Tuesday, October 4, 2011

தலையாலங்காட்டில் தலையாய திருப்பணி




சிவாலயங்களில் திருக்குளத்தையும் நந்தவனத்தையும் பராமரிப்பது குறித்து எழுதியிருந்தோம். இதை உடனடியாகச் செயல்படுத்துவதே ,பிறருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று எண்ணியபடியால் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள தலையாலங்காடு என்ற தலத்தில் முதலாவதாகத் துவங்கத் திருவருள் கூட்டியது. இக் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல் மெதுவாக நடைபெற்று வருகின்றன. நாமும் நம்மால் இயன்ற அளவில் இச்சிவ புண்ணியத்தில் பங்கேற்க வேண்டும். நமது சந்ததிகளும் இதைப் பின்பற்றவும் நற்கதி பெறவும் கிடைக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது.


பல ஆண்டுகளுக்கு முன்பு , அருகில் உள்ள செம்பங்குடிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்கள் தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கு இக் கோயிலுக்கு வந்து எதிரில் உள்ள சங்க தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வருவார்களாம்.இப்படியாக ஒரு மண்டல காலம் தினசரி தரிசனத்திற்கு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபோல் நாமும் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்பதைத், தானே அனுசரித்துக் காட்டினார்களோ என்று தோன்றியது. எனவே நாம் அங்கு தரிசனத்திற்காகப் போகும்போது பதினொரு பிரதக்ஷிணம் செய்யும்படி எண்ணம ஏற்பட்டதால் அவ்விதமே நம்மை செய்வித்ததும் அவன் அருள் தான்.


அதேபோல நந்தவனப் பணியையும் துவங்கத் திருவருள் கூட்டியது. நித்திய பூஜைக்குத் தேவையான அரளி, பாரிஜாதம் (பவழ மல்லிகை) , செம்பருத்தி போன்ற மலர்ச் செடிகளின் கன்றுகளையும், வில்வம், வன்னி போன்ற மரக் கன்றுகளையும் வாங்கிவந்தோம். அவற்றை நடுவதற்கு முன் வெளி பிராகாரத்தில் செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டன. செடிகளுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்ப்பதற்காக நூறு அடி நீளமான ஹோஸ் வாங்கித்தரப்பட்டது. ஆடு மாடு முதலியவற்றால் செடிகள் அழியாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் படும். மழைக் காலம் துவங்க இருப்பதால் செடிகளும் கடும் வெய்யில இல்லாததால் நன்கு வளர எதுவாக இருக்கும்.


கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான வியாதிகளால் அவதிப் படுவோர் பலர் இதில் ஸ்நானம் செய்து நோய் நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவத்தால் காணும் உண்மை. குளத்தில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. படித்துறை சில இடங்களில் செப்பனிட வேண்டியுள்ளது. தூய்மைசெய்யும் பணி ஓரிரு தினங்களில் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற அன்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதானால் இப்பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். குளத்தங்கரை விநாயகர், கோஷ்ட துர்க்கை, திருஞான சம்பந்தர் சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்திகள் நூதனமாகச் செய்யப்பட்டுப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அம்பாள சன்னதிகளின் முன்பு தளவரிசை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தலத்து விசேஷ மூர்த்தியான அனுக்ரஹ சனி பகவான் சன்னதியைப் புனரமைக்க வேண்டும். மடப்பள்ளி மேற்கூரை பழுதடைந்துள்ளது. ஸ்தல வ்ருக்ஷ மேடை, சுவாமிக்குப் பின்னால் திருமாளிகைப்பத்தி மேடை ஆகியவை அமைக்கப் படவேண்டும். கோவிலின் உட்பகுதியில் மின்சார இணைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. இதை முற்றிலும் புதுப்பிக்கவேண்டும்.


அப்பர் சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற இப்புராதனமான கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய கோயில்கள் கட்டுவதில் ஆர்வம காட்டுபவர்கள் இதுபோன்ற ஆலயங்களின் திருப்பணிக்கும் உதவலாமே. சிவனருள் அதுபோன்ற சிந்தனையை வழங்குமாறு பிரார்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் கிராமங்களில் எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆலய மகிமை தெரிய வருவதோடு, பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்பட வகை செய்யும். இப்போது நடந்துவரும் ஓரிரு கால பூஜைகளும் அறவே நின்றுவிடாதபடி காப்பாற்றப்படவேண்டும். புராதன ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.


தலையாலங்காடு ஆலய அமைப்பு மற்றும் தல புராணம் பற்றிய விரிவான தகவல்கள், நமது மற்றொரு பதிவான, "சிவார்ப்பணம்.ப்ளாக்ஸ்பாட்.காம் " என்ற முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விரும்புவோர், 9443500235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

2 comments:

  1. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete