Thursday, January 1, 2015

சிவமும் மரபும்

தங்களுக்கு உரிய மரபுகளைக் கடைப்பிடித்து, அவை  மறையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை  ஒவ்வொரு குலத்துக்கும் உண்டு. இல்லாவிட்டால், காலம்காலமாக நமது முன்னோர்கள் காட்டிய மரபுகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்துவிடும். தற்கால சூழ்நிலையில் இது சாத்தியமா என்று கேட்போர்  இருக்கிறார்கள்.  வருமானத்தையே மையமாகக் கொண்டு செயல்படும் இக்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். தேவைக்கேற்ற வருமானத்தோடு, வசதிகளும் பெருகிவருவதால் இவை அனைத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடுகிறது. அதையே கெளரவம் எனவும் நினைக்கிறார்கள்.

குலமரபுகளைப் பின்பற்றிவருவோர் இருந்தாலும் நாளடைவில் அடுத்த தலைமுறையினரைப் பற்றிய கவலையும் ஏற்படுகிறது. அதற்காக இவர்களை சம்பாதிக்க வேண்டாம் என்றோ, வசதியாக இருக்க வேண்டாம் என்றோ யாராலும் நிர்பந்திக்க முடியாது. அதற்காக, மரபுகளைக் கைவிடுவதையும் ஏற்க முடியாது. இத்தனை காலம் பின்பற்றிவந்த குலத் தொழில் நம்மோடு போகட்டும். நமது அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடாதா? என்று பெற்றோர்களே கேட்கும்போது, பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று சொல்லத் தேவை இல்லை.

அப்படியானால், வேதமும் ஆகமமும் ஓதுவதும், விவசாயம் செய்வதும், சிற்பம்,ஓவியம், நாட்டியம், இசை,போன்ற பாரம்பர்யக் கலைகளைத் தொடர்வதும்  கைவிடப்பட வேண்டியதுதானா?  யாழ் போன்ற நமது பண்டைய இசைக்கருவிகள் வாசிப்பார் இன்றி மறைந்ததுபோல் மற்றவையும் காலத்தால் மறைய வேண்டுமா?  எல்லோரும் பொறியியலும் மருத்துவமும் படித்துக் கை நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து, நாமும் அதையே பின்பற்ற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

மரபுகளைக் காக்க மாற்று வழி இருக்கிறதா என்று யோசிப்பதே ஓரளவாவது இதற்குப் பலன் தரும். பள்ளியில் படிக்கும் பொது முடிந்தவரை தங்கள் மரபுவழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரது முக்கியமான கடமை. வளர்ந்தபிறகு வேலை தேடிச் சென்றாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தம் குலத்தொழிலைக் கற்றுக் கொண்டால் , பிற்காலத்திலாவது அது உபயோகமாக இருக்கும். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஆர்வம் காட்ட வேண்டியது இதற்கு மிகவும் அவசியம். இதனால், பிள்ளைகள் தவறான பாதைகளில் செல்வது கட்டுப் படுத்தப் படுகிறது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகாவது, தம் மரபிற்கேற்ற தொழிலை முழு நேரப் பணியாக மேற்கொண்டால் வருமானமும் இருக்கும்.  பாரம்பரியமும், கலைகளும் அழிந்து விடாமல் பாது காக்கப்பட்டுவிடும். ஓய்வு பெற்ற பிறகும் பிற தொழில்களைச்  செய்து வருமானம் தேடுபவர்கள் இருக்கிறார்கள்.  அதை யாருக்கு வைத்துவிட்டுப் போகப்போகிறோம் என்று ஒரு கணம் சிந்திப்பது நல்லது. தேவைக்கு  மேல் பணம் ஈட்டுவதை விட, இத்தனை நாள் நாம் செய்யத்தவறிய குல தர்மத்தை இப்போதாவது செய்வோம் என்று எல்லோரும் எண்ணினால் எந்த ஒரு தொழிலிலும் அதைச் செய்வோர் இல்லை என்ற நிலை ஏற்படாது.

கோயில் பூஜை செய்யவும் , விவசாயம் செய்யவும் , நபர்கள் குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கும்போது, வேறு வேலைக்குச் சென்று பணி ஓய்வு பெற்ற பிறகாவது தங்கள் குலத் தொழிலை மேற்கொள்வார்களா என்ற ஆதங்கத்தால் இப்படி எழுத நேர்ந்தது. எந்த ஒரு தொழிலும் பிற தொழிலுக்குத் தாழ்வானது அல்ல. இன்னும் சொன்னால் உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்று வள்ளுவம் கோடிட்டுக் காட்டுவதை இங்கு நினைக்க வேண்டும்.

எக்குலத்தோராயினும் சிவபெருமானுக்கு மீளா அடிமை பூண்டால் பெருமானது அருள் கிட்டும் என்பதைப் பெரிய புராணம் காட்டும் நாயன்மார்களது வாழ்க்கை மூலம் அறிகிறோம்.  " குலத்திற்கு ஏற்பதோர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே" என்ற தேவார வாக்கின்படி, எத்தொழில் பூண்டாலும் இறை அருள் கிட்டும் என்பதே பெரியபுராணம் நமக்கு அறிவிக்கும் மையக் கருத்து. ஆகவே, நம்மில் உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் , சிவனடியார்களை சிவனாகவே பாவித்து , மரபுகளை மறையாது காத்தால் இந்தக் காலம் மட்டும் அல்ல. எந்தக் காலத்திலும் நமக்கு நன்மையே விளையும். இம்மையே நன்மை தரும்  பெருமான் சங்கரன் எனப்படுவதால் சார்ந்தவர்க்கெல்லாம் . " என்றும் இன்பம் தழைக்க" அருள் செய்வான். நமக்குத் தெரிந்தவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது என்ற பழக்கம்  நல்லதுதான். அதைச் சற்று விரிவு படுத்தி அனைவரும் மரபு மாறாமல் இனிது வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே அதை விடச்  சிறந்த வாழ்த்தாக அமையும். அதுவே மரபுகளைக் காக்கும் வித்தாகவும் ஆகலாம் அல்லவா?      

Saturday, December 27, 2014

சக்தி அருள்வாய் சிவனே

மனித உடலில்  எதிர்ப்பு சக்திகள் குறைந்தால்  நோய்கள் தாக்குவது எளிதாகி விடுகிறது என்கிறார்கள். எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே நம்மைக் கவசம் போல் காப்பாற்றும். அதற்காகச்  சத்துள்ள உணவை  உட்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமல்ல. நியமம்,விரதம், தியானம்,ஜபம் போன்றவையும் நம்மைக் கவசமாகக் காக்கின்றன என்று பெரியோர் கூறுவர்.  துன்பம் வந்தபிறகு கடவுளைத் தொழுவது, நோய்ப்பட்டபின்பு மருந்தைத் தேடுவது போலத்தான். வருமுன் காப்பதே உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதால் பிராணாயாமம், தியானம்,ஆலய வழிபாடு  போன்றவற்றை நமது  முன்னோர் கடைப்பிடித்து, நல்வழி காட்டியுள்ளனர்.

 ஒருவகையில் பார்த்தால் ஆலயங்களையும் இவ்வரையறைக்குள் இணைத்துப் பார்க்கலாம். மேற் சொன்ன நியமம் , நெறிமுறை ஆகியவற்றோடு ஆலய பூஜைகள் நடைபெற்றால் மூர்த்தியின் சாந்நித்தியம் அதிகரித்து, வேண்டுவோர் வேண்டிய வரமனைத்தும் கிடைக்கும். . இவ்வளவு நடைபெற்றும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகமமுறையில் நடத்துவதால் மூர்த்திகரம் அதிகரிக்கிறது.

நம்மை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நோய்கள் மட்டுமல்ல. நம்மையும், நம் ஊராரையும், நம் சமயத்தையும் , நம் நாட்டையும் எதிர்க்கும் சக்திகள் ஒன்று திரண்டு வரும்போது செயலற்றுப் போய் விடுவோம். அதற்குப் பிறரைக் காரணம் காட்டுவதைக் காட்டிலும் நமக்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். எதிர்ப்பு என்றால் மற்றவர்களுடன் சண்டை போடுவது என்று அர்த்தம் அல்ல. நம்மிடம் நியமமோ,மந்திர பலமோ, நம்பிக்கையோ, நித்திய வழிபாடோ  குறைந்தால் இதை எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். எங்கோ சிலர் இன்னமும் பழைய நெறிகளோடு வாழ்வதால் இந்த அளவாவது நாம் காப்பாற்றப்படுகிறோம் .

உலகம் உய்ய அந்தணர்கள் நித்திய கர்மாவுடன்,அழல் ஓம்பவேண்டியதை, " எரி  ஓம்பிக் கலியை வாராமே  செற்றார் " என்று சம்பந்தர்  அருளுவதால் அறியலாம்.  மூவேளையிலும் காயத்திரி மந்திரத்தால் உபாசிப்பதோடு  விடுமுறை நாட்களில் ஆயிரம் முறை ஜபம் செய்வதால் தனக்கும் ஊருக்கும் நன்மை ஏற்படுவதோடு அதுவே கவசமாகக் காக்கும் என்பதையும் உணர வேண்டும். உலகியலிலிருந்து கொஞ்சமாவது விலகி நியமத்தோடு வாழ முயல வேண்டும். அப்போது எந்த எதிர்ப்புச் சக்தியும் நம்மை நெருங்க அஞ்சும். செய்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கோவில் நடைமுறைகளும் நியமத்தோடு விளங்கினால் ஆலயங்களுக்குள் தவறுகள் நடக்க இடம் தராது. இல்லாவிட்டால் சன்னதிகள் காட்சிக் கூடங்கள் ஆகி விடும். வியாபார நோக்கில்/லாப நோக்கில் செயல் படும். வழிபாட்டு நோக்கமே பாழாகி விடும். ஒரு கால பூஜையே செய்ய முடிகிறது என்னும்போது சாந்நித்தியத்தை எப்படி எதிர் பார்ப்பது ?

திருக்குளங்களைச் சுற்றிலும் சிறுநீர் கழிப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று நெறிகெட்டு இருக்கும்போது, திருக்குளத்தின் புனிதத்துவத்தை எப்படிக் காப்பாற்றுவது ? அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அனைத்து  நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் !  இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர்  குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் !  இதற்கெல்லாம் மூல காரணம் என்ன ? நம்மை நாம் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் மனம் அழுக்கேற விட்டிருக்கிறோம் என்பதே. நமது ஆலயம், நமது திருக்குளம் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இந்த சுய சக்தியை / ஆத்ம சக்தியைத் தான் எதிர்ப்பு சக்தி என்கிறோம். பிரளய  காலத்தில் மீண்டும் சிருஷ்டி பீஜத்தைக் கும்பத்திலிருந்து வெளிக் கொணர்ந்து உலகைத் தோற்றுவித்துக் காத்தருளும் ஆதி கும்பேசுவரப் பெருமானே இந்த ஞானத்தையும் சக்தியையும் அருள வேண்டும். 

Thursday, December 25, 2014

ஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்

குப்த கங்கையும் திருக்கோயிலும் 
சிவமுக்தி தரும் தலங்களுள்  நன்னிலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  ஸ்ரீ வாஞ்சியமும்  ஒன்று. மூவர் தேவாரமும் இதற்கு உண்டு. திருவாசகத்திலும் இதன் பெருமை  பேசப்படுகிறது. கார்த்திகை ஞாயிறுகளில் இங்கு உள்ள குப்த கங்கை என்ற திருக்குளத்தில் நீராடுவோர் ஏராளம். வெளிப் பிராகாரத்தில் யமனுக்குத் தனி சன்னதியும் உண்டு. இங்கு மட்டுமே, சுவாமிக்கு யம வாகனம் உண்டு. இப்படிப் பல்வேறு பெருமைகளை ஏற்கனவே கொண்டுள்ள இத்தலத்திற்கு மேலும் நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாகக் களங்கம் விளைவிக்கக் கூடாது. இதை  எல்லாத்   தலங்களுக்கும் பொதுவாகச் சொல்வதாகக் கருத வேண்டும்.

 திருவள்ளுவர் எத்தனையோ நீதிகளை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றும், இன்று நாம் நடை முறையில் பார்ப்பது என்ன ? கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது!   வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா  தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது ?  வெட்கப்பட வேண்டிய விஷயம் .

இவர்கள் எப்படியாவது தொலையட்டும் ,  திருத்தப் பட மாட்டாத ஜன்மங்கள் என்று விட்டு விடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எதையாவது தின்றுவிட்டு வீட்டோடு  இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நடுத் தெருவிலும் மக்கள் மத்தியிலும் அட்டகாசம் செய்கிறார்கள். நம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற திமிர் வேறு!  இந்த அக்கிரமத்தைக் கோவிலிலும் சென்று தொடருகிறார்கள். என்பதைக் காணும் போது கேவலமாக இருக்கிறது. குடித்த வாடையோடு இவர்களும் சேவார்த்திகள் அருகில் நிற்க எப்படித்தான் துணிந்து வருகிறார்களோ தெரியவில்லை. குடித்துவிட்டு சுவாமி தூக்க வருபவர்களைக் கோவில் நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது?

சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் உள்ளே, சிலர் குடித்துவிட்டுக் கிடந்ததைச் செய்தித் தாளில் பார்த்தோம். அதன் பின்னர் கோவிலார் என்ன விசாரணை செய்தார்கள் என்பதோ என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்ரீவாஞ்சியம் கோவில் வளாகத்திற்குள் உள்ள நிர்வாக அதிகாரியின் அறையில் இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அறநிலையத்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது அந்த வாஞ்சிநாதப் பெருமானுக்கே  தெரியும்.

கார்த்திகை ஞாயிறுகளில் நம்பிக்கையோடு செல்லும் பக்தர் கூட்டம் இம்முறைகேட்டை ஏன் தட்டிக் கேட்பதில்லை? உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை? மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா? ஆர்வலர்கள் பலர் முகநூலில் கருத்துத் தெரிவிப்பதோடு சரி. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் ஏற்படப்போவதில்லை. களத்தில்  இறங்கி எதிர்க்க வேண்டிய காலம் இது. முன்னின்று நடத்துவார் எவரும் இல்லாதது குற்றத்தை மறைமுகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போல இருக்கிறது.  இந்த அக்கிரமத்தைப் பத்திரிக்கையாவது வெளிக்கொண்டு வந்ததால் அரசின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உண்டு. அப்பத்திரிகைக்கு நமது நன்றி.

சேவார்த்திகள் தங்களுக்கு உள்ள உரிமைகளை  மறந்து விடுவது நல்லதல்ல. கோவில் வளாகத்துள் செருப்போடு திரிபவர்களையும், எச்சில் துப்புவோரையும்,திருக் குளத்தை அசுத்தப்படுத்துவோரையும் ,மலஜலம் கழிப்போரையும் சீட்டு விளையாடுவோரையும், குடிபோதையில் வருவோரையும் தட்டிக் கேட்கத் தயங்கம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் அவர்கள் வேறு எங்காவது செய்து தொலையட்டும். ஆலயத்தின் புனிதம் கெடும்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காணாதது போல் நமக்கேன் என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு வந்தது போதும். இனியாவது தட்டிக்  கேட்போம். திருத்துவோம். கோயில்களின் புனிதம் காப்போம்.நல்ல சமுதாயம் உருவாக நம்மால் ஆனதைச் செய்வோம்.  

Tuesday, December 16, 2014

கோயிற் கலைப் பாதுகாப்பு

கலைகள் கற்கப்படவேண்டியவை. ஆதரிக்கப்படவேண்டியவை. நுட்பமாக ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டியவை. பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியவையும் கூட. அதேபோல் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதெல்லாம் நெடுங்காலமாக நடந்துவந்தபோதிலும், இந்த விஞ்ஞான யுகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வலைத்தளங்கள் மூலமும் செய்தித் தாள்கள் மூலமும்,பத்திரிகைகள் மூலமும் நம் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றன.

எத்தனையோ கலைகள் இருந்தபோதிலும், கோயில் சம்பந்தமான  கற்சிற்ப- உலோக சிற்ப - மர  சிற்ப வேலைகள் பல தலைமுறைகள் ஆனாலும் அக்கலைஞர்களின் பெருமையைப் பகர்வதாக  இருப்பதை மறுக்க முடியாது. இவை எல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டியவை. நேரில் செல்ல முடியாதவர்கள்  புகைப்படங்கள் மூலம் அவற்றின் அழகை உணரமுடிகிறது என்றாலும் அதன் மறுபக்கம் அச் சிற்பங்களுக்கே ஆபத்து விளைவிப்பதாக ஆகிவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

 நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுப்  பத்திரிகைகள் ஊதிக் கெடுத்து விட்டன. விக்கிரங்களின் மதிப்பை வியாபார ரீதியில் மதிப்பிட்டுச்  செய்திகளை வெளியிடுகின்றன. இந்தத் தவறான அணுகு முறையால்  பலர் அவற்றைக் களவாடத் துணிந்து விட்டனர். களவு போனவற்றில் சில மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் உரிய கோயில்களில் சேர்ப்பிக்கப் படாமல் பாதுகாப்பு என்ற பெயரில் வேறு மையங்களுக்கு அடைக்கலமாக அனுப்பி வைக்கப் படுகின்றன.

தேர்நிலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் மரச் சிற்பங்கள் பல இடங்களில் களவாடப்பெற்று சக்கரமும்,மரக்கட்டைகளுமே எஞ்சிய நிலையில் தேர்கள் காட்சி அளிப்பதைக் கண்டால் மனம் பதறுகிறது. புதிதாகச் செய்யப்படும் தேர்களில் பழைய கலைநுட்பத்தைக் காண முடியுமா?

உற்சவ மூர்த்திகளின் நிலையும் அதேபோலத் தான். பத்திரிகைகளும் வலைத்தளங்களும் படங்களை வெளியிடுவதால் அவற்றுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆலய மூலவர்களையும் உற்சவர்களையும் புகைப்படம் எடுத்துப்  பத்திரிகைகளிலும், முகநூலிலும் (Face book) வலைத்தளங்களிலும், வெளியிடுகிறார்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாத ஆலயங்கள் ஏராளமாக இருப்பது தெரிந்தும் இவ்விதம் செய்யலாமா? எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்தோம் என்பர். ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையை அது ஏற்படுத்தக்கூடும் என்று இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

பிராகாரங்களில் உள்ள மூர்த்திகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எந்த மூர்த்தியையும் தயவு செய்து படம் எடுத்து வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்னியர் படைஎடுப்பினால் பல கலைச் செல்வங்களை இழந்தோம். பணத்தாசை பிடித்த நம் நாட்டுக் கயவர்கள் எஞ்சியவற்றைக் களவாடவோ அன்னியருக்கு விற்கவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இது வரை வெளியிட்ட படங்களே போதும். முடிந்தால் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள படங்களை, உரியவர்கள் பெரிய மனத்தொடு நீக்கிவிடுவது இன்னும் நல்லது.

இவ்வளவு களவு போயும் அறநிலையத்துறை உறங்கிக்கொண்டு இருப்பது வேதனை தான். சுற்றுச் சுவரே இல்லாமல் ஆலயங்கள் இருப்பதைக் கண்டும் காணதது போல் இருப்பதுதான்  அவர்கள் செய்யும் நிர்வாக லட்சணமா ? உற்சவர்களை  இடம் மாற்றி விட்டது போல் ,தேவ -    கோஷ்டங்களையும்  மூலவர்களையும் அப்படி மாற்றிவிடுவார்களோ என்னவோ?

வேதனைக் குரல் எழுப்ப வேண்டியவர்களும் , மடாதிபதிகளும் வாய் திறவாமல் இருப்பது அதை விட வேதனை. அதற்காக நாமும் மௌனிகளாகி விடக் கூடாது. மூர்த்தி களவாடப்பட்ட ஊரிலேயே அவ்வூர் மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அடியார் கூட்டங்கள் இவ்வளவு இருந்தும் கோயில்களுக்கு எப்பொழுது விடியல் வருமோ தெரியவில்லை. பாட்டுப் பாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதும் மட்டுமா நமது பொறுப்பு? பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது? எதை நோக்கி இசைக் கருவிகளை முழக்குவது? 

Monday, December 1, 2014

உழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்

திருப்பணி என்றால் கோயிலைப் புதிப்பிக்கும் கட்டுமானப் பணி  மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்குச் செய்யப்படும் எல்லாப்பணிகளும் திருப்பணிகள். பிற வேலைகளைப் " பணி" என்று மட்டும் குறிப்பிடுகிறோம். கோவிலைச் சுத்தம் செய்யும் அலகைத் " திரு அலகு " என்கிறோம்.கோவிலுக்கு அலகிடுதல்,மெழுகுதல்,பூமாலை தொடுத்துச் சார்த்தச் செய்தல்,நந்தவனத்தையும், திருக்குளத்தையும் நன்கு பராமரித்தல், உழவாரப்பணி செய்தல் முதலியவை இத் "திருப்பணி" யில் அடங்கும். எனவே அடியார்களும் தம்மால் இயன்றவரை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது தினமும் செய்து வர வேண்டும். உழவாரம் கையில் ஏந்தி நித்தலும் திருக்கோயிலைச் சுத்தம் செய்துவந்தார் திருநாவுக்கரசர். ஆனால் நாமோ. " என் கடன் பணி செய்து கிடப்பதே "என்று வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, பிராகாரங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டுக்  கோவிலுக்குச் சென்று வருகிறோம்.

பல ஊர்களில் உழவாரப் பணி மன்றங்கள் செயல் படுகின்றன. மாதம் தோறும் குழுக்களாகச் சென்று உழவாரப்பணி செய்கிறார்கள். மாதம் ஒரு கோவில் என்று இப்படிச் செய்தாலும், ஒரு விஷயத்தை நாம் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது. மண்வெட்டி, கடப்பாரை அரிவாள் ஆகியவற்றால் செடி,கொடி மரங்களை அகற்றினாலும் பல இடங்களில் அவை வேரோடு முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை. அடுத்த மழை பெய்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் ஆக்ரோஷத்துடன் வளர ஆரம்பித்து விடுகின்றன. பணி மன்றமோ மீண்டும் அதே கோவிலுக்குச் செல்லாமல் வேறு கோவில்களுக்குச் சென்று  உழவாரம் செய்வதால், ஏற்கனவே உழவாரம் செய்த அரும் பணி வீணாகப் போய் விடுகிறது.

உழவாரப்பணி செய்வதற்கு ஏற்ற காலம் மழைக் காலம் என்று பலமுறை சொல்லியும், பழையபடி சௌகரியப்பட்ட நாட்களில் செய்யும் முறையே பின்பற்றப்படுவதால் எதிர் பார்த்த பலன் விளைவதில்லை.மழை பெய்து நின்றவுடன் பூமி ஈரமாக இருப்பதால், ஒரு  அடி வரை வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளைப் ப்ராகாரங்களிளிருந்து கையாலேயே வேரோடு பிடுங்கி விட முடியும். இதனால் உபகரணங்களைக் கொண்டு நாள் முழுவதும் செய்தும் வேரோடு அகற்ற முடியாமல் போவது தடுக்கப்படுகிறது. நெடிது வளர்ந்த மரங்களையும் முட்புதர்களையும் மட்டும் பிற நாட்களில் வெட்டலாம். இதன்மூலம் பெரும்பாலான சிறு முட் செடிகள் வளர்ந்து பெரிய மரங்கள் ஆவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

உழவாரப்பணிகளைப் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களே வந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரியோ அல்லது உள்ளூர் மக்களோ போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மரங்கள் மண்டிப்போய் மதில்களும் மண்டபங்களும் விழும் அபாயம் நேரிடுகிறது. பிராகாரங்கள் வலம் வரும் நிலையில் இல்லை. மேலும் பாம்புப் புற்றுக்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மழைகாலங்களில் பாம்புகள் கோவிலுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றன. நிலைமை இப்படி இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை! உள்ளூர் மக்கள் மழை நின்றவுடன் கைகளால் ஆளுக்குப் பத்து செடிகளைக் களைந்தாலே ஓரளவு பிராகாரங்கள் சுத்தமாகிவிடும். எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் வந்து செய்து கொள்ளட்டும் என்று இருப்பது தவறு. நம் ஊர்க் கோவிலுக்கு நாம் தான் முன்னின்று பணி செய்ய வேண்டும். அடுத்தவர்கள் துணை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித் துணை செய்ய முன்வருபவர்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

நாம் கோவிலுக்குச் செல்வதால் கோவிலுக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் விளைய வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யப்போக வேண்டும்.அப்பொழுது நமக்கும் அடியார்களுடன் இணைந்து பணி ஆற்றும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. சுய நல எண்ணம் நம்மை விட்டு நீங்கத் தொடங்கி விடும். செய்து பார்த்தால் தானே அதன் அருமை புரியும்?  

Saturday, November 29, 2014

தாய் மொழியும் வட மொழியும்

மொழி என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலித்துப் புரியவைப்பதற்காகவே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் வாழும் இடம் தாண்டி வேறோர் இடத்தில் வேறு மொழி பேசப்படுமானால் அம்மொழியையும் தேவையானால் கற்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் அங்கு உள்ளோரிடம் நம் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அவ்வளவே. அதை விட்டு விட்டுத் துவேஷ அடிப்படையில் இதைப் பிரச்சனை ஆக்குவது வாடிக்கை ஆகி விட்டது.

ஒருவனது தாய் மொழி காலத்தால் மிகவும் பழையதாக இருக்கலாம். எல்லா மொழிகளும் ஒரே காலகட்டத்தில் தோன்ற முடியாது. மேலும் நாளடைவில் அவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. அதை வைத்துக்கொண்டு பிற மொழிகளை வெறுப்பதோ,ஒதுக்குவதோ முறை ஆகாது. நமது தாய் மொழியில் பற்று இருக்க வேண்டுவது அவசியம் தான். சூழ்நிலைகளால் மொழி ஏற்கப்படாமலோ, வளர்ச்சி பெறாமலோ ஆகி விடலாம். அந்தக் கோபத்தைப் பிற மொழிகளிடம் காட்டுவது எப்படி நியாயமாகும்?

பணம் பணம் என்று அலையும் இக்காலத்தில், தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்படி , பள்ளிப் படிப்பிலேயே அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பெற்றோருடைய பங்கும் உண்டு. வேலைக்குப் போனபின் , படித்தவை பெரும்பாலும் மறந்து விடுவது வேறு விஷயம்! அதே நேரத்தில், வழக்கில் பிற மொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.காலம் காலமாக கட்டிக் காத்த மொழி அழிந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு ஏற்படுகிறது. மொழியை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதால் மட்டும் என்ன சாதிக்க முடிந்தது?

பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் ஹிந்தியைக் கற்பதைக்  காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது மொழிகளைக் கற்காமல் ,பிற நாட்டு மொழிகளைக்  கற்கிறார்கள். அந்த நாடுகளுக்குச்  சென்றால் பயன் படுமாம்! அப்படி எத்தனை பேர் போகப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படிப் போவோர்களுக்காக இங்கு இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டு மொழிகளைப் புறக்கணிக்கவேண்டுமா?

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு அதன் இலக்கியங்களில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதிலும் பக்தி இலக்கியங்களால் அம்மொழி வளம் பெற்றதை ஒருக்காலும் மறக்கலாகாது. பக்தி இலக்கியங்களை ஒதுக்குவதும் தமிழை ஒதுக்குவதும் ஒன்றே. தெய்வத்தமிழ் என்ற தனிச் சிறப்பு இதன் மூலமே பெறப்பட்டது. இதேபோன்று, காலத்தால் மிகப்பழையதும், பக்தி இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆன வட மொழியை நாம் போற்ற வேண்டும். இந்தியத் தாய்நாட்டில் ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பொதுவாக இருப்பதுபோல் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாக இருந்து மக்களை இணைக்கிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக  சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்  என்று புரியவில்லை.பிற நாட்டு மொழிகளைக் கற்றால் தான் கெளரவம் என்பதாலா? ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்கள்? மொழி துவேஷத்தைத் தவிர வேறு காரணம் புலப்படவில்லை.

வட மாநிலத்தவர் இங்கு வந்து திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசும் போது மட்டும் காது குளிரக் கேட்கிறோம்.  நம் வீட்டுக் குழந்தைகள் திருக்குறள் , தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வத்தமிழ் நூல்களைக் கற்க வழி வகுக்கிறோமா என்று ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் இது. அதுவரையில் தமிழ், வட மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றிவந்தனர். கோயில்களில் வழிபாட்டை வட மொழி ஆகமப்படியும் , தோத்திரத்தைத் தமிழ் மறைகளாலும் செய்து வந்த காலம் போய் இரண்டும் கெட்டு விடும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு மணலிலோ , சிலேட்டுப் பலகையிலோ தாய்மொழியில் கையைப்பிடித்துக் கொண்டு எழுதச் சொல்வர். விஜயதசமி அன்று சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பள்ளியில் சேர்ப்பார்கள். இப்பொழுது, குழந்தை பேச ஆரம்பித்தது முதல் ஆங்கிலத்தையே போதிக்கும் பெற்றோர்கள் இருக்கும்போது எதை நொந்து கொள்வது?

எல்லா மொழியாலும் துதிக்கப் படுபவன் இறைவன் என்கிறது சம்பந்தர் தேவாரம். திருவொற்றியூர்  இன்னம்பூர்  ஆகிய ஊர்களில் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்று பெயர். அப்படியானால் அப்பெருமான் தமிழ் மொழியை மட்டும் அறிந்தவனாகக் கொள்ள முடியுமா? தாய் மொழி எதுவானாலும் எல்லா மாநிலத்திற்கும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் பொதுவானதாக உள்ளது. எல்லா மாநிலத்தவர்களையும் வழிபாட்டு அளவில் இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது.எனவே அம்மொழியைப் பள்ளிக்கூட அளவில் எட்டாம் வகுப்பு அளவிலாவது தெரிந்து கொள்வது நல்லது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர். முடிந்தால் மக்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும். மக்களைப் பிரிக்கும் பாவச்செயலில் இறங்க வேண்டாம். கலைவாணியின் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாக.      

Friday, November 7, 2014

அன்னாபிஷேகமா அன்னாலங்காரமா ?

அலங்காரம் செய்வது என்பது ஒரு கலை. வரம்புகளுக்கு உட்பட்டு செய்யப்படுவது. சொந்தக் கற்பனை சிறிதளவு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவு மீறப்படும்போது அது பரிமளிக்காததோடு, வரம்புமீறல்கள் அதிகரிக்கவும் வழியாக அமைந்துவிடும். கோயில் வழிபாட்டு முறைகளில் இது எவ்வளவு தூரம் உண்மை என்பது பலருக்குத் தெரியும். வழி வழியாகச் செய்யப்படுவதை மையக் கருத்தாகக் கொண்டு, ஒருசிறிதளவு மட்டும் கற்பனை சேரும்போது பாரம்பர்யத்திற்குக் குந்தகம் நேராதபடி  காப்பாற்றப்படுவதைக் காணலாம்.

திருவிழாக்கள் வரும்போது வழிமுறைகளில் மாற்றங்கள் காணப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணத்திற்கு , சந்தனக்காப்பு என்று எடுத்துக்கொண்டால்  மூல மூர்த்தியின் உருவ அமைப்பில் மாற்றம் செய்யப்படாமல் சந்தனத்தைச் சார்த்தி, அதன்மீது வண்ணக் கலவைகளையும்,ஜரிகைகளையும் உபயோகித்து , அலங்காரம் சோபிக்கும் படி செய்வது வழக்கம்.

 மூலவருக்குக் கை ,கால் முதலியவற்றை இணைத்து, ஆண்டுக்கொரு அலங்காரம் என்று சொல்லிக்கொள்ளும் "அலங்கார ரத்தினங்களும்" இருக்கிறார்கள் . உற்சவருக்கோ இத்தகைய இணைப்புகள் சகஜமாகி விட்டன. " புதிய "கைகளில் சூலம் ஏந்தியபடியும் கால்களை இணைத்து மூர்த்தியை பெரிதாகக் காட்ட முயல்வதும் , மூர்த்தியின் இயற்கை வடிவை அடியோடு மாற்றி , என்ன சுவாமி ஊர்வலம் வருகிறார் என்று கேட்க வைத்து விடுகிறது. நகை சார்த்துவதோ,, மாலைகள் சார்த்துவதோ மூர்த்தியின் உருவ அமைப்பை மறைக்காதபடி இருக்க வேண்டும். பிள்ளையாரையாவது தும்பிக்கையை வைத்துக் கண்டு பிடித்து விடலாம். மற்ற மூர்த்திகளை முகம் மட்டும் தெரிவதை வைத்துக்கொண்டு எவ்வாறு கண்டுபிடிப்பது ???




                                                                                                                                                                                                                                                                                                                                 

மூலஸ்தான மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்யப்படும்போது சொந்தக் கற்பனையை கொஞ்சம்  குறைத்துக் கொண்டால் நல்லது. எடுத்துக் காட்டாக, ஐப்பசி மாத அன்னாபீஷேகத்தில், அன்னம் அபிஷேகிக்கப்படுவதைக் காட்டிலும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவகையில் பார்த்தால் தினமும் செய்யப்படும் பல்வேறு அபிஷேகப்பொருள்களில் அன்னமும் ஒன்று என்பதை சிதம்பரம் கோயிலில் நடைபெறும், சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் அறிவார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீச்வரருக்கு அன்னாபிஷேகம் மணிக்கணக்கில் அனைவரும் காணும்படி அபிஷேகமாகச் செய்யப்படுகிறது.
கண் கொள்ளாக் காட்சி அல்லவா அது

அலங்காரம் என்னும்போது, அன்னத்தை அபிஷேகம் செய்தபின், நிறைவாக அன்னம் கலையாதபடி மாலைகள் சார்த்தலாம் . அப்பம்,வடை ,பட்சணங்கள், காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு சிவலிங்க மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்படுகியது. இவற்றால் அலங்காரமே பிரதானமாக ஆகிவிடுகிறது அல்லவா/ பிறவற்றை சுவாமிக்கு முன்பு வைத்து நைவைத்தியமாகச் செய்தால், மூலவரை அன்னாபிஷேகத்தில் முழுமையாகத் தரிசிக்கலாமே என்ற ஆசையால் இந்த எண்ணம் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் இருக்கும்போது, பல இடங்களில், அன்னத்தின் மீது முகம் வரைகிறார்கள். மேலே சொல்லியபடி இது எல்லோ ருக்கும் எளிதில் கைவராத  கலை.இன்னும் சொன்னால் முகத்தை  அழகாக அமைக்கத் தெரியாமல் கோரப்படுத்தி விடுகிறார்கள். அதில் ஒட்டு வேலைகள் வேறு!! சிவாசார்யப் பெருமக்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாபிஷேகத்தில்  அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் தந்து, கற்பனைகள் இல்லாமல், ஆராதித்தாலே, பரமேச்வரனைத் திருப்தி படுத்துவதோடு, சேவார்த்திகளும் மகிழ்வர். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இந்த வைபவத்தில் தவிர்க்கப் படலாம் அல்லவா?  அன்னத்திற்குப் பதியான பசுபதியை நன்றியுடன் ஆராதனை  செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் சென்று சேர வைப்பது சிவாச்சார்யப் பெருமக்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்து நமக்கு வழி காட்டுவார்கள் என நம்புகிறோம்.