Thursday, August 27, 2015

கிராமக் கோயில்களின் புனிதம் காப்போம்

நாம் கோயிலுக்குச் செல்வதால்  நமக்கு என்ன  நன்மை என்பதைவிடக்  கோயிலுக்கு என்ன நன்மை என்று  எண்ண வேண்டியிருக்கிறது. தனியாகச் சென்றாலோ குழுவாகச் சென்றாலோ உண்டியலிலோ தட்டிலோ சில்லறைக் காசுகளைப் போட்டுப் புண்ணியம் தேடுவதும்,பரிகாரம் தேடுவதும்  வழக்கமாக ஆகி விட்டது. ஆனால் கோயிலின் நிலையோ அல்லது சிப்பந்திகளின் நிலையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஜோதிடர் சொன்னார் என்பதாலோ, பத்திரிகைகள் மூலம் படித்ததாலோ  கோயில்களைத் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தும் இந்த நிலை தொடர்கிறது. புராதனச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் பார்ப்பது போல ஆலயங்களில் பார்த்துவிட்டுப் போவோரும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் பக்தி உணர்வோடு ஆலயம் தொழுவோர்  குறைந்து சுயநலம் மேலோங்குவதையே காண்கிறோம்.

ராஜராஜனின் ஆயிரமாண்டு,ராஜேந்திரனின் ஆயிரமாண்டு என்று விழாக்கள் எடுத்தும், அம்மன்னர்கள் கட்டிய/ பராமரித்த  கோயில்களும் தருமங்களும் பராமரிக்கப்படாமலே உள்ளன. கிராமங்களில் ஒருகால பூஜை நடப்பதே சிரமமாக இருக்கிறது. அந்த ஒருகால பூஜையிலும் அன்றாடம் பங்கேற்கும் உள்ளூர் வாசிகள் எத்தனை பேர்?? இந்நிலை தொடர்ந்தால் ஒருகால பூஜையும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பூர்வீக கிராமங்களை விட்டுச் சென்றவர்களில் மிகச் சிலரே தங்கள் கிராமக் கோயில்களைப் பற்றி அக்கறை காட்டுகிறார்கள்.

நில வருவாயைப் பெற்றுத்தருவதில் நிர்வாக அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது அரசாங்கத்திற்குத் தெரிந்தும்  என்ன பயன்? சொற்ப மாத சம்பளத்தையும் தராமல் அர்ச்சகர்களை வாட்டும் அறநிலையத்துறையின் பிடியில் கிராமக் கோயில்கள் சிக்கித் தவிக்கின்றன. இவ்வாறு வருமானமே இல்லாமல் எத்தனை காலம் தான் சிப்பந்திகள் துன்பப்படுவார்கள் ?  சமயத்தைக் காப்பதற்கென்றே ஏற்பட்ட மடாலங்கள் இதற்கு என்ன  செய்யப் போகின்றன?  அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லாது போகும் நிலை வந்தபிறகு விழித்துக் கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை. இப்போதே அதன் அறிகுறிகள் பல இடங்களில் தெரிய ஆரம்பித்து விட்டன.

சிரத்தை குறைந்தால் ஆலயங்களில் இறைவனின் சாந்நித்தியம் குறையவே செய்யும். அப்படிக் குறையக் கூடாது என்பதற்காகவே, ஆகம விதிகளின்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  கும்பாபிஷேகம் நடத்தினர் நமது முன்னோர். முந்திய கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் எத்தனையோ கோயில்கள் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருக்கின்றன. . இதில் மடாலயங்களின் பராமரிப்பில் உள்ள கோயில்களும் இருப்பது நமது துர்பாக்கியம்.

நித்திய பூஜைகள் இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப் பட்ட நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று உண்டு. சாநித்தியம் குறையாமலிருக்க அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும், பாராயணங்களும் செய்யலாம். இவை எல்லாம் நமது பிழை பொறுக்குமாறு  இறைவனை வேண்டும் மனப் பாங்குடன் நடைபெற வேண்டும்.

அண்மையில் திருவிசைப்பா பதிகம் பெற்ற சாட்டியக்குடி ஸ்ரீ ருக் வேத நாத சுவாமி ஆலயத்தில் ஆர்த்ரா பவுண்டேஷனின் சார்பில் ருத்ர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக சுவாமிக்கும் வேத நாயகி அம்பாளுக்கும் கலசங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றன. இதுபோலப் பலரும் முன்வந்து தமது ஊர்க் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறச் செய்ய வேண்டும். அதனால் ஊரார் ஒன்று கூடுவதோடு, கோயிலும் பொலிவு பெறும். சிப்பந்திகளும் உற்சாகத்தோடு பணி ஆற்றுவர். எடுத்துச் சொல்பவர்கள் இருந்துவிட்டால் கேட்கத் தயாராக மக்கள் இருக்கிறார்கள். நகரத்தை விட்டு நல்ல மனம் படைத்தவர்கள் கொஞ்சம் கிராமப்புறம் எட்டிப் பார்க்க வேண்டும். எத்தனையோ பணிகள் அங்கு காத்திருக்கின்றன. செய்வதற்கு மனமும் இறை அருளும் வேண்டுமே!!