Friday, November 2, 2018

செல்லப்பெண்ணாய் இருக்கணும்

வலைத் தளத்தில் எப்போதோ படித்து மகிழ்ந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன. அதை எழுதியவர் யாராக இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும்.இக்காலத்துப் பெற்றோர்களும் திருமணம் ஆக இருக்கும் பெண்களும் அதை அவசியம் படிக்க வேண்டும் என்பதால் அதனை மீண்டும் இங்கு பகிர்கிறோம்.ஒரு வழக்கமான வாழ்த்து போலத் தோன்றினாலும் அதில் பொதிந்துள்ள கருத்துக்கள் உயர்ந்தவை.  எல்லோரும் மெச்சும் பெண்ணாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதிலும் " செல்லப் பெண்ணாய் வாழ வேண்டும் " என்று வாழ்த்தும் நெஞ்சம் தந்தைக்கே உரியது எனலாம். ஏனென்றால் தந்தையிடம் மகளுக்கும் , மகளிடத்தில் தந்தைக்கும் உள்ள பாச உறவு இணை இல்லாதது. மனைவியின் சொல்லையும் மீறி பெண்ணிடம் அதிகம் செல்லம் கொடுக்கும் தந்தையைப் போலவே, அப்பாவிடம் எல்லோரையும் விட அதிக உரிமையோடு, தான் வேண்டியதைக் கேட்டுப் பெறுபவள் பெண் தானே ! 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான உறவுகளை உயர் கல்வியும், பொருளாதாரமும், நாகரிகமும், புதிய வாழ்க்கை முறைகளும் பாதிக்கின்றனவோ என்று அச்சப் பட வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகப்  பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் போதிய அளவு இல்லை என்றே கூறலாம். உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஆண்-பெண் இருவருமாக ஒரே பள்ளியில் படிப்பதோடு நிறுத்திக் கொண்டு, அதன் பிறகு தனித் தனிக் கல்விக் கூடங்களில் படிப்பது மேலாகத் தோன்றுகிறது. இக்கருத்தைத் தற்காலத்தில் ஏற்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் அக்குழந்தைகள் பலருக்குக்  கொடுமைகள் நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்கிறார்களா? ஆண்கள் கல்வி பயிலும் பள்ளிகளில் ஆண் ஆசிரியரும் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளும் இருந்தால் ஓரளவாவது பாதுகாப்பு கிடைக்கலாம். 

வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையோ மேலும் கவலையை அளிப்பதாக உள்ளது. சக ஆண் ஊழியர்களால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் வேலைக்குச் சென்று வர வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் பணி புரியும் இடங்களிலாவது வேலையைத் தேர்ந்து எடுக்கலாம். படித்து விட்டு சும்மா இருக்கலாமா என்பதற்காகவாவது வேலைக்குப் போனால் இதையெல்லாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. மனதுக்குள் குமுறிக்கொண்டே அவர்கள் நாட்களைக் கடத்துவது எத்தனை பேருக்குப் புரியும் ? 

பலத்த பீடிகைக்குப் பிறகு சொல்ல வந்த விஷயத்திற்கு வர வேண்டி இருக்கிறது. சிவாசாரியார் மற்றும் வைதீகர்கள் தங்கள் பெண்களைப்  படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவதால் அப்பெண்கள் தங்கள் கௌரவத்திற்கேற்ற வரங்களையே விரும்புகின்றனர். வைதீகம் செய்வதும், கோவில் பூஜை செய்வதும் இப்பெண்களுக்குக்  கேவலமாகத் தோன்றுகிறது போல் இருக்கிறது. இதனால் சுமார் முப்பதாயிரம் சம்பாதிக்கும் சிவாச்சார்ய- வைதீகப் பையன்களை இப் பெண்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் தாங்களே அச்சம்பளம் வாங்கும்போது பையன் ஒரு லட்சமாவது வாங்கணுமே என்கிறார்கள். இதில் பெண்ணைப் பெற்றவர்களும் உடந்தை! அவளது சம்பளத்தைக்கொண்டே அவளது கல்யாணத்தை நடத்தி விடலாம் அல்லவா? இப் பேராசையால் காலம் தாழ்ந்து கொண்டே போகிறது. பலருக்குத் திருமணம் ஆகாமலே போய் விடுகிறது. இன்னும் சிலர் வேறு மார்கங்களில் சென்று தாங்களாகவே வாழ்க்கைத் துணையை முடிவு செய்கின்றனர். அப்போதுதான் பெற்றோர்களுக்குத் தான் செய்த தவறு தெரிய வருகிறது. அதற்குள் எல்லாம் முடிந்து விடும்  நிலையில் எந்தப் பயனும் ஏற்படாமல் வாழ்க்கை நரகமாகிறது. பெண்களும், பெற்றோர்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 

இப்போதெல்லாம் நகரங்களுக்கு இணையாகக் கிராமங்களில் வசதிகள் பெருகி வருகின்றன. இரு சக்கர வாகனம்,தொலை பேசி, ஆட்டோ , சமையல் வாயு போன்ற சிலவற்றை இங்குக் குறிப்பிடலாம். அதோடு வீட்டுக்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் அருகிலுள்ள ஊரில் சென்று  வாங்கி வந்து பயன் படுத்தலாம். மனத்தை அதற்குத் தயார் படுத்திக் கொள்வதொன்றே அப்பெண் குழந்தை செய்ய வேண்டியது. அப்படிச் செய்து விட்டால் வைதீகமோ,கோவில் பூஜையோ உயர்ந்ததாகவே தெரியும். வேலைக்குக் காலை முதல் மாலை வரை சென்று சம்பாதிப்பதைச்   சில மணி நேரங்கள் மட்டுமே வைதீகத்திலும் கோவில் பூஜையிலும் செலவழிப்பதால் சம்பாதிக்க முடியும். அதன் மூலம்   கிடைக்கும் மன நிம்மதி இருக்கிறதே, செய்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். அதிகாரிகளிடம் கைகட்டி நிற்பதைக் காட்டிலும் ஆண்டவனிடம் கை கட்டித் தண்டனிட்டு நிற்பதன் உயர்வும்  புரிய வரும். உறவுகள் மேம்படும். பரம்பரையும் காப்பாற்றப் படும். ஆதி தம்பதிகளான பார்வதி-பரமேசுவர்கள் அருள வேண்டும். 

ஆசையோடு வளர்த்த செல்ல மகள் பெற்ற சந்தோஷத்தைப் பார்த்த தகப்பனாரது மன நிலையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. மலையத்துவஜன் பெற்ற பெருவாழ்வு  மீனாக்ஷி தேவியாகத்  தோன்றியது போலத் தன்  செல்ல மகள் தகுந்த வரனோடு மணம் புரிவதைக் கண்களில் ஆனந்த நீர் அருவி பொழிய அவர்   காண்பார்  என்பதைச் சொல்லவா வேண்டும் ? 

3 comments:

  1. We should de-craze our minds to de-grease our slippery slopes and to regain Kailash like heights in value system. Feudal approach should give way to respect for traditional vocations, knowledge, competence and commitment.

    ReplyDelete
  2. ANNA ,ARTICLE EXCELLENT. EVERY ONE IN MIDDLE CLASS BRAHMIN FAMILY UNDERSTAND THIS TO BE REGULARIZATION THIS HOLY SANATANA DHARMA LIFE.
    THEN SOCIETY WILL GROW WITH BASIC PRINCIPALES .THANKS ANNA VERY GOOD SUBJECT.

    ReplyDelete
  3. இந்த நிலை வெகுவிரைவில் மாறும் என்று எண்ணுவதில் பயன் இல்லை. சிவாச்சாரியராக இறைவன் பணி செய்யும் பிள்ளை வரன்களுக்கு சைவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக வைதீக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெண் தர முன்வர வேண்டும். அங்ஙனம் செய்வது சிவச்சாரிய பரம்பரையை நீட்டிக்கச் செய்வதால், பெருமானுக்கே ஆற்றும் பெரும் தொண்டு ஆகும்.

    ReplyDelete