Friday, July 25, 2014

இராஜேந்திர சோழருக்கு நினைவஞ்சலி

கங்கை கொண்ட சோழபுரம் 
இராஜேந்திர சோழ மாமன்னர் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைத் தமிழ் உலகம் நினைவு கொள்ளக் கடமைப் பட்டுள்ளது. அப்பேரரசர் சிவன் கோயில்கள் கட்டியதும் சோழப் பேராசை விரிவடையச் செய்ததும் பற்றி மட்டுமே நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது பிற குண நலன்களையும் நாம் இத்தருணத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். " தன்  கரங்களால் எல்லா உலகுக்கும் உபகாரம் செய்பவனும்..." என்று கரந்தைச் செப்பேடு இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம் கலைமகள் 
திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சூழ்ந்த ஐம்பத்தோறு கிராமங்களைத் தக்கோருக்குத் தானமாகத் தந்துள்ளார் இம்மன்னர்.   1073 பேருக்கு இவர் கொடை அளித்த செய்தியைக் கரந்தைச் செப்பேட்டின் மூலம் அறிகிறோம். சதுர்வேதி பட்டர்களுக்கும், உகச்சர்களுக்கும் நாவிதர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் நில தானம் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிவாலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. திருமழபாடி சிவாலயத்தைப்  புதுப்பிக்கும் பணி கி.பி. 1026 ல்நிறைவு பெற்றது. திருவாலங்காட்டில் கோயில் ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரவும், நிலத்தைப் பயிரிடவும் உதவப்பட்டது. கல்வி வளர்ச்சிக்காக எண்ணாயிரம் என்ற ஊரில் கல்லூரிக்கு முன்னூறு ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்துள்ளார் இராஜேந்திர சோழர். மேலும் வேப்பத்தூர்,திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்க் கல்லூரிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான கொடை அளித்துள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் - எழில்மிகு நந்தி 
சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உண்டாக்கியும் பூம்புகாருக்கு அருகில் கங்கை கொண்டான் கால்வாய் வெட்டுவித்தும்,சோழபுரத்தில் கன்னி  நங்கை ஏரியை உண்டாக்கியும், மக்களுக்காக நீர்ப்பாசன வசதி செய்துள்ளார். வடமொழியிலும் தமிழிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவராய் பல புலவர்களை ஆதரித்தார். இளமையில் தன்னை வளர்த்து நற் பண்புகளைப் புகட்டியவரும் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் நினைவாக நாகைக்கு அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் அவருக்குப் படிமம் நிறுவி , நிவந்தமும் அளித்துள்ளதால் இராஜேந்திர சோழரின் நன்றி மறவாத பண்பு விளங்குகியது. அது மட்டுமல்ல. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும்   தானங்கள் செய்து நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். பிற  சமயங்களையும் போற்றியுள்ளார். இவரது கலை ஆர்வத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களே சான்று. திருக்கோயில் அமைப்பில் புதுமையாகப் பிரதானக் கோயிலருகே அம்பிகைக்குத் தனிச்  சன்னதி கட்டுவித்தார்.
விஜயாலய சோழர் முதல் இராஜராஜ சோழர் வரை தலை நகரமாக தஞ்சை இருந்தது.இவரது காலத்தில் அது கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தந்தையைப் போலவே பிரம்மாண்டமான சிவாலயத்தை அங்குக் கட்டுவித்தார். திருக்கோயில்களில் ஒதுவார்களும், இசைக்கருவி வாசிப்போர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆடல், ஓவியம்,சோதிடம்,வான நூல், மருத்துவம். மல்யுத்தம், சமையல், அணிகலம் செய்தல் போன்ற கலைகள் ஊக்கம் பெற்றன.

இவரது காலத்திய ஊராட்சி முறை பாராட்டுக்குரியது. சொந்த வீடும், அரைக்கால் வேலி  நிலம் மட்டுமே  உடையவர்களும், அறவழியில் பொருள் ஈட்டியவர்களும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் மட்டும்  ஊராட்சி உறுப்பினராகத் தகுதி உடையவர்கள். லஞ்சம் வாங்கியவர்கள்  உறுப்பினராகும் தகுதியை இழந்தார்கள். குடவோலை முறைப்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். நேர்மை அற்றோர் தண்டிக்கப்பட்டனர்.

மானம்பாடி- நாகநாத சுவாமி சன்னதி  
கடாரத்தையும்,கங்கையையும்,ஈழத்தையும் வென்ற இம்மாமன்னர் மா வீரர் மட்டுமல்ல. மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதை நினைவு கூறவே ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டோம். மக்கள் பணியும் மகேசன் பணியும் கண்ணெனக் கொண்டு ஆண்ட இராஜேந்திர சோழரை நாம் இப்போது எவ்வாறு நினைவு கூர்கிறோம் தெரியுமா? கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியிடுதல், சொற்பொழிவு ஆற்றுதல் இப்படிப் பலப்பலவற்றை இரண்டு தினங்கள் நடத்துகிறார்கள். இதற்காகும் செலவு 25 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அரசு இதில் பங்கேற்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவு பெரிய தொகையை அம்மாமன்னர் எவ்விதம் நடந்து காட்டினாரோ அவ்வழிகளில் செலவிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும்? அவர் கட்டிய கோயில்களைப் புனரமைத்தல், ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு உதவுதல் பல்கலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் , அவரை நினைவு படுத்தும் போது அவரது நற்பண்புகளில் சிலவாவது நமக்கும் வர எதுவாக இருக்கும்.

              மானம்பாடி சிற்பம் 
குடந்தைக்கு அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைச் சென்று பாருங்கள். எவ்வளவு ஆண்டுகளாக அது சிதைவதை அரசும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். கலைச் சின்னமாகத் திகழும் இந்த ஆலயத்தை தேசீய சாலை அமைப்பவர்கள் சென்ற ஆண்டு இடிக்கவும் நினைத்தார்கள். அவ்வளவு தூரம் இருக்கிறது நாம் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் போற்றும் லட்சணம்!  ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை!  இதுபோல எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி மரங்களால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

மாமன்னர் ராஜேந்திர சோழரது பள்ளிப்படைவீடு பிரம தேசம் என்ற ஊரில் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. தொல்பொருள் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. நாளடைவில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், வெறும் சொற்பொழிவோடும் மலர் வெளியீட்டோடும் அவை நின்றுவிடக்கூடாது. மக்களும் அரசாங்கமும் நமது கலைச் சின்னங்களை அழிய விடக்கூடாது. வாய்ப்பேச்சாலும் கட்டுரைகள் எழுதியும் சாதிப்பதை விடக் களத்தில் இறங்கிப்  பணியாற்றுவதே அம்மாமன்னருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி.  

Saturday, July 19, 2014

துவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்

இந்தியாவுக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது எப்படி யாரால் ஏற்பட்டது என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை பலவீனப்படுத்துவதாக இவ்வரலாற்று ஆராய்ச்சி முடிந்து விடும். இன்று நாம் ஒற்றுமையாகத் தேச வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோமா என்பதே கேள்வி. இதில் மக்களின் பங்கு ஒருபுறம் இருக்க அரசியல்வாதிகளின் பங்கும் உண்டு. தங்களது  நலனுக்காக அவர்கள் ஒருபோதும் இவ்வொற்றுமை குறைய அனுமதிக்கக் கூடாது.

பாடப்புத்தகங்களில் வரலாறு எழுதுபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு   சாராரைப் பற்றி அவதூறுகள் பாடப்புத்தகங்களில் அள்ளி வீசப்படுகின்றன. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தங்களுக்குத் தேர்தலில் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற எண்ணமே இதற்குக் காரணம். அதற்காக ஒரு வரை முறை வேண்டாமா? அவர்கள் இந்நாட்டுக்கு ஏராளமான தொண்டுகள் செய்தும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கலாம் அல்லவா?

அரசு வெளியிட்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு சமூக நூலில் ஒருசாரார் மற்றவர்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் கொடுக்காமல் தாங்களே அத்துறைகளில் விளங்கி வந்தார்கள் என்று பொருள் படும்படி  குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த துவேஷ பிரசாரம் தற்காலத்திற்குத் தேவையா? பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது? ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அறிவுறுத்த வேண்டிய உபயோகமான தகவல்கள் எத்தனையோ இருந்தும் இது போன்ற வெறுப்பை உமிழும் வாசகங்கள் எவ்விதம் உபயோகமாக இருக்கும்?

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல.  அதற்கென்று தனி இடம் என்றும் உண்டு. அதைச்  சிறப்பிக்கும்போது மற்றொரு மொழியைத் தாழ்த்தி எழுதாமல் இருப்பது நல்லது. மத்திய அரசு பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழுக்கு ஒருபோதும் ஆபத்து வந்து விடாது. அந்நிய மொழிகளைக் கற்கும்போது நமது நாட்டு மொழியைக் காப்பதிலும் கற்பதிலும் மட்டும் ஏன் இந்த துவேஷம்? கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என்? தனி மனிதனின் நலத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.  

அதே போலத்தான் இந்த "வேட்டி" விவகாரமும். தனியார் கிளப்களில் வேட்டி அணிந்து வருவதை  அனுமதிக்காவிட்டால் தமிழ்ப் பண்பாட்டுக்கே அவமானம் என்று நினைப்பவர்கள், கோயில்களில் நமது பண்பாட்டின்படி பான்ட் -சட்டை அணியாமல் வேட்டி அணிந்து  வரவேண்டும் என்று உத்தரவு இட வேண்டியது தானே! கேரளத்தில் இன்றும் ஆண்கள் மேல்சட்டை இன்றி வேட்டி அணிந்து செல்வதைப் பார்க்கிறோம். நாகரீக உடைகள் கேரளக் கோயில்களில் அனுமதிக்கப் படுவதில்லை. தமிழகக் கோயில்களில்  மட்டும் நமது பாரம்பரிய உடையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லையே!

நீதியும் நேர்மையும் ஆட்சியாளர்களின் இருகண்கள். அவற்றை நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்  மாணவர்களிடையே துவேஷத்தை வளர்க்கும் பாடப்பகுதிகளை நீக்கி விட்டு நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம், மொழி துவேஷமின்மை  ஆகியவற்றை வளர்ப்பதாக அவற்றை மாற்றி அமைக்கவேண்டும். ஆட்சியாளர்கள் இதற்குத் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும் கூட.