Friday, November 9, 2012

ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.


ஒளி மயமான தீபாவளித் திரு நாளில் ஒலி மயமும் சேர்ந்துவிடுவதால்  குழந்தைகளின்  மகிழ்ச்சிக்குக்  கேட்கவா வேண்டும்?  பொழுது எப்பொழுது விடியப்போகிறது என்று ஆவலுடன்  இருப்பார்கள். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் ,நடுத்தர வயதுக்காரர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொருவரும் இம்மகிழ்ச்சியைப் பல விதமாகக் கொண்டாடினாலும்  சதுர்த்தசி தினமான தீபாவளியன்று விடியற்காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு நீராடுவது எவ்வளவோ தலைமுறைகளாக நடைபெறுவதொன்று.சதுர்த்தசி , பரமேச்வரனுக்கு மிகவும் உகந்த நாள். அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசியை பிரதி மாதமும் மாத சிவராத்திரி யாகவும், மாசி மாதத்தில் வருவதை மகாசிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம். தீபாவளியும் மாஸ  (ஐப்பசி மாத ) சதுர்தசியே. நடராஜப் பெருமானுக்கு ஆண்டு தோறும்  நிகழும் ஆறு அபிஷேகங்களில், மூன்று , சுக்ல பக்ஷ( வளர் பிறை)   சதுர்தசிகளில் ( ஆவணி, புரட்டாசி, மாசி  மாதங்களில்) நடைபெறுகிறது. தீபாவளியன்று செய்யும் ஸ்நானம் ,கங்கா ஸ்நானமாகக் கருதப்படுகிறது.

அவரவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி கொண்டாடிமகிழும் இந்த சமயத்தில் , சக்திக்கு மீறிய செலவுகள் செய்வதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துணிமணிகளோ,பட்டாசுகளோ  என்ன விலை விற்றாலும் வாங்குவோர் ஏராளம். வயதானவர்கள் சிலர் மட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். "காசைக் கரியாக்காதே" என்று முதியவர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்! இப்படித் தாராளமாகச் செலவு செய்பவர்கள் , பிறருக்கு உதவுவதிலும் தாராளம் காட்டினால் நல்லது. இந்த வேளையில் ஏதாவது ஓரிரு குடும்பங்களில் தீபாவளி பிரகாசிக்கச் செய்யலாமே! 

நாம் மீண்டும் மீண்டும் கிராமக் கோயில்களைப் பற்றியும் அதில் பூஜை செய்பவர்களைப் பற்றியும் கவலைப் பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் , ஆதரிப்போர் யாரும் இல்லாத சூழ்நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனை கோயில்கள் தீபாவளியன்றும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன  என்பதை அறியும்போது , நாம் நமக்கு மட்டும் எதையும் குறைத்துக் கொள்ளாமல் , கோயிலைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. யாராவது மனது வைத்துப் புது வஸ்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் , வழக்கமான எண்ணெய் பிசுக்கு ஏறிய பழைய வஸ்திரமே அன்றும் சார்த்த வேண்டியிருக்கிறது.  

நாம் எண்ணெய் ஸ்நானம் செய்வது போல் கோவிலில் இருக்கும் மூர்த்திகளுக்கும் எண்ணெய் ஸ்நானம் செய்வித்துப் புது வஸ்திரங்கள் சார்த்த வேண்டாமா? இந்த வருஷம், கிராமங்களில் உள்ள  ஐந்து சிவாலயங்களுக்குத்  தலா ரூ ஆயிரத்தை நமது சபை  வழங்குகிறது. இதனை ஏற்றுப் போற்றும் அன்பருக்குச் சிவனருள் பெருகுவதாக. இதில் ரூ 250 , கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் தீபாவளியன்று சார்த்த உபயோகிக்கப்படும். மீதமுள்ள ரூ 750 , ஆலய அர்ச்சகருக்குத் தீபாவளியை முன்னிட்டு சம்பாவனையாக அளிக்கப்படுகிறது.   சாத்தனூர், திருமங்கலம் (குத்தாலம் அருகில்), கோட்டூர், திருக்களர், இடும்பாவனம் ஆகிய தலங்களின்  அர்ச்சகர்களுக்கு இத்தொகை அனுப்பப் பட்டுவிட்டது. பலரும் தமக்கு முடிந்த அளவில் இது போன்ற விசேஷ தினங்களில் ஆலயங்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றபடி, நாம் மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடும் இச்சமயத்தில், இன்னும் சிலர் முகங்களிலாவது மகிழ்ச்சியைக் காண வகை செய்யலாம் அல்லவா? 

No comments:

Post a Comment