Wednesday, May 27, 2015

அரசு கைவிட்டால் ஆண்டவனே கதி

மத்திய அரசின் பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த அறிக்கையின் முழு விவரங்களும் இன்னமும் தெரியாவிட்டாலும், அதன் நோக்கம் ஓரளவு தெளிவாகவே புரிகிறது. அதாவது, பழைய கலைப் பொருள்களை வெளி நாடுகளுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் உள்  நாட்டில் அவற்றை விற்க அனுமதி வழங்க யோசிப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு சட்ட திருத்தம் கொண்டு வருவதால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று நம்பினாலும், உள்நாட்டுக்குள் அவற்றை விற்கலாம் என்று அனுமதித்தால் நமது கலைப்பொருள்களுக்கும், பாதுகாப்பின்றி கிடக்கும் நமது கலைச் செல்வங்களுக்கும் ஆபத்து வரும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அதிக சிரமில்லாமல் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் பெருகி வரும் நிலையில் இப்படிப்பட்ட சட்டம் தேவையா ? கபூர் போன்ற கொள்ளைக் காரர்கள் அதிகரிக்கவே இது வகை செய்வதாக முடியும்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தாலே "கலைப் பொருள் "  என்று சட்டம் இருக்கும்போது அதை மேலும் கிடுக்கிப்பிடியாக இறுக்கவேண்டுமே தவிர, தளர்த்தப்படக் கூடாது. கொள்ளைக் காரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும். அவர்களைக் கொள்ளைக் காரர்கள் என்றே அழைக்க வேண்டும். ஆனால் நமது பத்திரிகைகளோ, புழல் சிறையில் இருக்கும் கபூரைக் " கில்லாடி கபூர் "  என்றும்  "  கடத்தல் மன்னன் " என்றும் வெட்கம் இல்லாமல் குறிப்பிடுகிறார்கள்.

நமது கிராமங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆலயங்களின் கலைச் செல்வங்கள் களவாடப் படும் தற்போதைய நிலையில், இதுபோன்ற சட்ட திருத்தம் பேராபத்தையே விளைவிக்கும். மாநில அளவில் அற  நிலையத்துறை  இதுபோன்ற கோயில்களுக்கு மதில் சுவர்களும் , உறுதியான  பாதுகாப்பு அறைகளும் ,பாதுகாவலர்களும் இருக்கும் நிலையை ஏற்படுத்தாமல் காலம் தள்ளுவதால் தான் இது போன்ற திருட்டுக்கள் நடை பெறுகின்றன. அப்படியானால் இந்தத் துறையை அரசாங்கம் நிர்வகிக்கக் கூடாது. நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையில் எழுப்ப வேண்டிய கேள்வி இது. இதுவரை யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை!!

இப்பொழுது நாம் செய்யக் கூடியதெல்லாம் ஒன்று தான். மத்திய அரசு தனது இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மகஜர் தர வேண்டியது ஒவ்வொரு இறைநம்பிக்கை உள்ளவரும் செய்ய வேண்டிய கடமை. யார் எப்படிப் போனால் என்ன; நமக்கு வேண்டியது   பேரும்  , புகழும்,காசும் மட்டுமே  என்று சுய நல வாதிகளாக இருந்தது போதும். உங்களது கருத்தை, மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்து கடமை ஆற்றுங்கள். பிறரையும் செய்யச் சொல்லுங்கள்.


இடிந்து கிடக்கும் கோயில்களின் எஞ்சியவற்றையாவது சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் பழைய நிலை மாறாதவாறு புனரமைப்போம்.மக்களிடம், " நமது கோயில் நமது பண்பாட்டுச் சின்னம் " என்ற கருத்தைத் தெளிவுபட எடுத்துச் சொல்வோம். இனி வரும்  தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டுவோம். இவ்வளவுக்கும் மேல் அரசாங்கம் செவி சாய்க்காவிட்டால் ஆண்டவனே கதி. 

No comments:

Post a Comment