Friday, December 23, 2011

கோயில் யானைகள்

யானையை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது என்பது என்னவோ உண்மை தான். பக்தர்கள் அதனை வினாயகராகவும் ,குழந்தைகள் அதை வியப்புடனும் பார்க்கின்றார்கள். பெரிய கோயில்களில் நுழைந்தவுடன் யானையைப் பார்த்துவிட்டுத்தான் சுவாமி தரிசனத்திற்குப் போகிறோம். அது நம் தலையைத் தொடும்போது ஏற்படும் அனுபவம் தனிதான். சிறு குழந்தைகளை அழ-அழ அதன் மத்தகத்தின் மீது ஏற்றி உட்கார வைத்துவிட்டுக் கீழே இறக்குவார்கள் பாகன்கள். கேரளத்தில் சுமார் ஐநூறு கோயில்களில் யானைகள் பராமரிக்கப் படுகின்றன என்கிறார்கள். தமிழகத்திலும் பெரிய தேவஸ்தானங்களில் யானைகள் இருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் யானைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் போருக்குச் செல்பனவாகவும் இருந்தன. அரசன் யானை மீதிருந்தே போரிட்டு மாண்டால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று சிறப்பிக்கப் படுகிறான். மேலும், எடையுள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் யானைகள் பயன் படுத்தப்பட்டன. காட்டில் வெட்டப் பட்ட மரங்களை நதிக்கரைக்கு இழுத்துச் செல்ல யானைகள் உபயோகிக்கப்பட்டன. யானைகளின் லக்ஷணங்கள், அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி நூல்களும் இயற்றப்பட்டன. கோயில்களுக்கென்று விடப்பட்ட யானைகள் அருகிலுள்ள நதியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரவும், திருவிழாக்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. சில ஆலயங்களில் கஜ பூஜைகள் நியமத்துடன் நடைபெற்றன.இன்னும் சொல்லப்போனால், குருவாயூர் ஆலயத்திலிருந்த கேசவன் என்ற யானையின் படம் பல வீடுகளில் பூஜை அறையை அலங்கரிக்கிறது.

தற்காலத்தில் கோயில் யானைகளின் நிலையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய பிராணியை நாட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. " யானையைக் கட்டித் தீனி போடுவது போல" என்றும், "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசுகிறோம். கோயில் யானைகள் வயிறார சாப்பிடுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆறுகளில் அமிழ்ந்து குளிக்க வேண்டிய யானைகளை கோயில் வளாகத்தில் குழாய் நீரால் குளிப்பாட்டுகிறார்கள். பிறகு கோயிலைச் சுற்றி ஒரு வலம். கொடிமரத்தடியில் நின்று சன்னதியை நோக்கி துதிக்கையால் வணக்கம் தெரிவித்து விட்டு மடப்பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறது. மூன்று நான்கு உருண்டைகளாக சாத உருண்டைகள் வாய்க்குள் திணிக்கப் படுகின்றன. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது, கொடிமரத்தருகில் போடப்பட்ட தென்னை மட்டையைத் தின்றபடியே, வருவோரிடம் பாகனுக்காக எடுக்கப்படும் பிச்சை. ஒரு காலையும் கனத்த இரும்புச் சங்கிலியால் கட்டிவிடுகிறார்கள். அப்படிக் கட்டப் படும் காலும் காலின் அடிப்புறமும் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

பழக்கப் படுத்தப்பட்ட யானைகளே சில சமயம் மிரளுவதும், மதம் வந்து ஓடுவதும் உண்டு. இந்தமாதிரி சமயங்களில் பல பாகன்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு யானை, பாகனை மிதித்துத் துதிக்கையால் வீசியெறிந்து கொன்றதாகச் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவும் நடந்தும். யானையின் அருகில் பலத்த வெடி சப்தமும்,வான வேடிக்கையும், செண்டா போன்ற வாத்தியங்களும் தொடர்ந்து முழங்குகின்றன. விழாக்காலங்களில் யானையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது யானை மிரண்டால், மக்களே ஒருவர்மேல் ஒருவர் மிதிபட்டு உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் படங்களோடு செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன(அவற்றில் ஒரு சில படங்களையே இப்பதிவில் காண்கிறீர்கள்.அவர்களுக்கு நம் நன்றி உரியது.)

தமிழக அரசு, கோயில் யானைகளைப் புத்துணர்ச்சி(!) முகாமுக்காக 48 நாட்கள் முதுமலை காட்டில் பாகன்களோடு அனுப்பி வைக்கிறது. இவற்றை லாரிகளில் ஏற்றும் சிரமம் ஒரு பக்கம். திரும்பிவந்தபிறகும் இதே உண்டைகட்டியும், கால்சங்கிலியும் தொடரும் தானே? இங்குதான், தற்கால சூழ்நிலையில் கோயில்களுக்காக யானைகள் தேவைதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருவானைக்காவல் போன்ற யானை வழிபட்டதாகப் புராணங்களில் கூறப்படும் தலங்களில் மட்டும் அந்த ஐதீகத்திற்காக யானைகள் பராமரிக்கப்பட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஒரு யானையைப் பராமரிக்க ஆகும் செலவில் பல பசுக்களைக் கோயில்வளாகத்தில் வளர்க்கலாம். அவற்றால் பயனும் உண்டு.(யானையால் என்ன பயன் என்பது வேறு விஷயம்) . மக்களுக்கு-- குறிப்பாக பாகன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவும் முடிகிறது. பசுமாடுகளைப் பராமரிக்க ஒரு சிலரை நியமிக்கலாம். கால நடை மருத்துவர் மூலம் அவற்றின் நலனையும் பேணலாம். யானைகளுக்கும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். அவற்றிற்கு உண்மையிலேயே "புத்துணர்ச்சி" கிடைக்கும். அரசாங்கப் பணமும் மிச்சமாகும்.

Thursday, December 1, 2011

ஆண்டவனே கதி


பல கோயில்கள் "கமர்ஷியலாக" ஆகி வருவதாக அங்கலாய்த்துக் கொள்வோர்கள் உண்டு. அப்படி ஆகாத கோயில்கள் ஏராளமாக இருக்கும்போது அங்கு ஏன் செல்லக்கூடாது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மின்சாரக் கட்டணம் என்று வரும்போது அரசாங்கமும் கோயில்களைக் "கமர்ஷியல்"களாகவே பார்க்கிறது. வீடுகளுக்கான கட்டணத்தையே கோயில்கள் செலுத்திக் கொண்டு இருந்ததை "கமர்ஷியல்" கட்டணமாக அரசு உயர்த்தியபோது ஒருசிலர் அதிருப்தி தெரிவித்தபோது, " சுவாமிக்குப் பின்னால் ஒளி வட்டம் இருப்பது போல் படம் போடும் போது மின் விளக்கு எதற்கு?" என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஏளனம் பேசியவரும் உண்டு.

தற்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த உத்தேசித்திருக்கும்போது, குறைந்த கட்டணத்தையும், பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்தையும் உயர்த்த சிபாரிசு செய்யப்படுகிறது. எல்லாக் கோயில்களும் பழநியோ,திருச்செந்தூரோ,மதுரையோ அல்ல. எந்த விதமான வருமானமும் இல்லாத கிராமக் கோயில்கள் ஏராளம். நிலங்களில் இருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் தவிக்கும் ஆலயங்கள் ஏராளம். நிலைமை இப்படி இருக்கும் போது, மின்கட்டண உயர்வை அக்கோயில்கள் எப்படி சமாளிக்க முடியும்? .  அரசுக்குப் பரிந்துரைக்கும் குழு இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

வீடுகளுக்கான மின் கட்டணமும் உயர்வதைத் தட்டிக்கேட்போர் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளும் இருக்கின்றன. ஆலயங்களோ அனாதையாக விடப்படுகின்றன.இவ்வளவு ஆன்மீகவாதிகளும்,மடாதிபதிகளும் இருந்தும் யாரும் அதிருப்தி தெரிவிக்கக் காணோம்.மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு, மடங்கள் வெளியிடும் பத்திரிகைகளுக்கும் தபால் தலை கட்டணத்தை உயர்த்தியபோது, திருவாதிரையான் திருவருட்சபை , அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதன் நகல, திருவாவடுதுறை ஆதீன மாத இதழான "மெய்கண்டார்"ல் வெளியாயிற்று.

ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பெரும்பாலும் அப்பூஜைகள் பகலிலேயே நடக்கின்றன என்றாலும் கிணற்று/ ஆழ் துளை நீரைப் அபிஷேகத்திற்காகப்பயன்படுத்த வேண்டி மின்சார மோட்டார் வேண்டியிருக்கிறது. மழைக் காலங்களில் பகல் நேரத்திலேயே கோயிலுக்குள் கும்மிருட்டாக இருப்பதால் மின் விளக்குகள் தேவைப் படுகின்றன. பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வரவில்லையா எனக் கேட்கலாம். உண்மைதான். எண்ணெய் வாங்க மன்னர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்கள் கைப்பற்றப்பட்டு விட்ட தற்காலத்தில் இது சாத்தியமில்லாமல் போய் விட்டது அல்லவா? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தும், "மின்சார நிதி" என்று மக்களிடம் கை ஏந்தவேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டு விட்டன நம் ஆலயங்கள்? ஒரு பல்பு செயலிழந்து போனால் உபயகாரர் யாராவது வாங்கிக்கொடுத்தால் தான் அதற்கு விடிவு காலம்.

இப்படிப்பட்ட துர்பாக்கியக் காலகட்டத்தில் பக்தர்கள் செய்யக்கூடியதும் உண்டு. குறைந்த மின் செலவு ஆகும் பல்புகளை ஆலயத்திற்கு வழங்கலாம். சூரிய ஒளிமூலம் மின்சாரம்  பெறும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இரவு நேரத்தில் ப்ராகாரங்களுக்காவது ஒளி இவ்விதம் பெற முடியும். தேவையற்ற இடங்களில் மின்சாரம் வீணாவதைத் தடுப்பதாலும் மின் கட்டணம் குறையும்.

மின் வெட்டுக்களும், மின் கட்டண உயர்வும் இருக்கும்போது, கோயில்களைப் பாதுகாக்கும் "பாதுகாப்பு அலாரங்களுக்கு" என்ன வேலை? பழையபடி பாதுகாப்பின்றிக் கிடக்க வேண்டியதுதான். இவ்வாறு அக்கறையின்றி விடப்பட்ட ஆலயங்களுக்கு என்னதான் தீர்வு? தோன்றாத்துணை ஆகிய இறைவனுக்காக நீதி மன்றங்களில் முறை இடலாம். எதற்கெல்லாமோ நிலுவை பெறப் படும் இக்காலத்தில் இதற்குக் கிடைக்காமலா போய்விடும்?  ஆனால் இப்பொதுநல வழக்கை இறைவனுக்காகத் தொடுப்போர்தான் இல்லை. அனாதை ஆகிவிட்ட ஆலயங்களுக்கு அந்த ஆண்டவனே கதி.

Friday, November 25, 2011

தெரிந்த புராணமும் திரிக்கப்படும் "கதைகளும்"

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் எழுதும் ஆன்மீகக் கட்டுரைகள் பிழை இல்லாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கடைசிபக்கத்தை எப்படியோ நிரப்பி விடுகிறார்கள். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதும் இல்லை. அண்மையில் ஒரு ஆன்மீக இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர், "நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க" என்ற தலைப்பில் தனக்குத் தோன்றிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்!

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நந்தனாருக்காக நந்தி விலகியதைப் பற்றித்தான். புராணத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு, நந்தியை சிவபெருமான் விலகச் சொன்னார் என்று மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இது நடந்த இடம் தில்லை என்று எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் திருப்புன்கூர் சிவலோகநாதர் சன்னதியின் முன்னால் இருக்கும் பிரம்மாண்டமான நந்தியே விலகியது என்பதை," புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளி.." என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

இக்காலத்தில் குறுக்கே மறைத்துக் கொண்டு நின்றால், "நந்தி மாதிரி" மறைப்பதாகத் தவறாகக் கூறி வருகிறார்கள். சிவாலயங்களிலாவது நந்திக்குப் பின்னால் நின்றால் கொம்புகளுக்கு நடுவழியாகப் பெருமானை தரிசிப்பார்கள். பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு முன்னால் கைகூப்பி நிற்கும் கருடாழ்வாரைச் சுற்றி சன்னதியே கட்டியிருப்பதைப் பார்க்கலாம். இப்படி இருந்தும், "கருடன் மாதிரி குறுக்கே மறைப்பதாகக் " கூறுகிறார்களா என்ன?


சரி! இனி அவர் எழுதியுள்ள பட்டீஸ்வரம் கதைக்கு வருவோம். சம்பந்தர் சிவிகையில் வருவதைக் காண "எம்பெருமாட்டி ஆசைப்பட்டாளாம்." அத்தலத்தில் இறைவன் முன்பிருக்கும் நந்திகள் சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம். இதோடு விட்டால் பரவாய் இல்லை. நந்தியைத் தள்ளிவைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா" என்று ஒரு அறிவு ஜீவி கேட்டதாக வேறு எழுதியிருக்கிறார். அவர் கேட்டதாகவே இருக்கட்டும். அக்கேள்வி உலகம் முழுவதுக்கும் தெரிந்துதான் ஆக வேண்டுமா? இதெல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். " நம்பிக்கை --- அதானே எல்லாம்?" என்று ஒரு நகைக்கடை விளம்பரம் செய்வதையுமா இவர் டீ.வீ யில் பார்க்கவில்லை?


"தெரிந்த புராணம் ... தெரியாத கதை" என்ற தலைப்பில் அதே ஆன்மீக இதழின் வேறு ஒரு பக்கத்தில் , தனது பெயரின் முன் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு ஒருவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. பைரவரையும் பிக்ஷாடனரையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருக்கிறார். " பரமேஸ்வரனே பாவம் செய்த கதை" என்று வேறு எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. முதலில் இவருக்குத் தெரியாத/ படித்திராத புராணத்தைக் கூறுவோம். பதினெட்டுப் புராணங்களை நமக்குத்தந்த வியாச பகவான், அவற்றுள் ஒன்றான ஸ்காந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டம்,தக்ஷ காண்டத்தில், சிவாம்சமான பைரவ மூர்த்தி, பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவனது அகந்தையை அகற்றி, அவனது கபாலத்தில் விஷ்ணு தனது நெற்றியைப் பிளந்து, ரத்தத்தால் நிரப்ப முற்பட்டபோது மூர்ச்சை ஆகவே, மாங்கல்யப் பிச்சை கேட்ட மஹாலக்ஷ்மிக்கு இரங்கி விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். சிவனுக்குப் பிரமகத்தி தோஷம் வந்ததாகக் கூறவில்லை.


பிக்ஷாடன மூர்த்தம் என்பது தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகக் கொண்ட கோலம். இதற்கும் பைரவ மூர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?? எந்த தெய்வத்தையும் இழிவு படுத்தாமல் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இன்ன இன்ன கோத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய ஆலயங்கள் என்றும், இன்ன ராசி மற்றும் இன்ன நக்ஷத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதட்டும். அப்படியாவது சிலர் அக்கோயில்களுக்குப் போகிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது.


ஆன்மீக உலகில் மலைகள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவரவர்கள் பிரபலங்களாகிவிட்டால் போதும்.பிறகு ஆன்மிகம் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பிரசுரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் தான் தயாராக இருக்கிறார்களே?

Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?



ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?   

Tuesday, October 25, 2011

நல்ல பண்புகள்


தீபாவளி என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவை புதிய ஆடைகளும், பட்சணங்களும், பட்டாசுகளுமே தான்.
சிலருக்கு நரகாசுரன் கதையும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு டீ.வி.யில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைக்கு வரும் படங்களும் கூட ஞாபகம் வரும். ஆனால் நமக்கு நினைவுக்கு வராத எவ்வளவோ இருக்கும்போது அவற்றையும் சிறிது சிந்திக்க வேண்டியிருக்கிறது.


தீபாவளி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்கள்.

எல்லாம் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள்.

குடும்பத்தவர் காலம் சென்றதால், ஓராண்டு பண்டிகை கொண்டாடாமல் இருப்பவர்கள்.

குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டோர்.

குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் தனியே வசித்து வேலை செய்பவர்கள்.

உற்றார் உறவினர் இருந்தும் பாசம் என்பதையே அனுபவிக்காதவர்கள்.

வசதிபடைத்த வீட்டுப் பையன்கள் முகத்தையே பாவமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் வெடித்துச் சிதறிக் கிடந்த வெடிகளைப் பொறுக்கிக்கொண்டுபோய் தானும் வெடிக்க ஆசைப் படும் ஏழைச் சிறுவர்கள்.

போரில் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டு அயல்நாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது ஜவான்கள்.


இப்படிப் பலதரப்பட்ட மக்கள் தீபாவளியை இன்பமாகக் கொண்டாடமுடியாமல் துன்பப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி எண்ணுவதாலும். ப்ரார்த்திப்பதாலும் அத்துன்பச்சுமை உடனே குறையப் போவதில்லை என்றாலும், நமக்கு இரக்க குணம் ஏற்பட வகை செய்கிறது அல்லவா? இந்த குணம் இல்லாததால் தான்
தற்காலத்தில் சுயநலம் ஓங்குகிறது. இல்லாதவனுக்கு இரக்கப்படுவதும் அவனுக்கு உதவுவதும் இருப்பவனது கடமை. இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் முற்பிறவியில் அவர்கள் நல்வினைகளைச் செய்யாததால்தான் என்கிறார் திருவள்ளுவரும்.

நமக்கு நல்ல குணங்கள் வர வேண்டும் என்று ஈச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும். " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே." என்று அப்பர் தேவாரம் சொல்கிறது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருமூலர் பாடியருளியதுபோல், நாமும் சிந்திப்போமானால் நமது எண்ணங்கள் உயர்ந்தவை ஆகும்.

ஜனங்களின் நல்ல குணங்கள் போய்விடக்கூடாதே என்று கவலைப் படும் விதமாக 1949 ம் வருடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஆற்றிய உரையை 19.5.2004 தேதியிட்ட "துக்ளக்" இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது:


" பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்கத்தில் போய் ஈசன் அருளை அடையவோ ஜனநாயகம் உதவுகிறதா அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு சகாயம் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். "Of the people,by the people,for the people" என்றெல்லாம் என்னென்னவோ
சொல்கிறார்களே, அதெல்லாம், விஷயம் தெரியாத மக்களால், விஷயம் தெரியாத (ஆனால் சுய நலம் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த சர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்று கூடப் பயப்படும்படி இருக்கிறது. உத்திர மேரூர் சாசனத்தில் உள்ள எல்லா clause க்கும் ஷரத்துக்களுக்கும் அடிப்படை , வேட்பாளருக்கு அர்த்த சுத்தியும்,ஆத்மசுத்தியும் இருக்க வேண்டும் என்பதே.  தற்போது குற்றவாளி என்று நிரூபணம் ஆனவரைத்தவிர எவரும் வேட்பாளராக நிற்க முடியும். இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லை இல்லை.பெரிய தப்புகள்கூட, சாமர்த்தியமாகப் பண்ணிவிட்டு சாட்சியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது.
பிரஜைகள் அத்தனை பேரின் அர்த்த,ஆத்ம சுத்திகள் கெட்டுப்போக வழி செய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல் முறை செய்யப்பட்டிருக்கிறதே  என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பிறகு, இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கும்போது, எல்லோரும்
நிதானம் இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல்,விவஸ்தை இல்லாமல் கிளம்புவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை காட்டுவதற்காக தர்மத்தில் சிறுமை அடைந்துவிட்டால் நம்முடைய ஜனநாயக வேஷம், பிராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கின்ற மாதிரி தான். நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால் பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால்,எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது? "

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பெரியவர்கள் கவலை தெரிவித்தார்கள். அதுவோ சுயநலத்தின் ஆரம்பகாலம். இப்போதோ அது வேரூடிக் கிடக்கிறது. உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் இதை சிந்திக்க வேண்டும்.

பிறர் நலம் பற்றி அக்கறை கொண்டால் தேசநலம் ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட ஞானத்தை, ஞான பரமேச்வரனாகிய தக்ஷிணாமூர்த்தி நமக்கெல்லாம் அருள வேண்டும்.

                       "வையகமும் துயர் தீர்கவே." --- சம்பந்தர் தேவாரம்.

Friday, October 21, 2011

தீபாவளி சிந்தனை

"சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே" என்று பரமேச்வரனைத் துதிக்கிறது திருவாசகம். பிரதி மாதமும் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாக அப்பெருமானை ஆராதிக்கிறோம். தீபாவளி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியும் அவனை ஆராதிப்பதறகாகவே ஏற்பட்டது. மாசியில் வருவது மகாசிவராத்திரியாக மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் கார்த்திகை தீபத்தன்று வீடுகளில்
தீபம் ஏற்றி வழிபடுவதைபோல வடநாட்டில் தீபாவளியன்று மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக்குகிறார்கள். சோதியுள் சோதியாக ஈச்வரன் இருப்பதாகத் திருவிசைப்பாவில் வருகிறது. அது யாரோ ஏற்றிவைத்த ஜோதி அல்ல. ஸ்வயம் ஜோதி.அவனே ஸ்வயம் பிரகாசன். அது இருளை அகற்றும் சாதாரண விளக்கு அல்ல.கோவிலில்
விளக்கு ஏற்றினால் ஞானம் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அல்லவா? ஆகவே, இந்த விளக்கு நமது மனத்தில் உள்ள அஞ்ஞானமாகிய இருட்டை நீக்கும் ஞான விளக்கு. ஞானம் கிடைத்துவிட்டால் நல்ல அறிவும் பெற்றுவிடுவது சுலபமாக
ஆகி விடுகிறது. "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே:" என்று மாணிக்கவாசகரும் பாடினார்.

தீபாவளியைக் கொண்டாடும் சமயத்தில் நாம் ஜோதிஸ்வரூபனாக இருக்கும் ஈச்வரனைத் தியானிக்க வேண்டும். அன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் சுவாமிக்குப் புது வஸ்த்திரம் வாங்கித்தந்து சமர்ப்பிக்கலாம்.
நமக்குப் புதுத் துணிமணிகள் வாங்கும் வசதி தந்த தெய்வத்துக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா? அதிலும் முக்கியமாக ஒரு கால பூஜையோ அல்லது அதுகூட இல்லாமலோ கவனிப்பார் அற்று இருக்கும் பழங்காலக் கிராமக் கோயில்களுக்கு
இதைச் செய்யலாம். சிறந்த சிவபுண்ணியமும் கூட. அன்றைய தினம் எந்த கிராமக் கோயிலும் மூடியிருக்கக் கூடாது. இதுவே சுவாமியிடம் அன்றைய தினம் நாம் செய்யும் பிரார்த்தனை.

இன்னொரு முக்கியமான சிந்தனையையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது..நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம், தற்காலத்தில் விலைவாசிகள் விஷம் போல ஏறுவதால் குடும்பம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது. ஆள் கூலியும் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேல் நானூற்று ஐம்பது வரை ஆகிறது. நிலைமை இப்படி இருக்க, கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களுக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளமே தரப் படுவதை, அரசாங்கமோ,பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. வெளியூர்க்காரர்கள் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து கொடுத்தபின்பும் ஊர்மக்கள் ஒன்று கூடி அர்ச்சகருக்கு ஐயாயிரம் ரூபாயாவது மாத வருமானம் கிடைக்க வழிசெய்யலாம் அல்லவா? சில ஊர்களில் மண்டலாபிஷேகம் செய்யக்கூட
உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை. இச்செய்கைகள் மூலம் மனம் நொந்துபோய் ஊரை விட்டே வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர் செல்லும் அர்ச்சகர்களுக்கு யார் ஆதரவு தரப் போகிறார்களோ தெரியவில்லை. பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத அவல நிலை உருவாகிறது. ஒரு கிராமத்தில் நூறு வீடுகள் இருந்தால், மாதம் ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய் தந்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் பாதியை அர்ச்சகருக்கு சம்பளமாகவும்,மீதியை வங்கியில் சேமித்து, கோயிலை நிர்வகிப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கேபிள் டீவி க்கு மாதம் அலட்சியமாக நூறு ருபாய் தருபவர்கள் இந்த சிவ தர்மத்தையும் செய்தால், அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும், கோவிலையே நம்பியிருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றலாம். கோவிலும் பூஜைகள் நின்று பூட்டப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மனம் கொண்ட ஒருவராவது முன்வந்து கிராமவாசிகளுக்குப் புரியும்படியாக எடுத்துச் சொல்லி கோவில்களில் விளக்கேற்றலாம் தானே? சிவனருளே இதற்குத் துணைசெய்யவேண்டும்.

Tuesday, October 4, 2011

தலையாலங்காட்டில் தலையாய திருப்பணி




சிவாலயங்களில் திருக்குளத்தையும் நந்தவனத்தையும் பராமரிப்பது குறித்து எழுதியிருந்தோம். இதை உடனடியாகச் செயல்படுத்துவதே ,பிறருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று எண்ணியபடியால் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள தலையாலங்காடு என்ற தலத்தில் முதலாவதாகத் துவங்கத் திருவருள் கூட்டியது. இக் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல் மெதுவாக நடைபெற்று வருகின்றன. நாமும் நம்மால் இயன்ற அளவில் இச்சிவ புண்ணியத்தில் பங்கேற்க வேண்டும். நமது சந்ததிகளும் இதைப் பின்பற்றவும் நற்கதி பெறவும் கிடைக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது.


பல ஆண்டுகளுக்கு முன்பு , அருகில் உள்ள செம்பங்குடிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்கள் தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கு இக் கோயிலுக்கு வந்து எதிரில் உள்ள சங்க தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வருவார்களாம்.இப்படியாக ஒரு மண்டல காலம் தினசரி தரிசனத்திற்கு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபோல் நாமும் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்பதைத், தானே அனுசரித்துக் காட்டினார்களோ என்று தோன்றியது. எனவே நாம் அங்கு தரிசனத்திற்காகப் போகும்போது பதினொரு பிரதக்ஷிணம் செய்யும்படி எண்ணம ஏற்பட்டதால் அவ்விதமே நம்மை செய்வித்ததும் அவன் அருள் தான்.


அதேபோல நந்தவனப் பணியையும் துவங்கத் திருவருள் கூட்டியது. நித்திய பூஜைக்குத் தேவையான அரளி, பாரிஜாதம் (பவழ மல்லிகை) , செம்பருத்தி போன்ற மலர்ச் செடிகளின் கன்றுகளையும், வில்வம், வன்னி போன்ற மரக் கன்றுகளையும் வாங்கிவந்தோம். அவற்றை நடுவதற்கு முன் வெளி பிராகாரத்தில் செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டன. செடிகளுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்ப்பதற்காக நூறு அடி நீளமான ஹோஸ் வாங்கித்தரப்பட்டது. ஆடு மாடு முதலியவற்றால் செடிகள் அழியாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் படும். மழைக் காலம் துவங்க இருப்பதால் செடிகளும் கடும் வெய்யில இல்லாததால் நன்கு வளர எதுவாக இருக்கும்.


கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான வியாதிகளால் அவதிப் படுவோர் பலர் இதில் ஸ்நானம் செய்து நோய் நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவத்தால் காணும் உண்மை. குளத்தில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. படித்துறை சில இடங்களில் செப்பனிட வேண்டியுள்ளது. தூய்மைசெய்யும் பணி ஓரிரு தினங்களில் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற அன்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதானால் இப்பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். குளத்தங்கரை விநாயகர், கோஷ்ட துர்க்கை, திருஞான சம்பந்தர் சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்திகள் நூதனமாகச் செய்யப்பட்டுப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அம்பாள சன்னதிகளின் முன்பு தளவரிசை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தலத்து விசேஷ மூர்த்தியான அனுக்ரஹ சனி பகவான் சன்னதியைப் புனரமைக்க வேண்டும். மடப்பள்ளி மேற்கூரை பழுதடைந்துள்ளது. ஸ்தல வ்ருக்ஷ மேடை, சுவாமிக்குப் பின்னால் திருமாளிகைப்பத்தி மேடை ஆகியவை அமைக்கப் படவேண்டும். கோவிலின் உட்பகுதியில் மின்சார இணைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. இதை முற்றிலும் புதுப்பிக்கவேண்டும்.


அப்பர் சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற இப்புராதனமான கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய கோயில்கள் கட்டுவதில் ஆர்வம காட்டுபவர்கள் இதுபோன்ற ஆலயங்களின் திருப்பணிக்கும் உதவலாமே. சிவனருள் அதுபோன்ற சிந்தனையை வழங்குமாறு பிரார்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் கிராமங்களில் எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆலய மகிமை தெரிய வருவதோடு, பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்பட வகை செய்யும். இப்போது நடந்துவரும் ஓரிரு கால பூஜைகளும் அறவே நின்றுவிடாதபடி காப்பாற்றப்படவேண்டும். புராதன ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.


தலையாலங்காடு ஆலய அமைப்பு மற்றும் தல புராணம் பற்றிய விரிவான தகவல்கள், நமது மற்றொரு பதிவான, "சிவார்ப்பணம்.ப்ளாக்ஸ்பாட்.காம் " என்ற முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விரும்புவோர், 9443500235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, September 11, 2011

திருக்குளமும் நந்தவனமும்



ஸ்ரீ பரமேச்வரன், பலவகைப்பட்ட நீர் நிலைகளின் வடிவங்களாகவே இருப்பதாக ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. சிறு வாய்க்கால் நீராகவும், மலையிலிருந்து விழும் அருவியாகவும், மடுக்களில் உள்ள நீராகவும் ஓடை நீராகவும், நதியாகவும், சிறு குட்டைகளில் உள்ள நீராகவும் ,கிணறுகளில் உள்ள நீராகவும், மழை நீராகவும், பிரளய நீராகவும் இருப்பதாக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தாவது, ஜலத்தைக் கண்டவுடன் சிவஸ்வரூபம் என்ற எண்ணம நமக்கு வரவேண்டும். பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றான திருவானைக்காவை, "செழு நீர்த் திரளைச் சென்று ஆடினேனே" என்றும், "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்" என்று திருவாலங்காட்டையும் அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். நீர் மற்றும் நதிகளின் பெயரோடு சேர்ந்து, "ஜலகண்டேஸ்வரர்" என்றும் "கங்கா ஜடேஸ்வரர்" என்றும் சுவாமி பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல ஊர்களின் ஸ்தல புராணங்களில், தீர்த்தப் படலம் என்று தனியாக ஒரு படலமே பாடியிருக்கிறார்கள். திருவிடை மருதூர் காருண்யம்ருத தீர்த்தமும், மதுரையின் பொற்றாமரையும், ஸ்ரீ வாஞ்சியத்தின் குப்த கங்கையும், வேதாரண்யம் மணிகர்ணிகையும், திருவெண்காட்டு முக்குளமும், சிதம்பரம் சிவகங்கையும், திருவாரூர் கமலாலயமும், வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்தத் தீர்த்தமும் சில உதாரணங்களாக இங்கு எடுத்துக் காட்டலாம். ராமேச்வரத்தில் தீர்த்தமாடுதல் பிரசித்தமாகக் காணப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமையை அறியாதார் இலர்.


சில ஊர்களில், அருகில் உள்ள நதிகளில் தீர்த்தவாரியும் , அதற்காகவே அமைக்கப் பட்ட ஸ்நான கட்டங்களும் உள்ளன. காவிரிக் கரையில் உள்ள மாயூரம், திருவையாறு, கும்பகோணம்,கொடுமுடி,பவானி, திருப்பராய்த்துறை போன்ற தலங்கள் இவ்வகையில் அடங்கும்.



இத்தனை பெருமை வாய்ந்த தீர்த்தங்களையும், நதிகளையும் நாம் நன்கு பராமரிப்பதில்லை. திருக்குளங்கள் பாசி பிடித்தும்,குப்பைகளோடும் காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் கோயிலுக்கு வெளியில் உள்ள திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. அவற்றை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். இன்னும் பல இடங்களில் குளங்கள் வறண்டும் , செடிகள் முளைத்தும் பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. ஆலயத் திருப்பணி செய்பவர்களும் நிதிப் பற்றாக்குறை காரணமாகக் குளங்களைத் தூய்மைப் படுத்த முடிவதில்லை. கிராம சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் வாயிலாக இக் குளங்கள் தூர்வாரப்பெற்றுக் காப்பாற்றப்படவேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி உண்டு. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். செய்வார்களா??


"வ்ருக்ஷேப்ய:" என்று ஸ்ரீ ருத்ரம், மரங்களின் வடிவாகவே சுவாமி இருப்பதாகப் போற்றுகிறது. மரமாகவும் செடியாகவும் கொடியாகவும் மரக் கிளைகளாகவும், உலர்ந்த கட்டையாகவும் அதில் ஈச்வரன் குறிப்பிடப்படுகிறான். வில்வவனேச்வரர்,வடாரண்யேச்வரர், தர்பாரண்யேச்வரர், ஏகாம்பரேச்வரர் முதலிய நாமங்கள் விருக்ஷங்களோடு தொடர்பு உடையவை. மற்ற ஊர்களில் குறைந்தது வில்வ வ்ருக்ஷமாவது பிராகாரத்தில் வளர்க்கப்படவேண்டும். திருப்பணி செய்வோர் ,நந்தவன அபிவிருத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது. பல இடங்களில் இலவசமாகவே மரக் கன்றுகளைத் தருகிறார்கள். நாம் அவற்றைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. கேட்டால், "யார் தினம் தண்ணீர் ஊற்றுவது? " என்கிறார்கள். எனவே, கிராமக் கோயில்களில் சுவாமிக்கு சார்த்துவதற்கு பூக்களோ மாலைகளோ இருப்பதில்லை. ஒருக்கால் நந்தவனத்தில் பூக்கள் இருந்தாலும் அவற்றை பூஜா காலத்தில் பறித்துத் தருவார் இல்லை!! முருக நாயனார் கதையையும், செருத்துணை நாயனார் கதையையும் எறிபத்த நாயனார் கதையையும் இருந்த இடத்திலிருந்தே குருபூஜைக்காகப் பாராயணம் செய்வதைவிட, அன்றைய தினமாவது ஒரு கோயிலுக்குச் சென்று புஷ்ப கைங்கர்யம் செய்யலாமே. அதுதான் உண்மையான குருபூஜையும் கூட. நந்தவனங்களும் குளங்களும் அழிவதைப் பார்த்துக்கொண்டே , "காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்று இருந்த இடத்திலேயே தேவாரம் பாடிக்கொண்டு இருப்பதைவிட, சம்பந்தரின் உபதேசத்தை ஏற்று செயல் படுத்துவதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.


சிவனருளால் ஏற்பட்ட இந்த சிந்தனையைத் தலைமேற்கொண்டு நம்மால் இயன்ற அளவில் நந்தவனப் பணியும் திருக்குளப் பணியும் செய்ய நமது சபை தீர்மானித்துள்ளது. இதற்கான செயல் திட்டங்கள், அணுகு முறைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் அடியார்களின் ஈடுபாடும் நம்மை முன்னின்று நடத்தும் சிவனருளும் இப்பணிக்கும் உறுதுணையாக இருக்கும். "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"

Thursday, August 11, 2011

அன்ன தானமும் ஆலய பூஜையும்



"தானங்களில் சிறந்தது அன்ன தானம்" என்றும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் சொல்வதால் அன்ன தானத்தின் உயர்வு தெரிய வரும். திருவிழா நாட்களில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக பழங்காலத்திலிருந்தே அன்னதான சத்திரங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. சில ஆலயங்களில் தரிசனத்திற்காக வரும் தேசாந்திரிகளுக்காக அன்ன தானக் கட்டளைகள் அமைக்கப்பட்டன. வசதிகள் அற்ற சிறு கிராமங்களில் உள்ள கோயில்களைக் காண வரும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு பெரிதும் பயன் பட்டது. இப்பொழுது அரசாங்கமே, பல கோயில்களில் அன்னதானம் செய்ய முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது. அதே சமயம், ஆலயங்களில் செய்வதற்கும் ,சமுதாய கூடங்களில் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல் படுவது நல்லது. சமூகக் கூடங்களில் மதிய உணவு அளிப்பது போல அல்லாமல்,கோயில்களில் உணவளிப்பதன் முன் கூட்டு வழிபாடு செய்யப்படவேண்டும். இறைவனது பிரசாதமாக உணவு அளிக்கப் படுகிறது என்று உண்ண வருபவர் அனைவரும் உணரச்செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்கு உணவு அளிப்பதானால் , ஒரு கோயிலுக்கு, ஒரு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



கோயில்களில் அன்னதானம் செய்ய வரும் அரசாங்கம், கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர் நலனையும் கவனத்தில் கொள்வது நல்லது. பல கோயில்களில் மாத சம்பளமாக (ஒரு கால பூஜை செய்வதற்கு) இருநூறு ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.இதை வைத்துக் கொண்டு எப்படிக் குடும்பத்தை நடத்துவார்கள் என்று சிந்திக்க வேண்டும். இதனால் வருமானத்தைத் தேடி நகரங்களுக்குக் குடியேறும் நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் ஆன பல கிராமக் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.





திருவாரூர் அருகில் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திற்கு அண்மையில் சென்றிருந்தோம்.புராணச் சிறப்புமிக்க இச்சோழர் காலக் கோயிலை நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் பல ஆண்டுகளுக்குமுன்னர் திருப்பணி செய்திருக்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுப் பொலிவுடன் திகழும் இக் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மெய்க்காவலர் உதவியதால் ஆலய தரிசனம் செய்தோம்.நித்திய பூஜை நடைபெறுவதில்லை என்று அப்போது தான் தெரிய வந்தது. இரண்டு ஆண்டுகளாக விசேஷ நாட்களில் மட்டும் பூஜை நடை பெறுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறினார். கோயிலின் நிர்வாக அதிகாரியோ அல்லது கிராம மக்களோ முயன்றிருந்தால் ஒரு அர்ச்சகரை ஏற்பாடு செய்திருக்க முடியும். நிர்வாகமோ, மக்களோ அவரது சம்பளத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வராததால் இந்நிலை நீடிக்கிறது.



இத்தலத்து இறைவர் மாணிக்க வண்ணர் என்று சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறார். ராஜேந்திர சோழனும் அவனது தம்பியும் தங்கள் தந்தை விட்டுச்சென்ற ரத்தினங்களைப் பிரித்துக்கொள்ள முற்பட்ட பொது, இத்தல இறைவர் இரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றிப் பிரித்துத் தந்ததாகவும், அதனால் மகிழ்ந்த சகோதரர்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் இரத்தின ஆபரணங்கள் அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனால் சுவாமிக்கு ரத்னபுரீச்வரர் என்று பெயர் ஏற்பட்டது. யானை ஒன்று இங்கு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபாட்டு முக்தி அடைந்ததாகப் புராணத்தால் அறியலாம்.





சுந்தரர் இங்கு வந்தபோது கோயிலில் இறைவரைக் காணாது திகைத்தபோது, விநாயகப் பெருமான் , பக்கத்தில் உள்ள வயலில் அம்பிகையுடன், சுவாமி நாற்று நட்டுக் கொண்டிருப்பதைத் தனது திருக் கரத்தால் சுட்டிக் காட்டினாராம். கைகாட்டிய விநாயகர் சன்னதி கோயிலுக்கு எதிரில் உள்ளது.





அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோட்புலி நாயனார் அவதரித்த பதி இது. சிவத்தல யாத்திரையாக இங்கு வந்த சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்றுப் போற்றிய கோட்புலியார், தனது மகள்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரருக்கு மணம் முடிக்க முன்வந்தபோது, அதை மறுத்த சுந்தரர், அவ்விருவரையும் தன் மகள்களாக ஏற்றதோடு, தனது பதிகங்களில் தன்னைச் "சிங்கடி அப்பன் " என்றும் "வனப்பகை அப்பன்" என்றும் குறிப்பிடலானார்.


சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்த கோட்புலி நாயனார் ஒரு சமயம் போர் முனைக்குச் சென்றிருந்தபோது கடும் பஞ்சம் ஏற்படவே, அவரது குடும்பத்தார்கள், அன்னதானத்திற்காக வைத்திருந்த நெல்லை உபயோகப் படுத்தினர். ஊருக்குத் திரும்பியதும் இதனை அறிந்த நாயனார், அவர்களை சிவத்ரோகம் செய்தவர்களாகக் கருதித் தனது உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.எஞ்சியிருந்த குழந்தையும் அப்பாவச்செயலைச் செய்த தன் அன்னையின் பாலை அருந்தியிருப்பதால் அதனையும் வெட்ட முற்பட்டார். அச்சமயம், ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் காட்சி அளித்த இறைவன் அனைவரையும் உயிர்ப்பித்து, இறுதியில் சிவமுக்தியும் அருளினான் என்று பெரிய புராணம் கூறுகிறது.


இத்தனை பெருமைகளை உடைய இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாதது நமது துரதிருஷ்டமே..அன்னதானம் செய்து காட்டிய கோட்புலி நாயனார் போற்றிய சிவாலயத்தில் பூஜைகள் நின்று போகலாமா?. அறநிலையத்துறையும் ஆன்மிகப்பெருமக்களும் சிந்திக்க வேண்டும். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து அன்னதானம் செய்ய முன்வரும் அரசாங்கம் இதுபோன்ற கிராமக் கோயில்களில் உரிய சம்பளத்துடன் அர்ச்சகர்களை நியமிக்க முன்வராதது ஏன் என்று புரியவில்லை.

Monday, July 18, 2011

திருமேனி தீண்டுவோரைப் போற்றுவோம்




பெரிய புராணத்தில் பார்த்தால் பல இனத்தவர்கள் நாயன்மார்களாக இருக்கக் காண்கிறோம். அவரவர்கள் தங்கள் குலத் தொழிலைச் செய்துகொண்டு சிவ
பக்திச் சீலர்களாக விளங்கினார்கள். உருத்திர பசுபதி நாயனார் ருத்ர ஜபம் செய்தும், ஆனாய நாயனார் மாடுகளை மேய்த்துக் கொண்டே, குழலோசையில் பஞ்சாக்ஷரத்தை வாசித்தும், திருக்குறிப்புத் தொண்டர் அடியார்களுக்குத் துணிகளைத் தோய்த்துக் கொடுத்தும் , சொன்ன சொல் தவறாத திருநீலகண்டர் அடியார்களுக்கு மண் ஓடு செய்து கொடுத்தும் சிவனருள் பெற்றதைச் சில உதாரணங்களாகக் காட்டலாம். எத்தொழிலைச் செய்தாலும் சங்கரன் தாள் மறவாத சிந்தையோடு வாழ்ந்து காட்டினார்கள். "தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன்" கழலை வணங்குவதே தலையாய செல்வம் என்று உறுதி பூண்ட உத்தமர்கள் அவர்கள்.



பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தால் தான் சமூகம் மதிக்கும் என்ற எண்ணத்தில் எந்த வகையில் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க மக்கள்
இக்காலத்தில் துணிந்துவிட்டார்கள். எந்தத் தொழிலுக்கும் உத்தரவாதம் இல்லாததால் நிலைமைக்கு ஏற்றபடி ஒரு தொழிலில் இருந்து மற்றொரு
தொழிலுக்கு மாறுகிறார்கள். குடும்பத் தொழில்களும் ,முக்கியமாக நமது பண்பாட்டு மையமாகத் திகழும் கலைகளும் நசித்துப் போகும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.விவசாயம் செய்வதிலேயே ஆர்வம குறைந்து அந்த நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதையும் பார்க்கிறோம்.



கிராமங்களை விட்டு மக்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்றுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். இந்தப் பரிதாப நிலையில் கிராமக் கோயில்களில் பணி செய்பவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. கோயில் நிலங்களை யார் யாரோ அனுபவிக்கிறார்கள்.பிற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. கோயில் குளத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. கிராமக் கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கோ அரசாங்கம் மிக மிகக் குறைவான சம்பளத்தை அளித்து வருகிறது.



மற்றவர்களைப் போலத் தாங்களும் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களின் சந்ததிக்கு ஏற்படுவது இயற்கை.வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஏக்கம் தலை தூக்குகிறது. விலைவாசி ஏற்றம் அவர்களையும் பாதிக்கிறது அல்லவா? நம் குழந்தைகளாவது சிரமப்படாமல் இருக்கட்டும் என்று அவர்களைக் கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் , கிராமக் கோயில்கள் பிற்காலத்தில் பூட்டிக் கிடக்கும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. சிறிய அளவிலாவது இக்குடும்பங்களுக்கு உதவ வேண்டும். சொந்த கிராமத்தை விட்டுவிட்டு நகரத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவரும் நபர்களுக்கு இரக்க சிந்தனையை இறைவன் தந்தருள வேண்டும்.




இந்த நோக்கத்துடன் , திருவாதிரையான் திருவருட் சபை , அன்பர்கள் ஆதரவுடன் வயதுமுதிர்ந்த சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புத்தாடைகளும் தலா இரண்டாயிரம் பண முடிப்பும் அளித்து கௌரவிக்கிறது. இவ்வகையில் சென்ற ஆண்டு ஒன்பது சிவாச்சாரிய தம்பதிகள் கௌரவிக்கப் பட்டனர்.இந்த ஆண்டு முதல் கட்டமாக , ஐந்து கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் சென்ற ஜூலை நாலாம் தேதி கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திரு நறையூர் சித்தீச்வரம் ஸ்ரீ சித்த நாத சுவாமி ஆலயத்தில் தம்பதிகளாக கௌரவிக்கப்பட்டனர்.



இந்தக் கைங்கர்யத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ பஞ்சாபகேசன் தம்பதிகள், ஸ்ரீ கணேஷ், சென்னை ஸ்ரீ வெங்கடேசன் ,கார்த்திகேயன்,திவ்யா ஸ்ரீநிவாசன் , கும்பகோணம் ஸ்ரீ சுவாமிநாதன் மற்றும் பலர் பெரும் கேற்றனர்.அவர்களுக்கு ஸ்ரீ சித்தநாதேஸ்வரரின் அருள் என்றும் துணை நிற்பதாக.வழக்கம்போல்
சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், ருத்ர த்ரிசதி அர்ச்சனை ஆகியவைக்குப் பின்னர் தம்பதி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று மாகேச்வர பூஜையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Friday, July 1, 2011

செல்லாத காசு

நம்மிடம் இருக்கவேண்டிய குணங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டுவந்த நாணயமே (Honesty) நாளடைவில் குறைந்து வரும்போது, உலோகங்களால் செய்யப்பட்டு அரசாங்கம் வெளியிடும் நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவதில் அதிசயம் இல்லைதான். ஜூன் முப்பதுக்கு மேல் இருபத்தைந்து பைசா காசுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டபின், ஒரு ஆங்கில நாளிதழ் , அந்த ஒரு நாணயத்தின் மதிப்பு எப்படியெல்லாம் இருந்தது என்று பட்டியலிட்டுக் கூறியிருக்கிறது. எண்பதுஆண்டுகளுக்கு முன்பு அதைக் கொண்டு ஒரு மூட்டை கோதுமையும், எழுபது ஆண்டுகள் முன்பு ஒன்றரை கிராம் வெள்ளியும் வாங்க முடிந்தது என்கிறார்கள். அதே சமயம், மாத வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தாலும், இந்த உயர்வு,விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி இல்லை என்பதே வாதம்.



எனவே, கையில் எஞ்சியிருந்த பதினொரு ரூபாய் மதிப்புள்ள இருபத்தைந்து பைசா காசுகளை அருகிலிருந்த பொதுத்துறை வங்கியில் மாற்றச்சென்றேன். அதை காஷியர் வாங்க மறுத்ததோடு, ரிசர்வ் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளச் சொன்னார். மற்றொருவரோ, அக்காசுகளைக் கோயில் உண்டியலில் போட்டுவிடும்படி பரிந்துரை செய்தார். நானோ, விடாப்பிடியாக அக்காசுகளைச் செல்லும் காசுகளாக மாற்றிக் கோயில் உண்டியலில் போடுவதாகக் கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ந்த வங்கி ஊழியர் ஒருவர்,தானே அக்காசுகளைப் பெற்றுக்கொண்டு காஷியரிடம் சென்று , மாற்றிக்கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். பதினொரு ரூபாய்க்கு இத்தனைப் போராட்டமா என்று கேட்கலாம். மக்கள் வளைந்து கொடுக்க கொடுக்க, அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய மறுப்பதோடு அலைக்கழிக்கவும் செய்கிறார்கள்.



நம்வீடுகளில் இருக்கும் பழைய சுவாமி படங்களை எங்கே கொண்டு வைப்பது என்ற நிலை வரும்போதும், பூஜை செய்யப்பட்ட மண் பிள்ளையார்களை எங்கே விடுவது என்னும்போதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஆலயமே!! அதேபோல செல்லாத காசுகளை யாரும் வாங்க மாட்டார்கள் என்ற நிலையில் கோயில் உண்டியலில் போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆலய அதிகாரிகள் பாவம். அதை எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு அலைய வேண்டியதுதான்.



இனிமேல் விஷயத்திற்கு வருவோம். பத்து நாட்களுக்கு முன்பு, பஸ்ஸில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது பக்கத்தில் ஒரு சிவாசாரியார் வந்து அமர்ந்தார். வறுமையில் வாடும் அவரை சமூகம் எப்படி இழிவுபடுத்துகிறது என்பதை அறிய , அவர் சொன்ன தகவலைத் தருகிறேன்:


" நான் பூஜை செய்யும் கோவிலில் எப்போதாவது அர்ச்சனைக்கு கொடுப்பார்கள். தட்சிணையாக இரண்டு ரூபா கொடுப்பது வழக்கம். இருபத்தைந்து காசு செல்லாது என்றவுடன் அர்ச்சனை செய்ய வந்த ஒருவர் அந்த இரண்டு ரூபாய்க்கும் இருபத்தைந்து காசுகளாகவே தட்டில் போட்டார். யாரும் வாங்க மாட்டார்கள் என்றால் கோவில் குருக்களிடம் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எங்கள் நிலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?"



உண்மைதான். செல்லாக் காசின் புகலிடம் ரிசர்வ் பாங்கா அல்லது கோயில் உண்டியலா என்று நிஜமாகவே புரியவில்லை. வாசி தீரக் காசு வழங்கிய பரமனுக்கே புரியும்.

Sunday, June 12, 2011

பழமையும் புதுமையும்(?)

கிராமங்களின் அமைப்பு, பெரும்பாலும் கோயில்களை மையமாகக் கொண்டே இருக்கக் காணலாம். ஒரு புறம் சிவாலயமும்,மற்றொரு புறம் விஷ்ணு ஆலயமும் ,அவற்றைச் சுற்றி குடியிருப்புக்களும் இருக்கும். கிராம தேவதைகளான சாஸ்தா(ஐயனார்) , பிடாரி, மாரியம்மன் ஆகியவற்றின் கோயில்கள் அநேகமாக எல்லைகளில் அமையப் பெற்று இருக்கும். தெருக் கோடியிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் சிறிய பிள்ளையார் கோயில்களும் இருக்கும். சிவாலயங்களில் கணபதி, முருகன், அம்பிகை, துர்க்கை போன்ற தெய்வ சன்னதிகளும், பல்வேறு சிவ மூர்த்தங்களும் இடம் பெற்றிருக்கும். அதே போல , பெருமாள் கோயிலிலும் , மகாலக்ஷ்மி, ராமர், கிருஷ்ணர்,ஹனுமான், சக்கரத்தாழ்வார் ,நரசிம்ஹர் ஆகிய மூர்த்தங்களும் அமையப் பெற்றிருக்கும். பரிவாரங்களாக அமைக்கப் பெரும் மூர்த்தங்களுக்குப் பெரும்பாலும் தனியாகக் கோயில்கள் அமைக்கப்படவில்லை. இஷ்ட மூர்த்தி எதுவாக இருந்தாலும் மேற்கண்ட இரு ஆலயங்களில் அவை இருப்பதே காரணமாக இருக்கலாம். ஆலய அமைப்புக்களும் சைவ-வைணவ ஆகமங்களை ஒட்டியே இருந்தன. தனி மனிதர்களின் கருத்துக்கு ஏற்றபடி அவற்றை மாற்றாமல் பழமையைப் பாதுகாத்து வந்தனர்.



இப்போது பார்த்தால், யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி தனக்குப் பிடித்த வகையில் கோயில் கட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. எதை எடுத்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள்!! பண பலம் இருந்துவிட்டால் தன்னிச்சையாகச் செயல் படும் தைரியம் வந்துவிடுகிறது. ஆகம அறிவு இல்லாத மக்களும் , பிரமாண்டமாகக் கட்டி இருக்கிறார்களே என்று அசந்து போவதோடு,ஆதரவும் தருகின்றனர். இதைப் பயன் படுத்திக்கொண்டு, ஆலயம் கட்டுபவர்களும் , நம் பக்கத்தில் தொன்றுதொட்டு வழிபாட்டில் இல்லாத மூர்த்திகளுக்குக் கோயில் கட்டுகிறார்கள். பரிவார மூர்த்திகளுக்குத் தனி ஆலயம் அமைக்கிறார்கள். ஒரே கல்லில் முப்பது அடிக்கு மேலாக மூர்த்தியை செதுக்கி அதற்குக் கோயில் எழுப்புகிறார்கள். இதற்குத் தேவையான பணம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எப்படியோ வந்து விடுகிறது.



இதில் வேடிக்கை என்னவென்றால், இப்புதிய கோயில்கள் அமைக்கப் படும் ஊர்களிலும் , அதன் அருகாமையில் உள்ள ஊர்களிலும் உள்ள, மரம் முளைத்தும், இடிந்தும் பூஜை இல்லாமலும் இருக்கும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் இவர்கள் கண்களில் படவில்லை போல் இருக்கிறது. கோடிக் கணக்கில் செலவழித்துப் புதுக் கோயில் கட்ட வரும் இவர்கள் பழைய கோயில்களின் பக்கம் திரும்பிப் பார்க்காதது என்? இன்னும் சொல்லப் போனால், இடிந்த கோயில்கள் ஏராளமாகக் கேட்பாரற்று இருக்கும்போது , இப் புதிய கோயில்கள் தேவைதானா? தயவுசெய்து சிந்திக்கவேண்டும். புதிதாகக் கட்டிப் பெயரும் புகழும் சம்பாதிக்கத் துடிக்கும் இவர்கள், பழைய கோயில்களைத் திருப்பணி செய்து நற்பெயர் பெறலாமே? பழைய கூடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவக்குடி சிவாலயத்தைத் திருப்பணி செய்ததுபோல் , பொருள் வசதி படைத்தவர்கள் , புதுக் கோயில் கட்டுவதைக் காட்டிலும் புராதனமான ஆலயங்களை சீர்திருத்தி ஊர் மக்களை நல்வழிப் படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கும் பல கிராமக் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதே நிலை இப்புதுக் கோயில்களுக்கும் பிற்காலத்தில் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

Wednesday, May 11, 2011

"வாங்காத வாழைப் பழம்"





சிவபெருமானின் சிருஷ்டித் தொழில் பிரம்ம தேவன் மூலமாகச் செய்யப் படுகிறது. தற்காலத்திலோ கற்பனைகளுக்குப் படைப்பு என்ற பெயரிட்டு , "நானும் இறைவனே" என்று சொல்லிக்கொள்கிறார்கள். பல்லாண்டுகளாகவே தெய்வங்களைப் பழித்தும் இழித்தும் , தெய்வ நம்பிக்கை உள்ளவர்களைப் புண் படுத்தும் செயல்களைத் திரை உலகம் செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். கடவுள்கள் சினிமா தியேட்டரில் க்யூவில் நிற்பது போலவும், பைக்கில் சவாரி செய்வது போலவும் காட்சிகள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றைக் கண்டிப்பவர்களைத்தான் காணோம். அண்மையில் ஒரு ஆன்மிகப் பத்திரிகை இதுபோல , நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பிரம தேவனைக் கேலி செய்திருப்பது வருந்துதற்கு உரியது.



பிரமனுக்கு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது போலவும், மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக்காரனை அணுகி விலை கேட்டதும் "ஒன்னு அரை ரூபா" என்றவுடன் , பிரமன் இரண்டு டஜனுக்கு பன்னிரண்டு ருபாய் கொடுத்துவிட்டுப் பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதாகவும், கடைக்காரன் அவரைப் பிடித்துக்கொண்டு, " ஏன்னா நழுவுறே, மீதி இருபத்து நாலு ரூபாயை உன் முப்பாட்டனா வந்து தருவான் ; உனக்குக் காது டப்பாவா? ஒரு பழம் ஒன்னரை ரூபான்னு சொன்னேன்யா பழம் வாங்கவந்த மூஞ்சியைப் பாரு" என்றவுடன், பிரம்ம தேவன் "நொந்து நூடுல்ஸ் ஆகி" விட்டாராம். இப்படி எழுதியிருப்பவர் ஒரு நகைச்சுவைக் கதை ஆசிரியர். சில பேர் சொல்லலாம். நகைச்சுவைக்கு எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று. இவை எல்லாம் வரம்பு மீறிய நகைச்சுவை.யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்(திமிரில்??) எழுதப்படுபவை. "தெய்வத்தைத் தானே கிண்டல் செய்திருக்கிறார்கள்; நமக்கு என்ன என்ற உணர்ச்சி இல்லாதவர்கள் உள்ளவரை இத்தகைய கேலிகள் தொடரும். இதில் வேதனை என்னவென்றால் , ஆன்மிகப் பத்திரிக்கைகளும் இவற்றை வெளியிடுவதுதான். சுட்டிக் காட்டினால் தவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப் பக்குவம் பல பத்திரிக்கைகளுக்கு இருப்பதில்லை. "இவன் என்ன நம்மைத் திருத்துவது "என்ற ஆணவமே மேலோங்கி நிற்கிறது. விற்பனை தொடரும் வரை அவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள். வியாபார நோக்கில் எதையும் செய்யலாம். சிலரது மனம் புண் படுவதைக் கண்டு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன? சந்தேகம் தான்.

Wednesday, April 20, 2011

கோயில்களில் பசுமடங்கள்



திருவொற்றியூர்,திருவலிதாயம்(பாடி) ஆகிய சிவஸ்தலங்களில் கோசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதேபோல் பல ஸ்தலங்களிலும் பசுமடங்கள் இருக்கக் காணலாம். எந்த ஊர்களில் காமதேனு பூஜித்ததாகத் தல வரலாறு கூறுகிறதோ, எந்தத் தலத்தில்பால் உகந்த நாதராக இறைவன் வீற்றிருக்கிராரோ அங்கெல்லாம் கண்டிப்பாக பசுக்கள் வளர்க்கப்பட வேண்டும். இடையன் மரணமுற்றபோது அவன் மேய்த்தபசுக்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறியபோது, அவற்றின் துன்பம் தீர்பதற்காக ஆகாய வீதியில் போய்க்கொண்டு இருந்த சித்தர் பெருமான் அந்த இடையனின் உடலுக்குள் புகுந்து, திருமூலர் ஆன வரலாற்றை நாம் அறிவோம். அந்த ஊரில் பசு மடம்இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. அதேபோல், பசு உருவில் அம்பிகை பூஜித்த ஊர்களான அசிக்காடு, தேரழந்தூர், கோமல், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோயில்களில் ஓரிரு பசுக்களாவது வளர்க்கப்படவேண்டும்.

சண்டிகேஸ்வரர் பிறந்த திருச்செய்ஞலூரிலும் , அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்து , பசுக்களை மேய்த்து அவற்றின் பாலால் அபிஷேகம் செய்த திருவாப்பாடியிலும் பசு மடம் இல்லாததோடு, பால் அபிஷேகமே விசேஷ நாட்களில் மட்டுமே நடைபெறுகிறது. பசுவை வாங்கித் தரலாம் என்றால் "யார் பராமரிப்பார்கள்?" என்று கேட்கிறார்கள். சிவாசாரியாரின் வீட்டில் பசுவை வைத்துக்கொண்டால் கோவிலுக்கு உபயோகப்படுத்தியதுபோக அவர் வீட்டிற்கும் சிறிது பயன்படும். தயிர், வெண்ணை முதலியவை கிடைப்பதோடு, சுத்தமான விபூதியும் தயாரிக்கலாம். சாணத்தை எருவாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பயன் படுத்தலாம். கோபார் வாயுவும் தயாரிக்கலாம். கொஞ்சமும் சிரமப்படாமலேயே, பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தற்போது தலை தூக்கி நிற்கிறது.


பசுமடம் வைப்பவர்கள் பெரும்பாலோர் கோயில்களில் அமைக்காமல் தனியாக ஒரு இடத்தை வாங்கி அங்கு பசுக்களைப் பராமரிக்கிறார்கள். சில கோசாலைகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப் படுகின்றன. இவ்வளவு வசதியும் பணப்புழக்கமும் படைத்தவர்கள் மேற்கண்ட ஊர்களில் தங்களது கோசாலைகள் தனியாகவோ கோயில்களுக்கு உள்ளோ இருக்கும்படி அமைக்கலாமே! புகழ் கிடைக்கிறதோ இல்லையோ, புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும். தனியார் வங்கிகளும் கிராம முன்னேற்றத்திற்காகக் கால்நடைச் செல்வத்தைப் பெருக்கலாம்.


கும்ப கோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் பாபுராஜபுரம் என்ற சிறு கிராமம் இருக்கிறது. இங்குள்ள மழுவேந்திஅப்பர் கோயில் புராதனமானது. கருங்கல் திருப்பணி. செட்டியார் தம்பதிகளுக்கு இறைவன் அருளியதாக வரலாறு. இத்தம்பதியரின் உருவச்சிலைகள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. சுவாமி அம்பாளுக்கு வஸ்த்திரம் நேர்த்தியாக அணிவிக்கப் பட்டு இருக்கிறது. இக்கோயிலின் சிவாச்சாரியாருக்கு எழுபத்தெட்டு வயது ஆகிறது. தனியாக வீட்டில் இருந்துகொண்டு கைங்கர்யம் செய்கிறார். வீட்டுக் கொட்டகையில் பசு மாடுகளை வளர்க்கிறார். மாலை ஆனதும் மாட்டை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் மாடு நிற்கும் இடத்தில் சிறிய மின்சாரக் காற்றாடியை அமைத்து இருக்கிறார். இது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட செயல். எவ்வளவு பாராட்டினாலும் தகும். வசதியுள்ள பசுமடங்களில் மின் காற்றாடி காணப்படுவதில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை. உண்மையில் பெயரையும் புகழையும் கருதாமல் இக்குக் கிராமத்தில் இவர் செய்யும் சிவதர்மத்திற்கு ஈடு சொல்ல முடியுமா?

Saturday, March 12, 2011

உழவாரத் தொண்டைப் போற்றுவோம்

உலகத்தில் பிறந்ததன் பயனை இரண்டு செயல்களால் அடையலாம் என்று பெரிய புராணம் கூறுகிறது. அதில் முதலாவது, சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பது; மற்றொன்று, சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்ணாரக் காண்பது. முன்பெல்லாம் ஒரு சிவனடியாருக்காவது அன்னம் பாலித்துவிட்டுப்பிறகே உணவு உண்பது என்ற நியமத்தோடு பலர் வாழ்ந்து வந்தார்கள். வசதி உள்ளஆலயங்களும் தேசாந்திரிகளுக்கு மதிய உணவு அளித்து வந்தன. கர்நாடக மாநிலத்தில் இரு வேளையும்யாத்திரீகர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. ஆனால் தமிழகத்திலோ பெரும்பாலும் பெயரளவுக்கே மதிய உணவு கோயில்களில் வழங்கப்படுகிறது.

சிவனடியாருக்கு அன்னம் பாலிப்பதைப் பிறவிப் பயனாக சொல்லும்போது, அச் சிவனடியார்கள் உழவாரத் தொண்டு செய்பவர்களாகவோ , புஷ்ப கைங்கர்யம் செய்பவர்களாகவோ , சன்னதியில் கீதம் பாடுபவர்களாகவோஆலயத் திருப்பணி செய்பவர்களாகவோ இருந்தால் இன்னும் சிறப்பு அல்லவா? இத்தகைய சிவத் தொண்டர்களுக்கு அன்னம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து தருவது நமது கடமை ஆகும்.

தர்ம சிந்தனை நாளுக்கு நாள் குறைந்து சுய நலம் மேலோங்குவதால் கலியின் வலிமை அதிகரித்து பிறவிப் பயன் கிடைக்கவொட்டாமல் ஆகி விடுகிறது. கிராமங்களிலும் குறுகிய மனப் பான்மை காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. கிராமங்களில் உள்ள மரம் முளைத்துப்போயும் , பாழடைந்தும் போன கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வெளியூர் அன்பர்கள் பலர் முன்வருகிறார்கள். இவர்கள் பயணச் செலவையோ பிற செலவையோ பொருட்படுத்தாமல் உழவாரத் தொண்டு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகிறார்கள். பிரதி பலனாகக் கிராம மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

கிராம மக்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். அறநிலையத் துறையோ உள்ளூர் மக்களோ கவலைப்படாமல் கோயில்கள் சிறிது சிறிதாக அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிராமக் கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வரும் சிவனடியார்களுக்கு நாம் நன்றி செலுத்தும் முகமாக மதியம் ஒருவேளை உணவாவது உள்ளூர்மக்கள் அளிக்க முன்வர வேண்டாமா? அண்மையில் ஒரு கிராமத்தில் சிதிலமாயிருந்த ஆலயத்தில் உழவாரத் தொண்டு செய்ய முன்வந்த வெளியூர் அன்பர்களுக்கு அக் கிராம மக்கள் உணவளிக்க முன்வராததால் அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து அந்த ஐம்பது பேர் குழுவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நிலச்சுவான்தார்கள் ஒருவருக்காவது தர்ம சிந்தனை ஏற்படாதது துர்பாக்கியமே.

கோயில்கள் புறக்கணிக்கப் படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் இக்காலத்தில் , மனம் பதைபதைத்துத் தொண்டாற்றுபவருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, திருவாதிரையான் திருவருட் சபை , மாதம் தோறும் ரூ ஐநூறு , உழவாரத் தொண்டுக்காக அளிக்க முன்வந்துள்ளது. இத் தொகை , மதிய உணவுக்குப் பயன்படும் வகையில் அமையும். இனியாவது, ஆலையங்களில் உழைத்தவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை ஏற்படாதிருக்க, ஸ்ரீ ஒதனவநேச்வரரையும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையையும் பிரார்த்திக்கிறோம்.

Sunday, February 20, 2011

கோடி ருத்ர ஜபமும் ஏகதின லக்ஷார்ச்சனையும்

நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் வரும். தெய்வம் எங்கே இருக்கிறது என்பதே அது. இதற்கு விடையாக வேதம் சொல்லும் பதில் ," எங்கே தான் இல்லை?" என்பதே. நாம் கண்ணால் காணும் உயிருள்ள மற்றும் உயிரற்ற (?) பொருள்கள் எல்லாவற்றிலும் ஸ்ரீ பரமேச்வரன் இருப்பதை ஸ்ரீ ருத்ரம் விவரமாக எடுத்துக் காட்டுகிறது. விஸ்வரூபேப்யனான பகவான், சபாபதியாகவும் , கணங்களுக்கு அதிபதியாகவும் , வில்லும் வாளும அம்பறாத்தூணியும் எந்தியவனாகவும் காட்டப்படும் அதே சமயம், குதிரைத்தலைவனாகவும், நாய்களின் தலைவனாகவும், கள்வர்களின் தலைவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். இப்படி, உலக உற்பத்திக்கு முன்பே இருப்பவனும், தேவர்களில் முதல்வனும் ஆன சர்வேச்வரன்(" அக்ரியாய்சபிரதமாய்ச") தாவரங்களின் வடிவிலும் இருப்பதை, "சுஷ்க்யாய ச ஹரித்யாய ச" என்றதால், காய்ந்த கட்டையிலும், ஈரமுள்ள கட்டையிலும் கூட இருக்கிறான் எனப்படுகிறது. பொதுவாக நீரில் நீக்கமற விளங்குகின்றான் என்று சொல்வதை, விரிவாகவே, வாய்க்கால் நீரிலும், அருவி நீரிலும், மடுவிலுள்ள நீரிலும் , நதி, கடல் கிணறு, சுனை முதலியவற்றில் உள்ள நீராக இருக்கிறான் எனக்காட்டப்படுகிறது.மேகமாகவும்மின்னலாகவும், மழைகாற்றாகவும் இருக்கும் அவனே, மழை இல்லாத பூமியிலும் இருக்கிறான் (நமோ வர்ஷ்யாய்ச அவர்ஷ்யாய்ச)என்கிறது வேதம். வேண்டும் வரங்களை வாரி வழங்குவதில் ஒப்பற்றவனும் பரம மங்கள ரூபியுமான ஸ்ரீ பரமேச்வரன், எல்லா நன்மைகளையும் வழங்கவேண்டும் ( "மீடுஷ்டமசிவதம சிவோன:சுமநாபவ) என்று பிரார்த்திக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மகிமை உள்ள ஸ்ரீ ருத்ரத்தை ஜபிப்பதால் உலக நன்மை உண்டாகும் என்பதால், கர்நாடக மாநிலத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ மகாபலேஸ்வரர் கோயிலில் கோடி ருத்ர ஜபம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.





பெங்களூரிலிருந்து சுமார் 450 கி. மீ. தொலைவில் அரபிக்கடலை நோக்கியவாறு அமைந்துள்ள இத் தலம் மிகவும் பழமை வாய்ந்தது. ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கத்தை விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வந்து இங்கேயே வைத்துவிட்டதால், ராவணனால் அதைப் பெயர்க்கமுடியவில்லை.ராவணனால் குட்டுப்பட்ட கணபதியும் தனி ஆலயத்தில் காட்சி அளிக்கிறார். சுவாமியை ஞான சம்பந்தர் மற்றும் அப்பர் தேவாரப் பதிகங்கள் துதிக்கின்றன. ஆதிசங்கரரும் இங்கு தரிசிக்க வந்ததாகச் சொல்வர். அவரது பெரிய திருவுருவச்சிலை கடலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. கோடி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தம் ஊருக்குள் இருக்கிறது. மகா சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்களாம். இரு தினங்கள் இந்த கோடி ருத்ர ஜெபத்தில் கலந்துகொண்டு, ஒவ்வொரு காலத்திலும் ஆத்மலிங்க தரிசனம் கிடைத்தது பாக்கியமே. சிவ லிங்கத்தின் பிரம பாகம் பெரும்பாலும் வட இந்தியக் கோயில்களில் பார்க்க முடியாது. விஷ்ணு பாகமான ஆவுடையாரையும் அதன் மேலே உள்ள சிவ மூர்த்தியையும் மட்டுமே தரிசிக்கலாம். ஆனால் இந்த ஸ்தலத்திலோ, ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறது. அதன் நடுவில் உள்ள குழிவான இடத்தில் நீர் தேங்கியிருக்கிறது. அதை சற்று அகற்றிவிட்டு, கையை விட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிறிய லிங்கம் இருப்பதை உணர முடிகிறது. அவசியம் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஊருக்குத் திரும்பியவுடன் மற்றும் ஓர் அழைப்பு. 13 ம தேதி திருக்கள்ளில் என்ற ஸ்தலத்தில் நடைபெற்று இருக்க வேண்டிய ஏக தின லக்ஷாச்சனை, 19 ம தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்ததால் அந்த வைபவத்தையும் காணும் பாக்கியம் கிடைத்தது.





திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கள்ளில் என்ற இந்த ஸ்தலம், சென்னையிலிருந்து பெரிய பாளையம் போகும் வழியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளி மரம் ஸ்தல விருக்ஷம். சோமாஸ்கந்த வடிவில் , சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அபிஷேக அலங்காரங்கள் ஆனவுடன், லக்ஷார்ச்சனையும், ருத்ர த்ரிசதியும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆலய சிவாசாரியார் , ஸ்ரீ ஆறுமுக குருக்களுக்கு அண்மையில் 100 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை ஒட்டி அன்பர்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். தனது 18 வது வயதிலிருந்து, தொடர்ந்து சுவாமிக்கு இந்த உள்ளடங்கிய/ வசதிகள் மிகக் குறைவாக உள்ள இக்கிராமத்தில் இருந்து கொண்டு பூஜை செய்துவரும் இப் பெரியவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்றைய தினம் அவரது ஆசிகளை பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள்.

Sunday, January 2, 2011

அடியார் கூட்டம் அருள்வாய்

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டுப் பல ஆலயங்கள் நள்ளிரவில் திறக்கப் படுகின்றன. பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நமக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பது வேறு விஷயம். ஆண்டு முழுவதும் நல்லதாகவே நடைபெறவேண்டும் என்று அவரவர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதற்காகவாவது வருகிறார்களே என்று நினைக்க வேண்டியிருக்கிறது. புதிய ஆண்டில் நாம் என்ன செய்ய இருக்கிறோம் என்று தீர்மானிப்பவர்கள் சிலரே. அதிலும் இறை பணிக்காக என்ன செய்ய இருக்கிறோம் என நினைப்பவர்கள் மிக மிகச் சிலரே. அதைவிட, ஆண்டு முழுவதும் இதே சிந்தனையோடும் செயல் பாட்டோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அருமையிலும் அருமை. அப்படிப்பட்ட ஒருவரை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நான் குறிப்பிடும் இவர் , பூஜைகள் நடைபெறாத சிவாலயங்களைக் கண்டு மனம் வருந்துவதோடு, அங்கு பூஜைகள் எப்படியாவது துவங்கவேண்டும் என்று செயல் படுபவர். மக்களுக்கு மகேசனின் பெருமைகளை அறிய வைப்பவர். மரம், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் ஆலயங்களில் உழவாரத் தொண்டு செய்பவர். இத்தகைய கோயில்களின் அவல நிலையைத் திருமடங்களின் பார்வைக்குக் கொண்டு வருபவர். இளம் வயதினராகிய இவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று அறிகிறேன். தற்போது கும்பகோணத்தில் வசிக்கும் இவர் , காவி அணிந்த கோலத்துடன் எளிமையாகக் காணப் படுகிறார். ஜோதிமலை சுவாமிகள் என்று அன்பர்களால் அழைக்கப்படும் இவர், சிவாலயத் தொண்டு செய்யாத நாட்களே இல்லை எனலாம்.





சோழ நாட்டில், குறிப்பாக, கும்பகோணம் பகுதியில் மரம் முளைத்துப்போயும், பூஜைகள் நின்று போயும் ஊர்மக்களால் கைவிடப்பட்ட கிராமக் கோயில்கள் ஏராளம். இப்படிப்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று, அன்பர்களது உதவியுடன் உழவாரத் தொண்டு செய்தும், ஆலய சன்னதிகளைச் சுத்தம் செய்தும் மகத்தான சேவை செய்து வருகிறார் நம் ஸ்வாமிகள். உழவாரப் பணியில் இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சென்னையைச் சேர்ந்த அன்பர்கள். இவர்கள் மாதம் தோறும் கும்பகோணம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் உழவாரப் பணிசெய்கிறார்கள்.

நாச்சியார் கோயில் அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தின் பரிதாப நிலையைப் பற்றி சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தோம். இந்த ஆண்டு , அக்கோவிலில் மார்கழி மாத பூஜைகள் நடை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் , நம் ஸ்வாமிகள், சில அன்பர்களுடன் விடியற்காலை அங்கு சென்று, ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்து, வீதிகளில் ஊர்க் குழந்தைகளுடன் பஜனை செய்து விட்டு வருகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் அக்குழந்தைகளுக்குத் தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கிறார். இது போல ஊர் விட்டு ஊர் சென்று தொண்டு செய்பவர்களை நாம் பாராட்டுவதோடு அவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்.

நகரக் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசைகளில் மணிக் கணக்கில் காத்திருப்பவர்களில் சிலரது கவனமாவது கிராமத்துக் கோயில்களின் பக்கம் திரும்பினால் நன்றாக இருக்கும். தாங்கள் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு அடிக்கடி செல்வதோடு ஊர்மக்களுக்கும் ஈடுபாடு வரும்படி செய்வது மிகவும் முக்கியம். புதிய கோவில்களைக் கட்டுவதை விட நம் முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயங்களை ஒழுங்காகப் பராமரிப்பதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.

இந்த மார்கழி மாதத்தில் மட்டும் பலகோடிகளை உண்டியல் மூலம் ஈட்டும் ஆலயங்கள் அதில் சிறு பகுதியையாவது இத்தகைய காரியங்களுக்கு ஒதுக்கலாமே. சொல்வார் இல்லையா அல்லது கேட்பவர்கள் இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது. கிராமக் கோவில்களுக்குச் சென்றுவந்தால் கண்ணீர் தான் மிஞ்சுகிறது. மழை விட்டவுடன் மிக எளிதில் பிராகாரத்தில் வளர்ந்துள்ள சிறு செடிகளைப் பிடுங்கி எறியலாம். நிலம் காய்ந்தால், அதைக் களைய மண்வெட்டி தேவைப் படுகிறது. நிலம் ஈரமாக இருக்கும்போது, செடியை வேரோடு கையால் பிடுங்கமுடிகிறது. இதுபோன்ற எளிய வகையில் முடிந்த அளவு பணிகளைச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் ஜோதிமலை சுவாமிகள் போன்றவர்கள் நிறைய பேர் தோன்றினால் தான் கோயில்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். விமானங்களுக்கும் கோபுரங்களுக்கும் ப்ராகாரங்களுக்கும் மரங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய அடியார் கூட்டத்தை அருளுமாறு ஆபத்சஹாயப் பெருமானை வேண்டுவோமாக.