Thursday, November 22, 2012

சிவ முக்தி பெற்ற சீலர்


                                               சிவமுக்தி பெற்ற சீலர்  
          சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


 திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன  23-வது மஹா சந்நிதானம் அவர்கள் சிவப்பேறு அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி, ஆதீன அன்பர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துச் சைவ உலகிற்கும் அதிர்ச்சியைத் தந்து,ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தபோது, இவர்கள் செய்த சிவதர்மங்கள் கணக்கில் அடங்கா. ஆதீனக் கோயில்கள் பல திருப்பணி செய்யப்பட்டு நித்தியபூஜைகள் செவ்வனே நடைபெறலாயின. குருமூர்த்தங்களும், சந்தனாச்சார்யார்களின் அவதாரத்தலங்களும் திருப்பணி செய்யப்பட்டன. நூல்கள் பல அச்சடிக்கப்பெற்றன. இலவச வெளியீடுகள் அன்பர்களுக்கு அளிக்கப்பட்டன. கோசாலைகள் பராமரிக்கப்பட்டன. தமிழ்ப்புலவர்களும்,ஒதுவாமூர்த்திகளும், சிவாசார்யர்களும் கௌரவிக்கப்பட்டனர். சுமார் 150 இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்றோர்களுக்கும்,நலிந்தோர்களுக்கும் நித்திய அன்னதானம்   செய்யப்பட்டது. மடத்துகோயில்களுக்கு மட்டுமல்லாமல் அறநிலையத்துறையின் கோயில்களின் திருப் பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் உதவி அளிக்கப்பட்டது. 

திருவாதிரையான் திருவருட் சபையின் பணிகளைக் கண்டு மிக்க மகிழ்வோடு, ஆக்கமும், ஊக்கமும்  தந்தவர்கள் ஸ்ரீ சந்நிதானம் அவர்கள். சின்னப்பட்டத்தில் இருந்தபோதிலிருந்தே, இவ்வாறு நம்மைப் பணி செய்ய ஊக்குவித்தவர்கள் இவர்கள். மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் கிராமக் கோயில்களின் சிவாச்சார்யர்களுக்கு நமது சபை உதவி வழங்கும்போது, தாமும் இருவருக்கு உதவி வழங்கிய கருணை மனம் படைத்தவர்கள் நமது குருமூர்த்திகள். கடந்த ஆடி- சுவாதியன்று ஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் சிவாகமத்தில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ஆசி வழங்கியபோது, நமது சபை , ஆலய மடைப்  பள்ளிகளில் பணி புரிவோர்க்கு  உதவித்தொகை வழங்க முன்வந்தபோது, தாமும் இருவருக்கு, அதே நிகழ்ச்சியின் போது உதவி, நமக்கும் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கினார்கள். 


 திருத் தலையாலங்காடு ஸ்ரீ நர்த்தனபுரீச்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிகையை ஸ்ரீ மகா சந்நிதானத்தில்   சமர்ப்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தவர்களாக, கும்பாபிஷேக மருந்து முழுவதையும் அளிப்பதாகவும்,அதை இடிக்க ஆட்களையும் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். " வேறு ஏதாவது தேவைப்படுமா?" என்று அவர்கள் கேட்டபோது ,அடியேன்,இக் கோயிலுக்கு ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் விக்ரகம் இல்லாதது குறையாக இருக்கிறது. ஸ்வாமி இங்கு முயலகன் மீது நடமாடியதாகத் தல வரலாறு கூறுவதாலும், ஆதீன பூஜா மூர்த்தி ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதாலும், மடத்தின் சார்பாக, மூன்று அடி உயரமுள்ள ஆடல்வல்லானையும், சிவகாம சுந்தரியையும் உபயமாக அளித்து அருளுமாறு வேண்டினேன். சற்றும் தாமதிக்காமல் , அதற்கான ஏற்பாடுகள் செய்ய மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டு அருளினார்கள் என்பதை மிக்க நன்றியுடன் கூறிக்கொள்ளக்  கடமைப் பட்டிருக்கிறேன். ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கு வருகை தந்ததோடு, மண்டலாபிஷேகத்தன்று, ஆதீன உபயமாக, ஆடல்வல்லான், சிவகாமவல்லி,காரைக்கால் அம்மை ஆகிய மூர்த்திகளை வழங்கியதோடு, ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஆறு அபிஷேகங்களும் ஆதீன உபயமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். தவிரவும், ஆலய சிவாச்சார்யாருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்குவதாகவும் கூறிய கருணைத்திறம்  போற்றுதற்கு உரியது.

திருவாவடுதுறை ஆதீனம் சுமார் அறுநூறு ஆண்டுகளாகச் செய்துவரும், குரு- க்ஷேத்ர பரிபாலனங்கள் இவர்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வளர்ச்சி பெற்று, மக்கள் சேவையும் கூடவே சேர் ந்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், அக்குருமூர்த்திகள் நம்மிடையே வழிகாட்டும் ஆசானாக இனி இல்லை என்பது துக்கத்தை மேலிடச் செய்கிறது. இனி, 24 - வது குருமூர்த்திகளாகப் பட்டமேற்பவர்களும் இக்குருபரம்பரையின் புகழை மேலோங்கச் செய்யவும், சைவ நெறி தொடர்ந்து தழைத்து ஓங்கவும், ஞானமா நடராஜப் பெருமானது குஞ்சித மலரடிகளை வணங்கிப் போற்றுவோமாக.  
   

3 comments:

  1. குரு மஹா சந்நிதானம் அவர்கள் இறைவனடி
    சேர்ந்த செய்தியை கேள்விபடும்பொழுது-மிகவும்
    துயருருகிறேன்.அன்னாரின் மறைவு எங்களைப்
    போலுள்ள சைவசித்தாந்த மாணவர்களுக்கு ஒரு
    மிகப் பெரும் இழப்பு.

    ReplyDelete
  2. Dear Sir:
    You have enlightened me about the various services rendered by this Maha Sannidhanam and your and your Sabha's close association with this GREAT PERSONALITY. Such great souls come to this Earth very rarely and those who have the opportunity to get associated with them are indeed fortunate. He will difinitely find a place at the lotus feet of 'Kunchitapadhan'
    vidyasagar

    ReplyDelete
  3. A great loss, let us all pray,for his noble soul should merge with OUR LORD.SHIVA,

    ReplyDelete