Friday, December 23, 2011

கோயில் யானைகள்

யானையை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது என்பது என்னவோ உண்மை தான். பக்தர்கள் அதனை வினாயகராகவும் ,குழந்தைகள் அதை வியப்புடனும் பார்க்கின்றார்கள். பெரிய கோயில்களில் நுழைந்தவுடன் யானையைப் பார்த்துவிட்டுத்தான் சுவாமி தரிசனத்திற்குப் போகிறோம். அது நம் தலையைத் தொடும்போது ஏற்படும் அனுபவம் தனிதான். சிறு குழந்தைகளை அழ-அழ அதன் மத்தகத்தின் மீது ஏற்றி உட்கார வைத்துவிட்டுக் கீழே இறக்குவார்கள் பாகன்கள். கேரளத்தில் சுமார் ஐநூறு கோயில்களில் யானைகள் பராமரிக்கப் படுகின்றன என்கிறார்கள். தமிழகத்திலும் பெரிய தேவஸ்தானங்களில் யானைகள் இருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் யானைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் போருக்குச் செல்பனவாகவும் இருந்தன. அரசன் யானை மீதிருந்தே போரிட்டு மாண்டால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று சிறப்பிக்கப் படுகிறான். மேலும், எடையுள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் யானைகள் பயன் படுத்தப்பட்டன. காட்டில் வெட்டப் பட்ட மரங்களை நதிக்கரைக்கு இழுத்துச் செல்ல யானைகள் உபயோகிக்கப்பட்டன. யானைகளின் லக்ஷணங்கள், அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி நூல்களும் இயற்றப்பட்டன. கோயில்களுக்கென்று விடப்பட்ட யானைகள் அருகிலுள்ள நதியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரவும், திருவிழாக்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. சில ஆலயங்களில் கஜ பூஜைகள் நியமத்துடன் நடைபெற்றன.இன்னும் சொல்லப்போனால், குருவாயூர் ஆலயத்திலிருந்த கேசவன் என்ற யானையின் படம் பல வீடுகளில் பூஜை அறையை அலங்கரிக்கிறது.

தற்காலத்தில் கோயில் யானைகளின் நிலையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய பிராணியை நாட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. " யானையைக் கட்டித் தீனி போடுவது போல" என்றும், "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசுகிறோம். கோயில் யானைகள் வயிறார சாப்பிடுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆறுகளில் அமிழ்ந்து குளிக்க வேண்டிய யானைகளை கோயில் வளாகத்தில் குழாய் நீரால் குளிப்பாட்டுகிறார்கள். பிறகு கோயிலைச் சுற்றி ஒரு வலம். கொடிமரத்தடியில் நின்று சன்னதியை நோக்கி துதிக்கையால் வணக்கம் தெரிவித்து விட்டு மடப்பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறது. மூன்று நான்கு உருண்டைகளாக சாத உருண்டைகள் வாய்க்குள் திணிக்கப் படுகின்றன. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது, கொடிமரத்தருகில் போடப்பட்ட தென்னை மட்டையைத் தின்றபடியே, வருவோரிடம் பாகனுக்காக எடுக்கப்படும் பிச்சை. ஒரு காலையும் கனத்த இரும்புச் சங்கிலியால் கட்டிவிடுகிறார்கள். அப்படிக் கட்டப் படும் காலும் காலின் அடிப்புறமும் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

பழக்கப் படுத்தப்பட்ட யானைகளே சில சமயம் மிரளுவதும், மதம் வந்து ஓடுவதும் உண்டு. இந்தமாதிரி சமயங்களில் பல பாகன்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு யானை, பாகனை மிதித்துத் துதிக்கையால் வீசியெறிந்து கொன்றதாகச் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவும் நடந்தும். யானையின் அருகில் பலத்த வெடி சப்தமும்,வான வேடிக்கையும், செண்டா போன்ற வாத்தியங்களும் தொடர்ந்து முழங்குகின்றன. விழாக்காலங்களில் யானையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது யானை மிரண்டால், மக்களே ஒருவர்மேல் ஒருவர் மிதிபட்டு உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் படங்களோடு செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன(அவற்றில் ஒரு சில படங்களையே இப்பதிவில் காண்கிறீர்கள்.அவர்களுக்கு நம் நன்றி உரியது.)

தமிழக அரசு, கோயில் யானைகளைப் புத்துணர்ச்சி(!) முகாமுக்காக 48 நாட்கள் முதுமலை காட்டில் பாகன்களோடு அனுப்பி வைக்கிறது. இவற்றை லாரிகளில் ஏற்றும் சிரமம் ஒரு பக்கம். திரும்பிவந்தபிறகும் இதே உண்டைகட்டியும், கால்சங்கிலியும் தொடரும் தானே? இங்குதான், தற்கால சூழ்நிலையில் கோயில்களுக்காக யானைகள் தேவைதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருவானைக்காவல் போன்ற யானை வழிபட்டதாகப் புராணங்களில் கூறப்படும் தலங்களில் மட்டும் அந்த ஐதீகத்திற்காக யானைகள் பராமரிக்கப்பட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஒரு யானையைப் பராமரிக்க ஆகும் செலவில் பல பசுக்களைக் கோயில்வளாகத்தில் வளர்க்கலாம். அவற்றால் பயனும் உண்டு.(யானையால் என்ன பயன் என்பது வேறு விஷயம்) . மக்களுக்கு-- குறிப்பாக பாகன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவும் முடிகிறது. பசுமாடுகளைப் பராமரிக்க ஒரு சிலரை நியமிக்கலாம். கால நடை மருத்துவர் மூலம் அவற்றின் நலனையும் பேணலாம். யானைகளுக்கும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். அவற்றிற்கு உண்மையிலேயே "புத்துணர்ச்சி" கிடைக்கும். அரசாங்கப் பணமும் மிச்சமாகும்.

Thursday, December 1, 2011

ஆண்டவனே கதி


பல கோயில்கள் "கமர்ஷியலாக" ஆகி வருவதாக அங்கலாய்த்துக் கொள்வோர்கள் உண்டு. அப்படி ஆகாத கோயில்கள் ஏராளமாக இருக்கும்போது அங்கு ஏன் செல்லக்கூடாது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மின்சாரக் கட்டணம் என்று வரும்போது அரசாங்கமும் கோயில்களைக் "கமர்ஷியல்"களாகவே பார்க்கிறது. வீடுகளுக்கான கட்டணத்தையே கோயில்கள் செலுத்திக் கொண்டு இருந்ததை "கமர்ஷியல்" கட்டணமாக அரசு உயர்த்தியபோது ஒருசிலர் அதிருப்தி தெரிவித்தபோது, " சுவாமிக்குப் பின்னால் ஒளி வட்டம் இருப்பது போல் படம் போடும் போது மின் விளக்கு எதற்கு?" என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஏளனம் பேசியவரும் உண்டு.

தற்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த உத்தேசித்திருக்கும்போது, குறைந்த கட்டணத்தையும், பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்தையும் உயர்த்த சிபாரிசு செய்யப்படுகிறது. எல்லாக் கோயில்களும் பழநியோ,திருச்செந்தூரோ,மதுரையோ அல்ல. எந்த விதமான வருமானமும் இல்லாத கிராமக் கோயில்கள் ஏராளம். நிலங்களில் இருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் தவிக்கும் ஆலயங்கள் ஏராளம். நிலைமை இப்படி இருக்கும் போது, மின்கட்டண உயர்வை அக்கோயில்கள் எப்படி சமாளிக்க முடியும்? .  அரசுக்குப் பரிந்துரைக்கும் குழு இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

வீடுகளுக்கான மின் கட்டணமும் உயர்வதைத் தட்டிக்கேட்போர் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளும் இருக்கின்றன. ஆலயங்களோ அனாதையாக விடப்படுகின்றன.இவ்வளவு ஆன்மீகவாதிகளும்,மடாதிபதிகளும் இருந்தும் யாரும் அதிருப்தி தெரிவிக்கக் காணோம்.மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு, மடங்கள் வெளியிடும் பத்திரிகைகளுக்கும் தபால் தலை கட்டணத்தை உயர்த்தியபோது, திருவாதிரையான் திருவருட்சபை , அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதன் நகல, திருவாவடுதுறை ஆதீன மாத இதழான "மெய்கண்டார்"ல் வெளியாயிற்று.

ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பெரும்பாலும் அப்பூஜைகள் பகலிலேயே நடக்கின்றன என்றாலும் கிணற்று/ ஆழ் துளை நீரைப் அபிஷேகத்திற்காகப்பயன்படுத்த வேண்டி மின்சார மோட்டார் வேண்டியிருக்கிறது. மழைக் காலங்களில் பகல் நேரத்திலேயே கோயிலுக்குள் கும்மிருட்டாக இருப்பதால் மின் விளக்குகள் தேவைப் படுகின்றன. பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வரவில்லையா எனக் கேட்கலாம். உண்மைதான். எண்ணெய் வாங்க மன்னர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்கள் கைப்பற்றப்பட்டு விட்ட தற்காலத்தில் இது சாத்தியமில்லாமல் போய் விட்டது அல்லவா? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தும், "மின்சார நிதி" என்று மக்களிடம் கை ஏந்தவேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டு விட்டன நம் ஆலயங்கள்? ஒரு பல்பு செயலிழந்து போனால் உபயகாரர் யாராவது வாங்கிக்கொடுத்தால் தான் அதற்கு விடிவு காலம்.

இப்படிப்பட்ட துர்பாக்கியக் காலகட்டத்தில் பக்தர்கள் செய்யக்கூடியதும் உண்டு. குறைந்த மின் செலவு ஆகும் பல்புகளை ஆலயத்திற்கு வழங்கலாம். சூரிய ஒளிமூலம் மின்சாரம்  பெறும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இரவு நேரத்தில் ப்ராகாரங்களுக்காவது ஒளி இவ்விதம் பெற முடியும். தேவையற்ற இடங்களில் மின்சாரம் வீணாவதைத் தடுப்பதாலும் மின் கட்டணம் குறையும்.

மின் வெட்டுக்களும், மின் கட்டண உயர்வும் இருக்கும்போது, கோயில்களைப் பாதுகாக்கும் "பாதுகாப்பு அலாரங்களுக்கு" என்ன வேலை? பழையபடி பாதுகாப்பின்றிக் கிடக்க வேண்டியதுதான். இவ்வாறு அக்கறையின்றி விடப்பட்ட ஆலயங்களுக்கு என்னதான் தீர்வு? தோன்றாத்துணை ஆகிய இறைவனுக்காக நீதி மன்றங்களில் முறை இடலாம். எதற்கெல்லாமோ நிலுவை பெறப் படும் இக்காலத்தில் இதற்குக் கிடைக்காமலா போய்விடும்?  ஆனால் இப்பொதுநல வழக்கை இறைவனுக்காகத் தொடுப்போர்தான் இல்லை. அனாதை ஆகிவிட்ட ஆலயங்களுக்கு அந்த ஆண்டவனே கதி.

Friday, November 25, 2011

தெரிந்த புராணமும் திரிக்கப்படும் "கதைகளும்"

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் எழுதும் ஆன்மீகக் கட்டுரைகள் பிழை இல்லாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கடைசிபக்கத்தை எப்படியோ நிரப்பி விடுகிறார்கள். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதும் இல்லை. அண்மையில் ஒரு ஆன்மீக இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர், "நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க" என்ற தலைப்பில் தனக்குத் தோன்றிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்!

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நந்தனாருக்காக நந்தி விலகியதைப் பற்றித்தான். புராணத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு, நந்தியை சிவபெருமான் விலகச் சொன்னார் என்று மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இது நடந்த இடம் தில்லை என்று எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் திருப்புன்கூர் சிவலோகநாதர் சன்னதியின் முன்னால் இருக்கும் பிரம்மாண்டமான நந்தியே விலகியது என்பதை," புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளி.." என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

இக்காலத்தில் குறுக்கே மறைத்துக் கொண்டு நின்றால், "நந்தி மாதிரி" மறைப்பதாகத் தவறாகக் கூறி வருகிறார்கள். சிவாலயங்களிலாவது நந்திக்குப் பின்னால் நின்றால் கொம்புகளுக்கு நடுவழியாகப் பெருமானை தரிசிப்பார்கள். பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு முன்னால் கைகூப்பி நிற்கும் கருடாழ்வாரைச் சுற்றி சன்னதியே கட்டியிருப்பதைப் பார்க்கலாம். இப்படி இருந்தும், "கருடன் மாதிரி குறுக்கே மறைப்பதாகக் " கூறுகிறார்களா என்ன?


சரி! இனி அவர் எழுதியுள்ள பட்டீஸ்வரம் கதைக்கு வருவோம். சம்பந்தர் சிவிகையில் வருவதைக் காண "எம்பெருமாட்டி ஆசைப்பட்டாளாம்." அத்தலத்தில் இறைவன் முன்பிருக்கும் நந்திகள் சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம். இதோடு விட்டால் பரவாய் இல்லை. நந்தியைத் தள்ளிவைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா" என்று ஒரு அறிவு ஜீவி கேட்டதாக வேறு எழுதியிருக்கிறார். அவர் கேட்டதாகவே இருக்கட்டும். அக்கேள்வி உலகம் முழுவதுக்கும் தெரிந்துதான் ஆக வேண்டுமா? இதெல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். " நம்பிக்கை --- அதானே எல்லாம்?" என்று ஒரு நகைக்கடை விளம்பரம் செய்வதையுமா இவர் டீ.வீ யில் பார்க்கவில்லை?


"தெரிந்த புராணம் ... தெரியாத கதை" என்ற தலைப்பில் அதே ஆன்மீக இதழின் வேறு ஒரு பக்கத்தில் , தனது பெயரின் முன் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு ஒருவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. பைரவரையும் பிக்ஷாடனரையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருக்கிறார். " பரமேஸ்வரனே பாவம் செய்த கதை" என்று வேறு எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. முதலில் இவருக்குத் தெரியாத/ படித்திராத புராணத்தைக் கூறுவோம். பதினெட்டுப் புராணங்களை நமக்குத்தந்த வியாச பகவான், அவற்றுள் ஒன்றான ஸ்காந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டம்,தக்ஷ காண்டத்தில், சிவாம்சமான பைரவ மூர்த்தி, பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவனது அகந்தையை அகற்றி, அவனது கபாலத்தில் விஷ்ணு தனது நெற்றியைப் பிளந்து, ரத்தத்தால் நிரப்ப முற்பட்டபோது மூர்ச்சை ஆகவே, மாங்கல்யப் பிச்சை கேட்ட மஹாலக்ஷ்மிக்கு இரங்கி விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். சிவனுக்குப் பிரமகத்தி தோஷம் வந்ததாகக் கூறவில்லை.


பிக்ஷாடன மூர்த்தம் என்பது தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகக் கொண்ட கோலம். இதற்கும் பைரவ மூர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?? எந்த தெய்வத்தையும் இழிவு படுத்தாமல் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இன்ன இன்ன கோத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய ஆலயங்கள் என்றும், இன்ன ராசி மற்றும் இன்ன நக்ஷத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதட்டும். அப்படியாவது சிலர் அக்கோயில்களுக்குப் போகிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது.


ஆன்மீக உலகில் மலைகள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவரவர்கள் பிரபலங்களாகிவிட்டால் போதும்.பிறகு ஆன்மிகம் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பிரசுரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் தான் தயாராக இருக்கிறார்களே?

Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?



ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?   

Tuesday, October 25, 2011

நல்ல பண்புகள்


தீபாவளி என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவை புதிய ஆடைகளும், பட்சணங்களும், பட்டாசுகளுமே தான்.
சிலருக்கு நரகாசுரன் கதையும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு டீ.வி.யில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைக்கு வரும் படங்களும் கூட ஞாபகம் வரும். ஆனால் நமக்கு நினைவுக்கு வராத எவ்வளவோ இருக்கும்போது அவற்றையும் சிறிது சிந்திக்க வேண்டியிருக்கிறது.


தீபாவளி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்கள்.

எல்லாம் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள்.

குடும்பத்தவர் காலம் சென்றதால், ஓராண்டு பண்டிகை கொண்டாடாமல் இருப்பவர்கள்.

குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டோர்.

குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் தனியே வசித்து வேலை செய்பவர்கள்.

உற்றார் உறவினர் இருந்தும் பாசம் என்பதையே அனுபவிக்காதவர்கள்.

வசதிபடைத்த வீட்டுப் பையன்கள் முகத்தையே பாவமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் வெடித்துச் சிதறிக் கிடந்த வெடிகளைப் பொறுக்கிக்கொண்டுபோய் தானும் வெடிக்க ஆசைப் படும் ஏழைச் சிறுவர்கள்.

போரில் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டு அயல்நாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது ஜவான்கள்.


இப்படிப் பலதரப்பட்ட மக்கள் தீபாவளியை இன்பமாகக் கொண்டாடமுடியாமல் துன்பப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி எண்ணுவதாலும். ப்ரார்த்திப்பதாலும் அத்துன்பச்சுமை உடனே குறையப் போவதில்லை என்றாலும், நமக்கு இரக்க குணம் ஏற்பட வகை செய்கிறது அல்லவா? இந்த குணம் இல்லாததால் தான்
தற்காலத்தில் சுயநலம் ஓங்குகிறது. இல்லாதவனுக்கு இரக்கப்படுவதும் அவனுக்கு உதவுவதும் இருப்பவனது கடமை. இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் முற்பிறவியில் அவர்கள் நல்வினைகளைச் செய்யாததால்தான் என்கிறார் திருவள்ளுவரும்.

நமக்கு நல்ல குணங்கள் வர வேண்டும் என்று ஈச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும். " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே." என்று அப்பர் தேவாரம் சொல்கிறது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருமூலர் பாடியருளியதுபோல், நாமும் சிந்திப்போமானால் நமது எண்ணங்கள் உயர்ந்தவை ஆகும்.

ஜனங்களின் நல்ல குணங்கள் போய்விடக்கூடாதே என்று கவலைப் படும் விதமாக 1949 ம் வருடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஆற்றிய உரையை 19.5.2004 தேதியிட்ட "துக்ளக்" இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது:


" பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்கத்தில் போய் ஈசன் அருளை அடையவோ ஜனநாயகம் உதவுகிறதா அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு சகாயம் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். "Of the people,by the people,for the people" என்றெல்லாம் என்னென்னவோ
சொல்கிறார்களே, அதெல்லாம், விஷயம் தெரியாத மக்களால், விஷயம் தெரியாத (ஆனால் சுய நலம் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த சர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்று கூடப் பயப்படும்படி இருக்கிறது. உத்திர மேரூர் சாசனத்தில் உள்ள எல்லா clause க்கும் ஷரத்துக்களுக்கும் அடிப்படை , வேட்பாளருக்கு அர்த்த சுத்தியும்,ஆத்மசுத்தியும் இருக்க வேண்டும் என்பதே.  தற்போது குற்றவாளி என்று நிரூபணம் ஆனவரைத்தவிர எவரும் வேட்பாளராக நிற்க முடியும். இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லை இல்லை.பெரிய தப்புகள்கூட, சாமர்த்தியமாகப் பண்ணிவிட்டு சாட்சியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது.
பிரஜைகள் அத்தனை பேரின் அர்த்த,ஆத்ம சுத்திகள் கெட்டுப்போக வழி செய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல் முறை செய்யப்பட்டிருக்கிறதே  என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பிறகு, இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கும்போது, எல்லோரும்
நிதானம் இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல்,விவஸ்தை இல்லாமல் கிளம்புவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை காட்டுவதற்காக தர்மத்தில் சிறுமை அடைந்துவிட்டால் நம்முடைய ஜனநாயக வேஷம், பிராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கின்ற மாதிரி தான். நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால் பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால்,எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது? "

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பெரியவர்கள் கவலை தெரிவித்தார்கள். அதுவோ சுயநலத்தின் ஆரம்பகாலம். இப்போதோ அது வேரூடிக் கிடக்கிறது. உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் இதை சிந்திக்க வேண்டும்.

பிறர் நலம் பற்றி அக்கறை கொண்டால் தேசநலம் ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட ஞானத்தை, ஞான பரமேச்வரனாகிய தக்ஷிணாமூர்த்தி நமக்கெல்லாம் அருள வேண்டும்.

                       "வையகமும் துயர் தீர்கவே." --- சம்பந்தர் தேவாரம்.

Friday, October 21, 2011

தீபாவளி சிந்தனை

"சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே" என்று பரமேச்வரனைத் துதிக்கிறது திருவாசகம். பிரதி மாதமும் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாக அப்பெருமானை ஆராதிக்கிறோம். தீபாவளி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியும் அவனை ஆராதிப்பதறகாகவே ஏற்பட்டது. மாசியில் வருவது மகாசிவராத்திரியாக மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் கார்த்திகை தீபத்தன்று வீடுகளில்
தீபம் ஏற்றி வழிபடுவதைபோல வடநாட்டில் தீபாவளியன்று மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக்குகிறார்கள். சோதியுள் சோதியாக ஈச்வரன் இருப்பதாகத் திருவிசைப்பாவில் வருகிறது. அது யாரோ ஏற்றிவைத்த ஜோதி அல்ல. ஸ்வயம் ஜோதி.அவனே ஸ்வயம் பிரகாசன். அது இருளை அகற்றும் சாதாரண விளக்கு அல்ல.கோவிலில்
விளக்கு ஏற்றினால் ஞானம் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அல்லவா? ஆகவே, இந்த விளக்கு நமது மனத்தில் உள்ள அஞ்ஞானமாகிய இருட்டை நீக்கும் ஞான விளக்கு. ஞானம் கிடைத்துவிட்டால் நல்ல அறிவும் பெற்றுவிடுவது சுலபமாக
ஆகி விடுகிறது. "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே:" என்று மாணிக்கவாசகரும் பாடினார்.

தீபாவளியைக் கொண்டாடும் சமயத்தில் நாம் ஜோதிஸ்வரூபனாக இருக்கும் ஈச்வரனைத் தியானிக்க வேண்டும். அன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் சுவாமிக்குப் புது வஸ்த்திரம் வாங்கித்தந்து சமர்ப்பிக்கலாம்.
நமக்குப் புதுத் துணிமணிகள் வாங்கும் வசதி தந்த தெய்வத்துக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா? அதிலும் முக்கியமாக ஒரு கால பூஜையோ அல்லது அதுகூட இல்லாமலோ கவனிப்பார் அற்று இருக்கும் பழங்காலக் கிராமக் கோயில்களுக்கு
இதைச் செய்யலாம். சிறந்த சிவபுண்ணியமும் கூட. அன்றைய தினம் எந்த கிராமக் கோயிலும் மூடியிருக்கக் கூடாது. இதுவே சுவாமியிடம் அன்றைய தினம் நாம் செய்யும் பிரார்த்தனை.

இன்னொரு முக்கியமான சிந்தனையையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது..நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம், தற்காலத்தில் விலைவாசிகள் விஷம் போல ஏறுவதால் குடும்பம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது. ஆள் கூலியும் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேல் நானூற்று ஐம்பது வரை ஆகிறது. நிலைமை இப்படி இருக்க, கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களுக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளமே தரப் படுவதை, அரசாங்கமோ,பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. வெளியூர்க்காரர்கள் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து கொடுத்தபின்பும் ஊர்மக்கள் ஒன்று கூடி அர்ச்சகருக்கு ஐயாயிரம் ரூபாயாவது மாத வருமானம் கிடைக்க வழிசெய்யலாம் அல்லவா? சில ஊர்களில் மண்டலாபிஷேகம் செய்யக்கூட
உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை. இச்செய்கைகள் மூலம் மனம் நொந்துபோய் ஊரை விட்டே வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர் செல்லும் அர்ச்சகர்களுக்கு யார் ஆதரவு தரப் போகிறார்களோ தெரியவில்லை. பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத அவல நிலை உருவாகிறது. ஒரு கிராமத்தில் நூறு வீடுகள் இருந்தால், மாதம் ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய் தந்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் பாதியை அர்ச்சகருக்கு சம்பளமாகவும்,மீதியை வங்கியில் சேமித்து, கோயிலை நிர்வகிப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கேபிள் டீவி க்கு மாதம் அலட்சியமாக நூறு ருபாய் தருபவர்கள் இந்த சிவ தர்மத்தையும் செய்தால், அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும், கோவிலையே நம்பியிருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றலாம். கோவிலும் பூஜைகள் நின்று பூட்டப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மனம் கொண்ட ஒருவராவது முன்வந்து கிராமவாசிகளுக்குப் புரியும்படியாக எடுத்துச் சொல்லி கோவில்களில் விளக்கேற்றலாம் தானே? சிவனருளே இதற்குத் துணைசெய்யவேண்டும்.

Tuesday, October 4, 2011

தலையாலங்காட்டில் தலையாய திருப்பணி




சிவாலயங்களில் திருக்குளத்தையும் நந்தவனத்தையும் பராமரிப்பது குறித்து எழுதியிருந்தோம். இதை உடனடியாகச் செயல்படுத்துவதே ,பிறருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று எண்ணியபடியால் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள தலையாலங்காடு என்ற தலத்தில் முதலாவதாகத் துவங்கத் திருவருள் கூட்டியது. இக் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல் மெதுவாக நடைபெற்று வருகின்றன. நாமும் நம்மால் இயன்ற அளவில் இச்சிவ புண்ணியத்தில் பங்கேற்க வேண்டும். நமது சந்ததிகளும் இதைப் பின்பற்றவும் நற்கதி பெறவும் கிடைக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது.


பல ஆண்டுகளுக்கு முன்பு , அருகில் உள்ள செம்பங்குடிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்கள் தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கு இக் கோயிலுக்கு வந்து எதிரில் உள்ள சங்க தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வருவார்களாம்.இப்படியாக ஒரு மண்டல காலம் தினசரி தரிசனத்திற்கு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபோல் நாமும் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்பதைத், தானே அனுசரித்துக் காட்டினார்களோ என்று தோன்றியது. எனவே நாம் அங்கு தரிசனத்திற்காகப் போகும்போது பதினொரு பிரதக்ஷிணம் செய்யும்படி எண்ணம ஏற்பட்டதால் அவ்விதமே நம்மை செய்வித்ததும் அவன் அருள் தான்.


அதேபோல நந்தவனப் பணியையும் துவங்கத் திருவருள் கூட்டியது. நித்திய பூஜைக்குத் தேவையான அரளி, பாரிஜாதம் (பவழ மல்லிகை) , செம்பருத்தி போன்ற மலர்ச் செடிகளின் கன்றுகளையும், வில்வம், வன்னி போன்ற மரக் கன்றுகளையும் வாங்கிவந்தோம். அவற்றை நடுவதற்கு முன் வெளி பிராகாரத்தில் செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டன. செடிகளுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்ப்பதற்காக நூறு அடி நீளமான ஹோஸ் வாங்கித்தரப்பட்டது. ஆடு மாடு முதலியவற்றால் செடிகள் அழியாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் படும். மழைக் காலம் துவங்க இருப்பதால் செடிகளும் கடும் வெய்யில இல்லாததால் நன்கு வளர எதுவாக இருக்கும்.


கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான வியாதிகளால் அவதிப் படுவோர் பலர் இதில் ஸ்நானம் செய்து நோய் நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவத்தால் காணும் உண்மை. குளத்தில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. படித்துறை சில இடங்களில் செப்பனிட வேண்டியுள்ளது. தூய்மைசெய்யும் பணி ஓரிரு தினங்களில் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற அன்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதானால் இப்பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். குளத்தங்கரை விநாயகர், கோஷ்ட துர்க்கை, திருஞான சம்பந்தர் சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்திகள் நூதனமாகச் செய்யப்பட்டுப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அம்பாள சன்னதிகளின் முன்பு தளவரிசை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தலத்து விசேஷ மூர்த்தியான அனுக்ரஹ சனி பகவான் சன்னதியைப் புனரமைக்க வேண்டும். மடப்பள்ளி மேற்கூரை பழுதடைந்துள்ளது. ஸ்தல வ்ருக்ஷ மேடை, சுவாமிக்குப் பின்னால் திருமாளிகைப்பத்தி மேடை ஆகியவை அமைக்கப் படவேண்டும். கோவிலின் உட்பகுதியில் மின்சார இணைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. இதை முற்றிலும் புதுப்பிக்கவேண்டும்.


அப்பர் சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற இப்புராதனமான கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய கோயில்கள் கட்டுவதில் ஆர்வம காட்டுபவர்கள் இதுபோன்ற ஆலயங்களின் திருப்பணிக்கும் உதவலாமே. சிவனருள் அதுபோன்ற சிந்தனையை வழங்குமாறு பிரார்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் கிராமங்களில் எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆலய மகிமை தெரிய வருவதோடு, பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்பட வகை செய்யும். இப்போது நடந்துவரும் ஓரிரு கால பூஜைகளும் அறவே நின்றுவிடாதபடி காப்பாற்றப்படவேண்டும். புராதன ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.


தலையாலங்காடு ஆலய அமைப்பு மற்றும் தல புராணம் பற்றிய விரிவான தகவல்கள், நமது மற்றொரு பதிவான, "சிவார்ப்பணம்.ப்ளாக்ஸ்பாட்.காம் " என்ற முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விரும்புவோர், 9443500235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.