Wednesday, November 18, 2009

திருப்புன்கூரில் சனி மகா பிரதோஷம்





தற்காலத்தில் ஜனங்களிடம் சிவ பக்தி அதிகமாகிறது என்பதை பிரதோஷங்களில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள். உத்சவ காலங்களிலும் இதே போல் கூட்டம் தான்,அண்மையில் துலா உத்சவத்தின் போது மயிலம்மன் நடராஜர் சன்னதியில் ஆடியதை மயிலாடுதுறையில் பக்தர் கூட்டம் வழிபடுவதை இங்கு காண்கிறீர்கள்.

எத்தனையோ கவலைகளும் பிரச்சினைகளும் நிம்மதி இன்மையும் அதிகமாகிக் கொண்டு இருப்பதாலோ என்னவோ ஒவ்வொரு சிவாலயத்திலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகிறது. சனி மகா பிரதோஷ மகிமையைத் தெரிந்துகொண்டவர்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் எல்லோருக்கும் சோம சூத்திர பிரதட்சிணம் முதலிய விதிமுறைகள் ஒருவேளை தெரிந்திருக்காவிட்டாலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பதே சிவானுக்ரகம் தான். பசும் பாலுக்குப் பதிலாக பாக்கெட் பால் கொடுப்பதை நிறுத்தினால் விசேஷம்.

நந்திகேச்வரருக்கு விசேஷமாக விளங்கும் ஆலயங்களில் பிரதோஷ தரிசனம் செய்வது இன்னமும் ஆனந்தம் அளிக்கிறது.வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலுக்கு சனி மகா பிரதோஷம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.ராஜ கோபுர வாயிலுக்கு நேராக இல்லாமல் சற்று விலகிய நிலையில் (நந்தனாருக்காக)நந்தி பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீ சிவலோகநாத சுவாமி ஸ்வயம்பு மூர்த்தி.மூவராலும் தேவாரம் பாடப்பெற்றவர். மழை பெய்வதற்காகவும் வெள்ளம் நிற்பதற்கும் கலிக்காம நாயனாரிடம் நிலம் பெற்ற மூர்த்தி. அம்பிகை சௌந்தர நாயகி என்ற பெயரில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறாள்.



ஸ்தல விருக்ஷம் புங்க மரம் வெளி பிராகாரத்தில் இருக்கிறது. மேடையில் பஞ்ச லிங்கங்கள் இருப்பதைக் காணலாம்.



சுமார் நான்கு மணி அளவில் நந்திக்கு அபிஷேகம் ஆரம்பிக்கிறது. சாரத்தில் நின்றுகொண்டு சிவாசாரியார் அபிஷேகம் செய்கிறார். குடம் குடமாக பால், தயிர், சந்தனம் முதலிய திரவியங்கள் அபிஷேகம் செய்வதைக் காண ஆயிரம் கண் வேண்டும். தீபாராதனைக்குப் பிறகு மலர் மாலைகளால் அற்புதமாக அலங்காரம் செய்கிறார்கள். சுமார் பத்து நபர்கள் கீழே நின்று கொண்டு திரவியங்களை எடுத்துக்கொடுத்தும் தரையை சுத்தப்படுத்தியும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தும் உதவுகிறார்கள். சிவ பஞ்சாக்ஷரம் எழுத தாள்களை விநியோகம் செய்கிறார்கள்.பள்ளிக் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதில் பஞ்சாக்ஷரம் எழுதிப் பூர்த்தி செய்த தாள்களைதிருப்பிக் கொடுக்கிறார்கள். ஆறரை மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பிரதோஷ தரிசனம் ஆரம்பித்ததிலிருந்து பலத்த மழை பெய்தது. பக்தர்களும் அக்கருணை மழையில் நனைந்தனர். ஆயுட்காலத்தில் ஒரு தடவையாவது சிவலோகனாதனின் பிரதோஷ தரிசனத்தை சிவ பக்தர்கள் அவசியம் செய்ய வேண்டும்.