Tuesday, March 26, 2013

சிவாசார்ய வந்தனம் - V


உலக நன்மைக்காகச்  செய்யப்படும் பரார்த்த பூஜைக்கு உரியவர்கள்  சிவாச்சார்யர்கள் ஆவார்கள். சிவாகமப்படி காலம் தோறும்  நியமத்துடன் இப்பூஜைகள் நடைபெறுவதற்காக அரசர்கள் பலர் நிபந்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். காலப்போக்கில், இத்தருமங்கள் யாவும்  சரிவரப் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவை விரைவாகத் திருத்தம் பெற வழி வகைகள் செய்யப்படாமல் இருப்பதால், பல கிராமங்களில் பூஜைகள் ஒரு காலம் நடைபெறுவதே சிரமமாக இருக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய சிப்பந்திகளே ஆவார்கள். கோயில் மேளங்களும், மடைப்பள்ளி ஊழியர்களும், ஓதுவார்களும், இப்பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் சிவாசார்யர்கள் மட்டுமே. அவர்களிலும் பலர்,வறுமையால் பெரிதும் துன்பப்படுகின்றனர். அரசாங்கமோ அவர்களது நிலைக்கு இரக்கப்படுவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் இருநூறு- முன்னூ று ரூபாய்  சம்பளத்தையும் ஒவ்வொரு மாதமும் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏராளமான கிராமக் கோயில்கள் பூட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் பூர்வீக கிராமக் கோயில்களுக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்யலாம். இன்னும் கொஞ்சம் வசதி உள்ளவர்கள், திருப்பணிக்கு உதவலாம். இன்னும் சிலர், பூஜைப் பொருள்களுக்கும், சிவாசார்யாரது சம்பளத்திற்கும் உதவ முன்வரவேண்டும். இதைத் தங்கள் கடமையாகக் கருதினால் நல்லது. வறுமையில் வாடும் பலரது வாழ்வில் ஒளி ஏற்றினால் நாமும் நமது குடும்பமும் சிவனருள் பெறலாம் அல்லவா? "முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று பாடிக்கொண்டு மட்டும் இருக்காமல் அதைச்  செயலிலும் காட்டினால் உயர்ந்தது தானே?

கடந்த இரு ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட்சபை, கிராமங்களில் உள்ள சிவாலயங்க ளில்  பரம்பரையாகப் பூஜை செய்துவரும் சிவாச்சார்யர்கள் இருபது பேரை அவர்களது துனைவியார்களோடு அர்ச்சித்து, கௌரவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி , திருவாரூருக்கு அண்மையில் உள்ள சாட்டியக்குடி என்ற தலத்தில் உள்ள    ஸ்ரீ  வேதநாயகி  சமேத ஸ்ரீ  வேதபுரீச்வர ஸ்வாமி ஆலயத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. சாட்டிய முனிவரால் வழிபடப்பெற்ற இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்பா பதிகத்தால் போற்றியுள்ளார். இத் தலத்தின் அருகிலுள்ள வலிவலம் , வடகரை,பொரவாச் சேரி,பெரிய குத்தகை ஆகிய தலங்களின் சிவாசார்யர்களும் தங்கள் துனைவிமார்களோடு வந்திருந்து சிறப்பித்துத் தந்தார்கள்.

கணபதி பூஜை,புண்யாவசனம் ஆகியவை நடைபெற்றபின்னர் , ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. புதிய வஸ்திரங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்த பிறகு, சுவாமிக்கு ருத்ர த்ரிசதியும் அம்பாளுக்கு அஷ்டோத்திரமும் செய்யப்பெற்று, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஐந்து தலத்து சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புதிய வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின் , அர்ச்சனைகளும் தீபாராதனைகளும் செய்விக்கப்பட்டு  சம்பாவனை செய்யப்பட்டு,அவர்களின்  ஆசி பெறப்பட்டது. நிறைவாக மாகேச்வர பூஜையும் நடைபெற்றது. தலத்து ஓதுவா மூர்த்தி, மேளக் காரர், பிற சிப்பந்திகள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நமது சபை அண்மையில் துவக்கியுள்ள Ardhra Foundation என்ற அமைப்பு இதுபோன்ற சிவபுண்யங்களை மேலும் மேலும் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ முருகப்பன்,ஸ்ரீ வெங்கடேசன்,ஸ்ரீ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்குச் சிவனருள் துணை நிற்பதாக.

இது போன்ற நிகழ்ச்சிகள் அன்பர்களால் பல ஊர்களிலும் நடத்தப்பெற வேண்டும் . கிராமக் கோயில்களில் தீபம் இல்லாதிருக்கும் நிலை வரவே கூடாது. அதற்கு இறைவன் நிச்சயம் துணையிருப்பான். வாடிய வாட்டம் தவிர்ப்பவன் அவன். அனைவரையும் துன்பக்கடலில் இருந்து கரை ஏற்றும் தோணியாவானும் அவனே. இது போன்ற பணிகள் ஊர் தோறும் நடைபெறச் செய்யும் மனத் தெளிவையும்  அப்பரமனே அருள வேண்டும்.

Tuesday, March 19, 2013

திருச்சோற்றுத்துறையில் முப்பெரும் விழா



திருவையாற்றின் சப்த ஸ்தான ஸ்தலங்களில் திருச்சோற்றுத்துறை என்பதும் ஒன்று. இது கண்டியூருக்குக் கிழக்கில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கௌதம முனிவர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு , சிவ பூஜை செய்து வந்தார். அதன் பயனாக ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். தவிரவும், அருளாளன் என்ற வேதியனுக்கு ஸ்வாமி, எடுக்க எடுக்கக் குறையாதபடி அன்னம் கிடைக்க ஒரு அக்ஷய பாத்திரத்தை அருளினார். இதனால் அவ்வூர் ஓதன வனம் (ஒதனம்= சோறு) என்றும் சோற்றுத்துறை என்றும் வழங்கப்பட்டது. அம்பிகை, அன்னபூரணி எனப்படுகிறாள். சோறு என்பதற்கு  மோக்ஷம் என்ற பொருளும் உண்டு. தரிசிப்பவர்களுக்கு இத்தலம் மோக்ஷத்தைத் தருவதால், சோற்றுத்துறை எனப்பட்டது. ஸ்தல புராணமும், இங்கு ஒரு பிடி அன்னம் அளிப்பது, ஆயிரம் அந்தணர்களுக்கு அறுசுவை உணவு கொடுத்த பலனை அளிக்கும் என்று கூறுகிறது. ஒதனவனேச்வரரை சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவரும்  தேவாரப் பதிகங்களால் பாடியிருக்கிறார்கள்.

மண்ணில் பிறந்த பயனே, சிவனடியார்களுக்கு அன்னம் அளிப்பதுதான் என்று பெரிய புராணமும் கூறுவதால், இந்த ஊரில் சுமார் 350-400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு அந்தணக் குடும்பம் , அன்னபூரணி தர்ம சத்திரம் என்ற கட்டிடத்தைக் கட்டி, அதில் அன்ன தானமும், வேத பாடசாலையும்,கோசாலையும் நடத்தி வந்தது. அவர்களது தலைமுறையினர் இன்று வரையில் அன்னதானத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.காலப்போக்கில், கோ- சாலையையும் , வேத பாட சாலையையும் தொடரமுடியாமல் போனாலும், அன்னதானம் மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. சித்திரையில் சப்த ஸ்தான ஸ்தலங்களுக்குத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பர் பல்லக்கில் எழுந்தருளும்போது, பின்னால் நடந்துவரும் பக்தர்களுக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுவது , சோற்றுத்துறை என்ற பெயருக்கு மிகவும் பொருத்தம் தானே!

இந்த அன்னதானப் பரம்பரையில் வரும் இன்றைய டிரஸ்டி ஸ்ரீ கண்ணன் அவர்களுக்குத் தன் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த கோ சாலையை மீண்டும் துவக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அதற்காகப் பழைய கோ சாலையைத் சீர் திருத்தி, பசுக்கள் நிற்பதற்குத் தகுந்தாற்போல் இடம் அமைத்து, வைக்கோல் சேகரித்து வைக்க ஓரிடமும் ஒதுக்கியமைத்து, அன்னபூரணி கோசாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதோடு, ஆலய சிவாச்சாரியார் வசிக்க வீடு அமைத்துத் தரவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இவ்விரு சிவபுண்ணியங்களுக்கும் உறுதுணையாகச்  சில மெய்யன்பர்கள் முன் வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருவருளும் துணை செய்தது. இத்தலத்தின் மீது இயற்றப்பட்ட புராணத்தின்  மூலம் மாத்திரம் பல்லாண்டுகளுக்கு முன் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அப்புராணத்தைப் பொழிப்புரையோடு ஆதீன வெளியீடாக அச்சிட்டுத் தருவதாகத் திருவாவடுதுறை ஆதீன 23 வது குருமூர்த்திகளாகப் பீடத்தில் இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்ரகாச தேசிக மூர்த்திகள் கருணை பாலித்திருந்தார்கள். நூல் வெளியாவதற்கு முன்னரே அவர்கள் சிவமுக்தி அடைந்துவிட்டபடியால், அடுத்ததாகப் பட்டம் ஏற்றுள்ள 24 வது குருமகாசந்நிதானம்,ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அதனைப் பூர்த்தி செய்து வெளியிட்டுத்தருவதாகக் கூறியருளினார்கள். இவ்வாறு மூன்று நிகழ்ச்சிகளும் முப்பெரும் விழாவாக உதயம் ஆயிற்று.

18.3.2013 திங்கள்கிழமையன்று சிவாச்சார்யாருக்குப் புதியதாகக் கட்டப்பட்ட மனையில்  கணபதி ஹோமம் முதலியன நடைபெற்றன. காலை சுமார் 9 மணிக்குத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும், அதன் பிறகு, திருப்பனந்தாள் காசி மடத்து இணை அதிபரும், பின்னர், தருமபுர ஆதீனக் கட்டளை சுவாமிகளும் வருகை தந்தனர். ஆலய தரிசனத்திற்குப் பின் கோசாலையைத் திறந்து வைத்தும், திருச்சோற்றுத்துறைப் புராணத்தை வெளியிட்டும் ஆசி வழங்கினார்கள். அடியேனுக்கும் , " ஆன்  ஐந்தும் ஆடினான்" என்ற தலைப்பில் உரை ஆற்றும் பேறு கிட்டியது.  

ஆன்மீக உலகிற்குச் சவாலாக விளங்கிவரும் சிவாச்சார்யர்  நிலை, பசுப்  பராமரிப்பு, தல புராணங்களைப் பேணுவோர்/படிப்போர் குறைதல் ஆகிய மூன்றையும் முன்னிருத்தி, இம் மூன்றுக்குமே முடிந்த அளவில் தனது ஊரிலாவது தீர்வு  காண முயலும் ஸ்ரீ கண்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வேத பாடசாலையையும் மறுபடியும் துவக்கவேண்டும் என்ற இவரது ஆசையை வேத நாயகனாகிய பரமேச்வரன் நிறைவேற்றப் பிரார்த்திக்கிறோம். பல இளைய சமுதாயத்தினருக்கு இவரது தொண்டு முன் உதாரணமாக விளங்க வேண்டும். அதனால், இவரைப் போன்றோர் பலர் சிவத்தொண்டு ஆற்ற முன் வர வேண்டும். இதற்குத் திருவருளும் குருவருளும் துணை நிற்பதாக.


Friday, March 8, 2013

எது முக்கியம்??


திருவிளக்கு பூஜைகள் கோவில்களில் நடைபெறுவது என்னவோ சமீப காலத்ததாக இருக்கலாம். இதுபோல் ராகு கால துர்க்கை  பூஜை, குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்- கொண்டைக் கடலைமாலை சார்த்துதல்,ராகுகால சரபர் அர்ச்சனை, கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று பைரவர் பூஜை , ஆகியனவும் அண்மையில் சேர்ந்தவை தான் என்றாலும், இப்படியாவது மக்கள் கோயில்களுக்குச் செல்கிறார்களே என்று நினைக்க வேண்டுமே தவிர, ஏது சரி ஏது தப்பு என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. குறைகளை மன்னித்துத் தினை அளவாவது நிறை இருந்தால் இறைவன் அதை மகிழ்ந்து ஏற்பான். இதைத்தான் சம்பந்தரும் , "குறை உடையார் குற்றம் ஒராய் கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்று பாடுகிறார். தவிரவும், எத்தனை நியமமாகப் பூஜை செய்தாலும், குறைகள் இருக்கவே செய்யும். அதற்காகத்தான், பூஜை முடிவில், நியமலோபம், கால லோபம், ஸ்ரத்தா லோபம் ஆகியவற்றிற்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது.

லக்ஷார்ச்சனை என்பது நெடுங்காலமாகச் செய்யப்பட்டு வருவது. சகஸ்ர நாமத்தால் செய்யப்படும் அர்ச்சனை லக்ஷம் நாமாக்கள் ஆவதற்குப் பொதுவாகப் பத்து தினங்கள் அன்பர்களின் ஆதரவோடு செய்யப்படுகிறது. இதுவும் பெரும்பாலும் பெரிய ஊர்களில் பக்தர்களின் ஆதரவுக்கேற்ப நடக்கிறது. ஏக தின லக்ஷார்ச்சனை என்பதே பெரிய விஷயம். அதைவிடச் சிறந்த வகையில் ஏக கால லக்ஷார்ச்சனை, சிதம்பரத்தில் ஆனியிலும்,மார்கழியிலும் ஸ்ரீ நடராஜப்பெருமான் தேரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்ததும் செய்யப்படுவதைக் காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.

இப்போது நமது கவனத்தில் எழுந்ததைச் சொல்லியே ஆகவேண்டும். முன்பெல்லாம் அர்ச்சனைக்குக் கொடுத்தால் பிரசாதமாக விபூதி-குங்குமம், தேங்காயின் ஒரு பகுதி, ஒரு வாழைப் பழம் ஆகியவை பிரசாதமாக அளிப்பதைப் பக்தர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். எந்தப் புண்ணியவான் துவக்கிவைத்த பழக்கமோ தெரியவில்லை, ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மேற்கூறிய பிரசாதங்களுடன் , கட்டணத்துக்கு ஏற்றபடி அதிரசம்,முறுக்கு,லட்டு,சர்கரைப் பொங்கல்,சுவாமி-அம்பாள் படங்கள், ப்ளாஸ்டிக் தட்டுக்கள், டப்பாக்கள்,  எவர்சில்வர் டிபன் பாக்ஸ்,துணிப்பை ,வெள்ளி டாலர்கள் போன்ற பொருள்களும் கொடுக்கப் படுகின்றன.  வீட்டில் இந்தப்போருள்கள் எல்லாம் இல்லாததுபோலப் பறக்கும் கூட்டம்! உண்மையான பிரசாதத்திற்கு மதிப்பு இல்லாமலேயே போய் விடுகிறது. நம்மிடம் கூடுதலாகப் பணம் வசூலித்து நமக்கு மேற்கண்ட பொருள்களைக் கொடுக்கிறார்கள் என்று ஏன் தோன்றுவதில்லை? அப்படியானால் இந்த வியாபாரத்திற்கு நாமும் உடந்தை தானே?

கோவிலுக்குள் நுழைவதிலிருந்து பலப்பலக் கட்டணங்கள் வசூலிக்கும் நமது அறநிலையத்துறை மட்டும் சும்மா இருக்குமா? கோவில் நிர்வாகத்தின் மூலமே லக்ஷார்ச்சனை, திருவிளக்கு பூஜை முதலியவை செய்யப்படவேண்டும் என்று உத்தரவும் போட்டுவிட்டது. இம்முறை, வரும் சித்திரை  முதல் தேதியில் இருந்து அமுலுக்கு வருகிறது. இதன்மூலம் வருமானத்தை பெருக்குவதும் சாத்தியம் தானே! வியாபாரம் இனிமேல் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வளவும் அற்ப சாமான்களுக்கு ஆசைப்பட்டு, பிரசாதத்தை இரண்டாம் பட்சமாக எண்ணியதால் வந்த வினை. எது முக்கியம் என்று நமக்குத் தோன்ற வேண்டும்  அதுவரை இதை அனுபவித்தே ஆகவேண்டும்.