Wednesday, October 28, 2015

பாடல் பெற்ற தலங்கள் பொலிவிழக்க விடலாமா?

திருக்கருப்பறியலூர் என்பது திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப்  பாடல் பெற்ற சிவஸ்தலம். தற்போது தலைஞாயிறு என்று மக்களால் அழைக்கப்பெறும் இத்தலம், வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பட்டவர்த்திக்கு முன்பாக உள்ள சர்க்கரை  ஆலையை ஒட்டி வடக்கெ செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுவாமிக்குக் குற்றம் பொறுத்த நாதர் என்றும் அம்பிகைக்குக் கோல்வளை நாயகி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சுவாமி-அம்பாள் சன்னதிகள் சற்று உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளன. சுவாமியின்  கர்ப்ப  கோஷ் டங்களில் விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,துர்க்கை ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் கட்டுமலை அமைப்பைக் காணலாம். இது சீர்காழி ஆலயத்தை நினைவு படுத்துவதாக உள்ளது. படி ஏறிச்  சென்றால், தோணியப்பர் சன்னதியும் அதற்கும் மேலே மரப்படிகளில் ஏறினால்  சட்டநாத சுவாமியின் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.  அற்புதமான சோழர்காலக் கட்டிடக்  கலையைக்  கண்டு வியக்கிறோம். படிகளில் இறங்கி வந்து பிராகாரத்தை  வலம் வரத் துவங்கினால் ஸ்தல விருக்ஷமான முல்லையையும் அதன் அருகில் சிவலிங்க மூர்த்தியையும் தரிசிக்கிறோம்.

இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.  நுழை வாயிலில் உள்ள மூன்று நிலைக்  கோபுரம் மரங்கள் வேரூன்றியதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்நிலை நீடித்தால் கோபுரமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயில் திருப்பணியும் கும்பாபிஷேகமும் கண்டு  ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என அறிகிறோம். அதாவது , நான்கு கும்பாபிஷேகங்கள் நடந்திருக்க வேண்டிய இவ்வாலயம் ஒரு கும்பாபிஷேகத்தைக் கூட இக்கால  கட்டத்தில்     காணவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. மேல்தளமும் மழைக்காலங்களில் ஒழுகுவதாக அறிகிறோம். இதே போன்று ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகமும் திருப்பணியும் காணாது பழுது பட்ட நிலையில் இவ்வாதீனக் கோயில்கள் பல உள்ளன. எனவே  தனது நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகத் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சைவ உலக அடியார்  பெருமக்கள் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம். 

No comments:

Post a Comment