Sunday, October 6, 2019

அலங்காரச் சர்ச்சை


மரபு  வழி அலங்காரம் 
நம் வீடுகள் ஆகட்டும், கோயில்கள் ஆகட்டும், விழாக் காலம் என்று வந்துவிட்டால் தோன்றியபடிஎல்லாம் அலங்காரம்,பூஜை செய்வது என்று ஆகி விட்டபடியால் எதையும் பற்றி நாம் இங்கு கருத்துக் கூறத் தயாராக இல்லை. மரபு ,விதிமுறைகள் என்று சிலர் எடுத்துக் காட்டினாலும் வேறு பிரமாணங்கள் இருப்பதாகக் கூறித் தாம் செய்வதை நியாயப்படுத்துவோரும் இருப்பதால், நாம் இதில் தலையிட்டால் ஆகப்போவது எதுவும் இல்லை. நம்முடைய ஆதங்கம் நம்மோடு இருந்து விட்டுப் போகட்டும். யாரையும் குற்றம் கூறித் திருத்துவது நம்முடைய வேலையும் அல்ல. அதற்கு நாம் யார் ? 

சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற வாதப் பிரதிவாதங்களைக் காண நேரிடுகிறது. அதில் நமக்குத் தோன்றிய கருத்தைப் பதிவு செய்தால் தேவையற்ற பதிவு என்று பதில் வருகிறது. சொந்த விஷயங்களைப் பகிர்வது என்பது எவ்வளவு தூரம் முறையானது என்று தெரியவில்லை. தங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தாங்கள் வாங்கிய வாகனத்தோடு நிற்கும் புகைப்படங்கள், திரை அரங்கு வாயிலில் நிற்கும் செல்பிக்கள் போன்றவற்றைத் தங்களது உற்றார் உறவினரோடு மட்டும் பகிரலாமே ! ஊரறியப் பகிரவேண்டுமா? அப்படிச் செய்யும்போது கருத்துக்கள் பரிமாறப்படுவது தவிர்க்க முடியாதது.

கோயில்களிலும் அநேகமாக இதே நிலைதான். விழாக் காலங்களில் உற்சவர்களுக்குக் கை,கால் வைத்துக் கட்டி அலங்காரம் செய்தது போக மூலவரையே வேறு தெய்வ வடிவமாக மாற்றுகிறார்கள். இதற்குப் பெயர் ஆர்வக் கோளாறு என்று சிலரும், அதிகப்பிரசிங்கித்தனம் என்று சிலரும், தனது அலங்காரம் செய்யும் திறனை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல் என்று சிலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரே பிரம்மத்தின் பல்வேறு வடிவங்கள் தானே என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு.


அம்பிகைக்கு மரபு மாறாத அலங்காரம் 
 மாற்றப்பட்ட அலங்காரத்துடன்  





















நவராத்திரி பத்து தினங்களும் உற்சவருக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்கிறார்கள். பெண் தெய்வத்தை ஆண் தெய்வமாகவும் அலங்கரிக்கிறார்கள். மூலவரையே இவ்வாறு மாற்றத் துணிந்தபின் உற்சவர் பற்றிக் கேட்பானேன் ! கேட்டால் எல்லாம் ஒன்று தானே என்று விளக்கம் வரும்.

எது சரி என்று நாம் சர்ச்சை செய்ய விரும்பவில்லை. அதற்காக இப்படியே தொடர்ந்தால் நமக்குள்ளேயே கருத்து பேதங்கள் வளர வாய்ப்பு உண்டு. கருத்து ஒற்றுமை ஏற்படவேண்டிய காலம் இது. நமது வேற்றுமையைப் பிறர் எள்ளி நகையாடுவதோடு தமக்குச் சாதகமாக்கிக் கொள்வர். எனவே இதற்கு ஒரு தீர்வை ஆகம வல்லுனர்கள் ஆராய்ந்து விரைவாக முடிவெடுக்கவேண்டும். சில கும்பாபிஷேக யாகசாலைகளில் சுமார் ஐந்து அல்லது ஆறடி உயரத்திற்குச் அலங்காரம் செய்யப்பட நெட்டி  பொம்மைகள் வைத்திருப்பார்கள். கும்பாபிஷேகத்திற்கு வருவோர் அத்தெய்வ வடிவங்கள்  பல்வேறு அலங்காரங்களோடு காட்சியளிப்பது மக்களைப் பரவசப்படுத்தும். அதேபோல பொம்மைகள் தயாரித்து கோயில் கொலுக்களில் வைத்தால் உற்சவ மற்றும் மூலஸ்தான அம்பிகையின்  இயற்கையான வடிவை மாற்ற வேண்டிய அவசியம் இராது. எல்லோரையும் ஓரளவு திருப்திப் படுத்தும் வழியாக இது அமையக் கூடும். ஆகம சீலர்களே இதுபற்றி முடிவெடுத்தல்  நல்லது . எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்குப் பரிபூரண சுதந்திரம் உண்டு என்று சொல்லப்படுவதால் இங்கு எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று நன்கு தெரிந்தும் எழுத வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு சிலராவது சிந்திக்கத் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்படி எழுதத் தூண்டுகிறது. அதேநேரத்தில் இதை மேற்கொண்டு சர்ச்சைக்குரியதாகவும் ஆக்க விரும்பவில்லை.  

No comments:

Post a Comment