Wednesday, November 20, 2019

பெண்கள் பாதுகாப்பு

எல்லாம் வல்ல சித்தர்,மதுரை; வலைத்தளப் படம் 

அண்மையில் ஒரு நீண்ட கால நண்பரைச்  சந்திக்க நேர்ந்தது. மனிதர் நல்லவர் மட்டும் அல்ல. எதையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுபவர். இத்தனைக்கும் ஒரே இடத்தில் இருக்காமல் பல ஊர்களுக்குப் பிரயாணம் செய்து கொண்டே இருப்பவர். இரவும் பகலும் நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு ,நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர். இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. தகவல்களைப் பகிர்வதால் ஆகப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், சிறிதளவாவது மாற்றம் உண்டாகாதா என்று ஏங்குபவர் இவர்.

அன்றைய தினம் அவர் பேசியது பெண் பாதுகாப்பு பற்றியது. நானும் உற்றுக் கேட்கலானேன். “ இன்றைக்குப் பெண் சமுதாயம் சீரழிவை நோக்கி அடி எடுத்து வைத்திருப்பது ஏன் தெரியுமா? “ என்று கேள்வியை எழுப்பினார். எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேட்கிறாரே என்று எண்ணினேன். ஒருவழியாக சமாளித்துக் கொண்டு, “ அதை உங்கள் வாயிலாகத் தான் சொல்லுங்களேன்,கேட்கிறேன் “ என்றேன்.
அடுத்த கணம் நான் எதிர்பாராத விளக்கம் அவரிடம் வெளிப்பட்டது. “ பெண்களின் உயர் கல்வியும், வேலைகளுக்குச் செல்வதுமே “ என்றார் அவர். அதற்கு நான், “ பெண்முன்னேற்றம், ஆண்களுக்குச்  சரி நிகர் சமானம் ,சொந்தக் காலில் நிற்பது போன்ற பல காரணங்கள் இருக்கும்போது இப்படிச் சொல்கிறீர்களே “ என்றேன் நான். “ குறுக்கிடாமல் இருந்தால் விளக்கமாகச் சொல்கிறேன்” என்றார் அவர். நான் அதற்கு ஒப்புக்கொண்டபின் மிகப் பெரிய விளக்கம் தந்தார்.

“ மனிதன் தான் வாழும் காலத்திற்குள் படிக்க வேண்டியது தான்; சம்பாதிக்க வேண்டியது தான்; இந்தப் பிறவிக்கான செலவினங்களை எதிர்கொள்ள சேமித்துக் கொள்வதும் நியாயம் தான். இப்படி இருந்த பாரத தேசம் தனது அடிப்படைக்  கலாசாரத்தையும், பண்பாட்டையும் காசுக்காக இழக்கத் தொடங்கியது முதல் சீரழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் இதைத் துவக்கி வைத்தவர்கள் ஆண்கள் தான். ஆனால் நம் நாட்டின் ஸ்த்ரீ தர்மம் மிகவும் வலிமையானது. அது மட்டுமே இன்றளவும் நமது நாட்டைக் காப்பாற்றி வருகிறது. இந்த தர்மம் வலிமை இழக்கும்போதுதான் சீரழிவு வேகப்படுத்தப்படுகிறது “ 

“ பெண்களின் உயர் கல்வி அவர்களுக்கே ஆபத்தாக முடிவதைப் பலர் யோசிப்பதில்லை. இவ்வளவு ஏன் ? இந்தக் கருத்தை எதிர்ப்பவர்களே இன்று அதிகம். விண்வெளி ஆராய்ச்சி முதல், பள்ளிக்கூட ஆசிரியை வரைப் பெண்கள் பதவி வகிக்காத இடமே இல்லை என்றுகூடக்  கூறலாம். உண்மைதான். வாழ்க்கை என்பது வெறும் படிப்போடும் சம்பாதிப்பதோடும் முடிந்து விடவில்லை. பெண்களுக்கென்றே சமுதாயத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த கடமைகள் உண்டு. “

“ ஒருவர் கேட்டார், “ திருமணம் என்பது அவசியமா “ என்று. விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ அவசியம் இல்லை . ஆனால் ஆறறிவுள்ள மனிதன் ஒழுக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான். இயற்கையிலேயே பலஹீனம் வாய்ந்தவர்கள் பெண்கள் என்று மேற்கத்தியரும் சொல்கின்றனர். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டியவளாகிறாள். அந்தக் காலத்தில் வயது வந்த பெண்ணைத் தகுந்த வரனுக்கு சிறு வயதிலேயே மணம் செய்து வைத்தார்கள். காரணம், மறந்தும் தவறான வழிக்குப் போகாமல், தன்னை நம்பி வந்தவளைக் கடைசிவரை கை விடாமல் காப்பாற்றுவேன் என்று அக்னி முன்பாக சபதம் செய்ததோடு நின்றுவிடாமல்  அந்தப் பொறுப்பை ஆயுட்காலம் முழுதும் கடைப்பிடிக்கவேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை என்பதால்தான் “ இதைத்தான் கால் கட்டு என்றார்களோ “ என்று நான் கேட்டேன். சிரித்துக் கொண்டே ,“ குறுக்கே பேசக் கூடாது என்று சொன்னேனே” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ சிலர் நினைக்கலாம். மேல்கல்வியால் அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று. மறுக்கவில்லை. அதற்காகப் பணயம் வைக்கவேண்டியத்தை நினைத்தால் அச்சப்படாமல் இருக்க முடியாது. கல்லூரிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும் பெண்கள் ஒழுங்கீனத்தில் தள்ளப்படுவதாகச் செய்திகள் அடிக்கடி வருகின்றன. பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியையிடம் முறையின்றி நடந்ததாகச் செய்தி வந்ததே, படித்திருப்பீர்களே !  எங்கோ எப்போதோ நடைபெறும் இதுபோன்ற சம்பவத்திற்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படி இணைத்துப் பார்க்கலாமா என்று நீங்கள் கேட்கலாம். இதே சம்பவமே எல்லா இடங்களிலும் நடை பெறாமல் இருக்கலாம். ஆனால் வேறு வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் மறுக்க முடியுமா ? சர்வகலாசாலைகளிலும்,கல்லூரிகளிலும் நடைபெறும் முறைகேடுகளுக்குக் கவலைப்படப்போவது யார் ? குடிப்பதையும் புகை பிடிப்பதையும் குட்டிச்சுவராகப் போன ஆண்கள் மட்டுமே செய்து வந்த காலம் போய், பெண்களும் அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமா?  சம்பாதிக்கக் கிளம்பி விட்ட  பெண்கள் படும் வேதனைகள் பலப்பல. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதெல்லாம் மேற்கத்திய நாகரீகத்திற்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். “

சிறிது பெருமூச்சு விட்டு விட்டு மேலும் தொடர்ந்தார் “  தீ சுடும் என்று தெரிந்தும் அதில் கை விட்டுப் பார்ப்பது போலத்தான் இதுவும். சில துறைகள் ஆபத்தானவை என்று தெரிந்தும், பேருக்கும் புகழுக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு வலையில் விழும் பெண்கள் ஏராளம். பிறகு வருத்தப்பட்டு என்ன பயன் ? வாழ்க்கை சீரழிந்தது அழிந்ததுதான். 

இதில் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா ? முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்களும் ஆண்களும் தான். முன்பெல்லாம் வரதக்ஷினை மட்டுமே முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இப்போதோ பேராசை மட்டுமே முட்டுக்கட்டை ஆகி விட்டது. பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜினியர்களாகவோ ஆக வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு ஆனவர்களின் ஆண்டு வருமானம்  சில ஆண்டுகளுக்குள்ளாகவே கணிசமாக உயர்ந்து விடுகிறது. தனக்கு மேல் சம்பாதிப்பவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் காத்திருக்கும் நிலை!  அதற்கேற்ற வரன் கிடைக்காவிட்டால் கல்யாணமே ஆகாமல் நிற்கும் ஆபத்தான நிலை . இப்படி இருக்கும்போது கலை, மற்றும் விஞ்ஞானம் பயின்ற ஆண்களுக்கோ வரன் கிடைப்பது அதை விடப் பரிதாபமாக ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் விரக்தியால் வழி மாறிப் போவதும் நடக்கத் தொடங்கி விட்டது. பெற்றோர்கள் மட்டும் என்ன செய்வார்கள், பாவம். தாங்கள் செய்த தவற்றின் பலனைக் கண்ணெதிரே அனுபவிக்கிறார்கள் “  

“ காலம் காலமாகச் செய்து வந்த தொழில்களும் உயர் கல்வி வழங்குவதால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவர்களும் மனிதர்கள் தானே! என் குழந்தைகளாவது படிக்கட்டும். இந்தத் தொழில் என்னோடு போகட்டும் என்ற மனோபாவம் இப்போது எல்லோருக்கும் வந்து விட்டது. நாற்று நடுவதற்கு ஆட்கள் இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் என்று செய்தி  வருகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற எண்ணமும் வேறு வேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதும், சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் தான் செய்யும் தொழில் பிற தொழில்களுக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் போனால், விவசாயம் மட்டும் அல்ல, கொத்து வேலை, நகை வேலை, மர வேலை, வீட்டு வேலை போன்ற எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைக்கப்போவதில்லை. “

“ கோவில் அர்ச்சகர்களும் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புவதையே விரும்புகின்றனர். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் அவர்களது பெண்களோ  அதே குலத்துப் பையன்கள் வேலைக்குச் செல்வதையே விரும்புகிறார்களே தவிர,  கோவில் பூஜை செய்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் கோவில்களில் சிவாசார்யர்களைப் பார்ப்பது துர்லபமாகி விடும்போல இருக்கிறது. சுய நலம் கண்ணை மறைக்கிறது. நாடு தனது கலாசாரத்தை இழந்து சீரழிவைக் காணும் போது சகிக்க முடியாத வேதனை மேலிடுகிறது “ என்றார் நண்பர். ஆதற்கு மேல் அவரால்  பேசமுடியவில்லை. தொண்டை தழுதழுத்தது. கண்களில் நீர் முட்டியதைக் கண்டேன்.

எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தனி நபர் சுதந்திரம் என்று முழக்கமிடும் இந்தக் காலத்தில் இவரது கருத்துக்களை யார் ஏற்கப்போகிறார்கள் ? அவநம்பிக்கையே நாளுக்கு நாள் மேலோங்குகிறது. நெறிப்படுத்த அரசனோ, குருமார்களோ இல்லாத காலத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? என்னைத் திருத்த நீ யார் என்பார்கள். நண்பரது வேதனை புரிந்தும் தீர்வை இறைவனிடமே விட்டு விடுகிறோம் . அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எல்லாம் வல்ல சித்தராக மதுரையில் எழுந்தருளியது போல் இன்றே , இப்போதே எழுந்தருளிக் காக்க வேண்டும் என்று அந்த சித்தநாதப் பெருமானிடம் வேண்டுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.