட்டு அகன்றபின் அந்த நகைகளைத் திருடிச் சென்று விட்டான். காவல் துறையால் உடனடியாக அவனைக் கைது செய்ய முடியவில்லை. மாயமாக மறைந்து விட்ட அவன் அந்நகைகளுள் சிலவற்றை உருக்கித் தன் மனைவிக்கு ஒரு ஆபரணம் செய்து கொடுத்தான் எஞ்சிய நகைகளை விற்று சைக்கிள் கடை வைத்தான் . பல சைக்கிள்களை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக்கொண்டு வந்து தராததால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பிறகு அரிசி மண்டி வைத்தான். அதிலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி இருந்தது. மனைவியோ இவன் செய்து கொடுத்த ஆபரணத்தைக் கழுத்தில் போட்டுகொண்டால்  பாம்பைப் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது என்று பதறினாள். இதற்கிடையில் அவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த கால கட்டத்தில் அவனது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு இரண்டு கைகளிலும் மணிக் கட்டுக்களுக்குக் கீழ் விரல்களே இல்லை ! வாக்கு மூலம் தந்த திருடன் சொன்னதாவது: "  சிவன் கோயில் நகையைத் திருடியதற்குத் தெய்வம் தந்த தண்டனை ஐயா இது. இதை விட, தெய்வம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் ?" என்றான். இச் செய்தி அந்நாளில் தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் வந்தது.  இந்தக் காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருட்டுக்களைப் பார்த்தால் எவ்வளவு பேர் இதுபோன்ற தண்டனை பெறுகிறார்களோ தெரியவில்லை. 

முன்பெல்லாம் இல்லாதவன்தான் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவான். ஆனால் இப்போதோ பெரிய ( ?) மனிதர்களும் , பெரிய பதவியில் இருப்பவர்களும் கூடத்  திருட ஆரம்பித்து விட்டார்கள். சுவாமியையே விற்றுக் காசு பார்க்குமளவுக்குத் துணிந்து விட்டார்கள். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தவர்கள் கோயிலுக்கு உரிய தொகையைத் தராததும், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுய நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் வாதிகள் பலரும் சிவத்துரோகத்திற்குத் துணை போக ஆரம்பித்து விட்டனர். ஆக்கிரமிப்பாளர்களால் கோயில்களும், குளங்களும் குறுகியும் காணாமல் போவதும்  பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வெளியாகின்றன. 

" பக்தர்களுக்கோ" எதைப் பற்றியும் கவலை இல்லை. தன்  குடும்பம் நன்றாக இருந்தால் போதும். கோயில் எப்படிப் போனால் என்ன ? இன்னும் பலரோ, " சுவாமி பார்த்துப்பார் " என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். சுவாமியையே கேவலமாகப் பேசும்போது கூட வாய் திறக்காத இவர்களா கோவில்களைப்  பற்றிக் கவலைப் படப் போகிறார்கள் ? ஒருவேளை தப்பித் தவறி யாராவது குரல் கொடுத்தால் கூட அவர்களுக்குத் துணையாகக் குரல் தர மாட்டார்கள். அவ்வளவு சுயநலம் வேர் ஊன்றி விட்டது. 

மக்களது அறியாமையும், சமயப்  பிடிப்பு இல்லாமையும், ஒற்றுமை இல்லாததும் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. சட்டம் பற்றிய அறிவோ சிந்தனையோ அறவே இல்லாத மனிதர்களை சட்டம் இருப்பதாகக் கூறி ஏமாற்றுவது எளிதாகப் போய் விட்டது. இதில் ஆண் என்ன பெண் என்ன , எல்லோரும் திருடத் தொடங்கி விட்டார்கள். நீதி வழங்கப் பல்லாண்டுகள் ஆகும் என்ற தைரியத்தால் துணிவு அதிகமாகிறது. அப்படியே ஏதாவது தண்டனை வழங்கப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது மேல் கோர்ட்டுகளில் முறையீடு, வாய்தா இத்யாதிகள் இருக்கும்போது வாழ் நாளே அநேகமாக முடிந்து விடும். அதற்குப் பிறகு தண்டனை வந்தால் என்ன,வராவிட்டால் என்ன. எல்லாவற்றையும் தொலைத்து வீட்டுக் கோயில்கள் நிற்பது ஒன்றே மிஞ்சும். வேண்டப்பட்டவர்களோ,அந்நியர்களோ தவறிழைத்தால் ஒருநாளும் தண்டனை பெற மாட்டார்கள் என்பது எழுதப்படாத சட்டம். 

கோயில்கள் தனது வருவாயையும்,உரிமைகளையும் இழந்து நிற்பது ஒரு பக்கம். மரங்கள் முளைத்து அழியத் தொடங்கியும் அரசோ உள்ளூர் வாசிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது அதனினும் கொடுமை! இந்நிலையைச் சுட்டிக் காட்டி ஒருசிலர் நீதி மன்றத்தை நாடியிருப்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது. இது ஒரு சிறிய ஆரம்பமே. இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகளோ ஏராளம். ஒரு நூற்றாண்டு காலத் தவறுகளையும் அலட்சியங்களையும் சரிப் படுத்துவது என்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி நீதி கிடைக்க வேண்டும். தன்னலம் கருதாத அன்பர்கள் பலர் இத்  தெய்வீகப் பணிக்குத் தங்களால் முடிந்த அளவு துணை நிற்க வேண்டும். பெயரளவில் ஆத்திகர்களாக இருந்தால் மட்டும் போதாது.  

Sunday, October 11, 2020

       தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள்  

                                           சிவபாதசேகரன்


தருமபுரம் சுவாமிநாத ஒதுவாமூர்த்திகளைப் பற்றி அறியாத திருமுறை அன்பர்கள் இரார். சிவபெருமான் திருவடிக்கே பதிந்த அன்பு கொண்ட இவர், திருமுறைகள் பால் கொண்டிருந்த அளவிலாப் பேரன்பை நேரில் பார்த்தவர்களே அறிவார்கள்.

தருமபுர ஆதீனத்தின் 24 வது குருமகா சந்நிதானத்திடம் பணிவிடைக்காகச் சேர்ந்த இவரது குரல் வளத்தைக் கண்ட காசிமடத்து அதிபர் காசிவாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள், இவரைத்  தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலையில் பயிலுமாறு பணித்தார்கள். அப்பாடசாலையின் ஆசிரியரான வேலாயுத ஒதுவா மூர்த்திகள் பல மாணாக்கர்களுக்குப் பயிற்றுவித்தவர்கள். அவரிடம் மாணாக்கராகச் சேர்ந்த இவரிடம் 25 வது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்கள் மிகுந்த பிரியம் காட்டியதோடு தனது சிவத்தல யாத்திரைகளுக்கு இவரை அழைத்துச் சென்று அங்குள்ள சிவ சன்னதிகளில் தேவாரம் பாடச் செய்து மகிழ்ந்தவர்கள். சென்னையில் ஆதீனப் பிரசார நிலையம் துவங்கியபோது இவரை அங்கே இருத்தி, திருமுறை ஆசிரியராக அமர்த்தினார்கள். அங்கு பணியாற்றிய பின்னர், இவர் தனியாக வசித்து வந்தார். ஆனால் தமிழகக் கோயில்களில் நடைபெறும் வைபவங்களில் திருமுறை விண்ணப்பம் செய்து வந்தார்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சென்னையில் மகாலிங்க புரத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்த மாதாந்திர வழிபாட்டின்போது முதலாவதாகச் சந்தித்தபோது அப்போது பாடிய தேவாரப் பாடல்கள் மனத்தை ஈர்க்கலாயின. அடுத்த மாத வழிபாடு  நடைபெறும் தேதி, இடம்,நேரம்  ஆகியவற்றை அந்நிகழ்ச்சியில் அறிவிப்பார். அதுமுதல் மாதம்தோறும் அவ்வழிபாட்டில் கலந்து கொண்டு திருமுறையைச் செவி மடுப்பது உறுதி ஆகிவிட்டது.

சென்னை தங்கசாலையில் இருந்த சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை முதல் மாலை வரை இவரைக் கொண்டு பன்னிரு திருமுறை முற்றோதுதல் நடத்தி வந்தார்கள். அதைத் தவறாது கேட்டதால் பண்களுக்கான ராகங்கள் அறிய வந்ததோடு திருமுறைகளின் மீது ஆர்வமும் பக்தியும் பெரிதும் ஏற்பட்டது. தேவாரப் பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதமாக இது அமைந்தது.

இந்நிகழ்ச்சிகளின் நடுவில் பலப் பல சொந்த அனுபவங்களையும் கூறி அன்பர்களுக்கு சமய நம்பிக்கை வளரச் செய்தார். பாடல்களைப் பொருள் அறியும் வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். சொற்றொடர்கள் பலவற்றைக் கூட்டிப் பொருள் உரைக்கும் திறமை படைத்தவர் இவர். அப்பொருள் நம் மனத்தை நீங்காமல்  செய்வதை ஒரு உதாரணம் மூலம் இங்கு பார்க்கலாம்.

அப்பரடிகளின் “ வாழ்த்த வாயும் “ என்ற பாடல் பிரபலமானது.

“ வாழ்த்தவாயும் நினைக்க மட நெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே.”

என்று அதை முழுதும் பாடிவிட்டுப் பின்னர் பொருள் விளங்கக் கூட்டிப் பாடும்போது ,

“ சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே “ என்று வருவதை, நமக்கு அறிவுரையாக, “ சூழ்த்த மாமலர் தூவித் துதி” என்று பாடி ஒரு சில வினாடிகள் நிறுத்திவிட்டுப் பிறகு, “துதியாதே” என்று சேர்த்துப் பாடுவார்.

 மேலும், தலைவனை என்று வருவதைக் கூட்டிப் பாடும் திறனை,

“ வாழ்த்த வாயும் தந்த தலைவனை; நினைக்க நெஞ்சும் தந்த தலைவனை; தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை; சூழ்த்த மாமலர் தூவித் துதி” எனப் பாடுகையில் , கேட்பவர்கள் பரவசப் படுவர். மக்களிடையே பாடும்போது மட்டுமே இம்முறையைக் கையாளுவார்.  

திருமுறைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும் அதனை வாசிப்பதும்,பூசிப்பதும் நமது கடமை என்றும் அடிக்கடி வலியுறுத்துவார். வீதிகளில் திருமுறையை அலங்காரம் செய்த வண்டியின் பின்னர் திருமுறை பாடிக் கொண்டு செல்லும்போதும் நடுவில் மக்களுக்காக இக்கருத்தைப் பலவிடங்களில் கூறுவார்.

திருமுறைகளால் ஆகாதது எதுவும் இல்லை என்பார். தன்னையே அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுவார். அனுபவத்தைக் கூறுவதால் மக்களின் நம்பிக்கை உறுதிப் படும் என்பது இவரது கருத்து. நேரத்தைத் தவறாது கடைப் பிடிக்கும் வழக்கத்தைத் தருமபுர ஆதீன 24 வது குருமணிகளிடம் தான் நேரில் கண்டதாகக் கூறுவார். இசைக் கச்சேரி செய்யும்போதும் தனக்குக் கொடுக்கப் பட்ட நேரத்தை ஒருபோதும் தாண்டியதில்லை. தான் தருமையாதீன ஞானப் பண்ணையில் வளர்ந்ததை அடிக்கடி நினைவு கூர்ந்ததோடு பல மேடைகளில் சொக்கநாத வெண்பா, சிவபோக சாரப் பாடல்களைப் பாடி, குரு பக்தியை வெளிப் படுத்துவார்.

சென்னையில் வாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆசிரியப் பெருமானை வரவழைத்து மரியாதை  செய்து ஆசி பெறத் தவறியதில்லை. அந்நாளில் ஒரு ஆலய வழிபாட்டையும் நிகழ்ச்சியுடன் இணைத்திருப்பார். ஒரு சமயம், சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்த நிகழ்சசி ஏற்பாடாகியிருந்தது. அன்று காலை ஆசிரியருடன் ஆலய வழிபாடு நடை பெற்றது. வலம் வருகையில் சிவ சன்னதி வந்தபோது ஞானசம்பந்தர் அருளிய “ வீடலாலவாயிலாய்” என்ற பதிகம் முழுவதையும் கௌசிகப் பண்ணில் பாடியபோது அடியார்கள் மட்டுமல்லாமல், ஆசிரியப்பிரானும் முக மலர்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்தார். அன்று மாலை ஆசிரியருக்கு நடந்த பாராட்டில் இவரது திருமுறைக் கச்சேரி நடைபெற்றது. இடையில் திருச்சிராப்பள்ளி முத்துக் கந்தசுவாமி ஒதுவா மூர்த்திகள் வந்தபோது அவரையும் மேடையில் தன்னுடன் உட்காரவைத்து, ஆசிரியர் மகிழும்படி இருவருமாக, “ மாதர் மடப்பிடியும் “ பாடியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும்  பரவசம் அடைந்தனர்.  

தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலமான திருக்கச்சூரில் ஒருசமயம் மலை மேலுள்ள மருந்தீசர் ஆலயத்தில் குறுகிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டியிருந்தது. பொருள் பற்றாக்குறை இருந்தபடியால் தேவார பாராயணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவ்வாறு விட்டுவிடலாகாது எனக் கருதி, இவரை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்ய வேண்டினோம். முன் பணம் கொடுக்கக் கூட வசதி இல்லை. ஆனால் இவரோ எவ்வளவு சம்பாவனை தருவீர்கள் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் , வருவதாகக் கூறினார்கள். அதன்படி முதல் நாள் இரவே திருக்கச்சூருக்கு வந்து கும்பாபிஷேகத்தில்  கலந்து கொண்டார். எங்களால் முடிந்த சொற்பத் தொகையை கொடுத்தபோதிலும் அதற்காக வருந்தாமல் சிவத் தொண்டு ஒன்றையே பெரிதாகக் கருதினார்கள்.

மலையம்பாக்கத்தில் தனது தமக்கையாருடன் வசித்து வந்த இவர் பின்னாளில், சேக்கிழாரது அவதார பூமியாகிய குன்றத்தூரில் வசிக்கலானார். அங்கிருந்த சேக்கிழார் கோயில் இவரது முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.

ஆண்டு இறுதியில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றம் நடத்தும் இசை விழாவில் இவரது திருமுறை இசை அரங்கு நடைபெறும். திருமுறை அன்பர்கள் ஏராளமானோர் வருகை தருவதால் அரங்கம் நிரம்பி வழியும். திருமுறை இசை அரங்குகளில் இவரது இசை நிகழ்ச்சிக்கே இவ்வாறு பெருந்திரளான மக்கள் வருவதைக் கண்டிருக்கிறோம். நிகழ்ச்சி நிறைவடைய சில மணித் துளிகளே இருக்கையில் “ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் “ என்று பாடி , வந்தவர்கள் அனைவரையும் அதனைத் திரும்பப் பாட வைப்பார். “ நூற்றுக்கணக்கானோர் இப்போது பஞ்சாக்ஷரம் சொல்கிறீர்கள் . இது கிடைத்தற்கு அரிய பாக்கியம் அல்லவா “ என்று சொல்வார்.

இவரது திருமுறைப் பாடல்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து வெளியிடப் பல நிறுவங்கள் முன்வந்தன. அகில இந்திய வானொலியும், சென்னைத் தொலைக் காட்சி நிலையமும் இவரது நிகழ்ச்சிகளை ஒலி / ஒளி பரப்பின. பல பட்டங்களும் இவரைத் தேடி வந்தன.

இவருக்குச் சென்னை அன்பர்கள் பொற்றாளம் அளிக்கும் விழா நடைபெற்றபோது பலர் புகழ் மாலைகள் சூட்டி மகிழ்ந்தனர். அரசும் இவருக்குக் “கலைமாமணி”  என்ற பட்டமளித்துக்  கௌரவித்தது.

“எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிவாலயத்திற்குச் சென்று நாள் தோறும் பத்துப் பதிகங்கள் பாடிவிடு” என்று காசிவாசி அருள்நந்தி சுவாமிகள் அருளியதை வாழ்நாள் இறுதி வரை கடைப்பிடித்து வந்தார். தனது வாழ் நாளின் இறுதி நாட்களைக் குன்றத்தூரிலே கழித்து வந்ததாக அறிகிறோம்.அவ்வமயம் உடல் நலிவுற்றபோது நேரில் சென்று பார்த்து வந்தது நினைவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 ம் தேதியன்று இவரது பதினோராவது நினைவு தினம். தேவார இசையில் நம்மையும் ஒரு பொருட்டாகச் செலுத்தி, சிவபக்தியைப் பெருகச் செய்த இப்பெருமகனாருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? அவர் காட்டிய நெறி நின்று, திருமுறை ஓதி இறைவனை வழிபடுதலே இந்த ஏகலைவனால்  செய்ய முடிந்த அஞ்சலி.

Wednesday, October 7, 2020

ஆர்வக் கோளாறா அல்லது ஆகம விதி மீறலா ?

   

                                                     சிவபாதசேகரன்


மக்களை ஒன்றிணைத்து உயர் கதி காட்டுவதே இந்து சமயக் கோட்பாடு ஆகும். கடவுள் ஒருவரே என்றும் அவரே பல்வேறு வடிவங்களில் தோன்றி அருளுவதும் தோன்றாமலே துணையாய் நின்று தனது அருவ நிலையை உணர்த்துவதும் இதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.

வழிபடுவோரின் இஷ்ட தெய்வத்திற்கான உருவில் தோன்றி, அவர்களை  நெறிப்படுத்தும்  அப்பரப்பிரம்மம் , உருவம் கடந்து, பெயரும் கடந்து நின்று  பக்குவ நிலைக்கேற்றபடி அறிவுறுத்துவதை  உணராமலேயே பலரது வாழ்க்கை கழிந்து விடுகிறது.    

எடுத்த எடுப்பிலேயே அருவத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் விளங்காது என்பதால் தாயிற் சிறந்த கருணையோடு நம்மைப் படிப்படியாக மேலே உயர்த்திய பிறகே அத்தத்துவத்தை பரம்பொருள் நமக்கு உணர்த்துகிறது.

குழந்தைக்கு எது பிடிக்கிறதோ அதைப்  பெற்றோர் வாங்கித்தந்து மகிழ்வூட்டுகின்றனர். அது மரத்தாலான பொம்மையாக இருந்தாலும் குழந்தையைப் பொறுத்தவரையில் வடிவமே முக்கியம்.எத்தனை ஆண்டுகள் அப்பொருள் மீதே அக்குழந்தைக்கு ஆசை இருக்க முடியும் ? ஆகவே வேறொன்றை நாடுகிறது. அது வேறு வடிவத்தில் இருந்தாலும் மரத்தால் ஆன வேறொன்று என்று குழந்தை நினைப்பதில்லை. நம்மைத் திருப்திப் படுத்த இறைவன் பல வடிவங்களில் தோன்றினாலும் பரம்பொருள் ஒன்றே எனத் தோன்றுவது ஞானத்தின் மூலமடையப்பெறும்  தெளிவு. “ தேற்றனே, தேற்றத் தெளிவே “ என்கிறது திருவாசகம்.

இத்தனை தெய்வ வடிவங்கள் ஏன் என்று தத்துவமறியாதவர்கள் இன்றளவும் வினா எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் உருவ வழிபாட்டின் அவசியத்தையும் உணர வேண்டும். தங்கத்தை உருக்கிய பிறகே அதை எவ்வடிவத்தில் வார்க்கலாம் என்பது சாத்தியமாகிறது. மனத்தையும்  தங்கம் போலத்தான் உருக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் அது பாறை போலவே நின்று விடும். “ வன்பராய் ஒக்கும் என் சிந்தை “ என்கிறார் மணிவாசகர். ஆகவேதான் “ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக “ வேண்டுவார் அருணகிரிநாதர்.  

பல்வேறு வடிவங்களில் இறைவன் தோன்றினாலும் அந்தந்த உருவங்களுக்கான மூர்த்தி தியானப்படி அவ்வடிவை நமது முன்னோர் கல்லிலும்,மரத்திலும்,உலோகத்திலும் அமைத்துத் தந்தனர். கணபதி வடிவைக் குறிப்பிடுகையில் “ ஐந்து கரத்தனை  ஆனை முகத்தனை , இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” என்றும் “ “ கைத்தல நிறைகனி” யைக் கொண்டவனாகவும் நமக்கு அடையாளம் காட்டினர்.      “ கணபதியேல்  வயிறு தாரி” என்று விவரிக்கிறது தேவாரம். “ மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப ..” என்று வடமொழி ஸ்லோகமும் கணேச வடிவைக் காட்டுகிறது.

எப்பொழுதும் குழந்தை வடிவில் காட்சி தரும் கணபதியின் வடிவழகில் மயங்காதார் யார் ? அதிலும் சதுர்த்தி விரதம் இருந்து , தான் மனத்தகத்தில் கண்ட அப்பெருமானைக் கோயிலில் காணச் செல்லும் பக்தனுக்கு அவ்வடிவை வேறு கடவுளாக மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்று உணரும் பக்குவம் ஏற்படாத வரை தனித் தனி உருவங்களாகவே தோற்றமளிக்கவேண்டியது எதிர்பார்ப்பாக ஆகி விடுகிறது.

உள்ளதை உள்ளபடியே தோன்றச் செய்வதோடு அதனைப் பரிமளிக்கச் செய்வதே அலங்காரம் ஆகும். மூலவரையோ  உற்சவரையோ நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஒரு பிள்ளையார் கோவிலில் விநாயக சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து அவர் மடியில் நெட்டியால் ஆன முருகனை ஒரு ஆண்டும், பால கிருஷ்ணனை மற்றொரு ஆண்டும், அத்யந்த பிரபு என்று பாதி ஹனுமாராகச் சித்தரித்து வேறோர் ஆண்டும் அலங்காரம் செய்திருந்தார்கள். அலங்கார விதி என்ற நூலில் இவ்வாறெல்லாம் மூலவரையோ உற்சவரையோ  மாற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறப் பட்டிருந்தும் இது போன்ற விதி மீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பக்தர்களும் வேறு வழியின்றிக் கடந்து செல்கிறார்கள். சிவலிங்கத் திருமேனி உருவாரூபம் ஆனது என்பது தெரிந்தும், பாணத்தில் முகம் வரைகிறார்கள். அதில் பாதி அம்பிகை உருவத்தையும் சேர்த்து வரைந்து அர்த்த நாரீச்வரர் என்று சொல்லுகிறார்கள். நவராத்திரி அலங்காரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அண்மையில் நடந்த சங்கட ஹர சதுர்த்தி நாளன்று சேலம் இரத்தின விநாயகருக்கு வெங்கடேச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு முக நூலில் படமும் வெளியாகி இருந்தது. நெற்றி முழுதும் நாமம் இட்டதோடு பாசாங்குசம் ஏந்திய பின் கரங்களில் சங்கு சக்கரங்களை அமைத்து அலங்காரம் செய்துள்ளனர். கேட்டால் சங்கு பாணிப் பிள்ளையார் என்றும் விகட சக்கர விநாயகர் என்றும் காஞ்சியில் பிள்ளையார் இருப்பதை அறியவில்லையா என்று திருப்பிக் கேட்பார்கள்.

 ஒரு சிவாலயத்தில் மூலஸ்தான அம்பிகைக்கு வெங்கடாசலபதி அலங்காரம் செய்துவிட்டு , துர்வாசருக்கு அவ்வாறு காட்சி அளித்ததாக ஒரு கதையையும் சேர்த்து விடுகிறார்கள். நம்மூரில் எத்தனையோ பாலாஜி மந்திர்கள் உள்ளன. ஒரு வெங்கடேச பக்தன் ஆண்டு முழுதும் அங்கு சென்று பெருமாளை மனம் குளிர வழிபடலாம். மற்ற கோயில்களில் உள்ள மூர்த்தங்களை பெருமாளாக மாற்ற வேண்டிய தேவையே இராது. அப்படிச் செய்தால் அது வருவாய் நோக்கத்தோடுதான் இருக்க முடியும். படிப்படியாக உருவம் கடந்த அருவம் நோக்கிப் பயணப்படும்போது ஒரு உருவத்தை மற்றோர் உருவமாக மாற்றி இன்னும் எத்தனை யுகங்கள் தான் அதே நிலையில் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.   

  

Tuesday, September 29, 2020

உடற்பிணியும் பசிப்பிணியும்

                  உடற்பிணியும்  பசிப்பிணியும்                  

                                           சிவபாதசேகரன்


எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று கூறுவார்கள். அரை சாண் வயிறே பிரதானம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக  வேலை தேடும் காலம் இது. வேலை தேடுவதோடு வேலையும் ( முருகனது கரத்திலுள்ள வேலையும் ) தேடுவது ஏனோ பலருக்கு மறந்து விட்டது. வயிற்றுப்  பிழைப்புக்கு என்று சொல்லிக் கொண்டு வேலைக்குப் போனவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதால் இறைவனைப் பற்றிய சிந்தனையே எழுவதில்லை.  

 அறுவடை ஆகி வந்த நெல்லைச்  சேமித்து வைக்க அந்தக் காலத்தில் இல்லங்களில் மரத்தாலான கிடங்கு ஒன்றோ அல்லது பலவோ இருந்தது. அதைத்  தஞ்சாவூர் ஜில்லாக் காரர்கள் பத்தாயம் என்று அழைப்பார்கள். அதில் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல் சேமித்து வைக்கப்படும். அதற்கும் மேல் நெல் விளைந்தால் வெளியில் கொடுப்பார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் கோட்புலி நாயனார் என்பவர். அவர் தமது இல்லத்தில் தனித்தனியாக நெல்லை சேமித்து வைத்து ஒரு பகுதியை வீட்டு உபயோகத்திற்கும் மற்றொன்றை சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கவும் பயன்  படுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சிறுத்தொண்ட நாயனாரும் தினந்தோறும் ஒரு சிவனடியாரைத் தனது  இல்லத்திற்கு அழைத்து வந்து அன்னமிட்டதையும் அப்புராணம் மூலம் அறிகிறோம்.

வறியவர்களுக்கு அன்னமிடாமல் ஒரு நாள் கூடக் கழியக் கூடாது என்ற தரும சிந்தனை மிக்கவர்கள் பலர் வாழ்ந்த காலம் போய் தற்போது காக்கைக்குக் கூடப்  பிடி அன்னம் தராத காலத்தில் நாம் வாழ்கிறோம். காக்கையும் உண்ணும் முன்பாகத் இனத்தைக் கூவி அழைக்கும். இறைவனுக்கு  அர்ச்சிப்பதும் பசுமாட்டுக்கு ஒரு வாயளவு உண்ணத் தருவதும் உண்ணும் முன்பு ஒரு கைப்பிடி பிறர்க்கு ஈவதும்  மிகுந்த புண்ணியம் தரும் செயல்களாம். இதனைத் திருமூலரும் எடுத்தருளுவார்.

வீட்டுத் திண்ணைகள் தேசாந்திரிகள் தங்கவும் உணவருந்தவும் பயன் பட்டன. அன்ன சத்திரங்கள் இருந்த ஊர்களில் அந்தத் தருமம் தழைக்க நல்ல மனம் கொண்டவர்கள் தங்களது நிலங்களை அளித்தனர். விழாக் காலங்களில் வரும் வெளியூர் பக்தர்களுக்கு உணவளிக்கத்  தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.நாளடைவில் தருமசிந்தனை சுருங்கித் தன்னலம் மேலோங்கியவுடன்  ஏழை எளியவர்கள் வறுமையின் எல்லைக்கே விரட்டப் பட்டனர்.

அன்னதானம் என்று சொல்லிக் கொண்டு தனது பண பலத்தை நிரூபிப் பவர்கள் உண்மையிலேயே பசியால் வாடும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. கல்யாண சத்திரங்கள், உணவகங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான உணவு விரயமாக்கப் படுகிறது. பாவம், அதற்கும் தவம் கிடக்கும் காக்கைகளும் தெரு நாய்களும் நம்மூரில் உண்டே !

பிறவி என்பதே ஒருவகையில் பிணிதான். உடலுக்கு வரும் பிணிகள் பல்லாயிரம் இருக்க உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காவிட்டால் அதுவே பசிப் பிணி ஆகி விடுகிறது. தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிட்டால் ஜகத்தை அழித்திடுவோம் என்று பாரதி நினைவு நாளன்று வீர வசனம் பேசுபவர்கள் என்றாவது கிராமப்புறங்களில் நாள் கணக்கில் பசியோடு வாடும் நபர்களுக்கு இரங்கி அன்னமிட்டதுண்டா ?  “ இரப்பவர்க்கு ஒன்று ஈயேன் “ என்றும்     இரப்பவர்க்கு ஈய வைத்தார் “ என்றும்  திருமுறை வரிகளைப் பாடுபவர்கள் வாழ்க்கையில் அந்த நல்லுபதேசத்தைச் செயல் படுத்துகிறார்களா ?


உடல் வலிமை இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் உண்டு. அவர்களை வேண்டுமானால் நல்வழிப்படுத்தி உழைத்து வாழச் செய்யலாம். ஆனால் உற்றார் உறவினர் இல்லோரையும் , அங்கஹீனம் உற்றவர்களையும், முதியோர்களையும் , மன நலம் குன்றிக் காணப்படுவோரையும் பற்றிக்  கவலைப் படுவோர் மிகச் 

சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவரும், நெருங்கிய  நண்பருமான ஒருவரைப் பற்றி இங்கே கூற ஆசைப் படுகிறேன்.

திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடும்பத்துடன் வாழும் இந்த நண்பர் ( பெயர் குறிப்பிடுவதை வேண்டாதவர். எவ்வித விளம்பரமுமின்றிச்  சிவப்பணி செய்பவர்) தனது ஊர்ச் சிவாலயத்தை அழிவிலிருந்து காக்க அரும்பாடு பட்டவர். உபயதாரர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம் ஆலயத் திருப்பணி , கும்பாபிஷேகம் ஆகியன செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.


 இவரது ஊருக்கு அருகில் உள்ளது தண்டலைச்சேரி என்ற சிவ ஸ்தலம் . இதற்குத் தண்டலை நீணெறி என்று தேவார காலத்தில் பெயர். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்றதும் இக்கோயிலுக்கான தனிச் சிறப்புக்கள்.இதற்கு அருகிலுள்ள கணமங்கலம்  என்ற ஊரில் வாழ்ந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான  அரிவாட்டாய நாயனார் என்பவர்   இவரது இயற்பெயர், தாயனார் என்பது. இறைவனது திருவமுதுக்காகத் தினமும் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் அளித்து வந்தார்.  தனது செல்வம் யாவும் குன்றிப்போய்  வறுமைவந்தபோதிலும் அந்த நியமத்திலிருந்து  தவறவில்லை. ஒருநாள் அருகிலிருந்த வயலுக்குச் சென்று செந்நெல்லும் கீரையும் மாவடுவும் பறித்து வரும்வழியில் கால் இடறியதால் கமரில் அவை யாவும்  சிந்திவிடவே, இன்றையதினம் திருவமுதளிக்கத்  தவறி விட்டேனே என்று வருந்திய நாயனார் தனது கழுத்தை அரிவாளால் அரிய முற்பட்டபோது பெருமான் அவரைத் தடுத்தருளி ஆட்கொண்டதாகப் பெரியபுராணம் கூறும். இதன் காரணமாக அவருக்கு அரிவாள் தாயர்        (அரிவாட்டாயர் ) என்னும் தூய நாமம் உண்டாயிற்று. 


நாயனாரது அரும்பணி நமது நண்பரை ஈர்த்துவிட்டது போலும். அவ்வூரிலும் அருகாமையில்  உள்ள கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள முதிய ஏழைகளுக்கு உணவைத் தனது இல்லத்தில் தயார் செய்துகொண்டு விநியோகித்து வருகிறார். இப்பணியில் ஒரு சிலரிவருக்குத் துணை செய்தாலும் நாமும் இச் சிவ புண்ணியத்தில் ஈடுபட விரும்புகிறோம்.


மண்ணில் பிறந்ததன் பயனே சிவனடியாருக்கு உணவளித்தல் என்ற சேக்கிழார் பெருமானது வாக்கு இப்படிப்பட்ட நல்லோர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது.  நிறைவு செய்யும் முன்னர் ஒரு மனம் வருத்தம் தரும் செய்தியையும் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது காலை இழந்தவர் இந்த நண்பர் என்பதே அது. மதிய உணவும் இரவு நேர சிற்றுண்டியும் தன வீட்டிலிருந்தே சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் உயர்ந்த பணியைச் செய்து வருகிறார். தினமும் செயற்கைக் காலின் துணை கொண்டு , தனது இரு சக்கர வண்டியில் பல கிராமங்களுக்குச் சென்று இந்தத் தெய்வீகப் பணியைக் கடந்த பத்து மாதங்களாக ஒரு நாளும் தவறாமல்  செய்து வருகிறார். இவரது வருகைக்காக  வழி மேல் விழி வைத்து வெறும் வயிற்றுடன் காத்திருக்கும் அந்த ஏழை மக்களின் முகங்கள் இவரைக் கண்டவுடன் மலர்வதில் வியப்பில்லை தானே. அவருக்கு இந்த முக மலர்ச்சி ஒன்றே போதும். பாராட்டை எதிர்பார்க்காத அபூர்வ மனிதர் எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்துகொண்டு சேவை மனப்பான்மை கொண்டவராக இருப்பதே இம்மண் செய்த பாக்கியம்.   

Saturday, September 19, 2020

இன்னல்களை ஏற்கும் மனம்


 முகநூலாகட்டும், வாட்சப் ஆகட்டும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தது அதன் பயன். நமது நண்பர்களாக ஒத்த மனமும் செயல்பாடும் கொண்டவர்கள் அமையைப் பெறுவது இதற்கு மிகவும் அவசியமாகிறது. இவ்வளவு பார்த்துப் பார்த்து நண்பர் வளையத்தை அமைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் ஊடுருவல்கள் நிகழ்வதால் வெறுப்புக்கு ஆளாகிறோம். ஆனால் இத்தகைய ஊடுருவல்கள் சமயம், கலை, இசை போன்றவற்றில் அதிகமாகக் கலப்பதில்லை. தெரியாத பல தகவல்கள் பரிமாறப் படுகின்றன. பலரது மனக்குமுறல்களும் பிரச்சினைகளும் தெரிய வருகிறது. ஆனால் வலைப் பதிவுகள் பல படிப்போர் இல்லாமல் போவதும் உண்டு. நட்பு வளையத்தில் உள்ள பலர் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ இல்லை. சில சமயங்களில் திருப்பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆலயங்களின் இடிபாடுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் பதிவு செய்தாலும் அதிக பட்சமாக ஒரு " லைக் " போட்டு விட்டுக் கடந்து போய் விடுகிறார்கள். " வேலை வெட்டி இல்லாமல் " எழுதியவரின் மன நிலையைப் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் ?   

முக நூலில் ஒரு அன்பர் திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களை அருமையாகக் குறிப்பிட்டிருந்தார். உபயதாரர்களை முன்னிலைப் படுத்தி அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பலரும் அறியும் வகையில் அவர் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. துரும்பைக் கூடக்  கிள்ளிப் போடாத பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மிரட்டல்களைத் திருப்பணிக் குழுவினரும் உபயதாரரும் சந்திக்க வேண்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதில் பங்கு பெற்ற  அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களைக் கூடவே இருந்து பார்ப்பவர்கள் உள்ளூர்க் காரர்களும் ஆலய சிப்பந்திகளுமே ஆவார்கள். திருப்பணி செய்ய அனுமதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாக அதிகாரிகள், வேலை நடக்கும்போது வருகை தருவதில்லை. கும்பாபிஷேகம் செய்யும் தேதியையும் இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே தீர்மானிக்க வேண்டி உள்ளது. கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு அக்கறை இல்லை. கும்பாபிஷேகத்தன்று சௌகரியப்பட்டால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஆலய  முதல் மரியாதை தரப்படவேண்டும் என்பது என்னவோ எழுதப்படாத சட்டம். 

முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கிராமக் கோயில் சிவாச்சாரியார் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையே ஆயினும், சிறு அணில் போல நாங்களும் இறைவனுக்குப் பணி  செய்கிறோம் என்று  எழுதியிருந்தார். எதார்த்தமாகச் சொல்லப்போனால் நாம் அனைவரும் அணில்களே ! ஒரு ஏழை அடியவன் இறைவனுக்குப் பூவும் நீரும் கொண்டு வந்து தர முடியும். ஒரு வகையில் அதுவும் அணில் சேவையே. அதைப் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றால் சுவாமிக்குச் செய்யும் பூஜையும் அத்தகையதே. பழுதுற்ற ஆலயத்தை இறைவன் தந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணி செய்யும் உபயதாரர் சேவைகூட அணிலின் செய்கை போன்றதே. நாம் ஒவ்வொருவரும் இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இத்தகைய மனோபாவம் இருந்துவிட்டால், மாலை, மரியாதை, கல்வெட்டில் உபாயதாரர் பெயர் பொறிப்பது போன்றவை எழ நியாயமே இல்லை.  ஆன்மீகப் பயணத்தில் ஏதோ வகையில் பணி செய்வதே முக்கியம் ஆதலால் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. 

அறியாமல் செய்த செயலையும் ஈசன் ஆராதனையாக ஏற்றுக் கொள்கிறான். ஆறறிவற்ற உயிர்களது செயலும் சிவாராதனையாக ஆகி விடுகிறது. வேதாரண்யம் கோயிலில் கருவறையில் விளக்கில் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தபோது அவ்விளக்கிலிருந்த எண்ணையை ஒரு எலி உண்ண வந்தது. அத்தீபத்தால் அதன் மூக்குச்  சுட்டிடவே, தனது மூக்கைத் திரியுடன் சேர்த்து வெளியே இழுத்துக் கொண்டது. அதனால் தீபம் மேலும் பிரகாசமாக   எரியவே, தீபத்தை மேலும் தூண்டியதாக இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு, அவ்வெலியை மறு  பிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக்கினான் என்பது வரலாறு. திருவானைக்காவலில் சிலந்தியும், யானையும் அருள் பெற்றதும் இந்த அடிப்படையில் தான்.

ஆன்மீகவாதிக்கு அடக்கமும், பலன் எதிர்பாராத மனமும், பிறர் துயர் கண்டு உதவும் கொள்கையும்  , எதிர்ப்புக்களைக் கண்டு சலியாத மனமும், எல்லாம் சிவன் செயலே என்ற தெளிந்த சிந்தையும் இன்றியமையாதவை. இவை எல்லாம் இறைவனது அருட்கொடைகள். தன்னிச்சையால் நடைபெறுவன  அல்ல. இதையே அப்பர் பெருமானும், " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் " என்று அருளிச் செய்தார். " பழித்து இகழ்வாரையும் உடைய பெருமானுக்கு யாரை ஆட்கொள்வது யார் மூலம் பணி கொள்வது என்பது தெரியும். அவனன்றி எதுவும் நடை பெற இயலாது என்பதை மாணிக்கவாசகரும்.

" ... சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே, ஒன்று நீயல்லை அன்றி ஒன்று இல்லை, யார் உன்னை அறியகிற்பாரே " என்றருளியமை காண்க.

 அதுபோலவே,திருப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்களையும் இன்னல்களையும் ஏற்கும் மனத்தையும் இறைவன் நமக்குத் தந்தருளவேண்டும். அவ்வருள் கிட்டி விட்டால் இப்பிறவி தூய்மை பெற்று விடுகிறது. " என் கடன் பணி  செய்து கிடப்பதே " என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. 

  


.     

Saturday, September 5, 2020

சொல்லாமல் சொன்ன ஞானாசிரியர்


 நல்லாசிரியர் என்பவர் யார்?  மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுபவரா, அல்லது  வகுப்பிலுள்ள அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்பவரா அல்லது தேச பக்தியையும் நன்னெறியையும் போதிப்பவரா அல்லது மற்ற ஆசிரியர்களை விடச் சிறந்தவரா என்பதில் , எந்தவகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். நல்ல ஆசிரியருக்கான அடையாளம் எது என்பது இன்னமும் முழுமையாக வரையறுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. 

பள்ளியை விட்டு அகன்றவுடன் எத்தனை மாணவர்களும் பெற்றோரும் அவ்வாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்? வெகு சிலரே !! படிக்கும்போதே நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களைத் திருத்த வகை அறியாமல் மனம் நொந்து போகிற ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். என்னதான் திறமையாகப் பாடம் நடத்தினாலும் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இக்காலத்தில் மிகவும் கடினம். 

சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் வரும்போதே மாணவர்களது முகத்தில் குதூகலம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். அதே சமயம் சில பரம சாதுவான ஆசிரியர்கள் வந்தால் கூச்சல் போடுபவர்களையும் பார்க்கிறோம். மதிப்பும் மரியாதையும் அவர்கள் வாயைத் திறந்து பாடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானாகவே ஏற்படுவது. அவர்கள் கற்பித்த பாடத்தைக் கேட்டு அமைதியாக மணி ஒலிக்கும் வரை இருக்கும் மாணவர்களைக் காணும் போது அந்த ஆசிரியரைப் பாராட்டவே தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். வீண் பேச்சைத் தவிர்ப்பவர்கள். மாணவர்கள் நலன் ஒன்றையே கருதி அவர்களை உயர்த்த முயற்சிப்பவர்கள். 

தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றியபோது சனகாதி முனிவர்கள் பெருமானது சின்முத்திரையைப் பார்த்த மாத்திரத்தில் தெளிவு பெற்றதாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. பெருமான் தனது திருவாயைத் திறக்காமல் சின்முத்திரை காட்டியே உபதேசம் செய்தார் .

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறங்கம், ஆகியவற்றில் வல்ல நான்கு முனிவர்களுக்கும் வாக்குக்கு அப்பாற்பட்ட பரிபூரண மௌன நிலையில் , அனைத்துமாகி அதே சமயம் அல்லதுமாகி எல்லாப் பொருள் உண்மைகளையும் தனது சின் முத்திரையால் காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நாமும் நினைந்து இப்பிறவித்  தொடரை வெல்வோமாக என்று  அப்புராணத்தில் வரும் பாடல் இதையே காட்டுகிறது. 

அறுபதுகளில் ஆறாண்டுகள் எனது தாயாரது பெற்றோரிடம் தங்கி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில்  படித்துக் கொண்டிருந்தபோது  வகுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீ நாக சுப்பிரமணிய அய்யர் அவர்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளமே பெற்று வந்தார்கள். வீட்டு வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அது போதாததாக இருந்தது.அப்படிப்பட்ட வறுமையிலும் மிகக் கடினமாக உழைத்த உத்தமர்கள் அவர்கள். ஒருநாள் அவருக்கு வறுமையின் கொடுமை மேலும் பாதிக்கவே, வகுப்பறையில் மாணவர்களாகிய எங்களிடம் தழுதழுத்த குரலில், " நான் மிகவும் வறுமையால் கஷ்டப் படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பன்னிரண்டு ரூபாய் கடனாக வாங்கித் தர முடியுமா " என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்தது. எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. 

எனது பெற்றோர்கள் சென்னையிலிருந்து வரும்போது எனக்கு ஒரு ருபாய் கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஏதாவது தின் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடட்டும் என்பதற்காக அப்படிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் நானோ அதைச்  செலவழிக்காமல் ஒரு டப்பியில் போட்டு வைத்திருந்தேன். ஆசிரியருக்கு அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது.   டப்பியிலும் அவர் கேட்ட அளவு சில்லரை இருந்தது. மறு நாள் அதை எடுத்துக் கொண்டு ( வீட்டில் யாரிடமும் சொல்லாமலே) பள்ளிக்குச் சென்றேன். அதைக் கொடுக்கும் முடிவை சக மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் என்னைத் தடுத்தனர். " கொடுத்தால் திரும்பி வராது. பட்டை நாமம் தான் " என்றார்கள். நானோ, " எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? ஆசிரியருக்கு நமது பாத காணிக்கையாக இருக்கட்டுமே"  என்றேன். அவர்களோ ஏளனம் செய்தனர். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆசிரியரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒலித்ததும் ஆசிரியர், சோர்ந்த முகத்துடன் வகுப்பில் நுழைந்தார். அவர் அமர்ந்தவுடன் அவர் அருகே சென்று அந்த பன்னிரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். உடனே எனது இரு கரங்களையும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். அவரை எப்படிச்  சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவாறு சமாதானம் அடைந்த ஆசிரியர், " உன்னுடைய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீ வாழ்நாளில் நன்றாக இருப்பாய். இந்தப் பணத்தைக் கண்டிப்பாக அடுத்த மாதம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் முன்போலவே ஏளனம் செய்தனர். " விடாதே இந்த மாதம் போய் அவரிடம் திருப்பித் தரும்படி கேள் " என்று தூண்டி விட்டார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "அவருக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுக்கட்டும். இல்லாவிட்டாலும் நான் முன் சொன்னபடி அதைக் குரு  காணிக்கை என்று நினைத்துக் கொள்கிறேன்" என்றேன். ஆனால் ஆசிரியருக்கோ தன்னால் திருப்பித் தர முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து வந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும்படி அவரே ஒருநாள் இதைக் கூறி விட்டார். அதற்குப் பிறகும் அவரை மேலும் வருந்தச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசி வரை அவரிடம் அது பற்றிப்  பேசவே இல்லை. ஆனால் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்று விட்டது போன்ற உணர்வு அன்றுமுதல் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அவரை இன்றும் நினைத்து நெகிழ்ந்து ஆசிரியர் தினத்தன்று  அஞ்சலி செய்வதல்லால் அவருக்கு இந்த அற்பன் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?  


   

Thursday, September 3, 2020

தகவல் அறிய முன்வருவோமா ?


 பொதுவாகவே நம் மக்களுக்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. சட்ட நுட்பங்கள் தெரியாவிட்டாலும் சட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கூடத்  தெரிவதில்லை. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்து நீதியின் முன் நிறுத்தப்படும்போது எனக்குச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் சட்டம் நம்மை மன்னிக்காது. நம்மைச் சுற்றிலும் பல குற்றங்கள் நடக்கும்போதும் சட்ட வல்லுனர்களும் காவல் துறையும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறோம். பள்ளிகளில் சட்டத்தின் அடிப்படைகளையாவது வாழ்க்கைக்குப் பயன் படும் அளவில் கற்பிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, காவல், நீதி ஆகியவை இருக்கும்போது ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவற்றில் புகுத்தப்பட்டு அதுவே சட்டமும் ஆகி விடுகிறது. 

இந்து அறநிலையத் துறை எதற்கு என்று அதைச் சட்டம் ஆக்கிப் பல ஆண்டுகள் கேள்விகளை எழுப்பாமல் இப்போது எழுப்பத்  தொடங்கியுள்ளனர். எந்த வழக்கும் அவ்வளவு எளிதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் அறநிலையத் துறையயைப் பற்றி யார் கவலைப் படப்  போகிறார்கள்? அந்த தைரியத்தில் தான் அக்கிரமங்கள் தொடர்கின்றன. வழக்குத் தொடுத்தால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டுமோ தெரியாது.

இந்து அற  நிலையத்துறை  பற்றிய சட்டத்தைப் படித்தவர்களுக்காவது அதை எடுத்துக் காட்டி வழக்காடத் தோன்றவில்லை இத்தனை காலமும். இதற்கு இப்போதாவது ஒரு சிலர் முன் வந்து நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி ஆகும். தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று இருப்பதே அநேகருக்குத் தெரிவதில்லை. அதன் மூலமாகவாவது விவரங்களை அறியவும் அதற்கேற்ப வழக்குத் தொடுக்கவும் முடியும். ஆனால் வழக்குக்கான செலவை யாரும் ஏற்கத்  தயங்குவதால் விடியும்  காலம் அவ்வளவு எளிதில் உதயமாகும் என்ற நம்பிக்கை ஏற்படுவதில்லை. 

ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் வாயால் புலம்பிக்கொண்டு இருந்து கொண்டு அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முன்வருவதில்லை. மடாலயங்களும், வசதி படைத்த ஆத்திகர்களும் முன் வரலாம். அதுகூட இத்தனை ஆண்டுகளும் நடக்காதபோது ஏழை அடியார்கள் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?   அவரவர்களுக்கு அவரவர் கவலை. தங்களை எக்காலத்திலும் பாதுகாத்துக்  கொள்வதே அவர்களது கவலை. 

ஆத்திக உலகம் ஒன்றுபட்டால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறைக்கு மாற்று ஒன்று அமையும் வரை இறைவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடப்போகிறார்களா? மற்றொரு அமைப்பை மக்களே வகுத்துக் கொண்டு கோயில்களையும் அவற்றின் உடைமைகளையும் பாதுகாக்க முடியாதா ? அந்த அமைப்பில் சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றால் வாதிடுவதற்குச்  செலவழிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க முடியாது அல்லவா ? அவ்வல்லுனர்களும் மகேசன் பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்யும் புண்ணியம் பெறலாமே. 

இந்து அற  நிலையத்துறையின்  கீழ் தற்போது 44120 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 36000 கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 10000 கூட இல்லை என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அத்தனை கோயில்களுக்கும் நிலங்களும் கட்டிடங்களும் இருந்தும் இவ்வளவு வருமானம் தான் வருகிறது என்றால் இதற்கு யார் காரணம்? பொறுப்பு ஏற்காத வரை அற நிலையத்துறை எதற்கு என்று கேட்பது நியாயம் தானே ! 

உண்டியல் முதலியவற்றால் பண மழை கொட்டியபோதிலும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் இத்துறையால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் பணி  செய்பவர்களுக்கோ அற்ப சம்பளமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்த அப்பாவிகள் உருட்டல்களையும் மிரட்டல்களையுமே சந்தித்து வருகிறார்கள்.   அதிகார துஷ்பிரயோகமும், ஊழல்களும் சிலை கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர் கதைகள் ஆகி விட்டன. 

கூடிய சீக்கிரமே இறை சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி இதற்கான செயல் முறையை வகுக்க வழி காண வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை முறைகேடுகள் நடைபெறுமோ  தெரியவில்லை. அதைத் தடுப்பதற்காகவாவது மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.செய்வார்களா? ( செய்யத் துவங்குவோமா என்று கேட்பதே பொருத்தம் )  ஒவ்வொரு ஊர் மக்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் அந்தந்தக் கோயில்கள் பற்றிய விவரங்களை அறிய முன்வர வேண்டும். அப்போதாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்ப்போம். இறைவன் துணை நிற்பான்.

Wednesday, August 12, 2020

என்று அகலும் இந்தத் துவேஷம் ?


 சமயப்பொறை, அழுக்காறு, அவா இன்மை, வெறுப்பின்மை ஆகியவற்றைக் காலம் காலமாகப் போதித்தும் கடைப்பிடித்தும் வரும் நாடு இது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மிகக் கடினமான கால கட்டங்களைத் தாண்டி வந்தும் நமது அடிப்படைக் கொள்கைகள் மாறாததன் காரணம், இது முனிவர்களும் சித்தர்களும் வாழ்ந்த தெய்வீக பூமி என்பதாகும். இவ்வளவு இருந்தும் இதற்குச்  சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பேராசையே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆகவேதான் மாணிக்கவாசகப் பெருமானும் , " பேராசையாம் இந்தப் பிண்டம் அற " எனப் பாடினார். பல்லாயிரம் கோடிகள் ஈட்டியவர்களுக்கும் அப்பேராசை விடுவதாக இல்லை. ஆட்சி பீடத்தில் இருந்தால் கோடிகள் கொட்டும் என்று ஆகிவிட்டது. அதற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டனர். 

தமது வேட்கைக்குத் தடையாக இருப்பவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களை ஏசுவது அன்றாடம் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல. எதிலும் ஈடுபடாமல் சிவனே என்று இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தனைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமலும் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்று அறிந்தும் தூற்றுதல் தொடர்கிறது. அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் வழி நிற்போரும் துவேஷத்தை உமிழ்கிறார்கள். பிளவு ஏற்படுத்தத்  துடிக்கும் கழுகுகள் வேறு உன்னிப்பாகக் காத்திருக்கின்றன. " நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே " என்ற வாக்கை அவர்கள் உணரப்போவது எப்போது? 

சமயத்தின்  ஏற்றத்தைப் பற்றியே பதிவிடும் நாம் சர்ச்சைகளுக்குள் புக விரும்பாவிடினும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் கடமையை மட்டுமாவது செய்ய வேண்டும் எனது தோன்றுகிறது. அந்த வகையில் அவ்வப்போது நிகழும் விரும்பத்தகாதவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று கருதுகிறோம்.

சமூக வலைத்தளங்களை நல்ல பயன்களைத் தரும் வகையில் உபயோகிக் காமல்   ஒருவரை ஒருவர் பழிக்கும் வகையில் ஈடுபடும் சிலரது பதிவுகளால் பாதிப்புக்கள் அதிகம். சமய நூல்களை அதிகம் கற்காத பாமர மக்கள் அவற்றை உண்மை என்று நம்பித் தாமும் அச்செயல்களில் ஈடு படுகின்றனர். 

அண்மையில் ஒரு அன்பர், நம்  நாட்டில் நிலவும் துவேஷ எண்ணங்களைக் கண்டித்துச் , சிறப்பான வகையில் தனது முக நூல் பதிவு ஒன்றில்  குறிப்பிட்டிருந்தார்.நல்லெண்ணம்  கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய பதிவு அது. அதைப் படித்த ஒருவரோ, யாரும் எதிர்பாராத வகையில் மாற்றுக்  கருத்து என்ற பெயரில் துவேஷத்தை உமிழ்ந்திருந்தார். அந்தணர்கள் வலையில் அந்த அன்பர் வீழ்ந்து விட்டதாகப்  பின்னூட்டம் அளித்திருந்தது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

சமயம் பற்றி எதுவுமே அறியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஏசுவதும் தட்டிக் கேக்க எவருமே இல்லாததால் தொடர்கின்றன.சமய அறிவு உள்ளவர்களும் ஒதுங்குவதால் இவர்களது ஆட்டம் தொடர்கிறது. சமய நூல்களைக் கசடறக் கற்று விட்டுப்  பின்னூட்டம் இடுவதை விடுத்து, அபாண்டமாக எந்தப் பிரிவினரையும் இழித்துப் பேசுவது முறை ஆகாது. 

அறுபத்து மூவரில் ஒருவரான அப்பூதி அடிகள் நாயனார் ஓர் அந்தணர். அவர்   சிவபெருமானுக்கும் சிவனடியாருக்குத்  தொண்டு செய்வதொன்றையே  குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். திருவதிகையில் சிவபெருமானது அருளால் சூலை நோய் நீங்கப்பெற்ற திருநாவுக்கரசரைக்  குருநாதராக ஏற்று அவரைக் காண வேண்டும் என்ற பெரு விருப்போடு வாழ்ந்தார். தனது மக்களுக்கு மட்டுமல்லாது தான் செய்யும் சிவ தருமங்களுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து வந்தார். 

திருத்தல யாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்த நாவரசர், அங்கிருந்த தண்ணீர்ப்பந்தல்  முதலியவற்றில் தனது பெயர் இருத்தல் கண்டு அங்கிருந்தோர் மூலம் அருகிலுள்ள திங்களூரில் இருந்த அப்பூதி அடிகள் என்ற அந்தணர் செய்யும் சிவதருமங்கள் அவை என அறிந்தார். அப்பூதியாரைக் காண வேண்டித் திங்களூரை அடைந்தார். வந்தவர்,  தான் அனுதினமும் வணங்கும் நாவரசர் என்று அறிந்தவுடன் தனது சுற்றத்தாருடன் அப்பர் பெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அப்பரும் அப்பூதியாரை  வணங்கி மகிழ்ந்தார் என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு தெய்வீக நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நமது வேற்றுமைகளை உதறி  எறிந்து , ஈசன் கருணையை மட்டுமே நினைந்து மகிழ வேண்டும். அதை அறியாமல் முகநூலில் பின்னூட்டம் இட்டவர், அப்பர் பெருமான் அந்தணரது வலையில் வீழ்ந்தார் என்று நா கூசாமல் கூறுவாரா ? 

அவருக்கு ஒன்று மட்டும் கூறி அமைகிறோம். நமது சமயத்தில் உள்ள நல்லிணக்கம் தரும் நூல்களைக் கற்று உணருங்கள். வாய் வாழ்த்துவதற்காக மட்டும் இருக்கட்டும். தூற்றுவதற்காக அல்ல.