Monday, November 23, 2020

 

                 கருணையின் மறுபெயர் குரு            

                                         சிவபாதசேகரன்


அருள் என்பது கருணையின் விளைவு. குவலயம் தன்னில் குருபரனாக மாணிக்கவாசகர் பொருட்டு எழுந்தருளினான் இறைவன். நயன தீக்ஷையால் குரு தன்னை நாடியவருக்குக் கருணை பாலிக்கிறார். உபதேசம் பெற வேண்டுமானால் பக்குவப்பட்டோருக்கே அது சாத்தியமாகிறது. ஆனால் கருணைக் கண்களால் அருளப் பெற்றவருக்கோ அனைத்தும் சாத்தியம் ஆகிறது என்றும் சொல்லலாம். அத்தகைய குரு அபக்குவர்களையும் தனது கருணைக் கண்களால் நோக்கி அருளுவார்.

குரு உருவைக் கண்டவுடனேயே மனத்தில் தெளிவும் அமைதியும் பிறக்கின்றன. இதைதான் திருமூல நாயனார், “ தெளிவு குருவின் திருமேனி காண்டல்” என்று அருளினார். இந்நிலையில் குருவானவர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆதி குருவாகிய தக்ஷிணா மூர்த்தியைப் போலவே மௌன குருவாய் இருந்தாலும் தரிசித்த மாத்திரத்திலேயே வேண்டிய அனைத்தும் சித்திப்பதை அனுபவம் மூலம் அறியலாம். அதேபோல அருளை நாடி வந்தவரும் இதைக் கொடுங்கள் என்று வாய் விட்டுக் கேட்க வேண்டிய அவசியமும் இராது. வந்தவரது முகக் குறிப்பே அவர் குருவிடம் ஏதோ கேட்க விழைகிறார் என்று காட்டிவிடும். அதைக் கண்ட குருநாதரும் என்ன வேண்டும் என்று தாமாகவே கேட்பார். மயிலாடுதுறையில் உத்தர மாயூரத்தில் உள்ள சிவாலயத்தில் சுவாமிக்கு வதான்யேச்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. நாம் கேட்கும் முன்பே “ என்ன வேண்டும் கேள் “ என்று கருணையோடு கேட்கும் வள்ளலாகிய பெருமானுக்கு அப்பெயர் ஏற்றதேயாகும். அப்பெருமானைச் சிந்தையில் இருத்தி நியமத்துடன் பூஜிக்கும் குருநாதருக்கும் அக்குணம் ஏற்படுவது இயற்கையே. இவை யாவும் கருணையின் வெளிப்பாடே ஆகும். கயிலாய உபதேச பரம்பரையில் வந்தோர்க்கு இப்பண்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது.

மக்களுக்கு நல்லுணர்வை ஊட்டி, ஞானமும் முத்தியும் பெறும் வழிகளைக் காட்டி உய்யக் கொள்வதற்காகப் பல்வேறு கால கட்டங்களில் குருநாதர்கள் அவதரித்து, மடாலயங்களை நிறுவி, தங்களது உபதேச பரம்பரையைத் தழைக்கச் செய்தார்கள். அப்பரம்பரையில் வந்தோரது பெயர்களை அறிந்தபோதிலும் அவர்களது அருட்செயல்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிய முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்குத் தமது வாழ் நாளில் மடாதிபதிகளாக இருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே அறிய வாய்ப்பு உண்டு. காஞ்சிப் பெரியவர்களைத் தரிசிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களைப் போலத் திருவாவடுதுறை ஆதீன 23 வது சந்நிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்ரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்த போது நேர்ந்த அனுபவங்களையும் கூடவே எண்ணிப் பார்க்கும் வாய்ப்பினை அன்னாரது குருபூஜை நன்னாளாகிய கார்த்திகை சதயத்தன்று பகிர்வதில் பெருமகிழ்வு கொள்ள முடிகிறது.

சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்து இளவரசாவதற்கு முன்பு சில முறை திருவாவடுதுறை ஆலயத்திற்குச் சென்று விட்டு நூல் நிலையத்தில் ஆதீன வெளியீடுகளை வாங்கிக் கொண்டு வந்து விடும் நிலையில், பிறிதொரு சமயம் ஆலய அர்ச்சகரான ஸ்ரீ தண்டபாணி சிவாசாரியார் அவர்கள் , துறைசை ஆதீனத்திற்குச் சின்னப் பட்டமாக ஒருவர் சந்நிதானத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் என்றும் சிவப் பணி செய்து வருவோரைக் கண்டால் பெரிதும் மகிழ்வார் என்றும் கூறி இளைய சுவாமிகளிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போது சுவாமிகள் பசுமடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். முக மலர்ச்சியோடு அவர்கள் பேசியதை என்றும் மறக்க இயலாது. அது முதல், திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம் சின்னப் பட்ட சுவாமிகளைத் தரிசிப்பது வழக்கமாகிவிட்டது. 

 திருவாவடுதுறையிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள திருக் கோழம்பம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் அறநிலையத் துறையைச் சேர்ந்து இருந்தபோதிலும் சரிவரக் கவனிக்கப்படாமல் புதர் மண்டி இருந்தது. ஆனாலும் ஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யார் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும் தினசரி அங்கு சென்று பூஜை செய்து வந்தார். இறைவனது திருவருள் , அக்கோயில் திருப்பணி ஆகிக் குடமுழுக்கு நிகழுமாறு கூட்டுவித்தது. அன்பர்கள் ஆதரவுடன், தலத் திருப்பதிகக் கல்வெட்டை சுவாமியின் மகா மண்டபத்தில் அமைத்து, அதனை அவ்வமயம் மகா சந்நிதானம் ஆகிவிட்ட நம் சுவாமிகளின் திருக் கரத்தால் திறக்க விரும்பியதை அவர்கள்  மனமுவந்து ஏற்றுக் கொண்டதுடன் குடமுழுக்குக்கு நேரில் வந்து கலந்து கொண்டு அருள் வழங்கினார்கள். மேலும், ஆதீனக் கோயில்களான திருவீழிமிழலை, திருமங்கலக்குடி ஆகியவற்றின் கும்பாபிஷேகத்திலும் சுவாமிகளை சந்திக்கும் போது அரிய நூல்களை வழங்கியருளினார்கள். இவ்வளவும் பெரும்பாலும் கண்கள் மூலமாகப்   பேசியவையே. அருகில் நின்று உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

மற்றொரு சமயம், கருவிலி  (கருவேலி) என்ற பாடல் பெற்ற தலத்தின் திருப்பதிகக் கல்வெட்டை அக்கோயிலில் நமது உபயமாக சமர்ப்பித்த வேளையில் அதனை மகா சன்னிதானம் அவர்கள் திறந்து வைத்து அருளாசி வழங்க வேண்டும் என்ற பேரவா உண்டாயிற்று. ஏற்பாடு செய்திருந்த தினமோ குருவாரம். அன்று சுவாமிகள் மௌனம். இருந்தாலும் கோயிலுக்குத்  தரிசனம் செய்ய வருகிறேன் என்றார்கள். முன்னதாகவே அங்கு சென்று சுவாமிகளை எதிர்கொள்ளக் குடை, மேளம், பூர்ண கும்பம், பன்னீர் இலைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு எழுந்தருளினார்கள். ஓதுவாமூர்த்திகள் கூட வராததால் சுவாமி- அம்பாள் சந்நிதிகளில் அடியேனைப் பஞ்சபுராணம் , அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடுமாறு சைகையால் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காகத்  திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் பதிவு செய்யும் கருவியோடு வந்திருந்தார்கள். சுவாமிகள் மௌனமாக இருந்தபடியால் அடியேனைப் பேசுமாறு பணித்தருளினார்கள். அத்தலத் தரிசனத்தில் பெரிதும் மகிழ்ந்தார்கள் என்பது அப்போது தெரியவில்லை.  

தை மாதத்தில் திருவாவடுதுறைக் கோயிலில் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு இறைவர் பொற்கிழி வழங்கும் விழாவைத் தரிசிக்கச் சென்றபோது மகா சந்நிதானம் அவர்கள் அங்கு எழுந்தருளி, விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்த அடியேனை சிப்பந்தி ஒருவர் மூலம் அழைத்து விபூதி அளித்துவிட்டு, “ கருவிலிக்கு மீண்டும் போனீர்களா “ என்று கேட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அக்கோயிலின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு எத்தகையது என்று.

இடையில் சிறிது காலம் அவர்கள் காசியிலே வாசம் செய்திருந்த படியால் நேரில் தரிசிக்க இயலவில்லை. மீண்டும் மடத்துக்குத் திரும்பிவிட்டதை அறிந்தவுடன் நேரில் தரிசிக்க மடத்திற்குச் சென்றேன். காசியிலிருந்து கொணர்ந்த ஸ்படிக மணிகளை வழங்கி ஆசீர்வதித்தார்கள்.

அக்காலத்தில் மாதந்தோறும் பல கட்டுரைகளை எழுதி, சைக்லோஸ்டைல் செய்து, உடன் பணியாற்றிய அன்பர்களுக்குக் கொடுத்து வந்தேன். அதில் வெளியான வேதாரண்யப் புராணத்தைப் படித்த சுவாமிகள் மிகவும் அச்செயலைப் பாராட்டியருளினார்கள். மடத்தின் மாதாந்திர வெளியீடான மெய்கண்டார் இதழிலும் கட்டுரைகள் எழுதிவந்த போது அதனைப் பாராட்டி , அடியேனை  ஊக்குவித்து  மகிழ்ந்தார்கள்.

அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு பாடல் பெற்ற தலத்தின் திருப்பணியில் பங்கேற்றபோது கும்பாபிஷேகத்தை ஒட்டிப் புதியதாக நடராஜர் சிவகாம சுந்தரி உற்சவ மூர்த்திகளைச் செய்து வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினோம். மூலவர் பெயர் நடனத்தை ஒட்டியவாறு இருந்தும் அக்கோயிலில் நடராஜப் பெருமானது திருவுருவம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது.

கும்பாபிஷேகப் பத்திரிகையை மடத்திற்குச் சென்று சுவாமிகளிடம் சமர்ப்பித்து, குடமுழுக்கிற்கு எழுந்தருள வேண்டி நின்றோம். அதற்கு இசைந்ததோடு, அஷ்ட பந்தன மருந்து, அதனை இடிக்க ஆட்கள், பிராகாரம் சுத்தம் செய்ய ஆட்கள் ஆகியவற்றை நாங்கள் கேளாமலேயே தந்தருளினார்கள். நடராஜ மூர்த்தி பற்றி கேட்பதா என்று தயங்கி நின்றபோது, முகக்குறிப்பைக் கண்டு விட்டு “ இன்னும் ஏதாவது செய்துதர வேண்டுமானால் கேளுங்கள்” என்று கேட்டார்கள். ஒருமாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , “ கோயிலில் மூலவர் பெயர் பெருமானது நாட்டியத்தை ஒட்டி இருந்தும் உற்சவ மூர்த்தி இல்லாமல் உள்ளது. நமது மடத்தின் ஆத்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜப் பெருமான் ஆதலால், மடத்தின் சார்பாக நடராஜர்- சிவகாமி விக்ரகங்களை அருட்கொடையாக வழங்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தேன். சுவாமிகள் உடனடியாக அவற்றைச் செய்து தர ஏற்பாடுகள் செய்யுமாறு சிப்பந்திக்குக் கட்டளையிட்டருளினார்கள்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆடல்வல்லான், சிவகாமசுந்தரி மூர்த்திகள் கோயிலுக்கு வந்தவுடன் பூர்ணகும்பம் அளித்துத் தெய்வ  தம்பதியரை வரவேற்றோம். சுவாமிகளும் வருகை தந்து அவற்றைப் பார்வையிட்டு மகிழ்ந்ததோடு, காரைக்கால் அம்மையார் விக்கிரகம் ஒன்றையும் புதிதாக வார்த்து ஆதீன சார்பாக அளித்தார்கள். ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாக ஏற்றதோடு ஆலய சிவாச்சாரியாருக்கும் மாதந்தோறும்  உதவித்தொகை வழங்கிய கருணைத் திறம் அளவிடற்கரியது.  இதுபோலப் பலவிடங்களில் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாகச்  செய்வித்தார்கள்.

மகேசன் பணியோடு மக்கள் பணியும் செய்த கருணையை நாம் இங்கு மறவாது போற்றவேண்டும். எத்தனையோ கோயில்களில் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டியும், மதிய உணவும் ஏழை எளியவர்களுக்கு வழங்கச் செய்த சிறப்பு இக்குருமூர்த்திகளுக்கே உரியது.

இவர்களது ஆட்சிக் காலம் , சைவ சித்தாந்தம் பயிலவும் அரிய பல நூல்கள் வெளிவரவும் , ஆதீனக் கோயில்கள் பலவற்றில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெறவும் சிறப்புற்று விளங்கியதை சைவ உலகம் நன்கறியும். ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் சிறப்பிக்கையில், “ கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி “ எனப் பாடுவார். அத்த ஆனந்த தாண்டவத்தை  ஞானக் கண்களால் காணப் பெரிதும் தவம் செய்திருக்க வேண்டும். மற்றையோரும் உய்ய வேண்டி, குருநாதர்களது கருணையை  நமது ஊனக் கண்களால் காணும் பேற்றை அளித்து நம்மையும் ஒருபொருட்டாக ஏற்று, நாய் சிவிகை ஏற்றி இறைவன் அருளுகின்ற திறம் நம்மை அதிசயப் படுத்தும்.     

Thursday, November 5, 2020

ஆலயங்கள் மறுமலர்ச்சி பெறுமா ?

                                                              சிவபாதசேகரன்

 


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்கலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டு இருந்த நேரம். வீதி உலா சென்று வந்த உற்சவ மூர்த்திகள் கோயிலை அடைந்தபின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளைக் கழற்றி விட்டுப் பத்திரமாக ஓர் அறையில் கோயில் பொறுப்பாளர் வைத்தபின் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு திருடன்,  அவர் அந்த இடத்தை விட்டு அகன்றபின் அந்த நகைகளைத் திருடிச் சென்று விட்டான். காவல் துறையால் உடனடியாக அவனைக் கைது செய்ய முடியவில்லை. மாயமாக மறைந்து விட்ட அவன் அந்நகைகளுள் சிலவற்றை உருக்கித் தன் மனைவிக்கு ஒரு ஆபரணம் செய்து கொடுத்தான் எஞ்சிய நகைகளை விற்று சைக்கிள் கடை வைத்தான் . பல சைக்கிள்களை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக்கொண்டு வந்து தராததால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பிறகு அரிசி மண்டி வைத்தான். அதிலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி இருந்தது. மனைவியோ இவன் செய்து கொடுத்த ஆபரணத்தைக் கழுத்தில் போட்டுகொண்டால்  பாம்பைப் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது என்று பதறினாள். இதற்கிடையில் அவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த கால கட்டத்தில் அவனது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு இரண்டு கைகளிலும் மணிக் கட்டுக்களுக்குக் கீழ் விரல்களே இல்லை ! வாக்கு மூலம் தந்த திருடன் சொன்னதாவது: "  சிவன் கோயில் நகையைத் திருடியதற்குத் தெய்வம் தந்த தண்டனை ஐயா இது. இதை விட, தெய்வம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் ?" என்றான். இச் செய்தி அந்நாளில் தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் வந்தது.  இந்தக் காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருட்டுக்களைப் பார்த்தால் எவ்வளவு பேர் இதுபோன்ற தண்டனை பெறுகிறார்களோ தெரியவில்லை. 

முன்பெல்லாம் இல்லாதவன்தான் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவான். ஆனால் இப்போதோ பெரிய ( ?) மனிதர்களும் , பெரிய பதவியில் இருப்பவர்களும் கூடத்  திருட ஆரம்பித்து விட்டார்கள். சுவாமியையே விற்றுக் காசு பார்க்குமளவுக்குத் துணிந்து விட்டார்கள். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தவர்கள் கோயிலுக்கு உரிய தொகையைத் தராததும், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுய நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் வாதிகள் பலரும் சிவத்துரோகத்திற்குத் துணை போக ஆரம்பித்து விட்டனர். ஆக்கிரமிப்பாளர்களால் கோயில்களும், குளங்களும் குறுகியும் காணாமல் போவதும்  பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வெளியாகின்றன. 

" பக்தர்களுக்கோ" எதைப் பற்றியும் கவலை இல்லை. தன்  குடும்பம் நன்றாக இருந்தால் போதும். கோயில் எப்படிப் போனால் என்ன ? இன்னும் பலரோ, " சுவாமி பார்த்துப்பார் " என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். சுவாமியையே கேவலமாகப் பேசும்போது கூட வாய் திறக்காத இவர்களா கோவில்களைப்  பற்றிக் கவலைப் படப் போகிறார்கள் ? ஒருவேளை தப்பித் தவறி யாராவது குரல் கொடுத்தால் கூட அவர்களுக்குத் துணையாகக் குரல் தர மாட்டார்கள். அவ்வளவு சுயநலம் வேர் ஊன்றி விட்டது. 

மக்களது அறியாமையும், சமயப்  பிடிப்பு இல்லாமையும், ஒற்றுமை இல்லாததும் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. சட்டம் பற்றிய அறிவோ சிந்தனையோ அறவே இல்லாத மனிதர்களை சட்டம் இருப்பதாகக் கூறி ஏமாற்றுவது எளிதாகப் போய் விட்டது. இதில் ஆண் என்ன பெண் என்ன , எல்லோரும் திருடத் தொடங்கி விட்டார்கள். நீதி வழங்கப் பல்லாண்டுகள் ஆகும் என்ற தைரியத்தால் துணிவு அதிகமாகிறது. அப்படியே ஏதாவது தண்டனை வழங்கப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது மேல் கோர்ட்டுகளில் முறையீடு, வாய்தா இத்யாதிகள் இருக்கும்போது வாழ் நாளே அநேகமாக முடிந்து விடும். அதற்குப் பிறகு தண்டனை வந்தால் என்ன,வராவிட்டால் என்ன. எல்லாவற்றையும் தொலைத்து வீட்டுக் கோயில்கள் நிற்பது ஒன்றே மிஞ்சும். வேண்டப்பட்டவர்களோ,அந்நியர்களோ தவறிழைத்தால் ஒருநாளும் தண்டனை பெற மாட்டார்கள் என்பது எழுதப்படாத சட்டம். 

கோயில்கள் தனது வருவாயையும்,உரிமைகளையும் இழந்து நிற்பது ஒரு பக்கம். மரங்கள் முளைத்து அழியத் தொடங்கியும் அரசோ உள்ளூர் வாசிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது அதனினும் கொடுமை! இந்நிலையைச் சுட்டிக் காட்டி ஒருசிலர் நீதி மன்றத்தை நாடியிருப்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது. இது ஒரு சிறிய ஆரம்பமே. இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகளோ ஏராளம். ஒரு நூற்றாண்டு காலத் தவறுகளையும் அலட்சியங்களையும் சரிப் படுத்துவது என்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி நீதி கிடைக்க வேண்டும். தன்னலம் கருதாத அன்பர்கள் பலர் இத்  தெய்வீகப் பணிக்குத் தங்களால் முடிந்த அளவு துணை நிற்க வேண்டும். பெயரளவில் ஆத்திகர்களாக இருந்தால் மட்டும் போதாது.