Sunday, June 11, 2017

வழிபடுவோர் உரிமை

திருவாரூர்த் தேர் 
தனி மனிதர் உரிமை என்ற பெயரில் சமீப காலமாக என்னவெல்லாமோ நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நாடு நமக்குக் கொடுத்த அடிப்படை உரிமைகள் இருக்கும்போது புதியதாகப் பல மாற்றங்களை உரிமை என்ற பெயரில் செய்கிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவைப்படாதவர்களே இப்படிச் செய்யத் துடிக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கு மட்டுமே. செல்வாக்கு இருந்தால் செல்வம் பல வழிகளில் கூடவே வந்து விடுகிறது. அதுவும் மித மிஞ்சிப் போகும்போது நீதி மன்றங்கள் பத்து பதினைந்து ஆண்டுகள் வழக்கை நடத்தி விட்டுப் பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியவுடன் அவர்கள் மீண்டும் துளிர் விடுகின்றனர். அதைக் காணும் பிறரும் அது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இவ்வளவுக்கும் மூல காரணம் ஒழுக்கமின்மையே.

ஒருவன் என் உணவை தீர்மானிக்க எனக்கு சுதந்திரம் உண்டு என்று வாதிடுவான். மற்றொருவன் கடவுளே இல்லை என்று பிரசாரம் செய்வான். வேறொருவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சரமாரியாக வசை பாடுவான். இத்தனையையும் விரிவாக அலச ஊடகங்கள் காத்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக நாகரீகம் உச்ச கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கேவலமான எண்ணங்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. புனிதமாகக் கருதப்படும் திருமணச் சடங்கு கேலிக் கூத்தாக மாறுகிறது. தாலி எதற்கு என்று கூவுவோர் அதைப் பெண்கள் வாயிலாகவே சொல்லச் செய்கின்றனர். திரைப்படத்தில் காசைப் பார்த்த நடிகை ஒருத்தி, திருமணத்திற்கு முன்பே பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறாள். நாத்திகம் பொறிக்கப்பட்ட கொடிக்கம்பம்  மடாதிபதி முன்னிலையில் திறந்து வைக்கப்படுகிறது.இதெல்லாம் எதைக் காட்டுகிறது?  மக்கள் ஒழுங்கான பாதையிலிருந்து விலகித் தறி கேட்டு ஓடுவதைத்தான் என்பதில் ஐயமில்லை. இப்படிப்பட்ட உரிமை நமக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

வழிபாடு செய்வதிலும் ஆகமம் நமக்கு எத்தனையோ தலைமுறைகளாக வழி காட்டி வந்துள்ளது. அதெல்லாம் எதற்கு என்றும்,எனக்குப் பிடித்த வகையிலே நான் வழிபடுவதில் என்ன தவறு என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள். கோயில்களும் நவீன மயமாக்கப் படுகின்றன. ஒலி  பெருக்கிகளில் எந்தப் பாடலையும் அலற விடுவார்கள். பேருந்துகளில் பயணம் செய்யும்போது பாடல்கள் அலறுவதை ஆட்சேபிக்காத மக்கள் , கோயில்களில் மட்டும் ஆட்சேபிக்காததில் வியப்பு ஒன்றும் இல்லை. நாம் அந்த வகையில் வளர்க்கப் படுகிறோம். அடுத்தவருக்குத் துன்பம் தருகிறோம் என்று சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. தாங்களே மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்வார்கள். நந்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு காதில் முணுமுணுப்பார்கள். வரிசையில் நிற்காமல் இடித்துக் கொண்டு போவார்கள்.

திருவாரூர் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் மிக உயரமானது. அத்தேர் வரும் வழிகளில் இரு புறங்களிலும் வீடுகளை நீட்டிஇருப்பதால் தேர்ச் சீலைகள் அடிபட்டு விழுந்து விடுகின்றன. போதாக் குறைக்கு மின்சாரக் கம்பங்கள் வேறு . அகலமான அந்த வீதியில் அவற்றைத் தள்ளி நடுவதில் மின் வாரியத்திற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தேரின் முன்புறம் நான்கு குதிரைபொம்மைகள் பாய்ந்து வரும் நிலையில் இணைக்கப் பட்டிருக்கும். அவற்றின் நீண்ட கால்கள் தேரைத் திருப்பும்போது ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களில் இடி படும் என்று தெரிந்தும் நகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். மாறாக அக்குதிரைகளின் நீட்டிய கால்களை மடித்து ( சீம்பிப் போன வடிவில்) மாற்றி அமைத்து வழக்கமான அழகைக்  கெடுத்து விட்டார்கள். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தால் இன்னும் வரும் ஆண்டுகளில் தேரின் உயர- அகலங்களையே குறைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அப்படிச் செய்ய எனக்கு உரிமை உண்டு என்று வாதத்திற்கு வருவார்கள். கோர்ட் தீர்ப்பு வரும் வரையில் ஆண்டுக் கணக்காகத்  தேரை ஓட்டாமல் இருக்க முடியாது. ஆகவேதான் இதுபோன்ற மீறல்களைத் தட்டிக் கேட்க முடியாமல் போகிறது. இதனால் வீதியின் அகலம் குறுகுவதோடு , திருப்பங்களில் ஜன நெரிசல் அதிகமாகிறது. அப்போது தேரில் யாராவது சிக்கினால் என்ன செய்ய முடியும் ? தீ அணைப்புத் துறை வாகனம் கூடவே வந்தாலும், தேர் சக்கரம் ஏறிவிட்டால் பிழைப்பது துர்லபம்.

விதி மீறல்களுக்கும் , வாக்கு மீறல்களுக்கும் மனித உரிமை துணை போகக் கூடாது. ஜனநாயகம் என்ற அருமையான வாழ்வியல் முறை பாதிக்கப் படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நெறி முறையும், கண்டிப்பும்  அவசியம் தேவை என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த நெறிமுறையைப் பின்பற்றத் தூண்டுவதே ஆலய வழிபாடு. அதற்கும் கட்டுப் பட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களைத் தக்க வகையில் திருத்த வேண்டியது ஆளும் அரசின் இன்றியமையாத கடமை ஆகும் . வழிபடுவோரது உரிமை (Worshippers' right) பற்றிக் கவலைப் படுவோர் யாராவது இருக்கிறார்களா என்ன?