Friday, March 22, 2019

அலங்காரமா அலங்கோலமா

பங்குனி உத்திரம் வந்தால் சிவாலயங்களிலும்  , முருகன் கோயில்களிலும் வீதி உலாக்களும் திருக்கல்யாண வைபவங்களும்  தொன்று தொட்டு நடை பெற்று வருகின்றன. உத்திரத்தன்று தீர்த்தவாரி நடை பெற்றதாகத் தேவாரமும் நமக்குத் தெரிவிக்கிறது. இத்தனை புராதானமான விழாவைப் பக்தியுடன் அணுகாமல் மனம்போன போக்கில் எல்லாம்  மாற்றிக் கொள்ளும் ஆகம விரோத செயல்கள் சில ஊர்களில் நடை பெறுவதைக் காண்கிறோம். 

உற்சவருக்கு மட்டுமல்லாமல் மூலவரையே இஷ்டத்திற்கு அலங்காரம் செய்வதன் மூலம் மாற்றி விடுவது கண்டிக்கத்தக்கது. அன்னாபிஷேகம் என்பது அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகம் என்பது போக, அன்னத்தால் செய்யப்படும் அலங்காரம் என்று ஆகி விட்டது.  ஆரம்ப காலத்தில் அன்னத்தை சார்த்தியதோடு காய் கறிகள் ,பழங்கள்,வடை,அப்பம் ஆகியவைகளையும் சுவாமியின் மீது சார்த்தத் தொடங்கினர், இப்போது அருவருவத் திருமேனியானாகிய  சிவலிங்கப்பெருமானுக்கு முகம் வரைவது, ஒரு பாகத்தில் அம்பாள் போல் அலங்கரிப்பது (?) கண் மீசை வரைவது என்றெல்லாம் அபத்தத்தின் உச்ச கட்டத்திற்குப் போய் விட்டார்கள். 

பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள ஒரு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் நடைபெற்றதாக முக நூலில் படத்துடன் செய்தி வந்தது. அதில் முருகனை ஒரு இரு சக்கர வாகனத்தில் அமர்த்தித் தலைக்கு ஹெல்மெட்டும் அணிவித்து வீதி உலா நிகழ்த்தியிருக்கிறார்கள். நம்மோடு பலரும் முகநூலில் அதற்குக் கண்டனம் தெரிவித்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு அலங்காரம் செய்ய அர்ச்சகருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. ஊருக்குள் யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ? 

இளந்தலைமுறையைச் சேர்ந்த அர்ச்சகரே இந்த வேலையைச் செய்திருக்கக்கூடும் என்று கருதுகிறோம். இதற்குப் பெயர் வித்தியாசம் என்று அவர் நினைக்க வேண்டாம். வேறு எதிலாவது அவரது திறமையைக் காட்டட்டும். தெய்வ காரியங்களில் வேண்டாம்.  பார்ப்பவர்கள் சொரணை அற்றவர்கள் என்ற தைரியத்தில் எப்படி வேண்டுமானாலும் செய்யத் துணிவதா ? கோயில் நிர்வாகம் உடனடியாக இவரை ஆலயப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மற்றவர்களுக்கும் அது ஓர் பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 

தரை விரிப்புக்கள் மற்றும் குளியலறை சாதன மூடிகளில் இந்துக் கடவுளர்களின் படங்களைப் போட்ட கம்பெனிகளுக்கு  மக்கள்  எதிர்ப்புத் தெரிவித்ததால் உடனடியாக அச்செயலைக் கை விட்டனர். ஆனால் இந்த அர்ச்சகர் போகிற போக்கில், இரு சக்கரக் கம்பெனிகள் தங்களது வண்டியை உலாவில் பயன் படுத்தும் படியாக   ஸ்பான்ஸர்கள்  ஆகி விடுவார்களே !!