Friday, October 31, 2014

" முன்னவனே , முன் நின்று அருள் "


ஆலயத் திருப்பணி செய்பவர்களை " திருப்பணிச் செல்வர் " என்றும்    திருப்பணிச் சக்கரவர்த்தி " என்றும் தற்காலத்தில் பட்டங்கள்  தந்து கௌரவிக்கிறார்கள்.  உண்மையில் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே செல்வந்தர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அளவில் இதனைச் செய்த மன்னர்களுக்கும், அண்மைக்காலத்தில் திருப்பணிகள் பல செய்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் கிடைக்காத கெளரவம் இது. காளஹஸ்தி கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரையும் திருப்பணிச் செட்டியார் என்றுதான் அழைத்தார்கள். இதுவோ  பட்ட மழை பொழியும் காலம்!.

உண்மையில்,இந்தப் பட்டங்களுக்கெல்லாம் சொந்தக்காரன் யார்  தெரியுமா? பரமேச்வரன் தான். அவன்தான் " செல்வன்"  " சக்கரவர்த்தி " என்ற  புகழுக்கெல்லாம் உரியவன். திருஞான சம்பந்தரும் , " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்றார். கையில்  செல்வமே இல்லாத அடியார்  ஒருவர்  வீதிதோறும் கையில் பாத்திரம் ஏந்தியவராக, " சிவ தர்மம் " என்று அறைகூவி, அதனால் கிடைத்ததைக்கொண்டு கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலைத் திருப்பணி செய்தார்.  கண் இரண்டும் இல்லாத தண்டியடிகள் நாயனார், திருவாரூர் கமலாலயத்தில் கயிறைப் பிடித்தவாறு  மெதுவாக இறங்கிக் கைகளால் மணலை  வாரிக் கரையில் சேர்க்கும் தூர்வாரும் தொண்டினைச் செய்து வந்தார். நமிநந்தி அடிகள் நாயனாரோ, அக்குளத்து நீரால் தியாகேசப் பெருமானுக்குத் தீபம் ஏற்றினார். திருக்குளத்தின் மகிமையும், அதில் திருப்பணி செய்த அருளாளர்களின் பெருமையும் அளவிடற்கரியது.

திருவாரூரில் " கோவில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி  " என்பார்கள். அத்திருக் குளத்தைக் கமலாலயம் என்பார்கள். சோழர் காலத்தில் அது "தீர்த்தக் குளம் என்று அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் முதலிய விசேஷ நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதும் இங்குதான். இதில்  64 புனித கட்டங்கள் இருப்பதாகக் கூறுவர். திருவாரூர்த் திருக் கோயிலையே  கமலாலயம் என்று கூறுவதும் உண்டு. வன்மீக நாதர் சன்னதிக்குப் பின்புறம் மகாலக்ஷ்மியின் சன்னதி உள்ளது. திருமகள் பூஜித்ததால் திருவாரூர், கமலாபுரம், ஸ்ரீ புரம் ,   கமலா நகரம்,ஸ்ரீ நகரம் என்றெல்லாம் போற்றப்படுவது இந்த ஊர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விட்டது. பெரிய மனிதர்கள் வரை எல்லோரும் பார்த்தும் அதனைச் சரி செய்ய வில்லை. சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றின் இன்னொரு பகுதியும் இடிந்து விட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராததாலோ என்னவோ, அரசின் இந்து சமய அறநிலையத்துறையே முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டெண்டர் விவரம் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது. மேற்குப் புறம் உள்ள சுவற்றைத் திரும்பக் கட்ட உத்தேச மதிப்பீடு ரூ 7644018 என்று வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையில் கும்பாபிஷேகமே செய்து விடலாமே என்று கேட்கத்தான் செய்வர். உயரம் குறைவாக உள்ள அச் சுவருக்கு இவ்வளவு ஆகுமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படியே ஆனாலும், வேலையின் தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. இப்படி ஒப்பந்தம் செய்து விடப்பட்ட வேலைகளின் தரத்தைத் தான் அற நிலையத்துறைக் கோயில்களில் பார்க்கிறோமே!

கட்டுமானப் பொருள்களை அறநிலையத் துறை வழங்கி, உபயதாரர்கள் , கட்டும் பணியைத் தகுந்த ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் வேலையின் தரம் நிச்சயம் நன்றாக இருக்கும். ஒதுக்கப்பட்ட தொகை தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா என்று நினைக்கக் கூடும். நம்மில் எத்தனை பேர்  இது பற்றிக் கவலைப் படுகிறோம்?   ஏதாவது,யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தானே கண்ணை மூடிக்கொண்டு செயலற்று இருக்கிறோம்!

ஆயிரம் வேலி நிலங்களைக் கொண்டது எனப்படும் இப்பெருங் கோயில் இப்படி உரிய வருவாய் இன்றி அரசையும், உபயதாரர்களையும் நம்பும்படி ஆகிவிட்டது  கொடுமையிலும் கொடுமை. குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்றில் கோயில் நிலத்திலிருந்து நெல் தவறாமல் வழங்க ஏற்படுத்திய சாசனத்தைப் படித்தால், அந்த வருமானம் இக்காலத்தில் இருந்தால் தியாகேசனது கோயில் திருப்பணிக்கோ, தேர் திருப்பணிக்கோ, திருக்குளத் திருப்பணிக்கோ , திரு விழாக்கள் நடத்துவதற்கோ , கும்பாபிஷேகம் செய்யவோ யார் தயவும் வேண்டியதில்லை தானே !

தில்லையைப்போல் திருவாரூரிலும் அறநிலையத் துறை ஒதுங்கிக் கொண்டு இறை அன்பர்களால் ஆலய நிர்வாகம் நடைபெற்று முறைப்படி வருவாய் வசூலிக்கப்பெற்றால் இது சாத்தியமே ! நடக்குமா என்று கேட்கலாம்.    "முன்னவனே முன் நின்றால்  முடியாத பொருள்  உளதோ " என்றபடி வீதி விடங்கப் பெருமான் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். அதற்கு நாம் உரியவர்களாவதுதான் முக்கியம். " முன்னவனே,  முன் நின்று அருள் என்று எல்லோருமாக வேண்டினால் தியாகேசன் நிச்சயம் செவி சாய்த்து அருளுவான்.   

Tuesday, October 21, 2014

" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே "

அனைவருக்கும் இன்ப மயமான தீபாவளி வாழ்த்துக்கள், அதென்ன " இன்ப மயமான தீபாவளி " என்று கேட்கலாம். உலகில் அனைவரும் இன்பத்தை மட்டுமே விரும்புவர். " இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று திருமுறையில் சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக்காட்டுவர்.. யாருக்கு எந்நாளும் இன்பமே வரும்  என்று யோசித்தால், திருமுறையிலிருந்தே விடை கிடைப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.. மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்க வேண்டும்:
 " பெருந்துறைப் பெருமான்,  உன் நாமங்கள் பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது உடைத்து ? என்பது திருவாசகம். அதாவது இறைவனை பக்தி செய்து, அவனது நாமங்களையே எப்போதும் இடைவிடாமல்  பேசுபவர்களுக்கு  ( " சிவாய நம  என்று இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று ஔவையார் சொன்னபடி) ஒவ்வொரு நாளும் இன்ப மயம் தான். அப்படிப்பட்ட பக்குவவான்களுக்குத் துன்பத்தையும் இன்பமாகவே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு எந்த வித அச்சமோ, பாவமோ, நோயோ  அண்டாது. இதைதான் சம்பந்தரும்,  "அச்சம் இலர்  பாவம் இலர் கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு நோயும் இலர் " என்று அருளினார்.  ஒருக்கால் வினைப்பயன் காரணமாக நோய் வந்தாலும் அவர்கள் இறைவனது நாமங்களையே உச்சரிப்பர். இதனை ,   " நோயுளார்  வாய் உளன் " என்றார்  ஞான சம்பந்தர் .

ஆனந்த மயமான தீபாவளிப் பண்டிகையன்று  எத்தனையோ  பேர்  அம்மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போகிறது என்பதனையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பண்டிகை தினத்தன்று ஆஸ்பத்திரிகளில் நோய்வாய் பட்டுக் கிடப்போர்  , பண்டிகைச்  செலவுகளுக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல் கவலைப் படுவோர், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்போர் , உறவினர்  எவரேனும் ஓர் ஆண்டுக்குள் உயிர் நீத்திருந்தால் பண்டிகை இல்லாமல் போகும் நிலை என்று இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்நன்னாளில் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது.  அவர்களும் இனி வரும் ஆண்டுகளில் ஏனையோருடன் மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிவபெருமானுக்கு உகந்த சதுத்தசி தின இரவில் உதயத்திற்குச் சற்று முன்பாக இதனைக் கொண்டாடி அவனருளைப் பெறுகிறோம். இறைவன் ஒளி மயமானவன் . ஒளி வடிவானவன். ஒளிக்கு ஒளி தருபவன். சூரியன்,சந்திரன் ,அக்னி ஆகிய மூன்றும் அவனது திருக் கண்கள். எனவே உலகுக்கு ஒரு சுடராய் நிற்கும் அப்பெருமானை தீப ஒளியில் வழி  படுவது மிகவும் பொருத்தம் தானே!  " சோதியே,சுடரே,சூழொளி விளக்கே" என்றும், " ஒளி வளர் விளக்கே " என்றும் ,        " கற்பனை கடந்த சோதி" என்றும் திருமுறைகள் அவனது பெருமையைப் பேசுகின்றன.

கல்விக்கூடங்களில் புன்சென் பர்னர் (Bunsen Burner) என்பதைக் கொண்டு பொருள்களைச் சூடேற்றுவதைப் பலரும் கண்டிருப்பர். அதனை ஒரு நிலைக்குக் கொண்டு வரும் போது, நீல நிறத்தோடு சுடர் எரிவதைக் காணலாம். அதை விட முக்கியம், அச்சுடருக்குள் மற்றொரு சுடரும் தெரிவதைக் காண முடியும். "சோதியுட் சோதி" என்று பரமேச்வரனைத் திருவிசைப்பா வருணிப்பது அப்போது நினைவுக்கு வர வேண்டும். அவனோ சுயம் பிரகாசனாகத் திகழ்பவன்.

ஆகவே, தீப ஒளியைக் காணும் போதெல்லாம், ஒளிக்குக் காரணனாக விளங்கும் சிவனது கருணையை நன்றியுடன் தியானிக்க வேண்டும்.  "தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே, திருவையாறு அகலாத செம்பொற்   சோதி"  என்று அப்பர்  பெருமான் கூறுவதும் இதன் காரணமாகத் தான்.
  சிவசன்னதியில் விளக்கிட்டால் ஞானம் உண்டாகும் என்று தேவாரம் உணர்த்துகிறது. அரச பதவியும் கிடைக்கும் என்று வேதாரண்யத் தல  புராணமும்   கூறுகிறது. வேதாரண்யம் சிவாலயத்தில் தீபத்து நெய்யை ஒரு எலி உண்ண  வந்தபோது, அதன் மூக்கு,  தீபச் சுடரில் பட்டுவிடவே, அதற்குச் சுட்டுவிட்டது. அதனால், மூக்கைப் பின்னுக்கு அது இழுத்துக் கொண்டபோது, தீபத் திரியும் சிறிது வெளிவர, அத்தீபம் முன்பைவிட அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வேதாரண்யப்பெருமான் அந்த எலி, தீபத்தைத் தூண்டிவிட்டதாகக் கொண்டு, அதனை அடுத்த பிறவியில் மகாபலி என்ற அரசனாக்கினார். இதனால், சிவசன்னதியில் விளக்கேற்றுவதன் சிறப்பை அறியமுடிகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்பார்கள். நாம் அங்கு சென்று அந்த அழகைக் கண் குளிரத்  தரிசிக்க வேண்டாமா?

தீபாவளித் திருநாளன்று நம் இல்லங்களிலும், அருகிலுள்ள சிவாலயத்திலும் அகல் விளக்கினை ஏற்றுவோம். வினைகள் அகல வேண்டுவோம்.  விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்ற நிலை இனிமேல் ஒரு கோவிலில் கூட நிகழக் கூடாது. இதனை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்கலாம். எல்லாவற்றையும் நம் சுகத்திற்காகவே அமைத்துத் தந்த இறைவனுக்குப் பிரதியாக இதைக் கூட செய்யக் கூடாதா? 

Thursday, October 2, 2014

ஆலயத் தூய்மை

நியமம்  என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் நம்மை வகுத்துக் கொள்வது எனலாம். ஒரு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பின்னர் விட்டுவிடுவதை எப்படி நியமம் என்று சொல்ல முடியும்? சண்டேச நாயனார் அருகிலுள்ள மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவி, சிவபூஜையில் தூய பசும் பாலால் அபிஷேகித்து வருவதைத் தினமும் பின்பற்றிவந்ததாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மார்க்கண்டேயரது சிவபூஜையும் அப்படித்தான்.            ' நித்தலும் நியமம் செய்து " என்று அதனைச் சிறப்பிப்பார் அப்பர் பெருமான். நியமங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆகார நியமம்,ஆசார நியமம் என்று இப்படிப்பட்டவை நம்மை ஒழுங்குபடுத்தவே ஏற்பட்டுள்ளன. அகத் தூய்மை, புறத் தூய்மை என்பார்களே, அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை /அனுபவித்ததை இப்பொழுது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சரஸ்வதியின் படம் மாட்டியிருப்பார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்தியும், தூய வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்தும் ,தூய வெண்ணிற அன்னம் அருகிருக்க,  தூய நீரோடையின் அருகில் தேவியானவள் ,புத்தகத்தையும், மாசில் வீணையையும் ஏந்திய அருட்கோலம் அது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளே தூய்மையின் வடிவமாகவும் தூய்மையின் இருப்பிடமாகவும் காட்சி அளிப்பது போல் தோன்றியது. நம்மை அறியாமலே, அத் தூய்மைக்குத் தலை வணங்கத் தோன்றியது.அதன் பலன் தானோ என்னவோ திடீரென்று ஒருநாள் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குவந்து அவ்வகுப்பிலேயே தூய்மையாக உடை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருபவன் என்று அறிவித்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றது இன்னமும் பசுமையான நினைவாகவும் சரஸ்வதி தேவியின் கருணையாகவும் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.  இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று நாட்டையே தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ்வாறு  பழைய நினைவைத் திரும்பிப்பார்க்க நேரிட்டது.

சுத்தம்,சுகாதாரம் என்று பள்ளிக்கூடங்களில் சொல்லிப்பார்த்தோம். சுத்தம் சோறு போடும் என்று எழுதியும் வைத்தோம். கண்ட இடங்களில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கண்டித்தும் பார்த்தோம். தெருக்களைக் குப்பைக்கூடங்களாக்குவதையும் , ஆறுகளை மாசுபடுத்துவதையும் தவிக்கவேண்டும் என்று ஆண்டு தோறும் கத்தியும் பார்க்கிறோம். கடற் கரை  மணல் களங்கப் படுத்தப்படுகிறது. கண்டு கொள்வாரைக் காணோம்! தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது? எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்? ஒருவேளை அசுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ?

மனத்தூய்மையே இல்லாதபோது புறத் தூய்மை எங்கிருந்து வரும்? தெய்வம் குடிகொள்ளும்  கோயிலுக்கு   உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம்?  இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது.  வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச்  சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை! கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல  கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால்   அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு   மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூடம் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா? எனவே , கோயில்கள் அமைதிக் கூடங்களாக விளங்கத் தூய்மைதான் முதல் படி. இதை மக்களும், நிர்வாகிகளும் உணருவது எப்போது?