Saturday, February 7, 2015

குறையும் நிறையும்

மனிதனுக்குக் கற்பனா சக்தி வேண்டியதுதான். ஆனால் அந்த சக்தியானது ஒரு வரையறைக்குள் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டால் நல்லது. ஆனால் இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் யாரும் திருத்திக் கொள்வதாகத் தோன்றவில்லை. " இவன் என்ன நமக்குப் புத்தி சொல்ல வந்து விட்டான் " என்பார்கள். இருந்தாலும், சொல்லாமல், நமக்கேன் என்று இருப்பதும் ஒருவகையில் தப்பு தான்! நமக்கு ஒரு குருவிடமோ,தெய்வத்தினிடமோ , பிற மனிதர்களிடமோ அன்போ, பக்தியோ பாசமோ இருக்கலாம்.அவர்களை எந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்பது முக்கியமானது. இந்த மூவருக்கும் தனித் தனி ஸ்தானங்கள் உண்டு என்பதை முதலில் நாம் உணர வேண்டும். தெய்வத்திற்கானதை குருவுக்கோ, பிற மனிதர்களுக்கோ தருவது தவறு என்பதை உணர வேண்டும். குருவும் சிவமும் ஒன்று தானே என்று கேட்கலாம். குருவின் அருளால் சிவனை எளிதில் அடையலாம் என்பதற்காகவே இவ்வாறு உயர்த்திக் கூறப்பட்டது. இதுவே  இப்படி இருக்கும்போது, பிற மனிதர்களைத் தெய்வத்தோடு இணைத்துப் பார்ப்பது இன்னமும் தவறு என அறிய வேண்டும்.

தெய்வம் என்னுள் இருக்கும்போது நான் தெய்வமாகவே ஆகி விடுகிறேன் என்ற அத்வைத தத்துவத்தைத் தவறாகப் புரிந்து கொண்டால் அத்  தவறு யாருடையது என்பது புரியும். இதன் அடிப்படையில் யார் யாருக்கெல்லாமோ அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. தெய்வத்துதிகளை தனக்குப் பிடித்த குருமார்களுக்கு உரியதாக்குகிறார்கள் சிலர்.

கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகச் சென்னையில் ஆன்மீகக் கண் காட்சி நடைபெற்றுவருவது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். அரிய தகவல்கள் பல மக்களுக்கு இதனால் தெரிய வருகின்றன. சேவை செய்வதன் சிறப்பு உணர்த்தப்படுகிறது. இவற்றுள் பெரும்பாலும் கல்வி, மருத்துவம் சார்ந்த சேவைகளே  அதிகமாக இடம் பெறுகின்றன. ஆன்மீகப்புத்தகங்களும், குழந்தைகளுக்கான போட்டிகளும் கூடவே இருக்கின்றன. சில பள்ளிகள் குழந்தைகளை இக் கண்காட்சிக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு சில ஸ்டால்களில் அடிப்படை சமயக் கல்வியின் முக்கியத்துவம் தெரிவிக்கப்படுகிறது.

சென்ற  ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சிவலிங்கத்தின் நடுவில் சுவாமி விவேகானந்தர் இருப்பதுபோல அமைத்திருந்தார்கள். அதனைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்திற்கு எழுதினோம். அவர்கள் பதில் எழுதாவிட்டாலும் இந்த ஆண்டு அவ்வாறு அமைக்காதது பற்றி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த ஆண்டு ஒரு ஸ்டாலில் சங்குகளைக் கொண்டே ஒரு சிவலிங்கம் அற்புதமாக அமைத்திருந்தார்கள். காண வருபவர்களோ அதன் மீது ரூபாய் நோட்டுக்களையும் காசுகளையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதற்காக வேண்டுமானால் ஒரு தட்டு வைத்திருக்கலாமே என்று தோன்றியது.

மற்றொரு ஸ்டாலில் காஞ்சிப் பெரியவர்களை ருத்திராக்ஷத்தால் செய்யப்பட ஐந்து தலை நாகத்தில் அமர்ந்திருப்பதுபோலச் செய்திருந்தார்கள். மகா பிரதோஷத்தன்று மார்பில் மட்டும் அல்லாமல் தலை மீதும் ருத்ராக்ஷ மாலைகளைப் பெரியவர்கள் தரித்துத் தியானத்தில் இருந்ததை தரிசித்தவர்களுக்குத் தெரியும், ருத்ராக்ஷத்தின் மீது எத்தனை ஆர்வமும் பக்தியும் வைத்தவர்கள் என்பது. ஆகவே ருத்ராக்ஷத்தால் ஆன உடல் பகுதியைக் கொண்ட நாகத்தின் மீது அமர்ந்திருப்பது போல அமைத்திருந்தது சற்று நெருடலாகத் தோன்றியது. பெரியவர்கள் மீதான பக்தியை வேறு வகையில் காட்டி இருக்கலாமே என்று கூடத் தோன்றியது.

ஆறுதல் அளித்த விஷயம் இல்லாமல் இல்லை. குறையாகத் தெரிவதைச்  சொல்வதோடு நிறைவு தந்ததையும் சொல்ல வேண்டும் அல்லவா? சென்ற ஆண்டு ஆதி சைவர்  அமைப்பின் ஸ்டாலில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவம்,அவ்வமைப்பின் பிரதமத் திருவுருவாகிய சிவபெருமானது திருவுருவமாக இல்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டினோம். இம்முறை அவர்கள் மனோன்மனி தேவியுடன் வீற்றிருக்கும் சதாசிவ மூர்த்தியின் திருவுருவத்தை அமைத்து நம்மைப் பரவசப்படுத்தி விட்டார்கள். அவர்களது தொண்டு வளருமாறு முழுமுதற் கடவுளாகிய சங்கரலிங்க மூர்த்தியைத் தியானிக்கிறோம்.