Sunday, February 20, 2011

கோடி ருத்ர ஜபமும் ஏகதின லக்ஷார்ச்சனையும்

நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் வரும். தெய்வம் எங்கே இருக்கிறது என்பதே அது. இதற்கு விடையாக வேதம் சொல்லும் பதில் ," எங்கே தான் இல்லை?" என்பதே. நாம் கண்ணால் காணும் உயிருள்ள மற்றும் உயிரற்ற (?) பொருள்கள் எல்லாவற்றிலும் ஸ்ரீ பரமேச்வரன் இருப்பதை ஸ்ரீ ருத்ரம் விவரமாக எடுத்துக் காட்டுகிறது. விஸ்வரூபேப்யனான பகவான், சபாபதியாகவும் , கணங்களுக்கு அதிபதியாகவும் , வில்லும் வாளும அம்பறாத்தூணியும் எந்தியவனாகவும் காட்டப்படும் அதே சமயம், குதிரைத்தலைவனாகவும், நாய்களின் தலைவனாகவும், கள்வர்களின் தலைவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். இப்படி, உலக உற்பத்திக்கு முன்பே இருப்பவனும், தேவர்களில் முதல்வனும் ஆன சர்வேச்வரன்(" அக்ரியாய்சபிரதமாய்ச") தாவரங்களின் வடிவிலும் இருப்பதை, "சுஷ்க்யாய ச ஹரித்யாய ச" என்றதால், காய்ந்த கட்டையிலும், ஈரமுள்ள கட்டையிலும் கூட இருக்கிறான் எனப்படுகிறது. பொதுவாக நீரில் நீக்கமற விளங்குகின்றான் என்று சொல்வதை, விரிவாகவே, வாய்க்கால் நீரிலும், அருவி நீரிலும், மடுவிலுள்ள நீரிலும் , நதி, கடல் கிணறு, சுனை முதலியவற்றில் உள்ள நீராக இருக்கிறான் எனக்காட்டப்படுகிறது.மேகமாகவும்மின்னலாகவும், மழைகாற்றாகவும் இருக்கும் அவனே, மழை இல்லாத பூமியிலும் இருக்கிறான் (நமோ வர்ஷ்யாய்ச அவர்ஷ்யாய்ச)என்கிறது வேதம். வேண்டும் வரங்களை வாரி வழங்குவதில் ஒப்பற்றவனும் பரம மங்கள ரூபியுமான ஸ்ரீ பரமேச்வரன், எல்லா நன்மைகளையும் வழங்கவேண்டும் ( "மீடுஷ்டமசிவதம சிவோன:சுமநாபவ) என்று பிரார்த்திக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மகிமை உள்ள ஸ்ரீ ருத்ரத்தை ஜபிப்பதால் உலக நன்மை உண்டாகும் என்பதால், கர்நாடக மாநிலத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ மகாபலேஸ்வரர் கோயிலில் கோடி ருத்ர ஜபம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.





பெங்களூரிலிருந்து சுமார் 450 கி. மீ. தொலைவில் அரபிக்கடலை நோக்கியவாறு அமைந்துள்ள இத் தலம் மிகவும் பழமை வாய்ந்தது. ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கத்தை விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வந்து இங்கேயே வைத்துவிட்டதால், ராவணனால் அதைப் பெயர்க்கமுடியவில்லை.ராவணனால் குட்டுப்பட்ட கணபதியும் தனி ஆலயத்தில் காட்சி அளிக்கிறார். சுவாமியை ஞான சம்பந்தர் மற்றும் அப்பர் தேவாரப் பதிகங்கள் துதிக்கின்றன. ஆதிசங்கரரும் இங்கு தரிசிக்க வந்ததாகச் சொல்வர். அவரது பெரிய திருவுருவச்சிலை கடலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. கோடி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தம் ஊருக்குள் இருக்கிறது. மகா சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்களாம். இரு தினங்கள் இந்த கோடி ருத்ர ஜெபத்தில் கலந்துகொண்டு, ஒவ்வொரு காலத்திலும் ஆத்மலிங்க தரிசனம் கிடைத்தது பாக்கியமே. சிவ லிங்கத்தின் பிரம பாகம் பெரும்பாலும் வட இந்தியக் கோயில்களில் பார்க்க முடியாது. விஷ்ணு பாகமான ஆவுடையாரையும் அதன் மேலே உள்ள சிவ மூர்த்தியையும் மட்டுமே தரிசிக்கலாம். ஆனால் இந்த ஸ்தலத்திலோ, ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறது. அதன் நடுவில் உள்ள குழிவான இடத்தில் நீர் தேங்கியிருக்கிறது. அதை சற்று அகற்றிவிட்டு, கையை விட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிறிய லிங்கம் இருப்பதை உணர முடிகிறது. அவசியம் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஊருக்குத் திரும்பியவுடன் மற்றும் ஓர் அழைப்பு. 13 ம தேதி திருக்கள்ளில் என்ற ஸ்தலத்தில் நடைபெற்று இருக்க வேண்டிய ஏக தின லக்ஷாச்சனை, 19 ம தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்ததால் அந்த வைபவத்தையும் காணும் பாக்கியம் கிடைத்தது.





திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கள்ளில் என்ற இந்த ஸ்தலம், சென்னையிலிருந்து பெரிய பாளையம் போகும் வழியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளி மரம் ஸ்தல விருக்ஷம். சோமாஸ்கந்த வடிவில் , சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அபிஷேக அலங்காரங்கள் ஆனவுடன், லக்ஷார்ச்சனையும், ருத்ர த்ரிசதியும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆலய சிவாசாரியார் , ஸ்ரீ ஆறுமுக குருக்களுக்கு அண்மையில் 100 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை ஒட்டி அன்பர்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். தனது 18 வது வயதிலிருந்து, தொடர்ந்து சுவாமிக்கு இந்த உள்ளடங்கிய/ வசதிகள் மிகக் குறைவாக உள்ள இக்கிராமத்தில் இருந்து கொண்டு பூஜை செய்துவரும் இப் பெரியவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்றைய தினம் அவரது ஆசிகளை பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள்.

1 comment:

  1. nice article. we are fortunate to see 'aarumuga gurukkal' who has completed 100 years - 82 years of 'siva thondu' in life. thanks for showing his photographs. we are indeed blessled. please continue your noble work. may lord nataraja the kunchitha patha bless you. vidyasagaar

    ReplyDelete