Wednesday, May 11, 2011

"வாங்காத வாழைப் பழம்"





சிவபெருமானின் சிருஷ்டித் தொழில் பிரம்ம தேவன் மூலமாகச் செய்யப் படுகிறது. தற்காலத்திலோ கற்பனைகளுக்குப் படைப்பு என்ற பெயரிட்டு , "நானும் இறைவனே" என்று சொல்லிக்கொள்கிறார்கள். பல்லாண்டுகளாகவே தெய்வங்களைப் பழித்தும் இழித்தும் , தெய்வ நம்பிக்கை உள்ளவர்களைப் புண் படுத்தும் செயல்களைத் திரை உலகம் செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். கடவுள்கள் சினிமா தியேட்டரில் க்யூவில் நிற்பது போலவும், பைக்கில் சவாரி செய்வது போலவும் காட்சிகள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றைக் கண்டிப்பவர்களைத்தான் காணோம். அண்மையில் ஒரு ஆன்மிகப் பத்திரிகை இதுபோல , நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பிரம தேவனைக் கேலி செய்திருப்பது வருந்துதற்கு உரியது.



பிரமனுக்கு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது போலவும், மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக்காரனை அணுகி விலை கேட்டதும் "ஒன்னு அரை ரூபா" என்றவுடன் , பிரமன் இரண்டு டஜனுக்கு பன்னிரண்டு ருபாய் கொடுத்துவிட்டுப் பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதாகவும், கடைக்காரன் அவரைப் பிடித்துக்கொண்டு, " ஏன்னா நழுவுறே, மீதி இருபத்து நாலு ரூபாயை உன் முப்பாட்டனா வந்து தருவான் ; உனக்குக் காது டப்பாவா? ஒரு பழம் ஒன்னரை ரூபான்னு சொன்னேன்யா பழம் வாங்கவந்த மூஞ்சியைப் பாரு" என்றவுடன், பிரம்ம தேவன் "நொந்து நூடுல்ஸ் ஆகி" விட்டாராம். இப்படி எழுதியிருப்பவர் ஒரு நகைச்சுவைக் கதை ஆசிரியர். சில பேர் சொல்லலாம். நகைச்சுவைக்கு எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று. இவை எல்லாம் வரம்பு மீறிய நகைச்சுவை.யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்(திமிரில்??) எழுதப்படுபவை. "தெய்வத்தைத் தானே கிண்டல் செய்திருக்கிறார்கள்; நமக்கு என்ன என்ற உணர்ச்சி இல்லாதவர்கள் உள்ளவரை இத்தகைய கேலிகள் தொடரும். இதில் வேதனை என்னவென்றால் , ஆன்மிகப் பத்திரிக்கைகளும் இவற்றை வெளியிடுவதுதான். சுட்டிக் காட்டினால் தவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப் பக்குவம் பல பத்திரிக்கைகளுக்கு இருப்பதில்லை. "இவன் என்ன நம்மைத் திருத்துவது "என்ற ஆணவமே மேலோங்கி நிற்கிறது. விற்பனை தொடரும் வரை அவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள். வியாபார நோக்கில் எதையும் செய்யலாம். சிலரது மனம் புண் படுவதைக் கண்டு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன? சந்தேகம் தான்.