Friday, May 14, 2010

சிவ தர்ம ரக்ஷணம்


ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் மீது பாடப்பட்டுள்ள திருவேரக நவரத்னமாலையில் ஒரு பாடல், பலவகையான துரோகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மனத்தில் கொஞ்சம்கூடப் பயம் இல்லாமல் அதர்ம வழியில் சென்று சிவதுரோகம் செய்பவர்கள் இதில் அடங்குவர். கோயில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கோவிலுக்குரிய நெல்லைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் பலர். ஆலயங்களில் உள்ள பொருள்களைக் கொள்ளை அடிப்பவர்கள் பலர். கோயில் நிலங்களில் உள்ள வீடுகளில் வசித்துக்கொண்டு வாடகை தராமல் ஏமாற்றுபவர்களும் உண்டு. பலர் நெடுங்காலமாக அவற்றில் இருந்துகொண்டு ரூ பத்து முதல் முப்பது வரை வாடகை கொடுப்பவர்களும் உண்டு. முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் கோவில் வீடுகளில் இப்படி ஆக்கிரமித்துக்கொண்டும் ,வாடகையை நிர்வாகம் கேட்டால் ,கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுமாக அநியாயங்கள் தொடர்கின்றன. கோயில் வீடுகளை அவற்றில் வசிப்பவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள். கோயில் நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்கத் துணிந்துவிட்டார்கள்.

தெய்வத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட பாவங்களை செய்ய முன்வருகிறார்கள். இவர்களை " மாபாவம் செய்த கொடிய பஞ்சமாபாவிகள்" என்கிறார் நவரத்தின மாலை ஆசிரியர். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழமொழி உண்டு. சிவசொத்தை அபகரித்தவர்களின் குடும்பங்கள் வேரோடு அழிந்து நாசமாவதைப் பலர் கண்டும் கேட்டும் இருக்கலாம்.

கோட்புலி நாயனார் என்ற சிவபக்தர் திருவாரூருக்கு அருகிலுள்ள நாட்டியாத்தாங்குடி என்ற ஊரில் வசித்து வந்தார். சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்தார். யுத்த காலத்துக்கு அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார்,இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும் ,சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் விருஷப வாகனத்தில் உமா தேவியோடு ஸ்ரீ பரமேச்வரன் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் உய்யக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

எனவே, இனிமேலாவது, சிவத்ரோகம் செய்யாமல் தர்ம வழியிலேயே சம்பாதித்து, அதன் பயனாக சிவ தர்மங்கள் செய்ய , தவறு செய்தவர்கள் மனம் திருந்தி முன் வரவேண்டும். "குற்றம் பொறுத்த நாதர்" என்று கருப்பறியலூர் என்ற ஸ்தலத்தில் சுவாமிக்குப் பெயர் உண்டு. பிழை பொறுக்கும்படி மனம் உருகி வேண்டினால் நிச்சயமாக மன்னிப்பும் பெறலாம்.