Wednesday, November 20, 2019

பெண்கள் பாதுகாப்பு

எல்லாம் வல்ல சித்தர்,மதுரை; வலைத்தளப் படம் 

அண்மையில் ஒரு நீண்ட கால நண்பரைச்  சந்திக்க நேர்ந்தது. மனிதர் நல்லவர் மட்டும் அல்ல. எதையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுபவர். இத்தனைக்கும் ஒரே இடத்தில் இருக்காமல் பல ஊர்களுக்குப் பிரயாணம் செய்து கொண்டே இருப்பவர். இரவும் பகலும் நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு ,நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர். இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. தகவல்களைப் பகிர்வதால் ஆகப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், சிறிதளவாவது மாற்றம் உண்டாகாதா என்று ஏங்குபவர் இவர்.

அன்றைய தினம் அவர் பேசியது பெண் பாதுகாப்பு பற்றியது. நானும் உற்றுக் கேட்கலானேன். “ இன்றைக்குப் பெண் சமுதாயம் சீரழிவை நோக்கி அடி எடுத்து வைத்திருப்பது ஏன் தெரியுமா? “ என்று கேள்வியை எழுப்பினார். எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேட்கிறாரே என்று எண்ணினேன். ஒருவழியாக சமாளித்துக் கொண்டு, “ அதை உங்கள் வாயிலாகத் தான் சொல்லுங்களேன்,கேட்கிறேன் “ என்றேன்.
அடுத்த கணம் நான் எதிர்பாராத விளக்கம் அவரிடம் வெளிப்பட்டது. “ பெண்களின் உயர் கல்வியும், வேலைகளுக்குச் செல்வதுமே “ என்றார் அவர். அதற்கு நான், “ பெண்முன்னேற்றம், ஆண்களுக்குச்  சரி நிகர் சமானம் ,சொந்தக் காலில் நிற்பது போன்ற பல காரணங்கள் இருக்கும்போது இப்படிச் சொல்கிறீர்களே “ என்றேன் நான். “ குறுக்கிடாமல் இருந்தால் விளக்கமாகச் சொல்கிறேன்” என்றார் அவர். நான் அதற்கு ஒப்புக்கொண்டபின் மிகப் பெரிய விளக்கம் தந்தார்.

“ மனிதன் தான் வாழும் காலத்திற்குள் படிக்க வேண்டியது தான்; சம்பாதிக்க வேண்டியது தான்; இந்தப் பிறவிக்கான செலவினங்களை எதிர்கொள்ள சேமித்துக் கொள்வதும் நியாயம் தான். இப்படி இருந்த பாரத தேசம் தனது அடிப்படைக்  கலாசாரத்தையும், பண்பாட்டையும் காசுக்காக இழக்கத் தொடங்கியது முதல் சீரழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் இதைத் துவக்கி வைத்தவர்கள் ஆண்கள் தான். ஆனால் நம் நாட்டின் ஸ்த்ரீ தர்மம் மிகவும் வலிமையானது. அது மட்டுமே இன்றளவும் நமது நாட்டைக் காப்பாற்றி வருகிறது. இந்த தர்மம் வலிமை இழக்கும்போதுதான் சீரழிவு வேகப்படுத்தப்படுகிறது “ 

“ பெண்களின் உயர் கல்வி அவர்களுக்கே ஆபத்தாக முடிவதைப் பலர் யோசிப்பதில்லை. இவ்வளவு ஏன் ? இந்தக் கருத்தை எதிர்ப்பவர்களே இன்று அதிகம். விண்வெளி ஆராய்ச்சி முதல், பள்ளிக்கூட ஆசிரியை வரைப் பெண்கள் பதவி வகிக்காத இடமே இல்லை என்றுகூடக்  கூறலாம். உண்மைதான். வாழ்க்கை என்பது வெறும் படிப்போடும் சம்பாதிப்பதோடும் முடிந்து விடவில்லை. பெண்களுக்கென்றே சமுதாயத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த கடமைகள் உண்டு. “

“ ஒருவர் கேட்டார், “ திருமணம் என்பது அவசியமா “ என்று. விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ அவசியம் இல்லை . ஆனால் ஆறறிவுள்ள மனிதன் ஒழுக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான். இயற்கையிலேயே பலஹீனம் வாய்ந்தவர்கள் பெண்கள் என்று மேற்கத்தியரும் சொல்கின்றனர். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டியவளாகிறாள். அந்தக் காலத்தில் வயது வந்த பெண்ணைத் தகுந்த வரனுக்கு சிறு வயதிலேயே மணம் செய்து வைத்தார்கள். காரணம், மறந்தும் தவறான வழிக்குப் போகாமல், தன்னை நம்பி வந்தவளைக் கடைசிவரை கை விடாமல் காப்பாற்றுவேன் என்று அக்னி முன்பாக சபதம் செய்ததோடு நின்றுவிடாமல்  அந்தப் பொறுப்பை ஆயுட்காலம் முழுதும் கடைப்பிடிக்கவேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை என்பதால்தான் “ இதைத்தான் கால் கட்டு என்றார்களோ “ என்று நான் கேட்டேன். சிரித்துக் கொண்டே ,“ குறுக்கே பேசக் கூடாது என்று சொன்னேனே” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ சிலர் நினைக்கலாம். மேல்கல்வியால் அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று. மறுக்கவில்லை. அதற்காகப் பணயம் வைக்கவேண்டியத்தை நினைத்தால் அச்சப்படாமல் இருக்க முடியாது. கல்லூரிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும் பெண்கள் ஒழுங்கீனத்தில் தள்ளப்படுவதாகச் செய்திகள் அடிக்கடி வருகின்றன. பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியையிடம் முறையின்றி நடந்ததாகச் செய்தி வந்ததே, படித்திருப்பீர்களே !  எங்கோ எப்போதோ நடைபெறும் இதுபோன்ற சம்பவத்திற்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படி இணைத்துப் பார்க்கலாமா என்று நீங்கள் கேட்கலாம். இதே சம்பவமே எல்லா இடங்களிலும் நடை பெறாமல் இருக்கலாம். ஆனால் வேறு வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் மறுக்க முடியுமா ? சர்வகலாசாலைகளிலும்,கல்லூரிகளிலும் நடைபெறும் முறைகேடுகளுக்குக் கவலைப்படப்போவது யார் ? குடிப்பதையும் புகை பிடிப்பதையும் குட்டிச்சுவராகப் போன ஆண்கள் மட்டுமே செய்து வந்த காலம் போய், பெண்களும் அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமா?  சம்பாதிக்கக் கிளம்பி விட்ட  பெண்கள் படும் வேதனைகள் பலப்பல. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதெல்லாம் மேற்கத்திய நாகரீகத்திற்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். “

சிறிது பெருமூச்சு விட்டு விட்டு மேலும் தொடர்ந்தார் “  தீ சுடும் என்று தெரிந்தும் அதில் கை விட்டுப் பார்ப்பது போலத்தான் இதுவும். சில துறைகள் ஆபத்தானவை என்று தெரிந்தும், பேருக்கும் புகழுக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு வலையில் விழும் பெண்கள் ஏராளம். பிறகு வருத்தப்பட்டு என்ன பயன் ? வாழ்க்கை சீரழிந்தது அழிந்ததுதான். 

இதில் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா ? முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்களும் ஆண்களும் தான். முன்பெல்லாம் வரதக்ஷினை மட்டுமே முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இப்போதோ பேராசை மட்டுமே முட்டுக்கட்டை ஆகி விட்டது. பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜினியர்களாகவோ ஆக வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு ஆனவர்களின் ஆண்டு வருமானம்  சில ஆண்டுகளுக்குள்ளாகவே கணிசமாக உயர்ந்து விடுகிறது. தனக்கு மேல் சம்பாதிப்பவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் காத்திருக்கும் நிலை!  அதற்கேற்ற வரன் கிடைக்காவிட்டால் கல்யாணமே ஆகாமல் நிற்கும் ஆபத்தான நிலை . இப்படி இருக்கும்போது கலை, மற்றும் விஞ்ஞானம் பயின்ற ஆண்களுக்கோ வரன் கிடைப்பது அதை விடப் பரிதாபமாக ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் விரக்தியால் வழி மாறிப் போவதும் நடக்கத் தொடங்கி விட்டது. பெற்றோர்கள் மட்டும் என்ன செய்வார்கள், பாவம். தாங்கள் செய்த தவற்றின் பலனைக் கண்ணெதிரே அனுபவிக்கிறார்கள் “  

“ காலம் காலமாகச் செய்து வந்த தொழில்களும் உயர் கல்வி வழங்குவதால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவர்களும் மனிதர்கள் தானே! என் குழந்தைகளாவது படிக்கட்டும். இந்தத் தொழில் என்னோடு போகட்டும் என்ற மனோபாவம் இப்போது எல்லோருக்கும் வந்து விட்டது. நாற்று நடுவதற்கு ஆட்கள் இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் என்று செய்தி  வருகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற எண்ணமும் வேறு வேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதும், சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் தான் செய்யும் தொழில் பிற தொழில்களுக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் போனால், விவசாயம் மட்டும் அல்ல, கொத்து வேலை, நகை வேலை, மர வேலை, வீட்டு வேலை போன்ற எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைக்கப்போவதில்லை. “

“ கோவில் அர்ச்சகர்களும் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புவதையே விரும்புகின்றனர். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் அவர்களது பெண்களோ  அதே குலத்துப் பையன்கள் வேலைக்குச் செல்வதையே விரும்புகிறார்களே தவிர,  கோவில் பூஜை செய்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் கோவில்களில் சிவாசார்யர்களைப் பார்ப்பது துர்லபமாகி விடும்போல இருக்கிறது. சுய நலம் கண்ணை மறைக்கிறது. நாடு தனது கலாசாரத்தை இழந்து சீரழிவைக் காணும் போது சகிக்க முடியாத வேதனை மேலிடுகிறது “ என்றார் நண்பர். ஆதற்கு மேல் அவரால்  பேசமுடியவில்லை. தொண்டை தழுதழுத்தது. கண்களில் நீர் முட்டியதைக் கண்டேன்.

எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தனி நபர் சுதந்திரம் என்று முழக்கமிடும் இந்தக் காலத்தில் இவரது கருத்துக்களை யார் ஏற்கப்போகிறார்கள் ? அவநம்பிக்கையே நாளுக்கு நாள் மேலோங்குகிறது. நெறிப்படுத்த அரசனோ, குருமார்களோ இல்லாத காலத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? என்னைத் திருத்த நீ யார் என்பார்கள். நண்பரது வேதனை புரிந்தும் தீர்வை இறைவனிடமே விட்டு விடுகிறோம் . அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எல்லாம் வல்ல சித்தராக மதுரையில் எழுந்தருளியது போல் இன்றே , இப்போதே எழுந்தருளிக் காக்க வேண்டும் என்று அந்த சித்தநாதப் பெருமானிடம் வேண்டுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.
       

Saturday, October 26, 2019

ஆசிச் செய்தியோடு நிறுத்திக் கொள்வதா ?

கிராமங்களின் இன்றைய நிலை
தீபாவளித் திருநாள் வந்துவிட்டால் வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மடாதிபதிகளின் ஆசிச் செய்திகளை ஒலி / ஒளி பரப்புவது என்பது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. சற்றுக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். ஆண்டுதோறும் இந்த ஆசிச் செய்திகளில் நரகாசுரன் கதை , எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை உடுத்தல், பட்டாசு வெடித்தல், இனிப்புப் பலகாரங்கள் உண்ணுதல் ஆகியவற்றோடு தீயன கழித்தல், நல்லன பெற வேண்டுதல் ஆகிய கருத்துக்கள் திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றன. இவை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை எல்லாம் மக்கள் செவியில் எவ்வளவு தூரம் ஏறிப் பயன் விளைவிக்கின்றன என்றுதான் தெரியவில்லை. காலையில் தீபாவளி ஆனவுடன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே வானொலியிலும் தொலைக் காட்சியிலும் இவற்றைக் கேட்கும்போது, அப்பலகாரங்கள் வயிற்றுக்குள் சென்று கரைவதற்குள் ஆசிச் செய்திகளும் கரைந்து போய் விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. நல்லுபதேசங்கள் வீணாகப் போக  விடலாமா ?

இன்றைய கால கட்டத்தில் மடாலயங்கள் ஆசிச் செய்தி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்பது கேள்வி. களப்பணி ஆற்றுவதற்கு யார் தான் முன்னோடியாக நின்று மக்களுக்கு வழி காட்ட முடியும் ? பெரிய நகரங்களுக்கு விஜயம் செய்வதால் ஆதாயம் இருக்கக்கூடும். அதை இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அதே சமயத்தில் மக்களிடையே ஏற்படும் கலாசாரச் சீரழிவுக்கு யார் பொறுப்பேற்பது? கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் மட்டும் போதாது. மற்ற நாட்களில் மக்கள் திசை மாறிச் செல்வதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா ?

நாட்டின் நிர்வாகம் மக்கள் கையில் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு தேர்தலை நோக்கியே காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப் படப் போவதில்லை. ஒருவேளை அவர்களில் ஒரு சாரார் கவலைப்பட்டால் எதிர் தரப்பினர் மக்களைத் தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆகவே அரசும் நீதி மன்றங்களும் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. ஆகவே மக்களை நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை மடாதிபதிகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால் நடப்பது என்ன ? மடத்துப் பூஜை, நிர்வாகம், பெரிய மனிதர்களை சந்தித்தல், அவ்வப்போது நூல் வெளியீடு செய்தல், பிரபலங்களை மடத்து விழாக்களுக்கு அழைத்தல், கல்விக் கூடங்கள் அமைத்தல் , தங்களது நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கே சௌகரியப்பட்டபோது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் – இதைத்தானே பார்க்கிறோம். நமது கிராமங்களுக்கு விஜயம் செய்து இரண்டு நாட்களாவது தங்கி அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களைத் திசை மாறாமல் இருக்கச் செய்யலாம் அல்லவா ? சின்னஞ்சிறு கிராமங்களின் இன்றைய நிலையைப் பார்த்தவர்களுக்கே தெரியும். பூட்டிக் கிடக்கும் கோயில்களும், தினசரி வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாத மக்களும் , திசை மாறிய மக்களும், அவர்களின் அடையாளச் சின்னங்களுமே எஞ்சி நிற்கின்றன என்பதை .  இவற்றிற்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வெளியேறுபவர்களைப் பற்றிக் கவலைப் படுபவர்களே இல்லையே !

மடாதிபதிகள் கால் நடையாகத் தங்கள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள கோயில்களையும் தரிசித்துத்  தேவையான பணிகளை மேற்கொள்ளச் செய்வது அப்போது எளிதில் சாத்தியமாகிறது. நித்திய பூஜைகளையும் அங்கிருந்தே செய்யலாம் . இவ்வாறு பல மடாதிபதிகள் முன்பெல்லாம் செய்ததாக நாம் அறிகிறோம்.  இப்போது அவ்வாறு பின்பற்றப்படாமைக்குக் காரணம் புலப்படவில்லை. தங்களது மாதாந்திர ஜன்ம நக்ஷத்திரத்தன்றாவது நேரிடையாக ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதோடு அவ்வூர் மக்களுக்கும் தினசரி வழிபாட்டின் முக்கியத்தை எடுத்துரைக்கலாம். மற்ற நாட்களில்  மடத்தில் உள்ள சிப்பந்திகளோ, தம்பிரான்களோ அருகாமையில் உள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று ஊர் மக்களை ஈடுபடச் செய்யலாம். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளுக்கும் நடந்து சென்று மக்களைச் சந்தித்து நம் கலாசாரம் மேலும் சீரடையச் செய்யலாம். திருக்குளப்பராமரிப்பு , கால்நடைப் பராமரிப்பு ஆகியவை பற்றி எடுத்துச் சொன்னால் மக்கள் நிச்சயம் வரவேற்பர். மறுமுறை அங்கு சென்றால் மாற்றத்தைக் காண வேண்டும். அதற்கான இலக்கையும் நிர்ணயிக்கலாம்.

இப்படி எழுதுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறோமே, அவையெல்லாம் கண்ணில் படவில்லையா என்று கேட்பார்கள். என்ன செய்வது ? அவையெல்லாம் இன்று பாமர மக்களை விழிப்படையச் செய்யவில்லையே ! இந்த ஆதங்கமே இவ்வாறு எழுதத் தூண்டியதே தவிர நமக்கு எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறை கூறும் நோக்கம் இல்லை. அவ்வாறு குறை கூறி ஆகப்போவதும் ஏதும் இல்லை. சுவாமி பார்த்துப்பார் என்று கைகளைக் கட்டிக் கொண்டிருக்கவும்  நம்மால் முடியவில்லை ! உண்மையாகவே சுவாமிதான் அருளவேண்டும்.

Saturday, October 19, 2019

நல்லனவும் தீயனவும்


உலகத்தில் எல்லோரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்லவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ வாழ்கிறார்கள். இதில் வீட்டில் இளமைக்கால வளர்ப்பு மிகவும் முக்கியமானது என்றாலும் தீயவர் சேர்க்கை அந்த நற்பண்புகளை முழுவதும் அழித்து விடுகிறது. அவ்வாறு சேராதபடி இளமையில் பெற்றோர்களின் வளர்ப்பும் ஆசிரியர்களின் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறித் தீய நண்பர்களது பொல்லாத நட்பால் பாதிக்கப்படுபவர் பலர். எனவே “ நல்லார் இணக்கம் “ மிகவும் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். நல்லவர்களோடு இணைந்தால் அவர்களது நற்பண்புகள் நமக்கும் வந்துவிடும். அதனால் தீய செயல்களைச் செய்ய மனம் வராது. தீயோரைக் கண்டால் தூர விலகும் பக்குவமும் ஏற்பட்டுவிடும்.

பிறர் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரது பங்களிப்பு தேவைப்படுகிறது. அதுவே நாளடைவில் ஆறறிவற்ற விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும் அன்பு செலுத்த ஏதுவாகிறது. அப்படிப்பட்டவர்கள் தாவரங்களுக்கோ அல்லது விலங்கு, மற்றும் பறவை இனங்களுக்கோ ஒரு தீங்கு நேர்ந்தால் பதைத்து விடுவார்கள். எஜமான விசுவாசம் என்பதன் இலக்கணத்தையே நாய் மூலம் நன்கு கற்றுக் கொள்ள முடியும். தன் உயிரையே பணயம் வைத்துத் தன் எஜமானரது குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் இனத்தைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.

அண்மையில் வட இந்தியாவில் ஒரித்தில்  இரண்டு பசுக்கள் சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவன் ( அவன் மேய்ப்பவனோ அல்லது உரிமையாளனோ என்பதை நாம் அறியோம்) அவற்றின் உடல்கள் மீது விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுததைச்  சமூக வலைத்தளத்தில் பார்த்தபோது நெஞ்சைப் பிழிந்தது. சொந்த பந்தங்களை இழந்தவனைப் போல அப்பசுக்களது இறந்து கிடந்த உடல்களைப் பார்த்து அவன் கதறியது, கல்நெஞ்சத்தையும் கலங்கச் செய்யும்.

சமீபத்திய மற்றோர் நிகழ்ச்சி:  மும்பை புறநகர்ப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக அங்கிருந்த மரங்களை அதிகாரிகள் வெட்ட முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புக் குரல் தந்தனர். அதிலும் சில தாவர  ஆர்வலர்களோ , அவை வெட்டப்பட்டுக் கிடந்த போது அந்த வெட்டுண்ட மரங்களின் மீது கதறி அழுததைப் புகைப்படங்களில் கண்டபோது மனித நேயம் என்பது மனிதர்களுக்குள் மட்டும் அல்ல. அதற்கு அப்பாலும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.  

நல்ல பண்போடு வாழ எது தேவைப்படுகிறது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர்,

“ அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு “   என்று அருளினார்.

பிறரிடத்து அன்பு செலுத்துவதும், நல்லகுடியில் பிறத்தலும் ஒருவனை நல்வழிப்படுத்தும் சாதனங்களாக்கிவிடுகின்றன என்பது தெய்வப்புலவரின் கருத்தாவதைக் காண்க.

அஷ்டாவக்கிர முனிவர் தன்  தாயின் வயிற்றில் இருந்தபோதே, தந்தையானவர் மாணாக்கர்களுக்கு வேதம் கற்றுக் கொடுப்பதைக் கேட்டே முழுதும் கற்றுணர்ந்தார் என்று அறிகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறு தோத்திரங்களைக் கற்றுக் கொடுப்பது, ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றவற்றை குழந்தையின் இரண்டு அல்லது மூன்று வயதிலிருந்தே மேற்கொள்ளலாம்.

 மூன்றே வயது பாலகனான ஞானசம்பந்தக்குழந்தை தந்தையாருடன் சீர்காழிக் கோயிலுக்குச் சென்றபோது ஞானம் பெற்றதைப் பெரிய புராணம் அறிவிக்கிறது. அத்தெய்வக் குழந்தையைத் தோளில் வைத்தபடி தந்தையார் சிவத்தல யாத்திரை சென்றார் என்றும் சேக்கிழார் காட்டுகிறார். 

குழந்தைக்கு ஐந்தாண்டு முடிவதற்குள் அதற்கு நல்வழிகாட்டுவதைப் பெற்றோர்கள்  இன்றியமையாததாகக் கருத வேண்டும். காலம் கடந்தால் அதற்குப் பிறகு செய்யப்படும் முயற்சிகள் அத்தனையும் வீணாகி விடும்.

சமீபத்தில் ஓரிடத்திற்குப் பயணம் செய்யும்போது அருகிலிருந்த நான்கு வயதுக் குழந்தை அழகாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஆம்புலன்ஸ் அலறும் ஓசை கேட்டது. பயணிகள் அனைவரும் சலனம் இல்லாமல் இருந்தபோது, சற்றும் எதிர்பாராதபடி அந்தக் குழந்தை, “ அம்மாச்சி, காப்பாத்து “ என்றது. அப்போதுதான் தோன்றியது, அந்தக் குழந்தைக்கு இருக்கும் இரக்க சுபாவம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று. அதே சமயத்தில் அந்தக் குணத்தை அக்குழந்தைக்குப் பதிய வைத்த அதன் பெற்றோரை மனதாரப் பாராட்டினோம். உயிருக்கு ஊசலாடும் நிலையில் யாராவது இருந்தாலும் இரக்கப்படாத காலம் இது. அதற்கு முக்கியமான காரணம் தவறான வளர்ப்பும் வழிகாட்டுதலுமே.

ஒருவரை ஒருவர் இகழ்வதையும், பொறாமைப்படுவதையும், பஞ்சமா பாதகங்களையும் செய்யத் தயங்காத மிருகங்கள் ஆகப் பலர் மாறி  விடுவதையும் அறியும்போது நமது நற் பண்புகள் எல்லாவற்றையும்  கடந்த ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. கள்ளம் கபடம் அதிகம் இல்லாமல் இருந்த நாடு குட்டிச்சுவராகப் போய் விட்டதே ! பணம் ஈட்டுவது என்பது போய் பணம் சுருட்டுவது என்று ஆகி விட்ட பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?  ஏதும் அறியாப்பருவத்தில்- கள்ளம் ,கபடம் என்றால் என்னவென்றே அறியாத இருந்த பிஞ்சு நெஞ்சங்கள் நாளடைவில் நஞ்சு வார்க்கப்பட்டு நாசமாவதைக் காணும்போது இந்த மனித உடலின் வளர்ச்சி இதற்காகவா என்று தோன்றுகிறது. இதைக் கண்டு சகிக்காத கவிஞர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பாடினார்,

“ பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா .” என்று. அது நூற்றுக்கு நூறு சரி தானே !  

Sunday, October 6, 2019

அலங்காரச் சர்ச்சை


மரபு  வழி அலங்காரம் 
நம் வீடுகள் ஆகட்டும், கோயில்கள் ஆகட்டும், விழாக் காலம் என்று வந்துவிட்டால் தோன்றியபடிஎல்லாம் அலங்காரம்,பூஜை செய்வது என்று ஆகி விட்டபடியால் எதையும் பற்றி நாம் இங்கு கருத்துக் கூறத் தயாராக இல்லை. மரபு ,விதிமுறைகள் என்று சிலர் எடுத்துக் காட்டினாலும் வேறு பிரமாணங்கள் இருப்பதாகக் கூறித் தாம் செய்வதை நியாயப்படுத்துவோரும் இருப்பதால், நாம் இதில் தலையிட்டால் ஆகப்போவது எதுவும் இல்லை. நம்முடைய ஆதங்கம் நம்மோடு இருந்து விட்டுப் போகட்டும். யாரையும் குற்றம் கூறித் திருத்துவது நம்முடைய வேலையும் அல்ல. அதற்கு நாம் யார் ? 

சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற வாதப் பிரதிவாதங்களைக் காண நேரிடுகிறது. அதில் நமக்குத் தோன்றிய கருத்தைப் பதிவு செய்தால் தேவையற்ற பதிவு என்று பதில் வருகிறது. சொந்த விஷயங்களைப் பகிர்வது என்பது எவ்வளவு தூரம் முறையானது என்று தெரியவில்லை. தங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தாங்கள் வாங்கிய வாகனத்தோடு நிற்கும் புகைப்படங்கள், திரை அரங்கு வாயிலில் நிற்கும் செல்பிக்கள் போன்றவற்றைத் தங்களது உற்றார் உறவினரோடு மட்டும் பகிரலாமே ! ஊரறியப் பகிரவேண்டுமா? அப்படிச் செய்யும்போது கருத்துக்கள் பரிமாறப்படுவது தவிர்க்க முடியாதது.

கோயில்களிலும் அநேகமாக இதே நிலைதான். விழாக் காலங்களில் உற்சவர்களுக்குக் கை,கால் வைத்துக் கட்டி அலங்காரம் செய்தது போக மூலவரையே வேறு தெய்வ வடிவமாக மாற்றுகிறார்கள். இதற்குப் பெயர் ஆர்வக் கோளாறு என்று சிலரும், அதிகப்பிரசிங்கித்தனம் என்று சிலரும், தனது அலங்காரம் செய்யும் திறனை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல் என்று சிலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரே பிரம்மத்தின் பல்வேறு வடிவங்கள் தானே என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு.


அம்பிகைக்கு மரபு மாறாத அலங்காரம் 
 மாற்றப்பட்ட அலங்காரத்துடன்  





















நவராத்திரி பத்து தினங்களும் உற்சவருக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்கிறார்கள். பெண் தெய்வத்தை ஆண் தெய்வமாகவும் அலங்கரிக்கிறார்கள். மூலவரையே இவ்வாறு மாற்றத் துணிந்தபின் உற்சவர் பற்றிக் கேட்பானேன் ! கேட்டால் எல்லாம் ஒன்று தானே என்று விளக்கம் வரும்.

எது சரி என்று நாம் சர்ச்சை செய்ய விரும்பவில்லை. அதற்காக இப்படியே தொடர்ந்தால் நமக்குள்ளேயே கருத்து பேதங்கள் வளர வாய்ப்பு உண்டு. கருத்து ஒற்றுமை ஏற்படவேண்டிய காலம் இது. நமது வேற்றுமையைப் பிறர் எள்ளி நகையாடுவதோடு தமக்குச் சாதகமாக்கிக் கொள்வர். எனவே இதற்கு ஒரு தீர்வை ஆகம வல்லுனர்கள் ஆராய்ந்து விரைவாக முடிவெடுக்கவேண்டும். சில கும்பாபிஷேக யாகசாலைகளில் சுமார் ஐந்து அல்லது ஆறடி உயரத்திற்குச் அலங்காரம் செய்யப்பட நெட்டி  பொம்மைகள் வைத்திருப்பார்கள். கும்பாபிஷேகத்திற்கு வருவோர் அத்தெய்வ வடிவங்கள்  பல்வேறு அலங்காரங்களோடு காட்சியளிப்பது மக்களைப் பரவசப்படுத்தும். அதேபோல பொம்மைகள் தயாரித்து கோயில் கொலுக்களில் வைத்தால் உற்சவ மற்றும் மூலஸ்தான அம்பிகையின்  இயற்கையான வடிவை மாற்ற வேண்டிய அவசியம் இராது. எல்லோரையும் ஓரளவு திருப்திப் படுத்தும் வழியாக இது அமையக் கூடும். ஆகம சீலர்களே இதுபற்றி முடிவெடுத்தல்  நல்லது . எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்குப் பரிபூரண சுதந்திரம் உண்டு என்று சொல்லப்படுவதால் இங்கு எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று நன்கு தெரிந்தும் எழுத வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு சிலராவது சிந்திக்கத் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்படி எழுதத் தூண்டுகிறது. அதேநேரத்தில் இதை மேற்கொண்டு சர்ச்சைக்குரியதாகவும் ஆக்க விரும்பவில்லை.  

Wednesday, September 25, 2019

நாவடக்கம் இல்லாமல் ஆன்மிகம் பேசலாமா ?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் 

கல்வியின் பயனே அறிவை வளர்த்துக்கொள்வதும் அதன் மூலம் தான் கற்றதைப் பிறருக்குப் பகிர்வதும் தான். அதிலும் இறைவனது தாள்களைத் தொழாவிடில் கல்வி கற்றும் பயன் என்ன என்கிறார் வள்ளுவர். கல்வியைக் காசாக்கும் காலம் இது. ஆன்மீகத்தையும் இது விட்டு வைக்கவில்லை. ஆன்மீக நூல்களைக் கற்றவர்கள் அதை வியாபாரம் செய்யத் துணிந்தது மாபெரும் குற்றமும் துரோகமும் ஆகும். தான் கற்றதையோ உரையாற்றியதையோ நூலாகவோ குறுந்தகடுகளாகவோ ஆக்கி சம்பாதிப்பது எப்படி சாத்தியமாயிற்று? அவர்களது பேச்சை மக்கள் மதித்துக் கேட்டதால் தானே ? சொல்லப்போனால் இவர்களை உச்சிக்குக் கொண்டு வைத்ததும் மக்கள்தான். பெயரும் புகழும் வந்துவிட்டால் பணத்தாசையும் கூடவே வந்து விடுகிறது. அப்புறம் என்ன? இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்டே ஆகவேண்டும் .

மூளை வளர்ச்சியாவது ஒருவரது சிந்தனா சக்தி, நினைவாற்றல் மேம்படுவதால் ஏற்படுவது. மற்றவர்கள் சிந்திக்காதவற்றை சிந்தித்து, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு உரையாற்றும் திறமை இவர்களுக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. வளர்ந்த மூளையை மழுங்கச் செய்வதுபோல் புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மக்கள் இவர்களைக் கண்டிப்பதோடு புறக்கணிக்கவும் செய்கின்றனர்.

ஆன்மீக ஆராய்ச்சி செய்வதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். உதாரணமாக ஒருசிலவற்றை இங்கு நோக்குவோம். திருவாசகத்தில் வரும் கோகழி என்ற ஊர் எங்கு உள்ளது என்று ஆய்வதில் தவறில்லை. அதுவும் ஒருவிதத்தில் ஆன்மீகத் தேடலே. ஒரே பெயரில் இரு தலங்கள் இருந்தால் எது பாடல் பெற்ற தலம் என்று ஆயும்போது கல்வெட்டுத் துணை கொண்டும் ஆராய்ச்சி செய்யலாம்.

இறைவனது அருளிச் செயல்களையும் அடியார்கள் செய்த அற்புதங்களையும் , பக்தர்களின் நம்பிக்கையையும் கேலி செய்வதால் இவர்களை எவ்வாறு ஆன்மீகப் பேச்சாளர்கள் என்பது ? ஆன்மீக நூல்களைப் படித்துவிட்டு எதிர்க் கேள்விகள் கேட்கவா சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்? மக்களிடையே பக்தியை வளர்ப்பதைவிட, கைதட்டல் வாங்குவதே இவர்களது குறிக்கோள் ஆகி விட்டது. கைதட்டல் இருந்தால் மட்டுமே அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசத் துணிவு வந்து விட்டது. இவர்களுக்குப் பட்டம் கொடுத்துக் குட்டிச்சுவர்களாக ஆக்கி நம் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

வாரியார்,கீரன் போன்றோர் இருந்தபோது இதுபோன்ற நிலை ஏற்படவே இல்லை. உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள். ஜன ரஞ்சகமான உதாரணங்களைச் சொன்னாலும் எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் பழுது வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆன்மீகப் புரட்சி  செய்வதாக நினைத்துக் கொள்ளும் ஒரு சிலர் கைத்தட்டலுக்காக நம் சமயத்தையே இழிவுபடுத்திப் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இராமாயணத்தில் வரும் நீதிகளை மாத்திரம் கோடிட்டுக் காட்டிய காலம் போய் வாலியை மறைந்திருந்து கொல்லலாமா என்றும், கற்பில் சிறந்தவள் சீதையா அல்லது மண்டோதரியா என்றும் பட்டி மன்றத்தில் வினா எழுப்பும் துணிவு எப்பொழுது வந்ததோ அப்பொழுதே, இறைவனையும், அடியார்களையும் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்பதற்குப் பச்சைக் கொடி காட்டியதுபோல் ஆகி விட்டது. ஆரம்ப காலத்தில் முளையில் கிள்ளி எறியாத தவற்றுக்காக இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம்.

புத்த சமண சமயங்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நாயன்மார்கள் அவதரித்து சைவத்தைப் புனருத்தாரணம் செய்தார்கள் . சைவம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்து சமயமே தமிழகத்தில் காப்பாற்றப் பட்டது. தனது அவதார நோக்கமான பிற சமயங்களைக் கண்டித்து சைவத்தை நிலை நாட்டுவதை அறிவிப்பதுபோல சம்பந்தரின் பதிகங்களில் பத்தாவது பாடல்கள் அறிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தெய்வத்திருமுறைகளை நாம் போற்றி வரும் நிலையில், வளர்த்துவிட்ட ஒரு மேதாவி இப்பாடல்கள் எதற்கு என்று கேள்வி எழுப்புவதாக அறிகிறோம். இது போன்ற அறிவிலிகள் ஆன்மிகம் பேசவில்லை என்று யார் அழப்போகிறார்கள்? வித்தியாசமாகப் பேசினால் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடி, வரவேற்புடன்,பண வரவும் அதிகரிக்கும் என்ற கணிப்பால் பேசுகிறார் போலும்.

நாவடக்கம் இல்லாதவர்களை நாவரசர், சொல்லுக்கே செல்வர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. இதனால் இவர்களுக்குத் தலைக் கனம் அதிகமாகி விட்டது. நம்மில் பெரும்பாலோர் நாம் வழிபடும் தெய்வத்தையோ மகான்களையோ குறை கூறுபவர்களைக் கண்டிக்காததால் கேட்பார் இன்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் பிடித்து அலைகிறார்கள். மழுங்கிய மூளை நெடு நாட்களுக்குப் பயன் தராது. கற்ற கல்வியோ ஈட்டிய செல்வமோ அந்திக் காலத்தில் கை கொடுக்கப்போவதில்லை. இதை மட்டுமாவது இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவு தப்பும்போது அதுவும் கூட வராது.

Thursday, September 12, 2019

களவாடப்படும் உற்சவ மூர்த்திகள்


நமது உடைமைகளைக் காப்பதில் நமக்கு உள்ள அக்கறை பொது சொத்துக்களைக் காப்பதில் இல்லை என்பது வெட்கித் தலை குனிய வேண்டியதொன்று. அதிலும் கோயில் சொத்து என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அவற்றை அலட்சியமாகவே நாம் அணுகுகிறோம்.    ஆக்கிரமிப்புக்களும், கொள்ளைகளும் கண்ணுக்கு முன்னால் நடந்தாலும் தட்டிக் கேட்பவர் சிலரே. நமக்கேன் வம்பு என்று ஒதுங்குபவரே பலர். ஏதாவது காணாமல் போய் விட்டால் காவல் துறைக்குப் புகார் கொடுத்துவிட்டுக்  கையைக் கட்டிக் கொண்டு அயலவரைப் போல வேடிக்கை பார்க்கிறோம். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள்/ வெளிப்பாடுகள் களவு போனவற்றைப் பற்றிக் காவல் துறைக்கு அறிவிக்காமலும், முதல் அறிக்கை தயாரிக்காமலும் ஏமாற்றியிருப்பதாக வரும் செய்திகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன. வேலியே பயிரை மேய்வதுபோல் அதிகாரிகளே இக்குற்றங்கள் பலவற்றுக்கு உடந்தை ஆகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கின்றது.

கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் என்று சொல்வார்களே, அதுபோல் தமிழ்நாடு குற்றப்பிரிவுப் புலன் ஆய்வுத்துறைத் தலைவராகத்  திரு.பொன்மாணிக்கவேல் ஐயா அவர்கள் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை பல கோயில்களில் களவாடப்பட்ட மூர்த்திகளை அரும்பாடு பட்டுத் தேடிக் கண்டுபிடித்து,  நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் திரும்பக் கொண்டுவந்திருப்பது அனைவரும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். அரசியல் தலையீடுகள், மிரட்டல்கள் ஆகிய பல இடர்ப்பாடுகளைச் சந்திப்பது சாதாரணமான காரியம் அல்ல. நம் நாட்டுக்குள் இருந்தே மீட்டுக் கொண்டு வருவது கடினம். அதிலும் வெளி நாடுகளுக்குக் களவாடப்பட்ட மூர்த்திகளைக் கொண்டு வருவது அதை விடக் கடினம். உரிய ஆவணங்களைத் தயாரித்து நீதி மன்றத்தில் சமர்ப்பித்தாலும் நீதிக்காகக் காத்திருக்க வேண்டும். இரு நாட்டு  அரசாங்கங்களின் பரிந்துரை கிடைக்கவே ஆண்டுக்கணக்கில் ஆகலாம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக் குறிச்சியில் உள்ள அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயிலில் பூஜையில் இருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்க வாசகர் ஆகிய மூர்த்திகள் 1982 ம் ஆண்டு களவு போயின.     1984 வரை துப்பு எதுவும் கிடைக்காமல் போகவே வழக்கைக் காவல் துறை மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. மூர்த்திகளை அயல் நாட்டுக்குக் கடத்திவிட்டு அவற்றைப் போலவே போலியாக மூர்த்திகள் செய்து வைக்கப்பட்டுக் கிடைத்துவிட்டதாக வழக்கு மூடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது. உண்மை எதுவாயினும் களவு போனதை மறுக்க முடியாது. இந்நிலையில் இவ்வழக்கை முற்றிலும் ஆய்வு செய்த திரு பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் இம்மூர்த்திகள் ஆஸ்திரேலிய நாட்டில் அடிலெய்டில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை அறிந்தார்கள். தொல்லியல் நிபுணர் திரு இரா. நாகசாமி அவர்கள் தந்த கூடுதல் தகவல்களுடன் அருங்காட்சியகத்திற்குக் கடிதம் மூலம் தெரிவித்து, சட்டத்திற்குப் புறம்பாகக் களவாடப்பெற்ற மூர்த்திகளை 17 ஆண்டுகள் வைத்திருந்தது குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் உதவியுடனும் அணுகப்பெற்றது. நிறைவாக அருங் காட்சியக நிர்வாகி ராபின்சன் ,தனது செலவில் நடராஜ மூர்த்தியை அனுப்புவதாக சம்மதித்தார். இதனை இந்தியாவுக்குக் கொண்டுவரத் தமிழக அரசின் அனுமதியைப் பெற 300 நாட்களாகக் காத்திருந்த நிலை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஒருவழியாகக் கடந்த வாரம் நடராஜ மூர்த்தியைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர். மற்ற மூர்த்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும் என்கின்றனர். சுமார் 37 ஆண்டுகளுக்குப்பின்னர் மீட்கப்படும் நடராஜ மூர்த்தி தில்லியிருந்து சென்னைக்கு 13.9.2019 அன்று கொண்டு வரப்படுவதாகவும் , பின்னர், உரிய கோவிலில் ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

பொறுப்பற்ற தலைப்பு 
ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் அபிஷேக நாட்களில் ஒன்றான ஆவணி சதுர்தசியை ஒட்டிப்  பெருமான் மீண்டும் எழுந்தருளுவது அனைவருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் இவ்வேளையில், வழக்கம்போல் மூர்த்தியின் மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளிதழ்களும் தொலைக் காட்சிகளும் இன்னமும் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனைப் பட வேண்டியிருக்கிறது. என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று பொது மக்கள் கேட்டார்களா ? இதனால் கோடியில் ஒருவனுக்கு அந்த குற்றத்தை நாமும்செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்பு உண்டு என்று இவர்கள் நினைக்கவே மாட்டார்களா? “ கடத்தல் மன்னன்  “ என்று கொள்ளைக்காரனுக்குப் பட்டம் தருவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே ! சமூக நலனில் இவர்களுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் மூர்த்திகளைக் காப்பதற்காக ஏதாவது செய்ய முன் வந்திருக்கிறார்களா? இவர்களது கவனம் முழுதும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுப் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான்.

பொது மக்களாகிய நாமும் நம்மாலான உதவிகளைச் செய்து ஆலயப் பாதுகாப்பைப் பலப்படுத்தலாம். காமிராக்களும்,அலாரங்களும் வாங்கித் தரலாம் என்றால், அவை வழங்கப்பெற்ற சில மாதங்களிலேயே, மூர்த்திகளை அருகிலுள்ள காப்பகத்தில் அடைத்து வைத்து விடுகிறார்களே  இதற்காகவா மூர்த்திகள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன ?  உற்சவ மூர்த்தி வீதி உலா சென்றால் மூலவர்சன்னதியை மூடி விடுவது மரபு. ஆனால் நாம் இன்று காண்பது என்ன? உற்சவர்கள் காணமல் போனாலும், காப்பகத்தில் சிறை வைக்கப்பட்டாலும் மூலவருக்குப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதுவா நாம் மரபைக் காக்கும் லட்சணம் ?

தற்கால சூழ்நிலையில் நேர்மையாக செயல் படுபவர்களைப் பார்ப்பதே அரிது. அவ்வாறு செயல் படவும் விடமாட்டார்கள். இத்தனை தடைகளையும் தாண்டி மூர்த்திகளை மீட்டு வரும் ஆய்வுத்துறை அதிகாரிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அது நமது கடமையும் கூட.அவர்களுக்கு நமது சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.  அவர்கள் எல்லா நலன்களும் பெற எல்லாம் வல்ல ஆடல்வல்லானை சிந்தித்து வணங்கி வேண்டுகிறோம்.

Saturday, August 24, 2019

இராமேசுவரம் தேவஸ்தானம் கவனிக்குமா ?

கிழக்கு ராஜ கோபுரம், இராமநாத சுவாமி ஆலயம் 
தென்னிந்தியர்களுக்குக் காசி யாத்திரை எவ்வளவு முக்கியமானதோ அத்தனை முக்கியம் வாய்ந்தது இராமேசுவர யாத்திரை. வாழ்நாளில் ஒரு முறையாவது இதை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மேற்கொள்கிறார்கள். மேலும் இவ்விரண்டு தலங்களும் ஜ்யோதிர் லிங்கத் தலங்கள் என்பது மேலும் புனிதம் சேர்ப்பதாகும். 

இராமேசுவரத்தில் கடலில் நீராடிவிட்டுக் கடல் மணலை எடுத்துச் சென்று,கங்கையில் கரைத்துவிட்டுக் கங்கை நீரால் விச்வநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டுத் திரிவேணி சங்கமத்தில் நீராடியபின்னர்  ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களிலும் நீராடிவிட்டு, அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து மீண்டும் இராமேச்வரம் அடைந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது என்ற யாத்திரை விதி முறை இன்றும் பலரால் பின்பற்றப்படுகிறது.

முற்காலத்தில் கால்நடையாகவே பக்தர்கள் இந்த யாத்திரையைச் செய்து வந்தனர். வாகன வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்திலும் பலவிதமான அசௌகர்யங்கள் இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மிகவும் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் இத்தலங்களுக்கு வருகை தரும் யாத்திரீகர்களைப் பார்க்கும்போது பரவசம் ஏற்படுகிறது. பாரத நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் மக்களை ஒன்றாக இணைத்துவிடுகிறது.

ஒற்றுமைக்கு எதிராகப் பேசுபவர்கள் இங்கெல்லாம் போய்ப் பார்க்கவேண்டும். யாத்திரீகர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள தர்ம சத்திரங்கள், உணவு விடுதிகள் பலமாநிலங்களைத்தாண்டி வந்தவர்களுக்கு எப்படி அரவணைக்கின்றன என்பது அப்போதுதான் தெரியும். இராமேசுவரத்தில் விடியலில் நடைபெறும் பூஜையைக் காண்பதற்காக காலை மூன்று மணியிலிருந்தே வரிசையில் நிற்பவர்களில் பெரும்பாலோர் வடக்கிந்தியர்கள். இறைவனது நாமங்களை ஓதியவாறு அமைதியாக வரிசையில் நிற்கிறார்கள். பொறுமை இழந்து புலம்புவோரைப் பார்ப்பது கடினம். மற்றவர்கள் அவர்களது பக்தி, ஈடுபாடு, பொறுமை, ஆகியவற்றுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

விடியற்காலை முதற்கொண்டே கடலில் நீராடிவிட்டு நேராகக் கோயிலுக்குச் செல்பவர்கள் ஏராளம். கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் கிணறுகளாகவே (சேது மாதவ தீர்த்தம் தவிர) உள்ளன. அவற்றில் நீரை வாளிகளில் முகந்து யாத்திரீகர்களின் தலையில் விடுவதற்கு ஒவ்வொரு கிணற்றிலும் தேவஸ்தானப் பணியாளர்கள் உள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ 25 வசூலிக்கிறார்கள் நூற்றுக்கணக்கில் ( ஆயிரக்கணக்கில் என்றுகூடச் சொல்லலாம் ) மக்கள் வரிசையில் நிற்கும்போது சிலர் அங்கு வந்து அங்கு நிற்பவர்களைப் பார்த்து, “ வரிசையில் நின்று குளித்து முடிய மூன்று மணி நேரம் ஆகும். ரூ 150  கொடுத்தால், வரிசையில் நிற்காமல் நேராகக் குளிக்கப் போய் விட்டு அரை மணியில் திரும்பி விடலாம் “ என்கிறார்கள். வரிசையில் நிற்பவர்கள் இதை உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வயோதிகர்கள். அதிக நேரம் நிற்க இயலாது என்று எண்ணி இந்த தரகர்களிடம் பேரம் பேசி ரூ 125 தருவதாக ஒப்புக் கொண்டு அவர்கள் காட்டிய குறுக்கு வழியில் செல்லத் துவங்குகிறார்கள்.

உண்மையாகப் பார்த்தால், இவ்வாறு “ குறுக்கு வழியி” யில் செல்வதால் அதிக நேரம் ஒன்றும் மிச்சம் ஆகிவிடுவதில்லை. டிக்கெட் கொடுக்கும் இடம் வரை சென்று அடையும் நேரம் மட்டுமே மிச்சமாகிறது. அதைத்தாண்டினால் கிணறுகளில் எல்லோரையும் போலத்தான் வரிசையாக நின்று நீராட வேண்டும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இப்படிப்பட்ட இடைத்தரகர்களால் எமாற்றப்படுகிறார்கள். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, தீர்த்தங்களில் நீராட மொத்தமே சுமார் ஒரு மணி நேரம் தான் ஆகிறது.

சேதுபதி மன்னர்களின் திருப்பணிகளால் தமிழகக் கலைச்சிறப்பும், ஆன்மீகமும் உலகமே வியக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டிருப்பது பெருமிதத்திற்குரியது. கடல் சூழ்ந்த தீவுக்குள் கருங்கற்களை எடுத்துச் சென்று பிராகாரங்களை அமைத்த சேதுபதி அரசர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது. இன்றும் அவ்வரச பரம்பரையினர் ஆலய நிர்வாகத்தை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனாலும் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சிக்கும் உட்பட்டதாகக் கூறுகிறார்கள். எது எப்படியாயினும், மக்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதை நிர்வாகம் தடுக்கலாம். இதனால் மறைமுகமாகப் பயன் பெறுவோர் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். ஆயிரக்கணக்கில் நம் வட இந்திய சகோதரர்கள் வந்து செல்லும் இப்புனிதத் தலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்க விடக்கூடாது. தமிழகக் கோயில்கள் என்றாலே காசு பறிக்கும் கும்பல்கள் இருக்கும் இடங்கள் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடக் கூடாதல்லவா ?