Thursday, September 3, 2020

தகவல் அறிய முன்வருவோமா ?


 பொதுவாகவே நம் மக்களுக்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. சட்ட நுட்பங்கள் தெரியாவிட்டாலும் சட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கூடத்  தெரிவதில்லை. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்து நீதியின் முன் நிறுத்தப்படும்போது எனக்குச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் சட்டம் நம்மை மன்னிக்காது. நம்மைச் சுற்றிலும் பல குற்றங்கள் நடக்கும்போதும் சட்ட வல்லுனர்களும் காவல் துறையும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறோம். பள்ளிகளில் சட்டத்தின் அடிப்படைகளையாவது வாழ்க்கைக்குப் பயன் படும் அளவில் கற்பிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, காவல், நீதி ஆகியவை இருக்கும்போது ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவற்றில் புகுத்தப்பட்டு அதுவே சட்டமும் ஆகி விடுகிறது. 

இந்து அறநிலையத் துறை எதற்கு என்று அதைச் சட்டம் ஆக்கிப் பல ஆண்டுகள் கேள்விகளை எழுப்பாமல் இப்போது எழுப்பத்  தொடங்கியுள்ளனர். எந்த வழக்கும் அவ்வளவு எளிதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் அறநிலையத் துறையயைப் பற்றி யார் கவலைப் படப்  போகிறார்கள்? அந்த தைரியத்தில் தான் அக்கிரமங்கள் தொடர்கின்றன. வழக்குத் தொடுத்தால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டுமோ தெரியாது.

இந்து அற  நிலையத்துறை  பற்றிய சட்டத்தைப் படித்தவர்களுக்காவது அதை எடுத்துக் காட்டி வழக்காடத் தோன்றவில்லை இத்தனை காலமும். இதற்கு இப்போதாவது ஒரு சிலர் முன் வந்து நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி ஆகும். தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று இருப்பதே அநேகருக்குத் தெரிவதில்லை. அதன் மூலமாகவாவது விவரங்களை அறியவும் அதற்கேற்ப வழக்குத் தொடுக்கவும் முடியும். ஆனால் வழக்குக்கான செலவை யாரும் ஏற்கத்  தயங்குவதால் விடியும்  காலம் அவ்வளவு எளிதில் உதயமாகும் என்ற நம்பிக்கை ஏற்படுவதில்லை. 

ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் வாயால் புலம்பிக்கொண்டு இருந்து கொண்டு அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முன்வருவதில்லை. மடாலயங்களும், வசதி படைத்த ஆத்திகர்களும் முன் வரலாம். அதுகூட இத்தனை ஆண்டுகளும் நடக்காதபோது ஏழை அடியார்கள் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?   அவரவர்களுக்கு அவரவர் கவலை. தங்களை எக்காலத்திலும் பாதுகாத்துக்  கொள்வதே அவர்களது கவலை. 

ஆத்திக உலகம் ஒன்றுபட்டால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறைக்கு மாற்று ஒன்று அமையும் வரை இறைவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடப்போகிறார்களா? மற்றொரு அமைப்பை மக்களே வகுத்துக் கொண்டு கோயில்களையும் அவற்றின் உடைமைகளையும் பாதுகாக்க முடியாதா ? அந்த அமைப்பில் சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றால் வாதிடுவதற்குச்  செலவழிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க முடியாது அல்லவா ? அவ்வல்லுனர்களும் மகேசன் பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்யும் புண்ணியம் பெறலாமே. 

இந்து அற  நிலையத்துறையின்  கீழ் தற்போது 44120 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 36000 கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 10000 கூட இல்லை என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அத்தனை கோயில்களுக்கும் நிலங்களும் கட்டிடங்களும் இருந்தும் இவ்வளவு வருமானம் தான் வருகிறது என்றால் இதற்கு யார் காரணம்? பொறுப்பு ஏற்காத வரை அற நிலையத்துறை எதற்கு என்று கேட்பது நியாயம் தானே ! 

உண்டியல் முதலியவற்றால் பண மழை கொட்டியபோதிலும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் இத்துறையால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் பணி  செய்பவர்களுக்கோ அற்ப சம்பளமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்த அப்பாவிகள் உருட்டல்களையும் மிரட்டல்களையுமே சந்தித்து வருகிறார்கள்.   அதிகார துஷ்பிரயோகமும், ஊழல்களும் சிலை கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர் கதைகள் ஆகி விட்டன. 

கூடிய சீக்கிரமே இறை சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி இதற்கான செயல் முறையை வகுக்க வழி காண வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை முறைகேடுகள் நடைபெறுமோ  தெரியவில்லை. அதைத் தடுப்பதற்காகவாவது மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.செய்வார்களா? ( செய்யத் துவங்குவோமா என்று கேட்பதே பொருத்தம் )  ஒவ்வொரு ஊர் மக்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் அந்தந்தக் கோயில்கள் பற்றிய விவரங்களை அறிய முன்வர வேண்டும். அப்போதாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்ப்போம். இறைவன் துணை நிற்பான்.

No comments:

Post a Comment