Wednesday, August 12, 2020

என்று அகலும் இந்தத் துவேஷம் ?


 சமயப்பொறை, அழுக்காறு, அவா இன்மை, வெறுப்பின்மை ஆகியவற்றைக் காலம் காலமாகப் போதித்தும் கடைப்பிடித்தும் வரும் நாடு இது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மிகக் கடினமான கால கட்டங்களைத் தாண்டி வந்தும் நமது அடிப்படைக் கொள்கைகள் மாறாததன் காரணம், இது முனிவர்களும் சித்தர்களும் வாழ்ந்த தெய்வீக பூமி என்பதாகும். இவ்வளவு இருந்தும் இதற்குச்  சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பேராசையே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆகவேதான் மாணிக்கவாசகப் பெருமானும் , " பேராசையாம் இந்தப் பிண்டம் அற " எனப் பாடினார். பல்லாயிரம் கோடிகள் ஈட்டியவர்களுக்கும் அப்பேராசை விடுவதாக இல்லை. ஆட்சி பீடத்தில் இருந்தால் கோடிகள் கொட்டும் என்று ஆகிவிட்டது. அதற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டனர். 

தமது வேட்கைக்குத் தடையாக இருப்பவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களை ஏசுவது அன்றாடம் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல. எதிலும் ஈடுபடாமல் சிவனே என்று இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தனைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமலும் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்று அறிந்தும் தூற்றுதல் தொடர்கிறது. அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் வழி நிற்போரும் துவேஷத்தை உமிழ்கிறார்கள். பிளவு ஏற்படுத்தத்  துடிக்கும் கழுகுகள் வேறு உன்னிப்பாகக் காத்திருக்கின்றன. " நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே " என்ற வாக்கை அவர்கள் உணரப்போவது எப்போது? 

சமயத்தின்  ஏற்றத்தைப் பற்றியே பதிவிடும் நாம் சர்ச்சைகளுக்குள் புக விரும்பாவிடினும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் கடமையை மட்டுமாவது செய்ய வேண்டும் எனது தோன்றுகிறது. அந்த வகையில் அவ்வப்போது நிகழும் விரும்பத்தகாதவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று கருதுகிறோம்.

சமூக வலைத்தளங்களை நல்ல பயன்களைத் தரும் வகையில் உபயோகிக் காமல்   ஒருவரை ஒருவர் பழிக்கும் வகையில் ஈடுபடும் சிலரது பதிவுகளால் பாதிப்புக்கள் அதிகம். சமய நூல்களை அதிகம் கற்காத பாமர மக்கள் அவற்றை உண்மை என்று நம்பித் தாமும் அச்செயல்களில் ஈடு படுகின்றனர். 

அண்மையில் ஒரு அன்பர், நம்  நாட்டில் நிலவும் துவேஷ எண்ணங்களைக் கண்டித்துச் , சிறப்பான வகையில் தனது முக நூல் பதிவு ஒன்றில்  குறிப்பிட்டிருந்தார்.நல்லெண்ணம்  கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய பதிவு அது. அதைப் படித்த ஒருவரோ, யாரும் எதிர்பாராத வகையில் மாற்றுக்  கருத்து என்ற பெயரில் துவேஷத்தை உமிழ்ந்திருந்தார். அந்தணர்கள் வலையில் அந்த அன்பர் வீழ்ந்து விட்டதாகப்  பின்னூட்டம் அளித்திருந்தது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

சமயம் பற்றி எதுவுமே அறியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஏசுவதும் தட்டிக் கேக்க எவருமே இல்லாததால் தொடர்கின்றன.சமய அறிவு உள்ளவர்களும் ஒதுங்குவதால் இவர்களது ஆட்டம் தொடர்கிறது. சமய நூல்களைக் கசடறக் கற்று விட்டுப்  பின்னூட்டம் இடுவதை விடுத்து, அபாண்டமாக எந்தப் பிரிவினரையும் இழித்துப் பேசுவது முறை ஆகாது. 

அறுபத்து மூவரில் ஒருவரான அப்பூதி அடிகள் நாயனார் ஓர் அந்தணர். அவர்   சிவபெருமானுக்கும் சிவனடியாருக்குத்  தொண்டு செய்வதொன்றையே  குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். திருவதிகையில் சிவபெருமானது அருளால் சூலை நோய் நீங்கப்பெற்ற திருநாவுக்கரசரைக்  குருநாதராக ஏற்று அவரைக் காண வேண்டும் என்ற பெரு விருப்போடு வாழ்ந்தார். தனது மக்களுக்கு மட்டுமல்லாது தான் செய்யும் சிவ தருமங்களுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து வந்தார். 

திருத்தல யாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்த நாவரசர், அங்கிருந்த தண்ணீர்ப்பந்தல்  முதலியவற்றில் தனது பெயர் இருத்தல் கண்டு அங்கிருந்தோர் மூலம் அருகிலுள்ள திங்களூரில் இருந்த அப்பூதி அடிகள் என்ற அந்தணர் செய்யும் சிவதருமங்கள் அவை என அறிந்தார். அப்பூதியாரைக் காண வேண்டித் திங்களூரை அடைந்தார். வந்தவர்,  தான் அனுதினமும் வணங்கும் நாவரசர் என்று அறிந்தவுடன் தனது சுற்றத்தாருடன் அப்பர் பெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அப்பரும் அப்பூதியாரை  வணங்கி மகிழ்ந்தார் என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு தெய்வீக நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நமது வேற்றுமைகளை உதறி  எறிந்து , ஈசன் கருணையை மட்டுமே நினைந்து மகிழ வேண்டும். அதை அறியாமல் முகநூலில் பின்னூட்டம் இட்டவர், அப்பர் பெருமான் அந்தணரது வலையில் வீழ்ந்தார் என்று நா கூசாமல் கூறுவாரா ? 

அவருக்கு ஒன்று மட்டும் கூறி அமைகிறோம். நமது சமயத்தில் உள்ள நல்லிணக்கம் தரும் நூல்களைக் கற்று உணருங்கள். வாய் வாழ்த்துவதற்காக மட்டும் இருக்கட்டும். தூற்றுவதற்காக அல்ல. 












Saturday, August 1, 2020

எது கற்பு ?

வலைத்தளப் படம் 
தமிழிலும், வடமொழியிலும்  பல சொற்கள் பல பொருள்கள் கொண்டனவாக இருப்பதை அறிஞர் உலகம்  அறியும். தமிழ்க்  கல்வியின் தரம் தாழ்ந்துவிட்ட இக் காலத்தில் மேலெழுந்தவாரியாகவே பொருள் கொள்பவர்கள் பலர் உளர். பாடத்  திட்டத்திற்கு அப்பால் இருக்கும்  அரிய பொக்கிஷங்களை அறியும் ஆர்வமற்ற மாணவர்களையே நமது கல்வித்துறை உருவாக்குகிறது.  பாடத்  திட்டக்  குழுவினரோ அரசின் கைப்பொம்மைகள் ஆகி விடுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற  மாணவர்களின் தமிழறிவை  நோக்கினால் பரிதாபப்பட வேண்டியுள்ளது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ப்பாட நூல்கள் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் முன்னிறுத்திப்  பிழையறக் கற்கும் முறையைப் பின்பற்றிவந்ததை அத்தலைமுறையினர் நன்கு அறிவர். ஆனால் வல்லினம்,இடையினம் பற்றியே முழு அறிவு பெறாத மாணவர்கள்   தற்காலத்தில் பிழை மலிய எழுதுவதைப்  பார்க்கிறோம் . அக்காலத்தில் லகர- ளகரங்களைப் பிழை இல்லாமல் தெளிவாக உச்சரிக்கவும் ஆசிரியப்  பெருமக்கள் துணை செய்தனர். இப்போதோ மாணவர்கள் மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பவர்களும் பள்ளி என்பதைப் பல்லி என்பது போன்ற  பல சொற்களைக் கொலை செய்கின்றனர்.

 புலவர் பட்டம் பெறுவது என்பது கொடுக்கப்பட்ட நூலைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்று ஆகி விட்டது.   அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல  நூல்களிலிருந்து எடுத்துக் கோர்த்துக் கட்டுரை வழங்கிவிட்டால் அது ஆய்வுக் கட்டுரை ஆகி விடும். முனைவர் பட்டமும் கிடைத்துவிடும். சில வெண்பாக்களை இயற்றிவிட்டால் அவரைப் புலவர் என்கிறார்கள். அதற்குப் படைப்பு என்ற சிறப்புப் பெயரும் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. நல்லவேளையாக இப்போது தவறான பாடல்களைக் கண்டிக்க நக்கீரரோ , ஒட்டக்கூத்தரோ இல்லை ! இலக்கண மரபை மீறினால் என்ன ? கவிதை என்று சொல்லிவிட்டால் போகிறது என்ற துணிவும் வந்து விடுகிறது.

கல்வித்துறையில்  அரசியலும்  நாத்திகமும் புகுந்து விட்டபடியால் ஆட்சியாளர்களின் கொள்கைகள் பாடப் புத்தகத்தில் திணிக்கப்படுகிறன . அண்மையில் ஒரு மூத்த தமிழறிஞரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் , முழுமையான தமிழறிவு பெறப் பக்தி இலக்கியப்  பயிற்சி ஒன்றே துணை செய்யும் என்று வலியுறுத்திக் கூறினார். ஏராளமான தமிழ் நூல்கள் பக்தி சார்ந்தவைகளே. ஆனால் அரைகுறைத் தமிழ் அறிவோடு பக்தி இலக்கியங்களைப்  பழிக்க முன்வருவோருக்கு எப்படிப் புரிய வைப்பது ? 

ஒரே சொல் பல பொருள்களைத் தருமாறு அமைந்திருப்பது பற்றி மேலே கூறினோம். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் இடம்  கருதிப் புரிதலுக்காகச்  சிலவற்றையே இங்கு எடுத்துக் காட்டுகிறோம்:

பணம் என்ற சொல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வாயைப் பிளக்க வைக்கும் சக்தி உடைய சொல்லல்லவா அது ! அதற்குப் பாம்பு என்ற பொருளும் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? " கரும் பணக் கச்சைக் கடவுள் "  என்று சிவபெருமானைத் திருவாசகம் குறிப்பிடுமிடத்தில் அதற்கு, கரிய பாம்பைக் கச்சையில் இருத்திய கடவுள் என்பது பொருள். பணக்கட்டுக்களை இடுப்பை விட்டு எடுக்காத லோபிகளுக்கு இந்தப் பொருள் எங்கேயிருந்து உதிக்கும் ? நிலையில்லாத செல்வத்தைக் கொண்டாடுபவர்கள் அதுவே பாம்பின் விஷமாக அவர்களைக் கொல்லக் கூடியது என்ற மறை பொருளை எங்ஙனம் சிந்திந்திப்பார்கள் ? அதனை அடக்கி ஆளக்கூடியவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு மறைபொருள்.  வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுக்கே அது சாத்தியம்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழறிஞர் கூறியதையும் இங்குப் பகிர்கிறேன். திருவள்ளுவர் காலத்தில் கழகம் என்பதற்குச் சூதாடும் இடம் என்ற பொருள் இருந்தது என்றார் அவர். ஆனால் இப்போதோ பல துறைகளின் பெயர்களில் கழகமே இருக்கிறது. இவர்கள் பண்டை நூலறிவு உடையவர்களாக இருந்தால் இவ்வாறு பெயர் சூட்டத் தயங்குவர். எனவே காலச் சுழற்சியால் ஒரு சொல்லுக்கு வேறு பொருள் சொல்லப்பட்டு விடுகிறது என்பதை அறியலாம்.

கற்பு என்ற சொல் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்பட்ட போதிலும் ஆணுக்கு மட்டுமல்லாமல் தான் வழிபடும் ஒருவனே தேவன் என்று அசையாத உறுதியோடு நிற்பவனுக்கும் உரிய பொதுச் சொல் என்பதை அறியாதவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் போல் பேச வந்து விடுகிறார்கள். மாறாத சிந்தையைக் குறிப்பதாக இச் சொல் அமைகிறது. நமது எண்ணம் அடுத்தவருக்கும் இருக்கும்போது இருவரும் மாறாத கொள்கை உடையவர்கள் என்கிறோம். அதுவே கற்பு. கணவன் நினைப்பதையே தானும் கருதுதல் ஆதலால் அக் கற்பு , பெண்ணுக்கும் உரியதாகி விடுகிறது. தனது அடியார்களுக்கு அருள வேண்டும் என்று முருகப்பெருமான் எண்ணும் போது, அதில் சற்றும் மாறாத எண்ணம் உடையவள் வள்ளி நாயகி ஆதலால் அவளைக் கந்த புராணம், " மாறிலா வள்ளி வாழ்க " என்று போற்றும்.

இக் கற்பாவது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அதில் முழுவதும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் அதுவே கற்பாகிறது. மற்றொரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சித்தாந்தம் தவறெனச் சுட்டிக் காட்டி அவரது சித்தாந்தம் வெல்லப் படும்போது தோற்றவரின் சித்தாந்தமாகிய கற்பு அழிக்கப்பட்டோ நீக்கப் பட்டோ முடியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைத் தான் திருஞானசம்பந்தரது ஆலவாய்ப் பதிகம் உணர்த்தியுள்ளது. அவ்வளவே. இதனை அறியாமல் வாதம் செய்ய வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் ஞானத் தமிழ் நூல்கள் பலவற்றை அடிப்படையிலிருந்து கற்றுத் தெளிய வேண்டும். குறைந்த பட்சமாக, திருமுறைகளே சைவக் கருவூலம் என்று சொல்லும் அடியார் பெருமக்களாவது, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து ஓத வேண்டும்.