Friday, July 1, 2011

செல்லாத காசு

நம்மிடம் இருக்கவேண்டிய குணங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டுவந்த நாணயமே (Honesty) நாளடைவில் குறைந்து வரும்போது, உலோகங்களால் செய்யப்பட்டு அரசாங்கம் வெளியிடும் நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவதில் அதிசயம் இல்லைதான். ஜூன் முப்பதுக்கு மேல் இருபத்தைந்து பைசா காசுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டபின், ஒரு ஆங்கில நாளிதழ் , அந்த ஒரு நாணயத்தின் மதிப்பு எப்படியெல்லாம் இருந்தது என்று பட்டியலிட்டுக் கூறியிருக்கிறது. எண்பதுஆண்டுகளுக்கு முன்பு அதைக் கொண்டு ஒரு மூட்டை கோதுமையும், எழுபது ஆண்டுகள் முன்பு ஒன்றரை கிராம் வெள்ளியும் வாங்க முடிந்தது என்கிறார்கள். அதே சமயம், மாத வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தாலும், இந்த உயர்வு,விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி இல்லை என்பதே வாதம்.



எனவே, கையில் எஞ்சியிருந்த பதினொரு ரூபாய் மதிப்புள்ள இருபத்தைந்து பைசா காசுகளை அருகிலிருந்த பொதுத்துறை வங்கியில் மாற்றச்சென்றேன். அதை காஷியர் வாங்க மறுத்ததோடு, ரிசர்வ் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளச் சொன்னார். மற்றொருவரோ, அக்காசுகளைக் கோயில் உண்டியலில் போட்டுவிடும்படி பரிந்துரை செய்தார். நானோ, விடாப்பிடியாக அக்காசுகளைச் செல்லும் காசுகளாக மாற்றிக் கோயில் உண்டியலில் போடுவதாகக் கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ந்த வங்கி ஊழியர் ஒருவர்,தானே அக்காசுகளைப் பெற்றுக்கொண்டு காஷியரிடம் சென்று , மாற்றிக்கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். பதினொரு ரூபாய்க்கு இத்தனைப் போராட்டமா என்று கேட்கலாம். மக்கள் வளைந்து கொடுக்க கொடுக்க, அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய மறுப்பதோடு அலைக்கழிக்கவும் செய்கிறார்கள்.



நம்வீடுகளில் இருக்கும் பழைய சுவாமி படங்களை எங்கே கொண்டு வைப்பது என்ற நிலை வரும்போதும், பூஜை செய்யப்பட்ட மண் பிள்ளையார்களை எங்கே விடுவது என்னும்போதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஆலயமே!! அதேபோல செல்லாத காசுகளை யாரும் வாங்க மாட்டார்கள் என்ற நிலையில் கோயில் உண்டியலில் போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆலய அதிகாரிகள் பாவம். அதை எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு அலைய வேண்டியதுதான்.



இனிமேல் விஷயத்திற்கு வருவோம். பத்து நாட்களுக்கு முன்பு, பஸ்ஸில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது பக்கத்தில் ஒரு சிவாசாரியார் வந்து அமர்ந்தார். வறுமையில் வாடும் அவரை சமூகம் எப்படி இழிவுபடுத்துகிறது என்பதை அறிய , அவர் சொன்ன தகவலைத் தருகிறேன்:


" நான் பூஜை செய்யும் கோவிலில் எப்போதாவது அர்ச்சனைக்கு கொடுப்பார்கள். தட்சிணையாக இரண்டு ரூபா கொடுப்பது வழக்கம். இருபத்தைந்து காசு செல்லாது என்றவுடன் அர்ச்சனை செய்ய வந்த ஒருவர் அந்த இரண்டு ரூபாய்க்கும் இருபத்தைந்து காசுகளாகவே தட்டில் போட்டார். யாரும் வாங்க மாட்டார்கள் என்றால் கோவில் குருக்களிடம் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எங்கள் நிலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?"



உண்மைதான். செல்லாக் காசின் புகலிடம் ரிசர்வ் பாங்கா அல்லது கோயில் உண்டியலா என்று நிஜமாகவே புரியவில்லை. வாசி தீரக் காசு வழங்கிய பரமனுக்கே புரியும்.

3 comments:

  1. அருமையான செய்திகள் ஐயா..

    கூடவே மக்களின் மனோநிலையைக் கண்டு
    வேதனையும் தோன்றுகிறது..

    காசை மட்டுமா நம் மக்கள் செல்லாக் காசாக
    கருதுகிறார்கள் ?
    கடவுளையும் தான் ?

    //வாசி தீரக் காசு வழங்கிய பரமனுக்கே புரியும்.//

    நன்றாகச் சொன்னீர்கள்

    ம்ம்..

    எல்லாம் சிவன் செயல்..

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. Sir,
    You are doing a wonderful job ellarukkum entha voipu kidai pathilla I am regularly seeing your mail it is opportunity to know the sivas temple.

    ReplyDelete