Friday, April 14, 2017

சிவ நாமம்

ஒவ்வொரு ஆண்டும் புது வருஷம் பிறந்ததும் அதை எப்படிக் கொண்டாடுவது என்ற சிந்தனை வருகிறது. இப்பொழுதெல்லாம் சனி-ஞாயிறோடு சேர்ந்து வந்து விட்டால் ஊரை விட்டே புறப்பட்டுச்  சுற்றுலாவுக்குச் செல்வது என்று ஆகி விட்டது. அன்றைய தினம் வீடு பூட்டிக் கிடக்கும். வாசலில் பண்டிகை தினமான அன்று கோலம் கூடப் போடுவாரின்றி  அலங்கோலமாகக் கிடக்கும். சுவாமி அறை என்று ஒன்று இருந்தால் அங்கு யார் விளக்கேற்றப் போகிறார்கள்?  இப்படி இருக்கும்போது, வேப்பம்பூ   பச்சடியாவது, ஆமை வடையாவது, பானக நீர்மோராவது, பாயசமாவது? இதை எல்லாம் கஷ்டப்பட்டு அடுப்படியில் வெய்யில் காலத்தில் பண்ணுவதாவது?  இதெல்லாம் எதிர்காலத்தில் நம்மை விட்டு விடை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

புது ஆடை உடுத்திக் கொண்டு கோவில்களுக்குப் போவதும், அர்ச்சனை செய்து விட்டு வருவதும்  ஓரளவு நடைபெற்று வந்தாலும், நாகரீகப் போர்வையில் இந்த பழக்கங்கள் நிலைத்து நீடிக்க வேண்டும் அல்லவா?  பெரியோர்களைச் சென்று பார்ப்பதும் அவர்களது ஆசி பெறுவதும் நடப்பது  கேள்விக் குறி ஆகி வருகிறது. அவரவர்கள் தங்களுக்குள் குறுகிய வளையம் ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களைப் பார்ப்பது வீண் என்று இருக்கிறார்கள். நாம் பத்து முறை அவர்களைச் சென்று பார்த்து விட்டு வந்தால் ஒரு தடவையாவது அவர்கள் நம்மைப் பார்க்க வர வேண்டும் என்று ஆசைப் படுவது தவறா? ஆகவே, உற்றார் உறவினர் என்பது நல்லது கெட்டது நடக்கும் சமயத்தில் ஆஜர் காட்டி விட்டு வந்து விடுவது என்று ஆகி விட்டது. 

வீட்டில் அடைந்து கிடக்கும் ஜன்மங்களும் ( இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும்), வாயால் கொறித்துக் கொண்டே தொலைக் காட்சியில் பட்டிமன்றத்தையும்,படங்களையும் பார்ப்பதோடு, நட்சத்திரங்கள் கூத்தடிப்பதையும் எதற்கும் உதவாத பேட்டி கொடுப்பதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பஞ்சாங்கத்தை வைத்துப் பூஜை செய்வதும், புது வருஷ பலன் கேட்பதும் அரியதாகி வருகிறது.

இவற்றை எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் யார்? பெரியோர்களும், குருமார்களும் தான். அவர்களும் குறுகிய வட்டத்தில் சஞ்சரிப்பதால் பெரும்பாலான மக்கள் திசை மாறிப் போகின்றனர். இதற்கு முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும். 

திசை தெரியாமல் வாழ்க்கைப் பயணம் செய்யும் போது தெரிந்தும் தெரியாமலும் பாவ மூட்டையை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. இதற்குப் பிராயச்சித்தமே கிடையாதா என்று நினைக்கத் தோன்றும். சிவ நாமாவைச் சொல்வதும், அதனை நினைப்பதும், கையால் எழுதுவதும்  சித்தத்தைச் சுத்தப் படுத்தும். அதன் மகிமையை பார்வதி தேவியே சொல்வதாகப் பாகவத புராணம் குறிப்பிடுகின்றது. ஆகவே, வீட்டில் இருந்து வீண் பொழுது போக்குபவர்கள் தினமும் ஒரு பக்கமாவது சிவ சிவ என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதலாமே! 

வாயால் சொல்லிக்கொண்டே  எழுதினால்  கண்  வேறு எங்கும் அலை பாயாமல் நோட்டுப்  புத்தகத்தில்  லயித்திருக்கும்.  வினைகளை மாள்விப்பதும் , சொல்பவர்களைத் தேவர்களாக்கிச் சிவகதியைத்தருவதும் அந்த நாமம் என்று திருமூலர் அருள் உபதேசம் செய்கிறார். இதைக் கூட செய்ய மாட்டேன் என்னும் மனப்பாறைகளுக்கு எதைச் சொல்லி ஆட்படுத்துவது?