Tuesday, June 16, 2015

பாரம்பரியமும் முன்னேற்றமும்

வாழ்க்கையில் முன்னேற ஆசை யாருக்குத்தான் இல்லை? இங்கேதான் ஒரு  நெருடல்  ஏற்படுகிறது. முன்னேற்றம் என்று நாம் எதை நினைக்கிறோம்?   அதற்கு அளவுகோல் எது? அந்த அளவை எட்டியவுடன்  முன்னேறியது போதும் என்ற எண்ணம் ஏற்படுமா?  வாழ்க்கைத் தரம் என்று  சொல்கிறோமே, அது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது? தனி மனிதனின் வருமானத்தையா? அப்படியானால் பணவசதி ஒன்று மட்டுமே அளவுகோல் என்று தானே அர்த்தம்? இதை வைத்துப் பார்த்தால் "கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு " என்பது ஏட்டு அளவில் மட்டுமா?  படித்தும் வேலைக்கு அலைபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒருவேளை வேலை கிடைத்தாலும், வருமானம்  பலருக்குப் போதுமானதாக இல்லை.

தேவைகள் நாளடைவில் பெருகவே, கடைகளில் விற்கப்படும் நவீனப்போருள்கள் அத்தனையும் நம்மிடம் இருந்து விட்டால் அதையே முன்னேற்றம் என்று எண்ணுபவர்கள் உண்டு. அப்படிப்பட்ட பொருளாதாரம் எற்படுவதற்குப் பல்வேறு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு குரல் கொடுக்கிறார்கள். அதுவே ஒற்றுமை என்றும் அந்த ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள். அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தை இழக்கவும் துணிந்து விட்டதுதான் துரதிருஷ்டம். கைப்புண்ணுக்கு மருந்து போடலாம். மருந்து வாங்கப் பிறர் உதவலாம். கையையே வேண்டாம் என்று சொல்லலாமா?

மேலை நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்றது உண்மைதான். இந்த வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் வீழ்ச்சியையும் அவர்கள் சந்திப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனையோ குடும்பங்களில் பெற்றோரிடமிருந்து பதினெட்டு வயதுக் குழந்தைகள் பிரிந்து தனித்து விடப்படுகிறார்கள் என்பதைப் பலர் அறிவர். அப்படி வெளி வந்தவர்களில் பலர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆவதையும் , மண வாழ்க்கைகள் முறிவதையும் காண்கிறோம். பணக்கார நாடுகளிலும் ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். அங்கும் வீடற்றோர் ஏராளம். இந்நிலையை நாமும் சந்திக்கத் தயாராகி வருகிறோமா?  

அரசியல் ரீதியாக நம்மிடம் பலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இதற்கு உறுப்பினர் சேர்க்கை, வலைத்தளம் மூலம் கருத்துப் பரிமாறல், சலுகைகள் கேட்டுப் போராட்டம் என்று இப்படிப் பல செயல்கள் அரங்கேறுகின்றன. இத்தனைக்கும் காரணம் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லாததுதான். அதை ஒரு பலவீனமாகவே மக்கள் கருதி இத்தகைய செயல்களில் இறங்குகிறார்கள். இவையெல்லாம்  தனி நபர் உரிமை என்று பறை சாற்றப்படுகிறது. ஓட்டுப் போடுவது உரிமை என்று சொன்ன பிறகு, ஓட்டுப் போட்டவர்கள் உரிமை கேட்டுப் போராடுவது என்பது ஜனநாயகத்தின் கட்டாயம்.

இப்படி மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வா என்று நாம் சிந்திக்க வேண்டும். எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைச் சார்ந்த அத்தனை பேரும் ஏழைகள் அல்ல. அதே சமயம் பணக்காரர்களும் அல்ல. ஏதாவது ஒருசில சமுதாயத்திற்கு அரசு போதிய நீதி வழங்கவில்லை என்றால் அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவது தங்களுக்குள்  உதவி செய்ய முன் வரலாம். ( அடிப்படையில் பார்த்தால் இதுவும் தவறு தான். ஏழ்மையில் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் உதவுவதே முறை.) அப்படிச் செய்யாமல் இருப்பதால் இந்த எளியவர்களை எவரும் கைகொடுக்க முன் வருவதில்லை. ஒருக்கால் சமூக அந்தஸ்து வந்துவிட்டாலும் இந்நிலை அத்தனை எளிதாக மாறாது. நமது பாரம்பர்யங்கள் தேவை அற்றவை என்ற எண்ணத்தையே அவை ஏற்படுத்தும்.

ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் பட வேண்டும்.  அரசுச்  சலுகையை எதிர்பார்த்துக் கொண்டு  இருப்பதால் வசதி உள்ளவர்கள் ஒருநாளும் உதவ முன் வரப்போவதில்லை. காலம் வேகமாக நகர்கின்ற போது, நமது பாரம்பர்யம் காற்றில் விடப் பட்டு விடும். வேடிக்கை பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கும்நிலை மாற வேண்டும்.கருத்துத் தெரிவிப்பதால் காலணாவுக்குக் கூடப் பயன் இல்லை. செயலில் காட்டுகிறோமா, ஒரு குடும்பத்திற்காவது உதவுகிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது. முன்னேற்றம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பது பின்னேற்றத்திற்கு அடிகோலும் என்பதை உணரவேண்டிய தருணம் இது.இல்லாவிட்டால் முன்னேற்றம் என்னும் போர்வையில் மிருக வாழ்க்கை ஒன்றே மிஞ்சும்.

நல்ல குணங்கள் அமைவது இறைவன் கொடுக்கும் வரம். " அடியார்க்கு என்றும் குணங்களைக்  கொடுப்பர்" என்பது   அப்பர் சுவாமிகள் வாக்கு.  இறைவனுக்கு அடிமை செய்யாமல் மனிதனுக்குத்  தலை வணங்கும் சமூகம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாம் சிவன் செயல் என்று இருக்க வேண்டியதுதான். அவரவர்கள் தாங்கள் செய்வதே சரி என்று வாதிடும் இந்தக் காலத்தில் நல்ல வழி காட்டப்போனால் கொள்வார் இருப்பது சந்தேகமே. மாற்றம் ஏற்பட சாத்தியக் கூறுகள் இருப்பது துர்லபம் என்று தெரிந்தும் சொல்லாமல் இருக்கக் கூடாதல்லவா? நமது கடமையை ஆற்றினோம் என்ற திருப்தியாவது இதனால் ஏற்படட்டுமே! 

No comments:

Post a Comment