Friday, October 21, 2011

தீபாவளி சிந்தனை

"சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே" என்று பரமேச்வரனைத் துதிக்கிறது திருவாசகம். பிரதி மாதமும் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாக அப்பெருமானை ஆராதிக்கிறோம். தீபாவளி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியும் அவனை ஆராதிப்பதறகாகவே ஏற்பட்டது. மாசியில் வருவது மகாசிவராத்திரியாக மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் கார்த்திகை தீபத்தன்று வீடுகளில்
தீபம் ஏற்றி வழிபடுவதைபோல வடநாட்டில் தீபாவளியன்று மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக்குகிறார்கள். சோதியுள் சோதியாக ஈச்வரன் இருப்பதாகத் திருவிசைப்பாவில் வருகிறது. அது யாரோ ஏற்றிவைத்த ஜோதி அல்ல. ஸ்வயம் ஜோதி.அவனே ஸ்வயம் பிரகாசன். அது இருளை அகற்றும் சாதாரண விளக்கு அல்ல.கோவிலில்
விளக்கு ஏற்றினால் ஞானம் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அல்லவா? ஆகவே, இந்த விளக்கு நமது மனத்தில் உள்ள அஞ்ஞானமாகிய இருட்டை நீக்கும் ஞான விளக்கு. ஞானம் கிடைத்துவிட்டால் நல்ல அறிவும் பெற்றுவிடுவது சுலபமாக
ஆகி விடுகிறது. "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே:" என்று மாணிக்கவாசகரும் பாடினார்.

தீபாவளியைக் கொண்டாடும் சமயத்தில் நாம் ஜோதிஸ்வரூபனாக இருக்கும் ஈச்வரனைத் தியானிக்க வேண்டும். அன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் சுவாமிக்குப் புது வஸ்த்திரம் வாங்கித்தந்து சமர்ப்பிக்கலாம்.
நமக்குப் புதுத் துணிமணிகள் வாங்கும் வசதி தந்த தெய்வத்துக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா? அதிலும் முக்கியமாக ஒரு கால பூஜையோ அல்லது அதுகூட இல்லாமலோ கவனிப்பார் அற்று இருக்கும் பழங்காலக் கிராமக் கோயில்களுக்கு
இதைச் செய்யலாம். சிறந்த சிவபுண்ணியமும் கூட. அன்றைய தினம் எந்த கிராமக் கோயிலும் மூடியிருக்கக் கூடாது. இதுவே சுவாமியிடம் அன்றைய தினம் நாம் செய்யும் பிரார்த்தனை.

இன்னொரு முக்கியமான சிந்தனையையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது..நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம், தற்காலத்தில் விலைவாசிகள் விஷம் போல ஏறுவதால் குடும்பம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது. ஆள் கூலியும் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேல் நானூற்று ஐம்பது வரை ஆகிறது. நிலைமை இப்படி இருக்க, கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களுக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளமே தரப் படுவதை, அரசாங்கமோ,பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. வெளியூர்க்காரர்கள் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து கொடுத்தபின்பும் ஊர்மக்கள் ஒன்று கூடி அர்ச்சகருக்கு ஐயாயிரம் ரூபாயாவது மாத வருமானம் கிடைக்க வழிசெய்யலாம் அல்லவா? சில ஊர்களில் மண்டலாபிஷேகம் செய்யக்கூட
உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை. இச்செய்கைகள் மூலம் மனம் நொந்துபோய் ஊரை விட்டே வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர் செல்லும் அர்ச்சகர்களுக்கு யார் ஆதரவு தரப் போகிறார்களோ தெரியவில்லை. பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத அவல நிலை உருவாகிறது. ஒரு கிராமத்தில் நூறு வீடுகள் இருந்தால், மாதம் ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய் தந்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் பாதியை அர்ச்சகருக்கு சம்பளமாகவும்,மீதியை வங்கியில் சேமித்து, கோயிலை நிர்வகிப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கேபிள் டீவி க்கு மாதம் அலட்சியமாக நூறு ருபாய் தருபவர்கள் இந்த சிவ தர்மத்தையும் செய்தால், அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும், கோவிலையே நம்பியிருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றலாம். கோவிலும் பூஜைகள் நின்று பூட்டப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மனம் கொண்ட ஒருவராவது முன்வந்து கிராமவாசிகளுக்குப் புரியும்படியாக எடுத்துச் சொல்லி கோவில்களில் விளக்கேற்றலாம் தானே? சிவனருளே இதற்குத் துணைசெய்யவேண்டும்.

1 comment:

  1. மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது.எல்லோரும் அப்படியே சிந்திக்க பரமேஸ்வரன் அருள் புரியட்டும். அன்புடன் சிவாயநம

    ReplyDelete