Saturday, July 19, 2014

துவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்

இந்தியாவுக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது எப்படி யாரால் ஏற்பட்டது என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை பலவீனப்படுத்துவதாக இவ்வரலாற்று ஆராய்ச்சி முடிந்து விடும். இன்று நாம் ஒற்றுமையாகத் தேச வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோமா என்பதே கேள்வி. இதில் மக்களின் பங்கு ஒருபுறம் இருக்க அரசியல்வாதிகளின் பங்கும் உண்டு. தங்களது  நலனுக்காக அவர்கள் ஒருபோதும் இவ்வொற்றுமை குறைய அனுமதிக்கக் கூடாது.

பாடப்புத்தகங்களில் வரலாறு எழுதுபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு   சாராரைப் பற்றி அவதூறுகள் பாடப்புத்தகங்களில் அள்ளி வீசப்படுகின்றன. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தங்களுக்குத் தேர்தலில் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற எண்ணமே இதற்குக் காரணம். அதற்காக ஒரு வரை முறை வேண்டாமா? அவர்கள் இந்நாட்டுக்கு ஏராளமான தொண்டுகள் செய்தும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கலாம் அல்லவா?

அரசு வெளியிட்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு சமூக நூலில் ஒருசாரார் மற்றவர்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் கொடுக்காமல் தாங்களே அத்துறைகளில் விளங்கி வந்தார்கள் என்று பொருள் படும்படி  குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த துவேஷ பிரசாரம் தற்காலத்திற்குத் தேவையா? பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது? ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அறிவுறுத்த வேண்டிய உபயோகமான தகவல்கள் எத்தனையோ இருந்தும் இது போன்ற வெறுப்பை உமிழும் வாசகங்கள் எவ்விதம் உபயோகமாக இருக்கும்?

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல.  அதற்கென்று தனி இடம் என்றும் உண்டு. அதைச்  சிறப்பிக்கும்போது மற்றொரு மொழியைத் தாழ்த்தி எழுதாமல் இருப்பது நல்லது. மத்திய அரசு பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழுக்கு ஒருபோதும் ஆபத்து வந்து விடாது. அந்நிய மொழிகளைக் கற்கும்போது நமது நாட்டு மொழியைக் காப்பதிலும் கற்பதிலும் மட்டும் ஏன் இந்த துவேஷம்? கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என்? தனி மனிதனின் நலத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.  

அதே போலத்தான் இந்த "வேட்டி" விவகாரமும். தனியார் கிளப்களில் வேட்டி அணிந்து வருவதை  அனுமதிக்காவிட்டால் தமிழ்ப் பண்பாட்டுக்கே அவமானம் என்று நினைப்பவர்கள், கோயில்களில் நமது பண்பாட்டின்படி பான்ட் -சட்டை அணியாமல் வேட்டி அணிந்து  வரவேண்டும் என்று உத்தரவு இட வேண்டியது தானே! கேரளத்தில் இன்றும் ஆண்கள் மேல்சட்டை இன்றி வேட்டி அணிந்து செல்வதைப் பார்க்கிறோம். நாகரீக உடைகள் கேரளக் கோயில்களில் அனுமதிக்கப் படுவதில்லை. தமிழகக் கோயில்களில்  மட்டும் நமது பாரம்பரிய உடையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லையே!

நீதியும் நேர்மையும் ஆட்சியாளர்களின் இருகண்கள். அவற்றை நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்  மாணவர்களிடையே துவேஷத்தை வளர்க்கும் பாடப்பகுதிகளை நீக்கி விட்டு நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம், மொழி துவேஷமின்மை  ஆகியவற்றை வளர்ப்பதாக அவற்றை மாற்றி அமைக்கவேண்டும். ஆட்சியாளர்கள் இதற்குத் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும் கூட. 

No comments:

Post a Comment