Monday, November 26, 2012

நாதஸ்வரத்திற்கு ஆபத்தா??


கேரளத்துக் கோயில்களுக்குச்  சென்று வந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகக் கவனத்திற்கு வந்திருக்கும். பாரம்பர்யம் எவ்வாறு அங்கு காப்பாற்றப்படுகிறது என்பதே அது. ஆண்கள் சட்டை அணிந்து செல்ல மாட்டார்கள். கோயில் கருவறையில் மின் விளக்கே இருக்காது. நெய் தீபமே சுடர் விட்டு எரியும். சன்னதியில் வீண் வம்பு அடிப்பவர்களைப் பார்ப்பது மிகமிக அரிது. கோயில் சுத்தத்தின் இருப்பிடமாக இருக்கும். குருவாயூர் போன்ற பிரபலமான கோயில்களிலும் பிராகாரத்தில் லட்டு கடையோ, பிற கடைகளோ இருப்பதைக் காண முடியாது. எல்லாம் கோயிலுக்கு வெளியில் தான். தூணுக்குத் தூண் , உண்டியல்களையும் காணோம்! அவர்களால் இக் காலத்திலும் எப்படி இவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது என்று பார்த்தால், தெய்வத்தின் மீதும் , பாரம்பர்யத்தின் மீதும் அவர்கள் காட்டும் மதிப்பும் மரியாதையுமே காரணம் எனலாம்.

  தமிழகக் கோயில்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நாளுக்கு நாள் மாற்றங்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பூமி இது. கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டுப் போகும் போது இப்படித்தான் ஆகிவிடும். எதையும் மீறும் மனோபாவம் வந்துவிட்டால் கலாசாரமாவது ஒன்றாவது!

இங்கு சட்டை,கைலி, பேண்ட் என எதை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் செல்லத் தடை ஏதும் இல்லை. கேட்டால் மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்று வாதம்  செய்வார்கள். தானே சாமிக்குத் தூபம், தீபம் முதலியன காட்டுவார்கள். நந்தியைக் கட்டிக்கொண்டு ரகசியம் பேசுவார்கள். பிராகாரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசுவதோ  கை வந்த கலை. பேசும் போது வெறும் வாயோடு பேசலாமா? தேவஸ்தான பிரசாதக்(?) கடைகள் தான் இருக்கின்றனவே, கொரித்துக் கொண்டே பேசுவதற்கு!

கோயில்களில் தானே நாம் மிகுந்த தமிழ் பற்று உடையவர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும்! வீட்டில் தேவார திருவாசக பாராயணம் செய்யாதவர்கள் கோயில்களில் சர்ச்சை  செய்வார்கள். பிற கோயில்களில் , மகா மண்டபத்தில் தேவாரம் ஒலிக்கப்படுவது போலத்  தில்லைக்  கோயிலிலும் ஒலித்தால் அதற்கு எதிர்ப்பு. சாமிக்குப் பக்கத்திலேயே சென்று பாடினால் என்ன என்று! இதெல்லாம் வேடிக்கையாகத் தோன்றவில்லை? தேவையற்ற காழ்ப்பு உணர்ச்சி வித்திடப்படுகிறது. கும்பாபிஷேகத்தைத் தமிழிலேயே, திருமுறைகளை ஓதிச் செய்தால் என்ன என்று சில பேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். திருமால் கோயில்களில் இதைத்  திவ்வியப் ப்ரபந்தம்  ஓதியபடியே செய்தால் என்ன என்று யாராவது கேட்கிறார்களா பாருங்கள்.

காலம் காலமாகப் போற்றப்பட்டுவந்த மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. கோயில்களில் நடக்கும் வைபவங்களில் கேரளத்து செண்டா வாத்தியக் காரர்கள் வரவழைக்கப் படுகின்றனர். தமிழகக் கிராமக் கலையான மேளமும் நாதஸ்வரமும் ஓரம்  கட்டப் படுகின்றன. அவற்றை வளர்த்ததே கோயில்கள் தான் என்பதை மறுக்கமுடியாது. ஒரு காலத்தில் , ஸ்வாமி புறப்பாட்டின் போது, நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்க இரவு முழுதும் வீதிகளில் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.

இப்பொழுது இவ்வளவு சங்கீத சபாக்கள் இருந்தும், நாதஸ்வரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. தென்மாவட்டங்களில் திருமணங்களிலும் செண்டா வாத்தியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாதஸ்வரம் வாசிப்பவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி வந்து விடும். கேரள பூமியின் கலாசாரத்தை அவர்கள் காப்பாற்றுவதைப் போலத் தமிழகத்தின்  கலைகளைக் காப்பாற்ற வேண்டாமா?  பஞ்சமுக வாத்தியமும் பாரி நாயனமும் காட்சிப் பொருள்கள் ஆகி விட்டதைப் போல மேளமும் நாதஸ்வரமும் ஆகிவிடாமல் காப்பாற்றப் பட வேண்டும். யார் சொன்னால் எடுபடுமோ தெரியவில்லை. சொல்ல வேண்டியவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாரம்பர்யக் கலையும் நசித்துப்போய் விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

Thursday, November 22, 2012

சிவ முக்தி பெற்ற சீலர்


                                               சிவமுக்தி பெற்ற சீலர்  
          சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


 திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன  23-வது மஹா சந்நிதானம் அவர்கள் சிவப்பேறு அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி, ஆதீன அன்பர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துச் சைவ உலகிற்கும் அதிர்ச்சியைத் தந்து,ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தபோது, இவர்கள் செய்த சிவதர்மங்கள் கணக்கில் அடங்கா. ஆதீனக் கோயில்கள் பல திருப்பணி செய்யப்பட்டு நித்தியபூஜைகள் செவ்வனே நடைபெறலாயின. குருமூர்த்தங்களும், சந்தனாச்சார்யார்களின் அவதாரத்தலங்களும் திருப்பணி செய்யப்பட்டன. நூல்கள் பல அச்சடிக்கப்பெற்றன. இலவச வெளியீடுகள் அன்பர்களுக்கு அளிக்கப்பட்டன. கோசாலைகள் பராமரிக்கப்பட்டன. தமிழ்ப்புலவர்களும்,ஒதுவாமூர்த்திகளும், சிவாசார்யர்களும் கௌரவிக்கப்பட்டனர். சுமார் 150 இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்றோர்களுக்கும்,நலிந்தோர்களுக்கும் நித்திய அன்னதானம்   செய்யப்பட்டது. மடத்துகோயில்களுக்கு மட்டுமல்லாமல் அறநிலையத்துறையின் கோயில்களின் திருப் பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் உதவி அளிக்கப்பட்டது. 

திருவாதிரையான் திருவருட் சபையின் பணிகளைக் கண்டு மிக்க மகிழ்வோடு, ஆக்கமும், ஊக்கமும்  தந்தவர்கள் ஸ்ரீ சந்நிதானம் அவர்கள். சின்னப்பட்டத்தில் இருந்தபோதிலிருந்தே, இவ்வாறு நம்மைப் பணி செய்ய ஊக்குவித்தவர்கள் இவர்கள். மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் கிராமக் கோயில்களின் சிவாச்சார்யர்களுக்கு நமது சபை உதவி வழங்கும்போது, தாமும் இருவருக்கு உதவி வழங்கிய கருணை மனம் படைத்தவர்கள் நமது குருமூர்த்திகள். கடந்த ஆடி- சுவாதியன்று ஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் சிவாகமத்தில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ஆசி வழங்கியபோது, நமது சபை , ஆலய மடைப்  பள்ளிகளில் பணி புரிவோர்க்கு  உதவித்தொகை வழங்க முன்வந்தபோது, தாமும் இருவருக்கு, அதே நிகழ்ச்சியின் போது உதவி, நமக்கும் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கினார்கள். 


 திருத் தலையாலங்காடு ஸ்ரீ நர்த்தனபுரீச்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிகையை ஸ்ரீ மகா சந்நிதானத்தில்   சமர்ப்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தவர்களாக, கும்பாபிஷேக மருந்து முழுவதையும் அளிப்பதாகவும்,அதை இடிக்க ஆட்களையும் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். " வேறு ஏதாவது தேவைப்படுமா?" என்று அவர்கள் கேட்டபோது ,அடியேன்,இக் கோயிலுக்கு ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் விக்ரகம் இல்லாதது குறையாக இருக்கிறது. ஸ்வாமி இங்கு முயலகன் மீது நடமாடியதாகத் தல வரலாறு கூறுவதாலும், ஆதீன பூஜா மூர்த்தி ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதாலும், மடத்தின் சார்பாக, மூன்று அடி உயரமுள்ள ஆடல்வல்லானையும், சிவகாம சுந்தரியையும் உபயமாக அளித்து அருளுமாறு வேண்டினேன். சற்றும் தாமதிக்காமல் , அதற்கான ஏற்பாடுகள் செய்ய மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டு அருளினார்கள் என்பதை மிக்க நன்றியுடன் கூறிக்கொள்ளக்  கடமைப் பட்டிருக்கிறேன். ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கு வருகை தந்ததோடு, மண்டலாபிஷேகத்தன்று, ஆதீன உபயமாக, ஆடல்வல்லான், சிவகாமவல்லி,காரைக்கால் அம்மை ஆகிய மூர்த்திகளை வழங்கியதோடு, ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஆறு அபிஷேகங்களும் ஆதீன உபயமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். தவிரவும், ஆலய சிவாச்சார்யாருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்குவதாகவும் கூறிய கருணைத்திறம்  போற்றுதற்கு உரியது.

திருவாவடுதுறை ஆதீனம் சுமார் அறுநூறு ஆண்டுகளாகச் செய்துவரும், குரு- க்ஷேத்ர பரிபாலனங்கள் இவர்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வளர்ச்சி பெற்று, மக்கள் சேவையும் கூடவே சேர் ந்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், அக்குருமூர்த்திகள் நம்மிடையே வழிகாட்டும் ஆசானாக இனி இல்லை என்பது துக்கத்தை மேலிடச் செய்கிறது. இனி, 24 - வது குருமூர்த்திகளாகப் பட்டமேற்பவர்களும் இக்குருபரம்பரையின் புகழை மேலோங்கச் செய்யவும், சைவ நெறி தொடர்ந்து தழைத்து ஓங்கவும், ஞானமா நடராஜப் பெருமானது குஞ்சித மலரடிகளை வணங்கிப் போற்றுவோமாக.  
   

Friday, November 9, 2012

ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.


ஒளி மயமான தீபாவளித் திரு நாளில் ஒலி மயமும் சேர்ந்துவிடுவதால்  குழந்தைகளின்  மகிழ்ச்சிக்குக்  கேட்கவா வேண்டும்?  பொழுது எப்பொழுது விடியப்போகிறது என்று ஆவலுடன்  இருப்பார்கள். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் ,நடுத்தர வயதுக்காரர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொருவரும் இம்மகிழ்ச்சியைப் பல விதமாகக் கொண்டாடினாலும்  சதுர்த்தசி தினமான தீபாவளியன்று விடியற்காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு நீராடுவது எவ்வளவோ தலைமுறைகளாக நடைபெறுவதொன்று.சதுர்த்தசி , பரமேச்வரனுக்கு மிகவும் உகந்த நாள். அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசியை பிரதி மாதமும் மாத சிவராத்திரி யாகவும், மாசி மாதத்தில் வருவதை மகாசிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம். தீபாவளியும் மாஸ  (ஐப்பசி மாத ) சதுர்தசியே. நடராஜப் பெருமானுக்கு ஆண்டு தோறும்  நிகழும் ஆறு அபிஷேகங்களில், மூன்று , சுக்ல பக்ஷ( வளர் பிறை)   சதுர்தசிகளில் ( ஆவணி, புரட்டாசி, மாசி  மாதங்களில்) நடைபெறுகிறது. தீபாவளியன்று செய்யும் ஸ்நானம் ,கங்கா ஸ்நானமாகக் கருதப்படுகிறது.

அவரவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி கொண்டாடிமகிழும் இந்த சமயத்தில் , சக்திக்கு மீறிய செலவுகள் செய்வதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துணிமணிகளோ,பட்டாசுகளோ  என்ன விலை விற்றாலும் வாங்குவோர் ஏராளம். வயதானவர்கள் சிலர் மட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். "காசைக் கரியாக்காதே" என்று முதியவர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்! இப்படித் தாராளமாகச் செலவு செய்பவர்கள் , பிறருக்கு உதவுவதிலும் தாராளம் காட்டினால் நல்லது. இந்த வேளையில் ஏதாவது ஓரிரு குடும்பங்களில் தீபாவளி பிரகாசிக்கச் செய்யலாமே! 

நாம் மீண்டும் மீண்டும் கிராமக் கோயில்களைப் பற்றியும் அதில் பூஜை செய்பவர்களைப் பற்றியும் கவலைப் பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் , ஆதரிப்போர் யாரும் இல்லாத சூழ்நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனை கோயில்கள் தீபாவளியன்றும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன  என்பதை அறியும்போது , நாம் நமக்கு மட்டும் எதையும் குறைத்துக் கொள்ளாமல் , கோயிலைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. யாராவது மனது வைத்துப் புது வஸ்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் , வழக்கமான எண்ணெய் பிசுக்கு ஏறிய பழைய வஸ்திரமே அன்றும் சார்த்த வேண்டியிருக்கிறது.  

நாம் எண்ணெய் ஸ்நானம் செய்வது போல் கோவிலில் இருக்கும் மூர்த்திகளுக்கும் எண்ணெய் ஸ்நானம் செய்வித்துப் புது வஸ்திரங்கள் சார்த்த வேண்டாமா? இந்த வருஷம், கிராமங்களில் உள்ள  ஐந்து சிவாலயங்களுக்குத்  தலா ரூ ஆயிரத்தை நமது சபை  வழங்குகிறது. இதனை ஏற்றுப் போற்றும் அன்பருக்குச் சிவனருள் பெருகுவதாக. இதில் ரூ 250 , கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் தீபாவளியன்று சார்த்த உபயோகிக்கப்படும். மீதமுள்ள ரூ 750 , ஆலய அர்ச்சகருக்குத் தீபாவளியை முன்னிட்டு சம்பாவனையாக அளிக்கப்படுகிறது.   சாத்தனூர், திருமங்கலம் (குத்தாலம் அருகில்), கோட்டூர், திருக்களர், இடும்பாவனம் ஆகிய தலங்களின்  அர்ச்சகர்களுக்கு இத்தொகை அனுப்பப் பட்டுவிட்டது. பலரும் தமக்கு முடிந்த அளவில் இது போன்ற விசேஷ தினங்களில் ஆலயங்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றபடி, நாம் மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடும் இச்சமயத்தில், இன்னும் சிலர் முகங்களிலாவது மகிழ்ச்சியைக் காண வகை செய்யலாம் அல்லவா?