Sunday, July 5, 2009

தெய்வங்களின் வாகனங்கள்





ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வாகனம் இருப்பது எல்லோருக்கும் தெரியும் . பிள்ளையாருக்கு மூஷிகமும் முருகனுக்கு மயிலும் விஷ்ணுவுக்கு கருடனும் அம்பாளுக்கு அன்னபக்ஷியும் இருப்பதைப் பார்த்து பலருக்கு இவை எப்படி சுவாமியை தாங்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. தத்துவ ரீதியில் இதற்குவிளக்கம் சொன்னாலும் நடைமுறையில் விளக்கம் சொல்லுவது பலருக்கும் பலன் அளிக்கும் என்று தோன்றுகிறது.

வெளி நாட்டு நபர் ஒருவர் பல வருஷங்களுக்கு முன் காஞ்சிபெரியவரை தரிசிக்க போனபோது பெரியவர் பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். பல்லக்கு தூக்கிய ஆட்களிடம் அவர் பேசியபோது ஆச்சர்யமான விஷயம் தெரியவந்தது. பெரியவாள் பல்லக்கில் இருந்தால் தூக்குவதற்கு மிகவும் சுலபமாகவும் தனி பல்லக்கை தூக்கும் போது மிகவும் கனமாகவும் இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம். தன்னைத் தூக்குபவர்களுக்கும் சிரமம் தரக்கூடாது என்று பெரியவாள் மனதில் தோன்றிஇருக்கலாம்.

அஷ்டமா சித்திகள் எட்டில் உடம்பை அணு அளவில் ஆக்கிக் கொள்வதுஒரு சித்தி. மகான்கள் இந்த சித்தியை மற்றவர்களுக்கு அருள் செய்யும் போது உபயோகிப்பார்கள். இப்போது பிள்ளையார் விஷயத்திற்கு வருவோம். சுவாமி அணுவாகவும் அதற்கு அப்பால் பட்டவராகவும் இருக்கிறார் என்று அவ்வை பாட்டி சொல்கிறார் இல்லையா? அசுரனை சம்காரம் செய்த பிறகும் அவனுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டி தன்னை அவன் தூக்கும் அளவுக்கு மெல்லிசாக ஆக்கிக் கொள்கிறார் சுவாமி. இப்போது சொல்லுங்கள். ஒரு நெட்டி பிள்ளையாரை மூஷிகம் தூக்குவது சாத்தியம் ஆகி விடுகிறது அல்லவா?

இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுவாமியை தூக்குவது அந்த வாகனத்திற்குப் பாக்கியமே தவிர சுவாமிக்கு அதனால் பெருமை இல்லை. உத்தர மாயூர ஸ்தல புராணத்தில் பரமேஸ்வரனுக்கு வாகனமானதில் நந்திதேவர் கர்வம் கொண்டவுடன் ஈஸ்வர ஆக்யையால் மாயூர க்ஷேத்ரத்திற்கு வந்து தவம் செய்த பிறகு ஈஸ்வரனே அவருக்கு உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு எதிரில் நந்தி இருப்பதை இன்றும் அங்கு பார்க்கலாம்.
மதுரையில் சுவாமி செய்த 64 திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடலில் பல சித்திகளை செய்து காட்டுவதை அறியலாம். எனவே இந்த வாகன விஷயம் ஒன்றும் சுவாமிக்குப் பெரியது இல்லை. நம்மால் முடியாததையும் கண்ணால் காணாததையும் வைத்துக்கொண்டு இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று விடை தெரியாமல் குழம்பிப்போய் பதில் தெரியாமலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும் நாளைக் கழிக்கிறோம்.


ஈஸ்வரனுக்குத் தனது ஸ்ருஷ்டியில் எல்லாம் சமமே. தேவர்கள் முதல் எறும்பு வரை எல்லா ஜீவ ராசிகளுக்கும் அனுக்ரகம் செயவதால் தான் சுவாமியை விஸ்வநாதன் என்றும் அம்பாளை அகிலாண்டேஸ்வரி என்றும் சொல்கிறோம்.
(தொடரும்)