Tuesday, December 25, 2018

மூர்த்திகள் வெறும் சிலைகள் அல்ல

கண்ணுக்கும் உணர்வுக்கும் எட்டாத பரம்பொருளை நமது ஊனக் கண்களுக்கு முன்னே காட்டி ,அதில் லயிக்க வைத்து, பக்தியை ஊட்டி அதன் பின்பு ஞானத்தையும் வைராக்கியத்தையும் `உணர்த்திப் பக்குவப்படுத்தி, முத்தி நிலைக்கு ஆளாக்கி அருளுவதற்கு உருவ வழிபாடு முதல் படியாக அமைகிறது. அப்படியைத்  தாண்டி ஆத்மானுபவம் பெற்றதும்  நாம் அடுத்த நிலைக்குத் தயாராக வேண்டும். கோயில் கோபுர வாயிலில் உள்ள படியைத் தாண்டி  அடி எடுத்து வைக்கும்போதாவது நமக்கு இந்த எண்ணம் ஏற்படவேண்டும். 

" மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை " என்று திருமூலர் அருளுவது போல்  விக்கிரகத்துள் இருந்து அருள் பாலிக்கும் திருவருளையே சிந்திக்க வேண்டுமே தவிர, அம்மூர்த்தி எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம்  ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் அடுத்த நிலையை எப்படி அடைவது?  கலை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கு அகக் கண்கள் திறப்பதில்லை. பக்தி இல்லாமல் மூர்த்திகளைக் கலைப் பொருளாகவே பார்க்கிறார்கள். அவற்றின் கால ஆராய்ச்சியும், விலை மதிப்புமே அவர்களது கண்களுக்குத் தெரிகின்றன. 

மூர்த்திகளின் அழகைக் கண்டு வியப்பதில் தவறில்லை. கோயில் திருவிழாக்களில் அலங்காரம் செய்து பார்க்கட்டும். தவறில்லை. ஆனால்  அம்மூர்த்திகளைக் கண்டு பக்தி பரவசம் ஏற்பட்டுக் கண்கள் நீர் மல்க, கைகள் உச்சி மேல் கூப்பி நெஞ்சம் உருகாதவரையில் என்ன பயன் விளையும் ? அதேபோல , மூர்த்தியின் கருணையில் நனைந்து, வேதப் பொருளாக விளங்கும் விமலனைக் கண் எதிரில் கண்டு அவன் புகழைப் பாடாமல், வெறும் வாயளவில் வேதத்தையோ, திருமுறை முதலான பாடல்களையோ ஓதுபவர்களும் முதல் நிலையிலேயே நின்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில் சான்னித்தியம் குறையவும் வாய்ப்பு உண்டு. பதிவு செய்யப்பட ஒலி  நாடாக்கள் எழுப்பும் ஒலிக்கும், பெருமானது சன்னதியில் நாம் கரைந்து கரைந்து ஓதுவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா?

முக்கியமான விஷயத்திற்கு இப்போது வருவோம். மார்கழித் திருவாதிரை யன்று எல்லா உயிர்களும் மழையிலும் பனியிலும் நனைகின்றன. மழையைத் தரும் மேகமாகவும்,துளியில் நின்ற நீராகவும் கருணை பாலிக்கும் கடவுளை த்  தில்லையில் கண்டு ஆனந்த பரவசம் அடையும் வேளையில், கை கூப்பவேண்டிய கரங்கள், கைப்பேசியையும், காமிராவையும் இயக்குகின்றன. அதோடு நில்லாமல் அப்படங்களை வலைத் தளங்களில் பரவச் செய்யத் துடிக்கின்றன. அது மட்டுமா?  " மரகதக் கல் நடராஜர் "  என்று தலைப்பு வேறு கொடுக்கிறார்கள். இதில் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சிக் காரர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். அது இத்தனை மதிப்புடையது என்று உலகச் சந்தைக்குப் பறை அறிவிக்கிறார்கள். மூர்த்தியின் கால நிர்ணயம் பற்றிக் கலந்துரையாடல்கள் வேறு!  பொறுப்பற்ற ஊடகங்களின் இச் செயல்களால் மூர்த்திகளின்  பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதை ஏன் இவர்கள் உணருவதில்லை? ஒருவேளை உணர்ந்தும், பரபரப்பான செய்திகளை வெளியிட்டால் மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது. இதன் மூலம் இவர்களே சந்தைத் தரகர்களாக மாறி விடும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. 

சில ஊர்களில் மூர்த்திகளின் அபிஷேகக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. வரமுடியாதவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பார்க்கலாமே என்ற விளக்கம் வேறு !  பின்னால் அமர்ந்து தரிசிக்க வந்தவர்கள் பார்க்க முடியாத வகையில் வீடியோ காமிராவை  ஸ்டாண்டில் பொருத்துகிறார்கள். வீதி உலா செல்லும் மூர்த்தியின் வெகு அருகில் சென்று முகத்தில் மின்னல் போன்ற ஒளிமிக்க ப்ளாஷ் உபயோகித்துப் படம் பிடிக்கிறார்கள். இதனால் விளையக்கூடும் தீங்குகளைப் பற்றி  எல்லாம் கோயில் நிர்வாகிகளோ, மற்றவர்களோ எண்ணிப்பார்ப்பதில்லை. வெறும் பெயரளவிற்குத்தான் செல் போன்,காமிரா  கோயிலுக்குள் பயன் படுத்தக் கூடாது என்று அறிவிப்புப் பலகையில் எழுதி  வைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கலைச் செல்வங்களை இழந்தும் நமக்கு இன்னும் புத்தி வரவில்லை. பக்தி ஏற்படாமல், கலைப் பொருளாகக் காண்பதால் ஏற்படும் விபரீதம் இதுவே ஆகும். 

கேரளத்தில் உள்ள குருவாயூரில், கோயிலுக்குள் செல்பவர்களின் உடைமைகள் சோதிக்கப்படுகின்றன. போன், காமிரா போன்றவற்றை வெளியில் உள்ள காப்பகத்தில் வைத்து விட்டுத்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். இம்முறையைத் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களிலாவது பின்பற்றலாமே 

 இங்குதான் பக்தியும், பயமும் போய் மூர்த்திகள் விலை பேசப் படுகின்றனவே !  பக்தியையும் ஒழுக்கத்தையும்  உண்டாக்கத்தான்  ஞான நூல்களும்,நீதி நூல்களும் இயற்றினார்கள். அவற்றைப் படிக்கத் தவறிய மக்களை நல்வழிப்படுத்துவோர் ஒரு சிலரே. ஊர் ஊராக- கிராமம்-கிராமமாகக் கால் நடையாகச் சென்று மக்களுக்குப்  பக்தியை உண்டாக்குபவர்கள் வராதவரையில், கோயில்கள் காட்சிக் கூடங்களாகவும், மூர்த்திகள் வெறும் கல்லாலும் உலோகத்தாலும் செய்த சிலைகளாகவுமே பாமர மக்களுக்குத் தோற்றம்  அளிக்கும்.  

Thursday, November 29, 2018

பொன் மாணிக்கவேல் ஐயா பதவிக்காலம் நீடிக்கட்டும்

பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள்.  நன்றி: வலைத்தளம் 
தமிழக போலீஸ் துறை அதிகாரி ஐ. ஜி. திரு. பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களின் பதவிக்காலம்  நவம்பரில் முடிவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுள் என்றும்  மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் மாமனிதர் இவர். உலக அளவில் நடைபெறும் கொள்ளைகளை அறிந்து அபாரமாகச் செயல் புரிந்த இவரது அரும் பணிக்காக அரசும்,மக்களும் தலை வணங்கியே ஆக வேண்டும். சிலை மீட்ட செம்மல் போன்ற பட்டங்கள் கொடுத்துப் பாராட்டி விட்டுப் பொன்னாடைகள் போடுவதைக்காட்டிலும், அவரது துறையைச் சேர்ந்தவர்கள் இவருடைய  அடிச் சுவட்டில் பணியாற்றுவதே இவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

1960 களிலிருந்தே சிலைக் கடத்தல்கள் நடைபெறுவதாகக் கண்டறிந்த இவர் முனைப்பாகச் செயலாற்றியதால் தான் பல கொள்ளை போன விக்கிரகங்கள் மீட்கப் பட்டன. இன்னும் அவர் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருந்தும், பதவிக்கால நிறைவானது குறுக்கிடுவது பெரும் தடையாக இருக்கிறது. இன்னும் அவரது பதவிக்காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நீடிக்கப்பட வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்களின் அவா. நிறைவேற்ற வேண்டியது அரசின் கையில் தான் உள்ளது. கடத்தல் வாதிகளுக்குத் துணையாக அரசு அதிகாரிகளோ ஆட்சி வர்க்கத்தைச் சார்ந்த பிறரோ ஒருபோதும் துணை போய் விடக் கூடாது. நேர்மையான அதிகாரியின் செயல்பாட்டுக்கு இடையூறாக அரசியல் புகுந்து விட்டால் நேர்மையின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய் விடும். 

ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு ஐயா அனுபவங்கள் பலவற்றை நிச்சயமாகச் சந்தித்திருக்கக் கூடும். அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடானது என்றும், ஆபத்துக்கள் நிறைந்தது என்றும், அவர் நன்றாக அறிவார். இத்தனையையும் மீறிச்  செயல் பட்டார் என்றால், அவருக்குத் துணிவும், ஆண்டவன் அருளுமே துணையாக நின்றன என்று நிச்சயமாகக் கூறலாம். 

பரபரப்பான தகவல்களுக்காகவே தவம் கிடக்கும் மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் அவரிடமே கேள்வி கேட்பார்கள். மீட்டுக் கொண்டு வந்த சிலையின் சந்தை விலை என்ன என்பார்கள். அதையே தலைப்புக் கட்டித் தொலைக் காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடுவதோடு, கொள்ளை அடித்தவனை " சர்வதேசக் கடத்தல் மன்னன் " என்று வர்ணிப்பார்கள் அந்த மானம் கெட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் நமது ஐயா பாடுபட்டு சிலைகளை மீட்டு வந்ததைப பாராட்ட மனம் இருக்கிறதோ இல்லையோ, வெளியிடுவதற்குச் சூடான தகவல் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். 

பதுக்கி வைத்த கற்சிலைகளை ஐயா மீட்ட பிறகு அவற்றைப்  பாது காப்பாக வைக்க ஒரு இடம் கூடத் தரவில்லை நமது அரசு. அதற்கும் தளராமல் தமது அலுவலகத்திலேயே அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கொள்ளைக் காரர்கள் வெளி நாட்டவர்களது கைக்கூலியாகச் செயல் பட்டு நமது மூர்த்திகளைத் திருடிச் சென்றதைத் தான் நாம் கேள்விப் பட்டு வந்தோம். வேலியே பயிரை மேய்வது போல அறநிலையத்துறையின் கோயில் மூர்த்திகள் பாதுகாப்புக்காக ( ??? )  வேறு கோயிலில் வைக்கப் பட்டது போக, அக்கோயிலில் பணியாற்றும் அறநிலையத்துறை ஊழியர்களும், மேலதிகாரியின் துணையோடு  களவாடிச் சென்று விற்றதை  நமது ஐயா அவர்கள் கண்டறிந்து அனைவருக்கும் வெளிப்படுத்தியவுடன்  ஆன்மீக உலகே அதிர்ச்சி அடைந்தது. விக்கிரகத்தையே மாற்றி ஏமாற்றிய  கேடு கேட்ட பிழைப்புக்கு ஸ்தபதி ஒருவரும் உடந்தை என்பது மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஐயா அவர்களின் சீரிய தொண்டால் அறநிலையத்துறையின் ஒழுங்கீனங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் துவங்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேலான அறநிலையத் துறை கோயில்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டமை அம்பலமாகி உள்ளன. 

அரும்பாடு பட்டு ஐயா அவர்கள் மீட்டுத் தந்த மூர்த்திகள் உரிய கோயில்களில் தகுந்த பாதுகாப்பு வசதிகளோடு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜை செய்ய வழி வகுத்தால் தான் அவருடைய அயரா உழைப்புக்கு நாம் தரும் நன்றிக் கடன் ஆகும். ஆனால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமோ, பணியாளர்களோ,  உள்ளூர் வாசிகளோ தொடர்ந்து அலட்சியம் காட்டுவது வேதனைக்கு உரியது. 

ஏதும் பொறாதவற்றுக்கெல்லாம் போராட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  உள்ளூர் வாசிகளும் பிற ஊர் அன்பர்களும் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ? நமது தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும் அவ்வளவு தானா ? வெறும் வாய்ப் பேச்சில் வல்லவர்களா நாம் ?  

Sunday, November 25, 2018

வேண்டாம் இந்தத் துவேஷம்

ஞானத்தமிழ் தந்த ஞானசம்பந்தர் 
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிற்கும் இறைவனுக்கு உருவமும் உண்டு;அருவமும் உண்டு; அவ்விரண்டும் கலந்த அருவாருவமும் உண்டு. " நின் உருவம் ஏது " என்று கேட்கிறார் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் சமமாக நோக்கும் பக்குவம் எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அவரவர்க்குத் தங்களது பாதையே உயர்ந்தது என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இப்படி இறைவனைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாத நிலையில், தாம் படித்த நூல்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு வாதமிடுவோரும், பிறரைப் பழிப்போரும் நிறைய இருக்கிறார்கள். தாங்கள் சார்ந்த சமயமோ தெய்வமோ உயர்ந்தது என்று மட்டும் இருக்காமல் பிற சமயத்தவரைக் குறை சொல்லியும்,ஏளனம் செய்தும் பிழைப்பு நடத்துவோரும் இருக்கிறார்கள். 

அண்மையில் அகச்சமயத்தைச் சார்ந்த ஒருவரது வீடியோ வெளியாகியிருந்தது. அவரது ஆச்சாரியார் ஒருவர் சீர்காழியில் திருஞானசம்பந்தரை சந்தித்ததாகவும், அவரது பாடல்கள் சம்பந்தரது பாடல்களை விட உயர்ந்ததால் ( ?? ) சம்பந்தர் அவருக்குத் தனது வேலைப் பரிசாகக் கொடுத்ததாகவும்  ஒரு கற்பனைக் கதையை அந்த வீடியோவில் வெளியிட்டிருந்தார். முதலில் அவ்விருவரும் சமகாலத்தவர்கள் அல்லர் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். கல்வெட்டுச் சான்றோ,பழைய இலக்கியச் சான்றோ, ஒலைசுவடிச் சான்றோ இல்லாத நிலையில் இப்படி ஒரு பொய்யுரை தேவைதானா? 

பாடலைத் தலைகீழாகப் படிக்கவும் முடியும் என்பதோடு பொருளும் , பண்ணும் சிறந்து விளங்கும் ஒரு   பதிகத்தையே ( 11 பாடல்கள்)  அருளினார் சம்பந்தர் . உதாரணத்திற்கு அப்பதிகத்தின் முதல் பாடல் இதோ:

"  யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா       
    
     காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா . " 

இது போல் பாடல் அவரிடம் உண்டா என்று நாம் வாதம் செய்யப்போவதில்லை. வேறு எவரது பாடலுக்கும் தாழ்ந்தது சம்பந்தர் பாடல் அல்ல என்று மட்டுமே இங்கு நிரூபிக்க விரும்புகிறோம்.

இப்பதிவை அவர் பார்க்க வேண்டும் என்றுகூட நாம் விரும்பவில்லை. தமிழ்த் தாயின் ஆபரணங்களுள் சிறந்த ஒன்றாகவாவது சம்பந்தப் பெருமான் அருளியதை ஏற்பதில் அவருக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. ஒருவேளை இதற்கு மூல காரணம் சிவ துவேஷம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

நாம் அவரிடம் மட்டுமல்ல, அகச் சமயத்தைச் சேர்ந்தவர்களிடமும், நமது சமயத்திலிருந்தே சமய நெறிகளுக்குப் புறம்பாகச் செயலாற்றுபவர்களிடமும்  பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.  இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்குள் வாதம் செய்து கொள்வதும், உட்பிரிவுகளிடையில் சண்டையிட்டுக் கொள்வதும் , புராணங்களைத் திரித்து மக்களிடையே பரப்புவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய செயல்கள். இதனால் மக்களிடையே துவேஷம் அதிகரிக்குமே தவிர வேறு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதனால் கடவுள் மறுப்பாளர்களும், பிற சமயத்தவர்களும் மேன் மேலும் நம்மை நோக்கிக் கற்களை வீசத் தொடங்குவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 

இத்தனை நாட்கள் சந்தித்த பிரிவுகள் போதும். அடுத்த சந்ததியர்க்கு ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொடுப்போம். நல்ல நெறிகளை எடுத்துரைப்போம். ஒருமாநிலத்தில் நாத்திகர்களும், பிற மதத்தவர்களும் போக, இறை நம்பிக்கை உடையவர்கள் வெறும் பத்து சதவீதமே என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

சமயச் சான்றோர்கள் அகச்சமயங்களின் வேறுபாடுகளைக் களைந்து இணங்கி வாழ வித்திடவேண்டும். அதைச்  செய்யத் தவறியவர்கள் தான் இதுபோல் வேலைக் கொடுத்தார், கோலைக் கொடுத்தார் என்றெல்லாம் வீணாகப் பேசி, பொய்யை மெய்யாக்கத் துடிக்கிறார்கள். இவர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களிடம் உள்ள துவேஷ புத்தியைக் களைய வேண்டும் என்பதே. இதைச் செய்தாலே பெரும் புண்ணியமாகிவிடும். ஒற்றுமை மேலோங்கும். பிறரும் நம்மை ஏசுவதற்கு  அஞ்சுவர். நமது சமயத்திற்காக இதைக்கூடச் செய்யக் கூடாதா ?    

Sunday, November 4, 2018

பிரபலப்படுத்த வேண்டாம்

ஆக்கிரமிக்க மட்டுமே தெரியும்.ஆதரவு தரத் தெரியாது 
ஒரு சில விஷயங்களைப் பிரபலப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. எப்படியெல்லாம் காசாக்கலாம் என்று அலையும் பணவெறியர்களிடையில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் பல தருணங்களில் மறந்து விடுகிறோம். இது மேற்கத்திய நாடுகள் கொளுத்தி  விட்ட தீ . அது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளையும் தாக்கி சுயலாபம் சம்பாதிக்கத் தூண்டி விட்டது. காட்டில் உள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லை. எதை வேட்டையாடி அதன் உறுப்புக்களை விற்றால் காசாக்கலாம் என்று கற்றுக் கொடுக்கும் கயவர்கள் அவர்கள். இப்பணவலையில் நம்மவர்களும் விழுவது பரிதாபம். இந்நிலையில் நம் கலைச்செல்வங்களையும் களவாடி விற்கத் தொடங்கி விட்டனர். 

பெரும் பணக்காரர்கள் நமது புராதனக் கலைச்செல்வங்களை வாங்கிக்  கலைப் பொருள்களாக வைத்துக் கொள்வதும், அருங் கலைக்கூடங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பதும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். உற்சவ மூர்த்திகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோம் என்று கூறி அவற்றை எடுத்துச் சென்ற அறநிலையத்துற அதிகாரிகள் சிலர் இதற்கு உடந்தை எனக் கேள்விப்பட்டவுடன் ஆன்மீக உலகமே அதிர்ச்சி அடைந்தது.  மேலும் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அடியார் கூட்டங்கள் என்று சொல்லிக் கொள்ளும் குழுக்கள் பலவும் புலம்புவதோடு சரி. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்பலவீனத்தைக் கொள்ளையர்கள் தொடர்ந்து பயன் படுத்திக் கொள்கிறார்கள். கல்லாலான மூர்த்திகளும் ,கல் தூண்களும், நகைகளும், உண்டியல்களும் களவாடப்படும் நிலையில் கோவிலில் எதைத்தான்  கொள்ளைக்காரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்? 

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல கோயில்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன என்று ஆறுதல் அடையும் முன்பே, அவற்றின் பாதுகாப்பு இன்மையும் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. வெளிநாட்டவர்கள் பலரிடமும் நமது மூர்த்திகளின் புகைப்படங்கள் ஆல்பங்களாகச்  சேகரிக்கப்படுகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தங்களது வலைத்தளங்களில் எழுதுவது பொழுது போக்காகச் சிலருக்கு ஆகி விட்டது. இவர்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. மூலவர்களையும்,உற்சவர்களையும் படம் எடுத்து வெளியிட வேண்டாம் என்று சொன்னால் கேட்பவர் இல்லாததால் இவ்விபரீதங்கள் தொடர்கின்றன. 

களவாடப் பட்ட மூர்த்தி கைப்பற்றப் பட்ட செய்தியை வெளியிடும் ஊடகங்கள் அவை எவ்வாறு களவாடப்பட்டன என்பதிலும், சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு எத்தனை கோடி என்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இதனால் சிலர் அத்தவறான வழிக்குச் செல்லத் தூண்டப்படுகிறார்கள் என்பதை உணரவில்லையா, அல்லது கவலைப்படவில்லையா என்று தெரியவில்லை. 

இணையதள நண்பர்களுக்கும், ஆலய அர்ச்சகர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் . மூர்த்தியின் சிறப்பைப் புராணத் துணை கொண்டு மட்டுமே விளக்குங்கள். இதுபோன்ற மூர்த்தி ஏழு உலகத்திலும் கிடையாது என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். ஆலய பாதுகாப்புக்காக அன்பர்களை ஈடுபடச் செய்யுங்கள். அபிஷேகம்,தீபாராதனை ஆகியவற்றைப் படம் எடுப்பதையும்,வீடியோ எடுப்பதையும் அனுமதிக்காதீர்கள். திருமண நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளை எந்த மூர்த்தி சன்னதியிலும் எடுக்கக் கூடாது என்று சொல்லுங்கள். அவற்றைக் காரணம் காட்டிவிட்டுப்  பின்னணியில் உள்ள மூர்த்திகளையும் சேர்த்துப் படம் எடுக்கக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

களவாடப்பட்ட மூத்திகளில் மிகச் சிலவே கைப்பற்றப் பட்டுள்ளன.  கைப்பற்றினாலும்  அவற்றை உரிய கோயில்களுக்குத திருப்பித் தந்து தகுந்த பாதுகாப்புச் செய்து கொடுக்கப்படுவதில்லை. எனவே, மரகதம்,கோமேதகம், ஸ்படிகம் என்றெல்லாம் வர்ணிப்பதால் ஆபத்தே அதிகரிக்கிறது. உத்தரகோசமங்கையில் இன்று நடந்த சம்பவம் இதை உறுதி செய்கிறது. மார்கழித் திருவாதிரை நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் படம் பிடித்து வலைத்தளத்திலும், பத்திரிகைகளிலும் போட்டதால் வந்த விளைவாகக் கூட இருக்கலாம். இந்நிலையில் சின்னஞ்சிறு கிராமக் கோயில்களில் என்னதான் நடக்காது ? 

தரிசிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்கவே படம் எடுத்துப் போடுகிறோம் என்று சமாதானம் சொல்கிறார்கள். மூர்த்திகளே இல்லாமல் போய் விட்டால் எதைப் படம் எடுக்கப் போகிறார்கள் ? போதாக் குறைக்கு சினிமாவும், சின்னத்திரை நாடகங்களும் சம்பந்தமில்லாத நடனக் காட்சிகளுடன் கோயில்களில் படம் எடுக்கப்படுவதும் எல்லோரும் அறிந்ததானாலும் யாராவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? இல்லையே !! இப்படி எழுதினாலும் ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மிக மிகச் சிலரே !  கருத்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும் தெரிந்தவர்களிடம் பகிரவாவது செய்கிறார்களா ? அதுவும் இல்லை என்றே ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. நூறு பேரிடம் சொன்னால் ஒருத்தராவது கேட்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இன்னும் எத்தனை நாள் தான் விரக்தியோடு காத்திருப்பது ?    

Friday, November 2, 2018

செல்லப்பெண்ணாய் இருக்கணும்

வலைத் தளத்தில் எப்போதோ படித்து மகிழ்ந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன. அதை எழுதியவர் யாராக இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும்.இக்காலத்துப் பெற்றோர்களும் திருமணம் ஆக இருக்கும் பெண்களும் அதை அவசியம் படிக்க வேண்டும் என்பதால் அதனை மீண்டும் இங்கு பகிர்கிறோம்.ஒரு வழக்கமான வாழ்த்து போலத் தோன்றினாலும் அதில் பொதிந்துள்ள கருத்துக்கள் உயர்ந்தவை.  எல்லோரும் மெச்சும் பெண்ணாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதிலும் " செல்லப் பெண்ணாய் வாழ வேண்டும் " என்று வாழ்த்தும் நெஞ்சம் தந்தைக்கே உரியது எனலாம். ஏனென்றால் தந்தையிடம் மகளுக்கும் , மகளிடத்தில் தந்தைக்கும் உள்ள பாச உறவு இணை இல்லாதது. மனைவியின் சொல்லையும் மீறி பெண்ணிடம் அதிகம் செல்லம் கொடுக்கும் தந்தையைப் போலவே, அப்பாவிடம் எல்லோரையும் விட அதிக உரிமையோடு, தான் வேண்டியதைக் கேட்டுப் பெறுபவள் பெண் தானே ! 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான உறவுகளை உயர் கல்வியும், பொருளாதாரமும், நாகரிகமும், புதிய வாழ்க்கை முறைகளும் பாதிக்கின்றனவோ என்று அச்சப் பட வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகப்  பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் போதிய அளவு இல்லை என்றே கூறலாம். உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஆண்-பெண் இருவருமாக ஒரே பள்ளியில் படிப்பதோடு நிறுத்திக் கொண்டு, அதன் பிறகு தனித் தனிக் கல்விக் கூடங்களில் படிப்பது மேலாகத் தோன்றுகிறது. இக்கருத்தைத் தற்காலத்தில் ஏற்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் அக்குழந்தைகள் பலருக்குக்  கொடுமைகள் நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்கிறார்களா? ஆண்கள் கல்வி பயிலும் பள்ளிகளில் ஆண் ஆசிரியரும் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளும் இருந்தால் ஓரளவாவது பாதுகாப்பு கிடைக்கலாம். 

வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையோ மேலும் கவலையை அளிப்பதாக உள்ளது. சக ஆண் ஊழியர்களால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் வேலைக்குச் சென்று வர வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் பணி புரியும் இடங்களிலாவது வேலையைத் தேர்ந்து எடுக்கலாம். படித்து விட்டு சும்மா இருக்கலாமா என்பதற்காகவாவது வேலைக்குப் போனால் இதையெல்லாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. மனதுக்குள் குமுறிக்கொண்டே அவர்கள் நாட்களைக் கடத்துவது எத்தனை பேருக்குப் புரியும் ? 

பலத்த பீடிகைக்குப் பிறகு சொல்ல வந்த விஷயத்திற்கு வர வேண்டி இருக்கிறது. சிவாசாரியார் மற்றும் வைதீகர்கள் தங்கள் பெண்களைப்  படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவதால் அப்பெண்கள் தங்கள் கௌரவத்திற்கேற்ற வரங்களையே விரும்புகின்றனர். வைதீகம் செய்வதும், கோவில் பூஜை செய்வதும் இப்பெண்களுக்குக்  கேவலமாகத் தோன்றுகிறது போல் இருக்கிறது. இதனால் சுமார் முப்பதாயிரம் சம்பாதிக்கும் சிவாச்சார்ய- வைதீகப் பையன்களை இப் பெண்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் தாங்களே அச்சம்பளம் வாங்கும்போது பையன் ஒரு லட்சமாவது வாங்கணுமே என்கிறார்கள். இதில் பெண்ணைப் பெற்றவர்களும் உடந்தை! அவளது சம்பளத்தைக்கொண்டே அவளது கல்யாணத்தை நடத்தி விடலாம் அல்லவா? இப் பேராசையால் காலம் தாழ்ந்து கொண்டே போகிறது. பலருக்குத் திருமணம் ஆகாமலே போய் விடுகிறது. இன்னும் சிலர் வேறு மார்கங்களில் சென்று தாங்களாகவே வாழ்க்கைத் துணையை முடிவு செய்கின்றனர். அப்போதுதான் பெற்றோர்களுக்குத் தான் செய்த தவறு தெரிய வருகிறது. அதற்குள் எல்லாம் முடிந்து விடும்  நிலையில் எந்தப் பயனும் ஏற்படாமல் வாழ்க்கை நரகமாகிறது. பெண்களும், பெற்றோர்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 

இப்போதெல்லாம் நகரங்களுக்கு இணையாகக் கிராமங்களில் வசதிகள் பெருகி வருகின்றன. இரு சக்கர வாகனம்,தொலை பேசி, ஆட்டோ , சமையல் வாயு போன்ற சிலவற்றை இங்குக் குறிப்பிடலாம். அதோடு வீட்டுக்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் அருகிலுள்ள ஊரில் சென்று  வாங்கி வந்து பயன் படுத்தலாம். மனத்தை அதற்குத் தயார் படுத்திக் கொள்வதொன்றே அப்பெண் குழந்தை செய்ய வேண்டியது. அப்படிச் செய்து விட்டால் வைதீகமோ,கோவில் பூஜையோ உயர்ந்ததாகவே தெரியும். வேலைக்குக் காலை முதல் மாலை வரை சென்று சம்பாதிப்பதைச்   சில மணி நேரங்கள் மட்டுமே வைதீகத்திலும் கோவில் பூஜையிலும் செலவழிப்பதால் சம்பாதிக்க முடியும். அதன் மூலம்   கிடைக்கும் மன நிம்மதி இருக்கிறதே, செய்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். அதிகாரிகளிடம் கைகட்டி நிற்பதைக் காட்டிலும் ஆண்டவனிடம் கை கட்டித் தண்டனிட்டு நிற்பதன் உயர்வும்  புரிய வரும். உறவுகள் மேம்படும். பரம்பரையும் காப்பாற்றப் படும். ஆதி தம்பதிகளான பார்வதி-பரமேசுவர்கள் அருள வேண்டும். 

ஆசையோடு வளர்த்த செல்ல மகள் பெற்ற சந்தோஷத்தைப் பார்த்த தகப்பனாரது மன நிலையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. மலையத்துவஜன் பெற்ற பெருவாழ்வு  மீனாக்ஷி தேவியாகத்  தோன்றியது போலத் தன்  செல்ல மகள் தகுந்த வரனோடு மணம் புரிவதைக் கண்களில் ஆனந்த நீர் அருவி பொழிய அவர்   காண்பார்  என்பதைச் சொல்லவா வேண்டும் ? 

Sunday, October 14, 2018

கேலிச்சித்திரங்களில் கடவுள்

பொதுவாகவே ஒரு தெய்வச்  சிலையைக்  காணும்போது நம்மை அறியாமலே ஒரு பய பக்தி ஏற்பட வேண்டும். சாலையில் நடந்து போகிற போக்கில் கோயில் கண்ணில் பட்டால் செருப்பைக் கூடக் கழற்றாமல், இரு கன்னங்களையும் விரல்களால் தொட்டு விட்டு மேற்கொண்டு நடக்கத் தொடங்கினால் அதை பயம் கலந்த பக்தி என்று எப்படிச் சொல்வது? அதே போலக்  கோயிலில் ஆகட்டும், வீடுகளில் ஆகட்டும், சுவாமி விக்கிரகங்களைத் தீண்டிப் பூஜை செய்யும்போது அவற்றை எதனால் செய்யப்பட்டது என்ற எண்ணமே மாய்ந்து, தெய்வமே நேரில் எழுந்தருளியதாகக் கொள்ளும் மனோபாவமும் பக்தியும்,அச்சமும் ஒருங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் கல்லாகவும் உலோகமாகவும் நினைத்துக் கொண்டே பூஜை செய்வதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியது தான் ! 

ஓவியர்களும் கேலிச்சித்திரம் வரைவதற்குத்  தெய்வத் திருவுருவங்களை இஷ்டம்போல் வரைவதை விட்டு விட்டு  வேறு உத்திகளைக் கையாளலாம்.  சில்பி அவர்களது கை வண்ணத்தில் வெளியான தெய்வப் படங்களைப் பார்க்கும்போது, அந்த ஓவியங்கள் வரையும்போது சில்பி அவர்கள் எவ்வளவு நுணுக்கமாகவும், தெள்ளத் தெளிவாகவும் அத்திருவுருவங்களைக் கண்டு ஓவியம் வரைந்தார் என்பதைப் பார்க்கும்போது  வியப்பாக இருக்கும். 

கல்லிலும் உலோகத்திலும் தெய்வ வடிவில் அமைப்பவர்களில் சிலர்  தியான சுலோகம் காட்டிய வழிப்படி நின்ற காலம் போய் காலண்டர்களில் காணப்படும் ஓவியங்களை நாடுகின்றனர்.   இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய தொன்றாகும். கடவுள் வடிவங்களில் கணபதியை வைத்தே பெரும்பாலும் இதுபோன்ற வித்தியாசங்கள் உண்டாக்கப்படுகின்றன. அவர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வரைவது, கோடானு கோடி மக்கள்  வழிபடும் தெய்வம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடி போடுவது, சாய்வு நாற்காலியில் உட்கார்வது  போன்ற கற்பனைகளைக் கடவுளிடம் காட்டுவது கேலி செய்வதைப் போல இருக்கிறது. 

கேலி சித்திரத்தை ஏன் பெரிதாகப் பொருட்படுத்துகிறீர்கள் என்று கேட்கலாம். எவ்விதக் கட்டுப்பாடோ வரம்புமுறையோ இல்லாமல் மட்டற்ற சுதந்திரம் கொடுத்து விட்டதால் ஓவியர்கள் மட்டுமல்லாமல் எவர் வேண்டுமானாலும் கடவுளர்களை சித்தரிப்பது என்று ஆகிவிட்டது. இந்த நவீன காலத்தில் தன்னிச்சையாகச் செயல் படுவதைத் தடுக்க எவராலும் இயலாது. என்றாலும் பய பக்தியுடன் தெய்வங்களை வழிபடுவோரது மனத்தைப் புண் படுத்துகிறார்கள் என்பதையாவது அவர்கள் அறியச் செய்ய வேண்டாமா? 

Thursday, October 11, 2018

கலாச்சாரம் இணைந்த நவராத்திரி

புரட்டாசி மாத பிரதமை முதல் தசமி வரையிலுள்ள பத்து நாட்களும் சாரதா நவராத்ரியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் லக்ஷ்மி- சரஸ்வதி உடனாய ராஜராஜேசுவரியாக  தேவியை வழிபடுவது நமது மரபு. பெண்களை சக்தியின் வடிவமாக வழிபடும் இந்நாட்டில், இந்த தினங்களில் அம்பிகையை வழிபடுவதோடு, கன்னிப் பெண்களையும் , சுமங்கலிப் பெண்களையும் அம்பிகையின் வடிவாகவே வழிபடுவது வழக்கம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி விழா. முத்தேவிகளின் அருளும் ஒருங்கே பெற வேண்டுவதும் இவ்விழாவின் நோக்கம் என்பதை நினைவு கொள்ள  வேண்டும். 

நவராத்திரி விழாவை நமது கலாச்சாரத்தைப் பறை சாற்றும் விழாவாகக் கொள்ள வேண்டும். அதனால், அதில் காலத்திற்கேற்ற மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் தரலாகாது. தற்போது அதை வியாபாரத்திற்கும் , டாம்பீகத்திற்கும்  இடமளிக்கும் விழாவாக மாற்றிவிடுவது நல்லதல்ல. 


எத்தனை படிகளில் பொம்மை  வைக்கிறோம் என்பதைவிட, வாழ்க்கையில் எத்தனை படிகள் ஏறி முன்னேறியிருக்கிறோம் ;  நல்ல பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தம்மை ஆத்ம சோதனை செய்து கொள்ள  வேண்டிய தருணம் இது. 

இது முத்தேவியர்க்கே முக்கியத்துவம் தரும் விழாவாதலால் அவர்களை மண் பொம்மைகளாகக் கொலுவில் வைத்து வழிபடுகிறோம். ராஜராஜேசுவரியானவள்  கலைமகளும், அலைமகளும் சூழ சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை ஞானக் கண்ணால் காணும் முன்பாக ஊனக் கண்ணாலாவது பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் இவ்வாறு அமைத்துத் தந்தார்கள். அதன் பின்னர், பிற கடவுளர்களின் திருவுருவ பொம்மைகளையும் சேர்த்து வைக்க ஆரம்பித்தனர். 

நாளடைவில் நமது விருப்பத்திற்கேற்றபடி எந்த பொம்மைகளை வேண்டுமானுலும் சேர்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. 
குருமார்கள் , அரசியல்  தலைவர்கள்  பொம்மைகளும்  படிகளில் இடம்பெறத் துவங்கிவிட்டன. வித்தியாசம் , அபிமானம் என்ற பெயர்களில் இவை நுழைந்து விட்டதால், முப்பெரும் தேவிகளின் பொம்மைகளைக்  கூட சில வீடுகளில் தேட வேண்டியிருக்கிறது. பிற சமயத்தைச் சேர்ந்தவர்களையும் கொலுவில் வைக்க வேண்டுமா என்று கேட்டால் உங்களுக்குப் பரந்த மனம் இல்லை என்பார்கள். அத்தனை படிகளிலும் ஒரு குருநாதரின் வெவ்வேறு நிலைகளில் உள்ள பொம்மைகளை வைத்து ஒரு கண்காட்சி போல நடத்துகிறார்கள்.


கோயில்களில் வைக்கப்படும் கொலுக்களிலும் அநேகமாக இதே நிலை தான். அதோடு உற்சவர் அம்பிகையை செயற்கைக்  கை-கால்களை வைத்துக் கட்டி அதனை அலங்காரம் என்ற பெயரில் நடத்துகிறார்கள். சிவாலயங்கள் பலவற்றில் சுவாமி- அம்பிகை பற்றிய புராணக் கதைகளை நினைவு படுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யலாம். மாறுதலாகச் செய்வதைப் பற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றுதானே என்று வேதாந்தம் பேசுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இக்காலத்தில் யாரையும் எதுவும் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. கேட்டால் நமது மரியாதைதான் கெட்டுப் போகும். பழைய கலாச்சாரங்கள் குறைகிறதே என்று மனதுக்குள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்க முடிகிறது.


கொலு வைத்த வீடுகளில் காலை நேரத்தில் பெண்மணிகள் அம்பிகைக்கு விளக்கேற்றி , படத்திற்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தால் செய்ய வேண்டும் என்றும், பாராயணங்கள் செய்ய வேண்டும் என்றும் பெரியோர்கள் கூறுவர்.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ,  நவராத்திரி நாட்களில் நம்மை அரக்கோணத்திற்கு அருகிலுள்ள திருவாலங்காட்டில் தங்கித்  ,தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்யச் சொன்னார்கள் காஞ்சி மகாபெரியவர்கள் .
கூட்டு சஹஸ்ரநாம பாராயணம் 
நவராத்திரிக்கு வீடுகளுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம்,வளை  கொடுப்பதே முக்கியம். நாளடைவில் அதோடு , பாத்திரங்களையும்,பிளாஸ்டிக் பொருள்களையும் சேர்த்துக் கொடுப்பது என்று ஆகி விட்டது. ஆடம்பரத்தை விட வேண்டும் என்பதை விடப் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்பதையாவது பெண்மணிகள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். கடைசியில் இதனால் பயன் பெறப் போவது வியாபாரிகள். பாதிக்கப் படப் போவது சுற்றுச் சூழல். நாமாகச் செய்யும் தவறுகளால் பழியானது பண்டிகையின் மீது விழ விடலாமா? 

Sunday, September 2, 2018

மடத்துக் கோயில்கள்

மடத்துக் கோயில்கள் என்றாலே ஒரு காலத்தில் நல்ல நிர்வாகம் செய்யப்பட்டும் , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வருவதாகவும் பரவலாக ஒரு அபிப்பிராயம் இருந்து வந்தது. இப்போது பெயரளவில்  மடத்துக்குச்  "   சொந்தமான "  என்று போட்டுக் கொள்வதோடு சரி என்று ஆகி விட்டது. குத்தகை பாக்கியும், போதிய வருவாய் இல்லாமையும் காரணங்களாகக் கூறப்பட்டன. இருந்தபோதிலும் மடங்களின் சில கோயில்கள் ஏராளமான வருவாய் தந்தும் திருப்பணி செய்யப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நன்கு படித்தவர் என்றும் அனுபவம் மிக்கவர் என்றும் போற்றப்படும் ஒரு மடாதிபதி சொன்னாராம், " பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எதில் கூறப்பட்டுள்ளது " என்று. ஆகமசீலர்கள்தான் அவரிடம் சென்று அந்த ஆகம வாக்கியத்தைக் காட்ட வேண்டும். மரபு வழியை ஆதரிப்பவரே இப்படிக் கூறுவது சரிதானா ? 

மூர்த்திகளைப் பீடத்துடன் இணைக்கும் அஷ்ட பந்தன மருந்து கரைந்து போய் விடக் கூடாது. அது பன்னிரண்டு ஆண்டுகள் வரை கரையாது என்றாலும், ஒருவேளை அதற்கு முன்னதாகவே கரைந்து விட்டால் சீக்கிரத்திலேயே கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முன்னோர் கருதினர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மருந்து கரையாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதற்காகவாவது கும்பாபிஷேகம் செய்யக் கூடாதா ? 

ஆகமப் பிரமாணம் காட்டுவது ஒரு புறம் இருந்தாலும், மடத்துக்குச் " சொந்தமான "  பெரிய வருவாய் ஈட்டும் கோயில்களில் மேற்கூரைகள் முட்டுக் கொடுக்கப்பட்டும், மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்தும்,விமானங்கள் மரம் முளைத்தும் காணப் படுவது ஏன் ?  இதற்குப் பெயர் தான் நல்ல நிர்வாகமா? அப்படியானால் பக்தர்கள்  காணிக்கை எந்தவிதத்தில் செலவழிக்கப்படுகிறது ?   ஐம்பது ஆண்டுகள் ஆகியும் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் காணாமல் இருக்கும் கோயில்களை இப்படித்தான் பராமரிப்பார்களா ? மழைக் காலங்களில் போய்ப் பார்த்தவர்களுக்குத் தெரியும். மேல் தளம் ஒழுகியும், கருவறையில் கணுக்கால் அளவுக்கு நீர் தேங்கிய நிலையில் அர்ச்சகர்கள் பூஜை செய்வதையும். 

வருவாய் குன்றிய நிலையில் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தும் சில நன்கொடையாளர்கள் தாங்களே திருப்பணிச்  செலவை ஏற்றுக் கொண்டு செய்து தருவதாகக் கூறினால், சில மடங்கள் மட்டுமே அனுமதி தருகின்றன. 

தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களை ஆண்டில் எத்தனை முறை சென்று அதிபர்கள் பார்க்கிறார்கள்?  ஒரு சில பெரிய தேவஸ்தானங்களுக்கு மட்டும் வருகை தருகிறார்கள். மற்றவை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தானோ என்னவோ தெரியவில்லை. அதிபர்கள் செல்ல இயலாவிட்டால் கட்டளைத் தம்பிரான்களை மாதம் ஒரு முறையாவது அங்கு  அனுப்பலாமே ! 

சமூக நலப் பணி  செய்ய வேண்டியதுதான். மறுப்பதற்கில்லை. அதற்காகக்  கல்யாண மண்டபம் திறந்து வைப்பதும், ஹோட்டல்களைத் திறந்து வைப்பதும், வங்கிக் கிளையைத் திறந்து வைப்பதும் சமயத் தொடர்புடைய செயல்களா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.  

குரு பீடங்களைக் குறை கூறக் கூடாது தான். நல்வழி காட்ட வேண்டிய குரூ  பீடங்களே இவ்வாறு செயலாற்றும்போது மக்கள் எவ்விதம் இருப்பர் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் மடாதிபதிகள் விஜயம் செய்து கோயிலின் நான்கு வீதிகளை மட்டுமாவது கால்களால் நடந்து வந்து மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பல கிராமக் கோயில்கள்  வேற்று மதத்தினரால்  சூழப் பட்டு வருவது  தெரிந்தும்  மடத்துக்கு வெளியே செல்லாமல் இருக்கக்கூடாது அல்லவா ? 

சோழ மண்டலத்தில் மட்டும் 190 தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் நூற்றுக் கணக்கான பாடல்கள் கிடைக்கப்பெறாத பழங் கோயில்களும் உள்ளன. இவை பெரும்பாலும் அறநிலையத்துறையின் வசம் இருக்கின்றன. அத்துறை அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மடத்துக் கோயில்களாவது  மாதிரிக் கோயில்களாகத் திகழ்ந்து பொலிவுடன் விளங்க வேண்டும் என்று ஏங்குவதாலேயே  இவ்வாறு எழுதலாயிற்று. தனிப்பட்ட முறையில் எவரையும் குறை கூறும் நோக்கம் நமக்கு அறவே கிடையாது. 

Friday, August 3, 2018

ஆலய சன்னதிகளில் தீபம் ஏற்றத் தடையா ?

பாவை விளக்கு 
கோயில்களில் ஒரூ குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளதை அடுத்து பெரிய கோயில்கள் பலவற்றில் அம்முறை அமல்  படுத்தப்பட்டுள்ளது.  ஒரு சாரார் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீதிப்பேர் வழக்கம்போல் மௌனம் சாதிக்கின்றனர். இம்மௌனமே பல தவறுகள் ஆலயங்களில் நடைபெறுவதற்குச்  சாதகமாக அமைந்து விடுகிறது. கண்டனக் குரல் கூட எழும்பாத நிலையில் ஆலயங்களில் தவறுகள் நடந்தாலும் வருவாய்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டாலும் யார் தான் தட்டிக் கேட்கப் போகிறார்கள் ?  

ஆலயங்களின் விவசாய நிலங்களும், கட்டிட வாடகைகளும், ஆபரணங்களும் பல்லாண்டுகளாகச் சூறையாடப் பட்டபோதும் வாய் திறக்காத மாக்களா  இப்போது எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள்?  இந்த ஒற்றை தீபமும் தடை செய்யப்பட்டாலும்    " வீட்டிலேயே விளக்கேற்றிக் கொள்ளலாம்" என்று பேசக்கூடிய மேதாவிகள் வாழும் பூமி இது. விழாக்காலங்களில் கூட்டம் அலை மோதி என்ன பயன்? முதுகெலும்பு இல்லாத பக்தர்கள் இருக்கும் வரை நாம் ஒவ்வொன்றாக இழக்க வேண்டி இருக்கும்.

விளக்கேற்றினால் நமது தீய வினைகளும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களும் நீங்கும் என்று புராணங்கள் அறிவிக்கின்றன. விளக்கிட்டார்களது பேற்றினை அவரவர்களே உணர முடியும். வேதாரண்யத்தில் இறைவனது சன்னதியில் இருந்த விளக்கில் இடப்பட்டிருந்த எண்ணையைப் பருகவந்த எலி ஒன்று, திரியை இழுக்கும்போது மூக்கு சுட்டு விட்டதால் அத்திரியை லேசாக வெளியில் இழுத்தது. அதனால் அத்திரி மீண்டும் பிரகாசமாக எரிந்தது. விளைக்கைத் தூண்டி விட்டது போன்ற இச் செயலால் மகிழ்ந்த இறைவன் அந்த எலியை  மாவலிச் சக்கரவர்த்தி ஆக்கினான் என்பது புராணம் தரும் செய்தி.   

விசேஷ நாட்களின் போது பல்வேறு சன்னதிகளிலும் மக்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பிரதோஷத்தன்று நந்தியிடமும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கும், அஷ்டமியில் பைரவருக்கும்,சனிக்கிழமைகளில் சனைச்சரன் சன்னதியிலும் விளக்கேற்றும் பக்தர்களைத தடுத்து ஒரே இடத்தில் விளக்குப் போடச் சொல்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஒரு சன்னதியில் செய்யப்படும் வேண்டுதல்களையும் பரிகாரங்களையும் வேறு ஒரு சன்னதியில் எவ்வாறு செய்வது ?  அம்பிகை சன்னதியில் குத்து விளக்கு பூஜை செய்யும் அன்பர்கள் அதனை  வேறெங்கு செய்வது? 

விளக்கு ஏற்றும் பெரும்பாலான பெண்கள் அந்த இடங்களில் எண்ணையைச் சிந்தி விடுவதால் இந்த முறை தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுவார்கள் . உண்மைதான்! நாம் தான் தீபம் போடும் சன்னதிகளை அசுத்தம் செய்வதிலும், கையில் உள்ள எண்ணெய் , விபூதி,குங்குமம் ஆகியவற்றை அருகிலுள்ள சுவற்றிலும், தூணிலும் சமர்ப்பிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே!  போதாக் குறைக்கு எண்ணெய்  கையால் சுவற்றில் கோடுகள் போடுவதும், செல் நம்பர், தேர்வு எண் ஆகியவற்றை எழுதுவதும் நமக்குக் கை வந்த கலை ஆயிற்றே!  நமது இந்த செயலுக்கு வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற பொறுப்பற்ற செய்கைகளால் ஒழுங்காகச்  செய்யப்படும் பூஜை முறைகளும் பாதிப்பு அடைகின்றன. 

முதலில் கற்பூரம் ஏற்றக்  கூடாது என்றார்கள். நெய் தீபம் போடவேண்டும் என்று சொல்லி, முக்கிய சன்னதிகளின் அருகில் நெய்க் கடைகளுக்கு ஒப்பந்தம் வழங்கிப் பலன் அடைந்தார்கள்  பிரசாதக் கடைகள் என்ற பெயரில் பெயரளவில் கூடப் பிரசாதம் அல்லாத தின் பண்டக் கடைகளைக் கோயிலுக்குள் அனுமதித்தார்கள். அவற்றை வாங்கித் தின்றுவிட்டு அவ்விடத்தில் கை அலம்புவதும், வாய் கொப்பளிப்பதும்,எச்சில் இலைகளையும் தட்டுக்களையும் வீசி எறிவதை ஏன் கண்டு கொள்வதில்லை ?  எல்லாவற்றுக்கும் மேலாகத் துர்நாற்றம் வீசும் பிராகாரங்கள், மதில் சுவர் ஓரங்கள் போன்றவற்றைச்  சரிசெய்ய முன்வராமல் பக்தர்களது காணிக்கையை மட்டும் வாங்குவதில் குறியாக இருந்து கொண்டு அவர்களை அதிகாரம் செய்வது நியாயமா?  

கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம் தான். அதற்காக வழிபாட்டு முறையையே மாற்ற முயலுவதுதான் தவறு. காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள  கடம்பூர்க் கோயிலில் தீபங்கள் ஏற்றப்படும் இடங்களில் கை துடைத்துக் கொள்ள ஒரு துணியைத் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் குப்பைகள் போடுவதற்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்  அவ்வூர் நண்பர் தெரிவித்துள்ளார். பாராட்டப்பட வேண்டிய செயல். பிற கோயில்களிலும் இது பின்பற்றப்பட வேண்டும். மக்கள் பின்பற்றுவார்களா என்று உடனே கேட்கலாம் . மாற்றங்கள் மறுநாளே ஏற்பட்டுவிடுவதில்லை. சிறிது கால அவகாசம் தேவைப் படலாம். ஆனால் அது விரைவிலேயே நடைமுறையில் வரவேண்டியது முக்கியம். கொடுக்கப்படும் விபூதி குங்குமத்தில் ஏற்றுக்கொண்டது போக எஞ்சியதைக்  கொட்டக்  கிண்ணங்கள் இருந்தும் தூண்களில் கொட்டும் பக்த சிகாமணிகளை உடனே திருத்துவது அவ்வளவு எளிதா என்ன?  

Tuesday, July 17, 2018

நர்மதை நதியை வலம் வந்தவர்


நூலாசிரியர்- " கேப்டன் ஜி " 
நம்மில் பலருக்குப்  பாத யாத்திரை, கிரி வலம் போன்றவை மட்டுமே தெரிந்திருக்கும். ஒரு நதியையே வலம் வருவதைப்  பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பார்கள். அதுவும் அம்முறை தென்னிந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. நர்மதை நதியை வலம் வருவது என்பது பழங்காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. வசதிகள் இல்லாத காலத்தில் நதி வலத்தைக்  கால் நடையாகவே யாத்ரீகர்கள் செய்து வந்தார்கள். இக்காலத்திலும் நடந்து வருபவர்கள் உண்டு. 

இவ்வாறு நர்மதை வலம் வருவதற்குச் சில விதி முறைகள் உண்டு என்றும் அறிகிறோம். சுமார் 2500 கி,மீ. தூரத்தை மூன்று ஆண்டுகள்,மூன்று மாதங்கள், பதிமூன்று நாட்களில் காலால் நடந்து சென்று பூர்த்தி செய்ய வேண்டும். கையில் பணம் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது. வழியில் உள்ள கிராமவாசிகளிடம் பிக்ஷை  வாங்கியே உணவு உட்கொள்ளவேண்டும். உணவுப் பொருள்களை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொண்டு யாத்திரை செய்யக் கூடாது. காலை முதல் மாலை வரையில் மட்டுமே நடக்க வேண்டும். இரவு நேரங்களில் ஒரு கிராமத்தில் தங்கி விட்டு மறு நாள் காலை மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். விதி முறைகள் பின்பற்றுவதற்கு சிரமமாக இருக்கும் போலத் தோன்றுகிறது அல்லவா?  நமக்கு ஒத்து வராது என்று ஒதுங்குபவர்களே பெரும்பாலும் இருப்பர். 

போகாததற்கு எதாவது காரணம் சொல்லிக் கொண்டிருப்போம். மூன்று வருஷம் நடப்பதாவது! உடம்பு என்ன ஆகுமோ? வழியில் கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு எவ்வளவு நாள் காலம் தள்ள முடியும்? உணவு கிடைக்காமல் போய் விட்டால் கையில் காசும்  இல்லாமல் என்ன செய்வது? எதையும் விலை கொடுத்து வாங்க முடியாதே! ஆற்றின் அக்கரையில் ஒரு கிராமமோ கடைகளோ தென்பட்டாலும் யாத்திரையின் போது ஆற்றைப் படகிலோ பாலத்திலோ கடக்கக் கூடாது என்ற நியதி இருக்கிறதே! அடர்ந்த காட்டுக்கு நடுவில் போனால் அடுத்த கிராமம் போய்ச் சேரும் வரை யாரும் வழியில் வர மாட்டார்களே, வன விலங்குகள் வந்து விட்டால் என்ன செய்வது!  அந்த ஊர் மக்களிடம் பேசுவதற்கு அவர்களது மொழி தெரிந்திருக்க வேண்டுமே! மழைக் காலங்களில் நடக்கக் கூடாது என்றாலும், குளிர் காலங்களிலும் கடும் வெய்யிலிலும் நடப்பது அத்தனை எளிதல்லவே! இப்படி எத்தனையோ அடுக்கடுக்காகக் கேள்விகள் நம் மனத்தில் எழத்தான் செய்கின்றன. அத்தனையையும் மீறி யாத்திரை மேற்கொள்வது என்பது உறுதியான மனம் படைத்தோருக்கும்  நர்மதா தேவியின் அருள் பெற்றோருக்குமே வாய்க்கும்.

கங்கையைப் போலவே நர்மதையும் சிவ சம்பந்தம் உடையதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் படுகையில் இருக்கும் கற்களும் சிவலிங்க பாணங்களே. அவ்வளவு புனிதம் வாய்ந்த அந்த நதி சுமார் 1300 கி.மீ.நீளம் உடையது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தி ஆகி மகாராஷ்டிரம் வழியாகக் குஜராத் மாநிலத்தை அடைந்து அரபிக் கடலில் சங்கமிக்கிறது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் வற்றாத நதி. அதன் இரு கரைகளிலும் நிறைய சிவாலயங்கள் உள்ளன. ஜோதிர் லிங்கத் தலங்களில் சிலவும்  இருக்கின்றன. 

ஆயுளில் ஒரு முறையாவது இந்த யாத்திரையை வடநாட்டில் பலர் மேற்கொள்கிறார்கள். வாகனங்களில் சென்றால் பதினைந்து நாட்கள் ஆகலாம். எவ்வாறாயினும் மனத்தூய்மையோடு சென்றால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம். அவ்வனுபவங்கள் பெற்றோரைக் காண்பதே புண்ணியம். அவ்வகையில் முப்பது ஆண்டுகளுக்கு முன் கால் நடையாகவே  , சுமார் 130 நாட்களில் துணை இல்லாமல் தனியாகவே இப்புனித யாத்திரையைச் செய்த பெரியவர் ஒருவரை நேரில் சந்தித்து நாமும் புனிதம் பெற்றோம் . அவர்களது அனுபவத்தைக் கேட்கும் செவிகளும் புண்ணியம் செய்தவை அல்லவா? எனவே  அப்போது நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளோம். அதனை மிக விரைவில் எமது வலைத் தளத்தில் ( ardhra.org ) resources-  audio வெளியிடவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தனது யாத்திரை அனுபவங்களை மிகச் சிறந்த முறையில் அப்பெரியவர் தமக்கே உரிய பாணியில் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். அந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. வரைபடங்களுடன்,  கிராமங்களிடையே உள்ள தூரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதோடு, கிராம மக்கள் யாத்திரீகர்களிடம் காட்டும் அன்பு,உபசாரம் ஆகியவற்றை மெய் சிலிர்க்கும் வகையில் இந்த நூலில் வர்ணிக்கிறார் ஆசிரியர். நூலைப் படிக்கும் பொது நம்மை அறியாமலேயே நாமும் அவருடன் நர்மதையை வலம் செய்வது போன்ற உணர்வைப் பெறுகிறோம். நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறோம். 

இந்நூலாசிரியர் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் கன்னியாகுமரியிலும் அருணாசலப் பிரதேசத்திலும் உள்ள விவேகானந்தா  கேந்திரங்களில் பணியாற்றிவிட்டுத்  தற்போது சென்னை மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ணா மடத்தில் கௌரவப் பணி ஆற்றுகிறார். இராணுவத்தில் பணி செய்தபோது நெடும் தூரங்கள் நடந்தது இப்பாத யாத்திரை செய்வதற்கு மிகவும் உதவியது என்கிறார் இவர். 

நூலைப் பற்றியும்,யாத்திரை பற்றிய  விவரங்களை மேலும்  பெறுவதற்கும் அப்பெரியவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Captain K.K. Venkatraman, Sri Ramakrishna Mutt Mylapore, Chennai-4                kkv198788@gmail.com   Mobile: 9445561454 

Wednesday, May 16, 2018

திருவெறும்பூர் கல்வெட்டுக்கள் இறைந்து கிடப்பதா ?

திருவெறும்பியூர் ஆலய வெளிப் பிராகாரம் 
வரலாறு, கலை ஆகியவற்றில் ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்  அந்த வரலாறுகளையும் , கலைகளையும் தாங்கி நிற்கும் கோயில்கள் இடிந்து கிடந்தும், கல்வெட்டுக்கள் சிதறிக் கிடந்தும் இருப்பது தெரிந்தும்கூட ,என்ன செய்து கொண்டு          இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களின் நிலையும் இதே தான். இப்படி இருக்கும்போது இந்த ஆர்வலர்களுக்குப் பட்டம் கொடுப்பதும், அவர்களது புத்தகங்களை வெளியிடுவதும் மாத்திரம் தொடர்கிறது. இராஜராஜனின் ஆயிரம் ஆண்டு விழா, இராஜேந்திரனின் ஆயிரம் ஆண்டு விழா  என்று பல லட்சங்கள் செலவாவதே மிச்சம். அம்மாமன்னர்கள் கட்டிய கோயில்களைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டாதவர்களை ஆர்வலர்கள் என்று எப்படிக் கூறுவது ? 

பிராகார மதிலை ஒட்டி சிதறிக் கிடக்கும் கல்வெட்டு 
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது திரு எறும்பியூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலம். இவ்வூர் மக்களால் தற்போது திருவெறும்பூர் என்று அழைக்கப்படுகிறது. அங்கு மலை மேல் அமைந்துள்ள கோயில் கோட்டை போன்ற அமைப்பைக் கொண்டது. இக்கோயில் முதலாம் ஆதித்த சோழர் காலத்தில்  கட்டப்பட்டது என்கிறார்கள். சுந்தர சோழர் காலத்தில் இங்கு திருப்பதிக விண்ணப்பம் செய்வதற்காக நான்கு பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதாகக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இந்திரனும்  பிற தேவர்களும் எறும்பு வடிவில் வழிபடப்பெற்ற புராணச் சிறப்புடையது இத் திருக்கோயில்.ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் ஏற்பட்ட போரில் மேரு மலைச்  சிகரம்  சிதறவே, அதிலிருந்து விழுந்த ஒரு பாகமே இம்மலை ஆயிற்று என்பர். சில கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தக்ஷிண கைலாயம் என்கின்றன. மேலும் இவ்வூருக்குப் பிரமபுரம், லக்ஷ்மிபுரம், மதுவனபுரம், இரத்தின கூடம், மணிகூடம், குமரபுரம், பிப்பிலீசுவரம் , எனப் பலப் பெயர்கள் உண்டு. 

முதல் இராஜேந்திர சோழர் காலக்  கல்வெட்டு ஒன்றில் இத்தலத்து இறைவன் பெயர் திருவெறும்பியூருடைய மகாதேவர்   என்றும், முதல் ஆதித்த சோழர் காலக் கல்வெட்டில் திருக்கயிலாயத்து மகாதேவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 இராஜகேசரி வர்மனது 21 கல்வெட்டுக்கள் கோயிலின் மூலச் சுவர்களில் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் விளக்கு எரிக்கவும், நாள்தோறும்  திருமஞ்சனத்திற்காக ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரவும் 15 கழஞ்சுப் பொன் கொடுத்த செய்தி காணப்படுகிறது. செம்பியன் சேதி வேளாளன் என்பவனது அறக் கொடைகள் பற்றியும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. கோயில் விமானம் எடுப்பித்தும் , திருப்பதிகம் பாட ஏற்பாடு செய்தும், மடவார் விளாகம் அமைத்துக் கொடுத்தும் , வாய்க்கால் வெட்ட நிலம் அளித்தும், திருக்குளத்தைப் பராமரிக்க நிவந்தம் அளித்தும், இவன் செய்த சிவதர்மம் பேசப்படுகிறது.

தமிழக வரலாற்றைத் தெரிவிக்கும் கல்வெட்டுக்களின் இன்றைய நிலை பரிதாபத்துக்குரியது. சில இடங்களில் அவற்றின் மேல் சுண்ணாம்பும் வண்ணமும் அடித்திருப்பார்கள். இன்னும் சில இடங்களில் அக்கல்வெட்டுக்களை மறைத்துக் கட்டியிருப்பார்கள். ஆனால் திருவெறும்பூரில் பிராகார மதிலை ஒட்டிக் கல்வெட்டுக்கள் திறந்த வெளியில் சிதறிக் கிடக்கின்றன. ஒருவேளை திருப்பணி செய்தவர்களின்  " திருப்பணியாக "  இருக்கக் கூடும். இது யார் கண்ணிலும் படவில்லையா ? கல்வெட்டு எழுதப்பெற்ற கற்கள் முழுமையாக அங்குக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றின் புகைப்படங்களே இங்கு இடம் பெறுகின்றன.

கல்வெட்டு , வரலாறு ஆர்வலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ? நிர்வாக அதிகாரி முதல் ஆணையர் வரை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான  விடை இருக்கிறதா?   கல்வெட்டைப் படி எடுப்பதோடு வேலை முடிந்து விட்டது என்று தொல்லியல் துறை நினைக்கிறதா ? இந்த அநியாயத்திற்கு யார் தான் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள் ? 

வெளியே அகற்றப் பெற்ற கல்வெட்டுக்களை உரிய இடத்தில் மறுபடியும் வல்லுனர்கள் உதவியுடன் நிலை பெறச் செய்ய வேண்டும். வரலாற்றுப் பொக்கிஷம் காப்பாற்றப்பட வேண்டும். வரலாற்றுச் செய்திகளை வைத்துக் கொண்டு புத்தகம் எழுதிச்  சம்பாதிப்பவர்கள் காதில் இந்த வேண்டுகோள் விழும் என்று நம்புகிறோம். 

Sunday, April 15, 2018

ஆலயங்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

தஞ்சைக் கோயில் பிராகாரத்தில் பேருந்து 
கோவில் என்பது வழிபாட்டுக்கு மட்டுமே உரிய இடம் என்பது சிலருக்கு நினைவில் இருக்காது போலிருக்கிறது. காற்று வாங்கவும்,பொழுதைக் கழிக்கவும்,ஊர் வம்பு பேசவும்,கூச்சல் போடவும், கிடைத்ததை எல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு விட்டுக்  குப்பைகளை நினைத்த இடத்தில் வீசவும், சன்னதி வரையில் வாகனங்களில் வந்து இறங்கவும், சுவர்களில் கிறுக்கவும் கைபேசியில் பேசிக்கொள்ளவும்,படம் எடுக்கவும் பிராகாரங்களில் அன்பைப் பரிமாறவும் ஏற்ற இடங்களாக இருப்பதைப் பலரும் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். 

திரைப்படம் எடுக்கவும்,சின்னத்திரையில் தொடர்கள் எடுக்கவும் கோயில் ப்ராகாரங்களும், மேற்கூரைகளும் பயன்படுத்தப் படுகின்றன. ஆலய நிர்வாகிகளோ பக்தர்களோ ஆட்சேபிக்காமல் இருப்பதோடு தாங்களும் நின்றுகொண்டு அதை வேடிக்கை பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்வது ?  ஒரு பிரபலமான கோவிலில் இதுபோல படப் பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ல நேரிட்டது. உள்ளே யாரும் படப்பிடிப்பு முடியும் வரை செல்லக் கூடாது என்று படக் குழுவினர் தடுத்தார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளே சென்றபோது பின் தொடருவோர் எவருமே இல்லை !! தாமாகத் தான் தடையை மீறி வழிபடும் உரிமையை நிலை நாட்டாவிட்டாலும், அப்படிச் செல்வோரைத் தொடரலாம் அல்லவா? அப்படியானால் இவர்கள் பக்தியோடுதான் கோவிலுக்கு வருகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படத் தான் செய்கிறது. அங்கு எடுக்கப்படும் காட்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். புத்தியைக் கெடுப்பதற்கான அத்தனை வழிகளும் விவாதிக்கப்படுவதும், அரங்கேறுவதும் இங்கு தான் ! 

திருவிழாக் காணச் செல்பவர்கள் கண்காட்சிக்குப் போகிறவர்களைப் போல இருக்க வேண்டாமே ! அப்பளக் குழவியும்,அரிவாள் மனையும் ,சீப்பு, வளை போன்றவை அங்கு மட்டுமா கிடைக்கும் ? பெண்மணிகள் சிந்திப்பார்களாக. கோயில்களுக்குள் நிரந்தரமாகவே பல இடங்களில் இக்கடைகள் புகுந்து விட்டன. கோயிலில் உள்ள கடைக்குப் போய்விட்டு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு அப்படியே சுவாமியையும் பார்த்து விட்டு வரலாம் என்ற அளவில் அல்லவா போய் முடிகிறது ? 

கோயில்களில் பிரசாதம் என்பது மார்கழி விடியலில் மட்டும் இருந்தது போக வருஷம் முழுவதும் நடைபெறுவதால் சாப்பாட்டுக் கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன. இன்ன தினத்தில் இன்ன கோவிலுக்கு இன்ன நேரத்தில் சென்றால் இன்ன பிரசாதம் கிடைக்கும் என்று எண்ணும்  அளவுக்கு மக்களது மூளையை மழுங்க அடித்திருக்கிறார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வைத்துக் கொண்டு நிர்வாகமும் அன்னதானக் கூடம் கட்டி அதில் வியாபார நோக்கைப் புகுத்தி விட்டது. ஏழை எளியவர்களுக்காகத் தானம் செய்யப்  போய், நாளைக்கு மூன்று வேளை மூக்கைப் பிடிக்கச்  சாப்பிடும் வசதி உள்ளவர்களும் வரிசையில் நின்று பிரசாதம் ( ? ) பெறுவதைப் பார்க்கிறோம் . பிரசாதம் விநியோகித்தால் தான் கூட்டம் வரும் என்று வியாக்கியானம் வேறு !  ஒரு கோவிலில் பிரசாதம் விநியோகிக்கப்பட்டு இருந்ததைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும்போது,  வரிசையில் இருந்த ஒருவன் கேட்டான்  " வெறும் தயிர் சாதம் கொடுத்தால் எப்படி ? கூடவே ஊறுகாயும் கொடுக்க வேண்டாமா ? " என்றான். !!

கோயில் யாகசாலைகளில் காபி விநியோகம் நடுநடுவில் அமோகமாக நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். குடித்துவிட்டு வெற்றுக் "கப்"  களைக்  காலடியிலேயே எறிபவர்களை எப்படித் திருத்துவது?  இதை விட மோசமான நிலையை மற்றோரிடத்தில் காண நேரிட்டது. திருப்பணி நடந்து முடிந்ததும் மேற்கூரையில் ஏறி வர்ணம் அடிக்கச் சென்றவர்கள் அங்கு ஏராளமான மது பாட்டில்கள் இருப்பது கண்டு அதிர்ந்து போனார்கள். ஸ்தபதிகளையும், கட்டுமானத் தொழில் செய்வோரையும் இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். இது இறைவன் நீங்காது உறைந்து அருள் வழங்கும் இடம். தயவு செய்து அதன் தூய்மையையும் பவித்திரத்தையும் களங்கப் படுத்தாதீர்கள். அது உங்களை மட்டுமல்ல. உங்கள் வாரிசுகளையே பாதிக்கும்.அவ்வாறு தண்டிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்த்த பிறகும் இப்பாவச் செயலில் ஈடுபடலாமா ?  பாவத்தைத்  தீர்த்துக் கொள்ளத்தான் கோயில்களே தவிர பாவம் செய்யும் இடங்களாக அவற்றை மாற்றி விடக் கூடாது.   

Tuesday, March 13, 2018

இன்றைய அவசரத் தேவை

ஊர் கூடித் தேர் இழுப்போம் 
நல்ல பலன்களை எதிர்நோக்கியே செயல்களைத் திட்டமிட வேண்டியிருக்கிறது. நடப்பது நடக்கட்டும் என்று மனம் போன போக்கில் எல்லாம் செய்து வந்தது போதும்  வாழ்க்கைப் பாதையைச் சற்று மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது இன்றைய அத்தியாவசியம் ஆகிவிட்டது. கடமையைச் செய்பவர்களும் பலனை எதிர்பார்த்தே இருக்கும் நிலையைப் பார்க்கிறோம். சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட சமயமும் அவ்வாறே செயலாற்ற வேண்டி உள்ளது.

எந்த விழாவாக இருந்தாலும், கருத்தரங்கமானாலும் அவை உயர்ந்த நோக்கங்களைக் கொண்டதாக அமைதல் முக்கியமானது. இல்லையேல் அவை பொழுது போக்கில் முடிந்து எந்தப் பலனையும் தராமல் இருந்து விடும். விழா, கருத்தரங்கம்,மாநாடு நடத்துபவர்கள் சில சமயங்களில் இவ்வுட் கருத்தை ஏனோ மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும், வருகை தருபவர்களுக்கும் பொன்னான நேரம் வீண் ஆவதே மிச்சம்.
மாநாடு நடத்துவதால் மக்கள் என்ன பலனை அடைகிறார்கள் என்று சிந்திப்போம். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இளையாத்தங்குடியில் காஞ்சி பெரியவர்கள் வேத-சில்ப-ஆகம சதஸ் என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட நற்பலன்கள் அனைவரும் அறிந்ததே. அதேபோல் பாவை மாநாடு நடத்தித் தமிழ்ப் பாக்களில் ஆர்வம் ஏற்படுத்தினார்கள். உலக அளவில் மாநாடு நடத்தினாலும் அதனால் விளையக் கூடிய நற்பலன்கள் இருக்குமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது குறிப்பாக எந்த ஒரு மாநாட்டையும் மனதில் கொண்டு எழுதப்படுவது அன்று.

தற்கால மாநாடுகள் அடித்தளத்தில் உள்ள மக்களுக்குச் சென்று அடைவதில்லை என்பது உண்மை. மாநாட்டை நடத்துபவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது. கட்டுரை வாசிப்பவர்கள் ஏற்கனவே உள்ளதை தங்கள் பாணியில் மாற்றி அமைத்துத் தருகிறார்கள் என்பது நிதர்சனம். அதைக் கூடப் பொருட்படுத்தாமல் இருந்தாலும் கற்பனையால் விளைந்த கருத்துக்களை சிலர்  புகுத்தும் போது தங்களை வித்தியாசமாக் காட்டிக் கொள்ள முயற்ச்சிக்கிறார்களா  என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு மாநாட்டில் ஒரு பேச்சாளர், “ அர்ச்சனை பாட்டே ஆகும் “ என்று சுந்தரரிடம் இறைவன் கூறியதை அடிப்படையாகக் கொண்டு , பாடினாலே போதும், அர்ச்சனை செய்ய வேண்டாம் என்ற விபரீதமாகக் கருத்தை வெளியிட்டதாக நண்பர் ஒருவரின் முக்நூல் பதிவு மூலம் அறிந்தோம். அப்படியானால், எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் கம்பை ஆற்றங்கரையில் பூஜை செய்த இறைவியிடம், நீ செய்யும் இப்பூஜை என்றும் முடிவதில்லை என்று அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாக அதே பெரிய புராணம் தரும் செய்தியை அந்த “ அறிஞர் “ அறியவில்லையா ? இது போன்ற முரணான கருத்துக்களை மக்களிடம் திணிக்கவா மாநாடுகள் நடக்க வேண்டும் ?

நடைபெறும்மாநாடுகளில் பெரும்பாலும் ஏற்கனவே கௌரவிக்கப்பட்டவர்களுக்குச்  சால்வைகள் போர்த்துவதும், பட்டங்கள் கொடுக்கப்படுவதும், பிரபலங்களை அழைத்துத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தச் செய்வதும் வாடிக்கை ஆகி விட்டது. இவை மூலம் நாம் பெறப் போவது என்ன? 

இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் அடி மட்டத்திற்குச் சென்று மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றத் தயாராக இருக்கிறார்கள்? எல்லாவற்றிற்கும் அடிப்படையான பக்தி இவர்களிடம் அநேகமாக இல்லாமல் போனது ஏன்? வெறும் புரட்டு வாழ்க்கை தேவை தானா ?     ” கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே “ என்று அப்பர் பெருமான் அருளியது நினைவில் வரவில்லை போலும்!  நாம் செய்யும் தொண்டை இறைவன் எழுதி வைத்துக் கொள்வான் என்று உதட்டளவில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் செய்து காட்டலாமே!

உயரத்திலேயே பறந்து கொண்டு இருந்தது போதும். கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டிய தருணம் இது. பாமர மக்களைச் சென்று அடைவதாக நமது செயல்கள் ஒவ்வொன்றும் திட்டமிடப் பட வேண்டும். காலம் தாழ்த்தினாலோ,உதாசீனப் படுத்தினாலோ அவர்கள் நிரந்தரமாக விலகிவிடும் அபாயகரமான கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கலாகாது. எனவே பட்டி தொட்டிகளுக்குச் சென்று ‘ பட்டியாய்ப் பணி செய்ய “ வேண்டிய தருணத்தில் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது.
நித்திய வழிபாடு ஆகட்டும்,  திருப்பணி ஆகட்டும், கும்பாபிஷேகம் ஆகட்டும், பாமரர்களையும் அரவணைப்போம். அவர்கள் நிச்சயமாகத் தோள் கொடுக்க முன்வருவர். ஊரே கூடித் தேர் இழுக்க வருவதுபோல் உற்சாகத்தோடு வர அவர்கள் காத்திருக்கிறார்கள். இப்போதைய அவசரத்தேவையான அதனைச் செயலாற்றுவோம். மற்றவை சிறிது காத்திருக்கலாம்.

Tuesday, February 20, 2018

நீதி விரைவில் கிடைக்கட்டும்

நன்றி: திரு ராஜேந்திரன்,முக நூல் பதிவு 
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் பெரும்பாலும் பாதுகாப்பு அற்றவைகளாகவே உள்ளன. ஏராளமான கலைச் செல்வங்களை இழந்தும் இன்னும் பாடம் கற்காதது பரிதாபமே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உற்சவ மூர்த்திகளை எடுத்துச் சென்று அந்தப்பகுதியில் உள்ள பெரிய கோயில்களில் வைத்துப் பூட்டுவது தான். ஆலயம் இருக்கும் இடத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தாதது ஏன் என்று பலமுறை குரல் எழுப்பியும் இன்றுவரை பதில் இல்லை. இவ்வாறு எடுத்துச் சென்ற மூர்த்திகள் அழுக்கும் பாசியும் படிந்து ஆண்டாண்டுக் காலமாக ஓர் அறையில் வைக்கப்படுகின்றன. உற்சவர் வெளியில் சென்றால் திரும்பி வரும் வரை மூலவருக்குப் பூஜைகள் செய்யாமல் கோயிலை  மூடிவிடும் ஆகம நெறிக்குப் புறம்பாகவே இவை நடை பெறுகின்றன. காணாமல் போனால் நாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சத்தால் சிப்பந்திகளும்,ஊர் மக்களும் வாயை மூடிக் கொண்டு இந்த அக்கிரமத்திற்குத் துணை போகின்றனர். ஆகம கலாநிதி என்று சொல்லப்படுபவர்கள்  இதுபற்றி குரல் கொடுக்காமல் இருப்பதன்  காரணம் தெரியவில்லை. 

பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து விசேஷ நாட்களில் மூர்த்திகளைக்  கொண்டுவந்து விழா நடத்த  ஆகும் செலவை யார் ஏற்க முடிகிறது ? கும்பாபிஷேகத்தின் போதாவது கொண்டு வரலாம் என்றால், கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி, மரம் முளைத்துப் போன நிலையில் உள்ள அறநிலையத் துறைக் கோயில்கள் ஏராளம். திருப்பணி, கும்பாபிஷேகம் ஆகியவற்றில் சிறிய பங்கையே ஏற்று, மீதி செலவுகளை உபயதாரர்களே செய்ய வேண்டி உள்ளது. ஆகவே, ஒரு கோயில் திருப்பணி செய்யப்பட வேண்டுமானால் உபயதார்களைத் தேடி அலைய வேண்டிய நிலை இருப்பதை இத்துறையால் மறுக்க முடியுமா ? ஒருவேளை அதெல்லாம் எங்கள் வேலை இல்லை என்று அவர்கள் சொன்னால், நித்தியபூஜைகள் நின்று போனதும், சிப்பந்திகள் வெளியேறியும், அர்ச்சகர் ஒருவரே பணி செய்தும், சம்பளமாக அவருக்கு சில நூறுகளைக் கொடுப்பதும், அதையும் இழுத்தடிப்பதும் எந்த வகையில் நியாயம் ? இவற்றிற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது வேறு யார் என்று தெளிவுபடுத்துவார்களா ?  


பாதுகாப்புப் பெட்டகம் சென்ற மூர்த்திகளை அதிகாரிகள்/அலுவலர்கள் துணையுடன் விற்றதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை இப்படி இருக்கும்போது யாரை நம்பி உற்சவ மூர்த்திகளைக் காப்பகத்திற்கு  அனுப்புவது? அப்படியே அனுப்பினாலும், அவை பெட்டகத்தில் இருப்பதற்கான ஆதாரங்கள் காப்பாற்றப்படும் என்பது என்ன நிச்சயம் ? சம்பந்தப் பட்ட ஆலயங்களும் அவற்றைத் திரும்பப்பெறும் எண்ணமே இல்லாமல் இருப்பதால் மூர்த்திகள் காணாமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது. நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு காமிரா பொருத்தும் பணி சில ஆலயங்களில் நடந்து வருகிறது. தக்க பாதுகாப்பு இருந்தும், சில ஊர்களிலுள்ள மூர்த்திகளைக் காப்பகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இவர்கள் பொருத்தும் காமிராக்கள் எத்தனை ஆண்டுகள் பராமரிக்கப்படும் என்பது தெரியவில்லை. இப்போதைக்கு யார் யாருக்கு அதனால் பலன் விளைகிறதோ யாம் அறியோம். 

கல்லாலான மூர்த்திகளும் களவாடப்படும் நிலையில் அவற்றுக்கு எப்படிப் பாதுகாப்புக் கொடுக்கப்போகிறார்கள்?  பல ஆலயங்களில் சுற்றுச் சுவரே இல்லை. இதை அலட்சியம் என்று சொல்லாமல் என்ன சொல்வது ? 

நீதி மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் போது ஓரளவு ஆறுதலாக இருந்தாலும் இறுதித் தீர்ப்பு எப்போது வரும் என்று காத்து இருக்க வேண்டியுள்ளது. அதற்குள் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் களவாடப்பட்டுவிடுமோ என்ற பயம் அதிகரிக்கிறது.வேலியே பயிரை மேயத் துணிந்து விட்டபடியால் இந்த அச்சம் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.  ஒருவேளை அறநிலையத்துறை வெளியேறிவிட்டாலும், ஆலயங்கள் தக்காரிடம் ஒப்படைக்கப் படும் வரையில் ஆலயங்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. 

Tuesday, January 30, 2018

உழவாரப்பணி முறையை மேம்படுத்துவோம்

ஒரு காலத்தில் ஆலயத்தின் கருவறையில் இருந்த மூர்த்திகளைத்தான் மேற்கண்ட படத்தில் இந்த அவல நிலையில் காண்கிறீர்கள். விமானம்,கருவறை முதலியவற்றை ஆலமரங்கள் ஆக்கிரமித்து முற்றிலுமாக அழித்து விட்ட நிலையில் ஆல மர  வேர்களின் அரவணைப்பில் காட்சி அளிக்கிறார் ஈசன். இதுபோன்று எத்தனையோ ஆலயங்கள் அழியும் நிலையில் உள்ளன.  உள்ளூர் காரர்களின் அலட்சியத்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்பட முடியும். ஆல் ,அரசு ஆகியவற்றின் செடிகள் விமானங்களிலும், சுவர்களிலும் தென்பட்டவுடனேயே அவற்றைக் களைந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? நம் சொந்த வீடாக இருந்தால் பார்த்துக் கொண்டு இருப்போமா? இப்படிக் கைவிடுவார்கள் என்று கோயில்களைக் கட்டியவர்கள் ஒரு நாளும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 

மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது உள்ளூர்வாசிகள் தங்கள் ஊர்க் கோவிலில் பிராகாரங்களிலும், விமானங்களிலும், சுவர்களிலும் செடிகள் வேரூன்றி உள்ளனவா என்று பார்த்து, அவற்றை உடனே களைய வேண்டும். இதற்குக்கூடவா வெளியூரை நம்பி இருக்க வேண்டும்? அப்படியே வெளியூர்காரர்கள் வந்தாலும் வந்தவர்கள் ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்று இருக்கிறார்கள். உழவாரத் தொண்டு செய்பவர்களுக்கு மோர், சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் மனம் எத்தனை கிராமவாசிகளுக்கு உள்ளது ?  தாங்களும் வந்தவர்களோடு இணைந்து உழவாரப்பணி செய்யாவிட்டாலும், அவர்கள் களைந்து வைத்த குப்பைகளையும் செடிகளையும் கோவிலுக்கு வெளியில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்தகூட  மனம் வரவில்லையே ! 

சில உழவாரத் தொண்டாற்றும் குழுக்கள் மாதம் தோறும் ஆலயங்களில் பணி  செய்கிறார்கள். அக்குழுக்களில் பெண்களும் இடம் பெறுகிறார்கள். அவர்களது பங்காவது, அக்குழுவினருக்கு   உணவு ஏற்பாடு செய்தல், கோயில் விளக்குகள்,பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவிச்  சுத்தம் செய்தல் ஆகியன. இவர்கள் ஆண்டு முழுவதும் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றாலும், உழவாரப்பணி செய்த ஆலய எண்ணிக்கை கூடுகிறதே தவிர ஏற்கனவே பணி  செய்த ஆலயங்களில் மீண்டும் வெட்டிய இடத்திலேயே செடிகள் முளைத்து, நாளடைவில் பிரம்மாண்டமான மரங்களாகி வேரூன்றிப் போகின்றன. திருப்பணி செய்பவர்கள் பழைய அமைப்பை மாற்றாமல் கற்களை அடையாளப் படுத்திய பின்னர் ஒவ்வொரு கல்லாகப் பிரித்து, மரத்தின் வேர்களை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் அதே கற்களை அதே இடத்தில் அமைத்து மீண்டும் செடிகள் முளைக்காமல் இருக்க இணைப்பிடங்களை நிரப்பித் திருப்பணி செய்ய வேண்டியிருப்பதால் பெரும் செலவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதெல்லாம் உள்ளூர் வாசிகளின் நெடுங்கால அலட்சியத்தால் விளைந்தது தானே ! 

உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் வசிக்கும் பகுதியில் சரிவரப் பராமரிக்கப்படாத நான்கு  கோயில்களைத் தேர்ந்தெடுங்கள். ஐந்தாவது மாதம் புதியதாக ஒரு கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்வதை விட, முதலாவதாகப் பணி  செய்த கோயிலுக்கே திரும்பச் சென்று பணியாற்றுங்கள். அப்போதுதான்  இடைப்பட்ட காலத்தில் அங்கு மீண்டும் முளைத்த செடிகளை மேலும் வளர விடாமல் தடுக்க முடியும். ஆகவே ஒரு ஆண்டில் ஒரே ஆலயத்தில் மூன்று முறை உழவாரப்பணி செய்ய முடியும். எத்தனை கோயில்களில் உழவாரம் செய்தோம் என்பதைவிட, நான்கு கோயில்களில் செம்மையாகச் செய்யும் பணியே சிறந்தது அல்லவா? 

வேரூன்றிப் போன மரங்களை வெட்டுவதால் பயன் ஏதும் இல்லை. மீண்டும் அவை தழைக்க ஆரம்பித்து விடுகின்றன. கருங்கற்களுக்கு இடையில் உள்ள ராட்சச வேர்களை எப்படிக் களைவது?  பலவிதமாக முயன்று பார்த்தும் பலனளிக்காமல் போகவே இப்போது மருந்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் வேர்கள் வரை மருந்தின் தாக்கம் சென்று, சில நாட்களில் அச் செடியோ, மரமோ கருகி, அழிந்து விடுவதாகச் சொல்கின்றனர். இம்முறை பின்பற்றப்படுமேயானால் மேலும் சில கோயில்களில் பணியாற்ற முடியும். 

ஆலயத் திருக்குளத்தைத் தூய்மை செய்வதையும் அன்பர்கள் மேற்கொள்ளலாம். அதேபோல் நந்தவனப் பராமரிப்புக்கும் இயன்ற உதவி செய்யலாம். இவை யாவும் " கைத் தொண்டு " என்ற  வகையில் அடங்கும். கைத்தொண்டு செய்த திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசினைப் பரமன் அளித்ததை, " கைத்தொண்டாகும் அடிமையினால் வாசியில்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் " என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது.      

Thursday, January 11, 2018

வேலியே பயிரை மேயலாமா?


" வேலியே பயிரை மேயலாமா " என்பார்கள். இப்போது அதுவும் நடக்கிறது. அறத்தை நிலை நிறுத்த வேண்டியவர்கள், பாதுகாக்க வேண்டியவர்கள் அறமற்ற செயல்களை செய்யத்துணிந்து விட்டார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பணம் சம்பாதிக்க உலகத்தில் எத்தனையோ வழிகள் இருந்தும் ஆலயத்தையும் அதன் சொத்துக்களையும் கொள்ளையடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் வெளியார்களே இவ்விதக் கொள்ளைகளையும், ஏமாற்று வேலைகளையும் செய்து வந்தார்கள். ஆனால் இப்போதோ அறத்தை நிலைக்கச் செய்ய வேண்டிய உயர் அதிகாரிகளே தெய்வச் சிலைகளைக் கடத்தவும், பக்தர்கள் தரும் தங்கத்தைத் திருடவும் துணிந்து விட்டார்கள். பாதுகாப்புத் தருகிறோம் என்று சிலைகளை எடுத்துக் கொண்டு போய் கடத்தல் காரனிடம் விற்கும் இந்த அற்பர்களை தெய்வம் மன்னித்தாலும் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. 

விக்கிரகங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அவற்றை வேறு ஒரு கோயிலில் வைத்துப் பூட்டி வைப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள். ஆக, காணாமல் போவதும், இவர்கள் கையில் கொடுப்பதும் ஒன்றோ என்னும்படி ஆகிறது. மொத்தத்தில் அவை உரிய கோயில்களில் இல்லாமல் போய் விடுகின்றன.. 

ஆகம மரபு மாறாமல் நிர்வகிப்பதாக , அற  நிலையத்துறை சொல்வதாக இருந்தால் அவர்களை ஒன்று கேட்கிறோம். உற்சவர் வீதி உலா சென்றால், கோயில்களை மூடி விடுவார்கள். காரணம், மூலவரே, வீதியில் உள்ளவர்களுக்கு அருள் புரிய வேண்டி உற்சவர் வடிவில் செல்வதால் கருவறையில் ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. உற்சவர் மீண்டும் ஆலயத்திற்கு வந்த பின்னரே மூலவருக்குப்  பூஜைகள் துவங்கப்படும். இதுவே ஆகமம் நமக்குக் காட்டும் நெறி. ஆனால் நடப்பது என்ன? உற்சவர்கள் வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் மூலவருக்கு பூஜைகள் நடத்தப் படுகின்றன. இது ஆகம விரோதம் இல்லையா? இதற்காகவா மன்னர்கள் எல்லாக் கோயில்களுக்கும் உற்சவ மூர்த்திகளை வார்த்துக் கொடுத்தார்கள்? 

சமீபத்தில் பந்தநல்லூர் ஆலயத்தில் நடை பெற்ற அதிகார துஷ்ப்ரயோகமும் அதனைத் தொடர்ந்து, அதிகாரியின் துணையோடு, உற்சவர்கள் களவாடப்பட்டதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இப்படியும் ஒரு பிழைப்பா இந்த அதிகாரிகளுக்கு!! வெட்கக் கேடு!! கேட்பவர்கள் காறித் துப்புவார்கள். நம்பிக்கைத் துரோகம்  அல்லவா இது!!  இதுபோல எத்தனை மூர்த்திகள் எத்தனை கோயில்களில் களவாடப் பட்டுள்ளனவோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் நல்லவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது. 
உற்சவங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும் ஆலயங்கள் மட்டும் அந்த நிகழ்ச்சிகளுக்காக உற்சவர்களைத் தங்கள் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டு, மறுநாளே பாதுகாப்பு வழங்கும் கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதற்குக் குருக்களிடம் உத்தரவாதம் வேறு பெறப்படுகிறது! நிர்வாக அதிகாரியும்  பொறுப்பேற்றுக்  கூட இருந்து நடத்தலாமே ! 

ஆலயத் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில், காமிராக்கள் பொருத்தும் வேலை துரிதமாக  நடைபெற்று வருகிறது. இதனால் என்ன பயன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. திருடர்கள் வருகையைப் பதிவு செய்வதோடு சரி. அடையாளம் காண இயலாதபடித் திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டினால் அப்பதிவினால் எப்படித் துப்புத் துலக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால் அலாரம் பொருத்தினால், மணி ஓசை கேட்டவுடன், திருடுவதைக் கைவிட்டபடியே, வந்தவர்கள் தப்பித்து ஓடத்  துவங்குவர். .

ஒவ்வொரு கோயிலுக்கும் காமிரா பொருத்துவதற்கு குறைந்தது இருபதாயிரம் செலவாகிறது. டெண்டர் விடுவதில் மோசடி நடந்தால் இத்தொகை அதிகமாகும். இந்நாளில் அதுவும் சாத்தியமே.!  உயர் மட்டத்திலிருந்து கீழ் வரை லஞ்சம் புரையோடிக் கிடக்கிறது. இதற்கு அறநிலையத் துறை விதி விலக்காக இருக்க வாய்ப்பு உண்டா?  

அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். சிவசொத்தைக் கொள்ளை அடிப்பதைக்  கயவர்கள் மட்டும் செய்து வந்தது போக , அறம் காக்க வந்தவர்களும் உடந்தை ஆகிறார்கள் என்ற பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அற  வழி நின்றால், அதுவே உங்களது பல தலைமுறைகளைக் காக்கும். இல்லையேல், உங்கள் கண்முன்பே குடும்பம் சீரழிவதைக் காண்பீர்கள். இக்கலியுகத்தில் கண்கூடாகக் காணும் பல உண்மைகளுள் இதுவும் ஒன்று. மறந்தும் இத்தவறை மீண்டும் செய்ய வேண்டாம் ஐயா. 

கோயில்களில் அராஜகம் நடக்க விடலாமா?

குறிச்சி சிவாலயம் 
நல்லதொரு குடும்பப்பின்னணி இருந்தால் , ஒழுக்கம்,அடக்கம், கடவுளிடத்து பக்தி ஆகியவை இயல்பாகவே அமைந்து விடும். பிற்காலத்தில் கெட்ட சகவாசத்தால் பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதுமுண்டு. அப்போது அவர்களைப் பெற்றோர்கள் திருத்த முடியாமல் போய் விடுகிறது. தவறுகளைத் தெரிந்தே, தைரியமாகச் செய்யும் திமிர் பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். பார்ப்பவர்களுக்கும் அவர்களிடம் நெருங்கவே பயம் ஏற்படுகிறது. சமூக விரோதிகள் வேறு எங்கேயாவது தொலைந்து சீரழிந்து போகட்டும். ஆலயத்திற்குள் பிரவேசித்து அக்கிரமங்கள் செய்யலாமா? 

அண்மையில் திருப்பனந்தாளிலிருந்து பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள குறிச்சி என்ற கிராமத்திலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயில் தான். ஒரே பிராகாரம். செடிகளும் ,புதர்களும் மண்டிக் கிடந்தன. விமானங்களின் மீது பெரிய அரச மரங்கள் முளைத்து, வேரூன்றியிருந்தன. அதனால் ஆலயச் சுவற்றின் பல பகுதிகள் பிளவு பட்டிருந்தன. 

அராஜகம் 
ஜாக்கிரதையாகப்  பிராகாரத்தை வலம் வரும் போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காலி செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் அங்கு கிடந்ததைக் கண்டு பதறினோம். பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறாத அந்த ஆலயத்தை இப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் சமூக விரோதிகள். ( துரோகிகள் என்று கூடச் சொல்லலாம். ) 

அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரைக் கேட்ட போது, ஆலயத்திற்குச் சுற்றுச் சுவர்  பல இடங்களில் இல்லாமல் இருப்பதால், இவ்வாறு குடிக்கவும், மலஜலம் கழிக்கவும் கயவர்கள் உள்ளே நுழைந்து பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  சுற்றுச் சுவர் கட்டாத வரையில் இந்த அராஜகங்கள் தொர்ந்து நடக்கும் என்றும்  கவலை தெரிவித்தார். ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பால் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தார் மனம் வைத்தால் ஆலயத்தைத் தூய்மைப் படுத்தி , சுற்றுச் சுவர் அமைக்கலாம். எப்போது மனம் வைப்பார்களோ தெரியவில்லை. தினசரி பூஜைகளுக்கு வழி இல்லாததால் ஒரு அன்பர் தினமும் சன்னதியில் விளக்கு ஏற்றிச் செல்கிறார். ஆனால், புத்தி கெட்டுப்போய் ஆலயத்தைச்  சீரழிக்கும் ஈனப் பிறவிகளைத் திருத்துபவர் யார் ? 

இவ்வாறு கைவிடப்பட்ட ஆலயங்களை வெளியூர் நபர்கள்  தூய்மைப்படுத்தித்  திருப்பணி செய்து கொடுத்தாலும்   , உள்ளூர் வாசிகளிடம் அக்கறை இல்லா விட்டால் அத்தனையும் வீணாகிப் போகிறது. தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள் இல்லாத வரையில் கோயில்கள் வௌவால்களுக்கும் பாம்புகளுக்கும் புகலிடமாக மாறி விடுகின்றன. 

இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவது. (பராமரிப்பின் கீழ் வருவது என்று இங்கு குறிப்பிட மனம் வரவில்லை.) பராமரிப்பே இல்லாமல் அழிவை நோக்கிச் செல்லும் ஆலயத்தைக்  காப்பாற்றிப்   பராமரிக்கத்தவறி  விட்டது அறநிலையத்துறை. நிர்வாக அதிகாரி எப்போதாவது இந்தப் பக்கம் வந்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி என்றால் எதற்காக அவர்களிடம் இக்கோயிலை வைத்துக் கொண்டு இப்படி அழியச் செய்கிறார்கள்? ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டுமே பார்ப்போம்.