Wednesday, November 15, 2017

குரு பீடங்களும் மக்களின் எதிர்பார்ப்பும்

                          Image result for kanchi sankaracharya
அண்மையில் அன்பர் ஒருவர் சொன்னார் , " குருபீடங்களில் பெரும்பாலானவை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு முன்னதாக, மக்கள் வேத- சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்களையே அணுகியிருக்கக் கூடும்." என்றார். ஒரே மடாதிபதி அனைத்துப் பகுதி மக்களையும் இணைப்பது மிகவும் கடினமான செயல். ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு மடம் நிறுவுவது என்பது ஆதி சங்கரர் காலத்திலிருந்தே இருந்து வந்தது. அப்படி இருந்தும், கால் நடையாச் சென்று மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்கே சில நாட்கள் தங்கிப் பூஜைகள் செய்தும்,மக்களை நல்வழிப்படுத்தியும் வந்தவர்கள் சிலரே.

நாளடைவில் அந்நியர்களது படையெடுப்பால் கலாசார மாற்றங்கள் நிகழ இருந்தபோது மடங்கள் தோன்றி தர்மப் பிரச்சாரம் செய்யலாயின.நாகரீகத் தாக்கமும் மக்களைப் பாதித்தபடியால் மடாதிபதிகளின் யாத்திரைகள் அத்தியாவசியமாயிற்று.கால் நடையாகவே நாட்டின் பெரும்பகுதிகளுக்குச் சென்று வந்த காஞ்சி பெரியவர்களது கருணை இங்குக் குறிப்பிடத்தக்கது. 

மடங்களுக்குப் பாரம்பர்யமாக வரும் பூஜை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களை நல்வழிப் படுத்துவது. மடங்களில் பெரும்பாலானவை கிராமங்களில் அமைந்திருப்பதால் மடாதிபதிகள் தங்களுக்கு அண்மையில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களுக்கு அருளாசி வழங்குவது சாத்தியமாகிறது. தங்களைச் சார்ந்தவர்களையும், மடத்துச் சிப்பந்திகளையும் இவ்வாறு கிராமங்களுக்கு அனுப்ப முடியும். 

என்ன காரணத்தாலோ மடாதிபதிகளின் கிராம விஜயங்கள் அவ்வூர்க் கோயில்களின் கும்பாபிஷேகம் மற்றும் சில வைபவங்களுக்குப் போவதோடு நின்று விடுகிறது. தங்கள் மடங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கும் எப்போதாவது தான் விஜயம் செய்கிறார்கள் . அந்தக் கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு எழுபது ஆண்டுகள் ஆகி , விமானங்களில் மரம் முளைத்து, மேற்கூரை ஒழுகினாலும் திருப்பணிகளை மேற்கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. உள்ளூர் மக்களுக்குக் கோயில்களுக்குத்  தினமும் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்களது விஜயத்தால் ஏற்படலாம் அல்லவா? 

கிராமங்களுக்கு மடாதிபதிகள் அடிக்கடி வராததால் மக்களில் சிலர் வேறு திசையை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்களைப் பிறரும் பின்பற்றுகிறார்கள். கோயில்கள் கைவிடப்படும் நிலை உருவாகிறது. சிப்பந்திகளைத் திரும்பிப் பார்க்கவும் நாதி இல்லை. இதனால் சமயத்திற்கே பேராபத்து ஏற்படுகிறது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். நகரங்களுக்கு மட்டும் வாகனத்தில் வந்து பார்த்து விட்டுப் போவதால் கிராமங்கள் மெல்ல மெல்ல அவற்றின் பாரம்பரியத்தை இழக்கின்றன. 

கிராமங்களில் அழைத்து ஆதரிப்பவர்கள் குறைந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. அப்பாவி கிராமவாசிகள் தங்களது ஊருக்கு நல்லது செய்ய யாராவது வெளியூரிலிருந்து வந்தால் அவர்களைத் தலை மேல் தாங்குகிறார்கள். நாம் அவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்கள்  நம்மிடம் இருந்து நிரந்தரமாக விலகுவார்கள்.வருமானத்திற்குத் தவிக்கும் அவர்களை ஆசை காட்டி மயங்கச் செய்பவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவை அரவணைப்பு ஒன்றே. 

இப்படிச் சொல்வதால் மடாலயங்களைக் குறை கூறுவதாக எண்ணக் கூடாது. எத்தனையோ சமயப் பணிகள் ஆற்றி வரும்போது இதனைச் சற்று கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்ற விண்ணப்பமே இது.காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் இதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . காலம் தாழ்த்தினால் கை விட்டுப் போகும் நிலை வருவதன் முன் இன்றே இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தாழ்மையாக விண்ணப்பிக்கிறோம்.எல்லாம் சிவன் செயல் என்றாலும் அப்பெருமானே நமது பணியையும் ஒரு பொருட்டாக  உவந்து ஏற்பான் அல்லவா?            

Tuesday, November 14, 2017

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

                  
நாளடைவில் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரிமாறப்படுவது அதிகரித்து வருகிறது. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசவோ எழுதவோ துணிந்து விட்டார்கள். தனிமனிதனது நம்பிக்கைக்கு இந்த நாடு அனுமதி அளிக்கும் அதே வேளையில் அதை துஷ்பிரயோகம் செய்வது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. நமது கொள்கையை பிறர் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்? அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வதைக் குறை கூறி அவர்களைப் புண் படுத்துவது இப்போது கை வந்த கலை ஆகிவிட்டது.

தெய்வ நம்பிக்கையும் அப்படித்தான். நம்பிக்கை இல்லாதவர் ஒதுங்கிப் போகட்டுமே! இன்ன தினத்தில் கோவிலுக்கு அனைவரும் வந்து ஆஜர் கொடுக்கவேண்டும் என்றா வற்புறுத்துகிறார்கள்? இத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டும் மண்ணை வாரித் தூற்றுவது எதனால்? நம்பிக்கையே இல்லாதவன், பழக்க வழக்கங்களைக் குறை கூறுகிறான். மரபுகளை மாற்றி அமைக்கத் துடிக்கிறான். இதை வைத்தே பிழைப்பும் நடத்துகிறான். கண்டனம் தெரிவிப்போர் இல்லாததை சாதகமாக்கிக் கொள்கிறான்.

சினிமா,நாடகம்,தொலைக் காட்சி, செய்தித் தாள்கள் ஆகியவை இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு நேரத்தில் ஆன்மீகச் செய்திகளைச் சேர்த்துக் கொள்ளும் இவர்கள் மறு நேரத்தில் அதற்கு நேர் மாறாக நம்பிக்கை உள்ளவர்கள் மனதை நோக அடிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் சம்பாதிப்பது ஒன்று தான். மற்றபடி சமுதாய நலன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் வெளி வேஷமே.

பெரிய சீர்திருத்த வாதம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி கட்டலாம் என்று அபத்தமாக உளறுகிறார்கள். கேட்டால் மக்கள் சேவையே மகாதேவன் சேவை என்று பொன் (புண் ? ) மொழி உதிர்க்கிறார்கள். கோயில்கள் மக்கள் நலனுக்காகவே ஏற்பட்டவை என்பதை அறியாத மூடர்கள் பின் எப்படிச் சொல்ல முடியும்? சமூக சேவை வேண்டாம் என்று எந்த மதமாவது சொல்கிறதா? மக்கள் சேவையும் மாதேவன் சேவையும்  இரு கண்கள் என்ற மரபைத்தானே நாம் பின்பற்றி வருகிறோம்!

ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் மருத்துவத்தால் நிரந்தரத் தீர்வு காண முடிவதில்லை என்பதை ஏன் நினைப்பதில்லை? இவர்கள் கொடுக்கும் மருந்தும் மாத்திரையும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தும் தெருவுக்குத் தெரு மருத்துவ மனைகள் ஏற்படுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ஏழைகளாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் குறைந்த பட்சம் ஐநூறு ரூபாயாவது இல்லாமல் செல்ல முடியுமா? அரசு மருத்துவ மனைகளின் தரத்தையும் சேவையையும் மேம்படுத்தி,அனைவரும் பயனுறச் செய்யலாமே? மத்திய அரசு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ஈடாக தமிழகத்தில் கட்டித்தர முன்வந்தும் ஏன் இன்னும் செயல் படுத்த முடியவில்லை?

சிவபெருமானை “ ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்கிறது ருத்ரம். எல்லா வைத்தியர்களுக்கும் மேலான, முதன்மையான வைத்தியன் என்பது கருத்து. வைதீஸ்வரன் கோயிலில் சுவாமிக்கு வைத்திய நாதன் என்று பெயர். உலகிலுள்ள நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நோய்களைத் தீர்ப்தற்காக இத்தலத்தில் எழுந்தருளினான் என்பது தல புராணம். இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி நோய் நீங்கப்பெற்றோர் அநேகர் உளர். “ தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை“ என்று இத்தலத் தேவாரமும் பெருமானைப் பரவுகிறது.

உலகில் பிறந்துவிட்டால் கூடவே வருவன நோயும்,அவலமும் தான். இன்பம் வருவது சிறிது அளவே தான். இதனை உணர்ந்த முன்னோர்கள் இனி ஒரு பிறவி வேண்டாம் என்று வேண்டினார்கள். அனாயசமான மரணம் இறுதிக் காலத்தில் ஏற்படவேண்டும் என்று சிவ பூஜையில் ஒவ்வொரு நாளும் பரமேசுவரனை பிரார்த்திக்கிறோம். ஆஸ்பத்திரியில் முதிய வயதில் வாயிலும் மூக்கிலும் குழாய்களைச் செலுத்தியும், துளித் துளியாக ஆகாரத்தைச் செலுத்தியும் காப்பாற்ற முடியாது போகம் நிலையில், மருத்துவர்களே, “ இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் “ என்னும்போது கைதர வல்லவன் யார் என்று சற்று யோசிக்க வேண்டும். இறைவன் நோயை அகற்றும் மருத்துவன் மட்டுமல்ல. பிறவியாகிய நோயையே அகற்றுபவன். அதனால்தான் அவனை பவரோக ஔஷதீசுவரன் என்கிறோம்.


இனியாகிலும் ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் தமது  அறியாமை நீங்கி மக்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும்.  அதற்குத் தயாராக  இல்லாவிட்டால் இதுபோன்று  உளறாது தன வேலை உண்டு தான் உண்டு என்று இருந்தால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.