Friday, July 22, 2016

என்னதான் வேண்டிக் கொள்வது?

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது நடைபெற்ற இடம் சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் ஆலயத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபம். அதிகாலை மூன்று மணிக்கு மேல் இருக்கும். மார்கழித்  திருவாதிரையை முன்னிட்டு மண்டப முகப்பில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த இரவு நேரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பேரும் தரையில் உட்கார்ந்த வண்ணம் வைத்தகண் வாங்காமல் ஆடல் வல்லானது அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நமக்கு முன்னால் நான்கு வரிசைக்கு அப்பால் சிறிய சலசலப்பு கேட்டது. அதற்குக் காரணமானவர் ஒரு பெண்மணி. அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் சற்று உயரமாக இருந்ததால் அப்பெண்ணால் அவர்களது தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முன்னால் இருந்தவர்களும் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வேண்டும் என்றே நகராமல் , சுவாமி தரிசனம் செய்ய விடாமல் மறைக்கிறார்கள் என்று நினைத்த அப்பெண்ணுக்கு அவர்கள் மீது கோபம் பொங்கி எழுந்தது. என்ன சத்தம் போட்டாள் தெரியுமா? " நடராஜா, இவர்களையெல்லாம் அழித்துவிடு" என்று. சுற்றி இருந்தவர்களுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. மாறாகச்  சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் ஒரு பிரார்த்தனை செய்யமுடியுமா என்று எல்லோருக்கும்ஆச்சர்யம் ! 

வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தாராம். அவருக்கு ஒரு சிஷ்யன் கூடவே இருந்தானாம். சிஷ்யனும்  குருவைப்போல் நிறையப் படித்தவன்தான். தன்னையும் உலகம் குருவை வணங்குவதைப்போல மதிக்கவேண்டும் என்று எண்ணினானாம். நாளடைவில் அது குரு மீது பொறாமையாக ஆகிவிட்டது. கடவுளிடம்  சீக்கிரமே தனது குரு மறைந்து , தான் மடாதிபதி ஆகவேண்டும்  என்று வேண்டினானாம்! மேற்கூறிய பெண்ணுக்கும் இந்தக் கதையில் வரும் இளம் துறவிக்கும் சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இருந்ததோடல்லாமல் பிறர் அழிய வேண்டும் என்ற பிரார்த்தனை வேறு! 

இன்னும் சிலர் பேருக்காகவும் புகழுக்காகவும் பதவிக்காகவும் வேண்டிக் கொள்வதுண்டு. பணத்தாசை பிடித்தவர்கள் உறவினர்களைக்கூடத் தவிர்த்து விடுவர். சொத்துத்  தகராறினால் பிளவு பட்ட குடும்பங்கள் ஏராளம். பத்திரப் பதிவு மற்றும் நீதி மன்றங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதோடு, தங்களுக்கே சாதகமாக அமையவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்வார்கள்! 

வேடிக்கையான பிரார்த்தனைகளும் இல்லாமல் இல்லை. தங்களுக்குப்  பிடித்த விளையாட்டு வீரர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு வழிபாடுகளும் வேள்விகளும் நடத்துகிறார்கள். திரைப்பட ரசிகர்களோ படம் வெற்றி அடையப் பிரார்த்தனை செய்கிறார்கள்! உலகத்திலேயே புனிதமான தொழில் என்று கருதப்படும் மருத்துவத்தொழில் செய்பவர்களும் தங்கள் தொழில் வளமாக நடைபெற இறைவனை வேண்டுகிறார்கள். உலகம் முழுதும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்றால் இந்தத் தொழிலே இல்லாமல் போய் விடலாம் அல்லவா? 

இவ்வளவுக்கும் நடுவில் மனக்கவலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் காலம் காலமாகத் தொடர்கிறது.  நோய் குணமாவதற்கும் , கால தாமதமான திருமணம் நடைபெறவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் , தேர்வில் வெற்றி பெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் தொடருகின்றன. 

பிரார்த்தனை நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதாகக் கூடப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. கோயில்உண்டியல் நிரம்புகிறது. சில கிராமத்து மக்கள் கிடா வெட்டிக் காணிக்கை செலுத்துகின்றனர். 

மேற்கூறிய  எல்லாம் சரியா தவறா என்ற ஆராய்ச்சி இங்கு தேவையில்லை. இப்படி வகை வகையாகக் கோரிக்கைகள் வைக்கப்படும் முன்பு  அவை நியாயமானவைகளா,தருமத்திற்கு உட்பட்டவையா என்று சிந்திப்பது நல்லது. காணிக்கையால் கடவுளை விலைக்கு வாங்கி விட முடியாது. மாசற்ற, என்றும் நீங்காத அன்பு ஒன்றுக்கு மட்டுமே இறைவன் கட்டுப்பட்டவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை முடிவில் செய்யும் பிரார்த்தனை, நைவைத்தியம்  ஆகியவைகளும் அப்பழுக்கில்லாத காணிக்கைகளே. 

குடும்ப நலன் மட்டுமல்லாமல் உலகமே சுகமாக இருக்கச் செய்யப்படும் பிரார்த்தனையையும் , உண்பதன்  முன் மலர் இட்டு அர்ச்சித்துவிட்டு, உண்பனவும் உடுப்பனவும் தந்தவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனுக்கு நன்றியுடன் செய்யப்படும் நைவைத்தியத்தையும் விட எளிய - உயர்ந்த பிரார்த்தனை இருக்க முடியுமா? " எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லால் வேறொன்று அறியேன்" என்று தாயுமானவர் சொன்னதுபோல்  வேண்டிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெற முயற்சிக்க  வேண்டும். அந்த மனோபாவத்தை நாம் பெற பரமேச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும்.