Monday, December 1, 2014

உழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்

திருப்பணி என்றால் கோயிலைப் புதிப்பிக்கும் கட்டுமானப் பணி  மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்குச் செய்யப்படும் எல்லாப்பணிகளும் திருப்பணிகள். பிற வேலைகளைப் " பணி" என்று மட்டும் குறிப்பிடுகிறோம். கோவிலைச் சுத்தம் செய்யும் அலகைத் " திரு அலகு " என்கிறோம்.கோவிலுக்கு அலகிடுதல்,மெழுகுதல்,பூமாலை தொடுத்துச் சார்த்தச் செய்தல்,நந்தவனத்தையும், திருக்குளத்தையும் நன்கு பராமரித்தல், உழவாரப்பணி செய்தல் முதலியவை இத் "திருப்பணி" யில் அடங்கும். எனவே அடியார்களும் தம்மால் இயன்றவரை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது தினமும் செய்து வர வேண்டும். உழவாரம் கையில் ஏந்தி நித்தலும் திருக்கோயிலைச் சுத்தம் செய்துவந்தார் திருநாவுக்கரசர். ஆனால் நாமோ. " என் கடன் பணி செய்து கிடப்பதே "என்று வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, பிராகாரங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டுக்  கோவிலுக்குச் சென்று வருகிறோம்.

பல ஊர்களில் உழவாரப் பணி மன்றங்கள் செயல் படுகின்றன. மாதம் தோறும் குழுக்களாகச் சென்று உழவாரப்பணி செய்கிறார்கள். மாதம் ஒரு கோவில் என்று இப்படிச் செய்தாலும், ஒரு விஷயத்தை நாம் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது. மண்வெட்டி, கடப்பாரை அரிவாள் ஆகியவற்றால் செடி,கொடி மரங்களை அகற்றினாலும் பல இடங்களில் அவை வேரோடு முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை. அடுத்த மழை பெய்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் ஆக்ரோஷத்துடன் வளர ஆரம்பித்து விடுகின்றன. பணி மன்றமோ மீண்டும் அதே கோவிலுக்குச் செல்லாமல் வேறு கோவில்களுக்குச் சென்று  உழவாரம் செய்வதால், ஏற்கனவே உழவாரம் செய்த அரும் பணி வீணாகப் போய் விடுகிறது.

உழவாரப்பணி செய்வதற்கு ஏற்ற காலம் மழைக் காலம் என்று பலமுறை சொல்லியும், பழையபடி சௌகரியப்பட்ட நாட்களில் செய்யும் முறையே பின்பற்றப்படுவதால் எதிர் பார்த்த பலன் விளைவதில்லை.மழை பெய்து நின்றவுடன் பூமி ஈரமாக இருப்பதால், ஒரு  அடி வரை வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளைப் ப்ராகாரங்களிளிருந்து கையாலேயே வேரோடு பிடுங்கி விட முடியும். இதனால் உபகரணங்களைக் கொண்டு நாள் முழுவதும் செய்தும் வேரோடு அகற்ற முடியாமல் போவது தடுக்கப்படுகிறது. நெடிது வளர்ந்த மரங்களையும் முட்புதர்களையும் மட்டும் பிற நாட்களில் வெட்டலாம். இதன்மூலம் பெரும்பாலான சிறு முட் செடிகள் வளர்ந்து பெரிய மரங்கள் ஆவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

உழவாரப்பணிகளைப் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களே வந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரியோ அல்லது உள்ளூர் மக்களோ போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மரங்கள் மண்டிப்போய் மதில்களும் மண்டபங்களும் விழும் அபாயம் நேரிடுகிறது. பிராகாரங்கள் வலம் வரும் நிலையில் இல்லை. மேலும் பாம்புப் புற்றுக்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மழைகாலங்களில் பாம்புகள் கோவிலுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றன. நிலைமை இப்படி இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை! உள்ளூர் மக்கள் மழை நின்றவுடன் கைகளால் ஆளுக்குப் பத்து செடிகளைக் களைந்தாலே ஓரளவு பிராகாரங்கள் சுத்தமாகிவிடும். எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் வந்து செய்து கொள்ளட்டும் என்று இருப்பது தவறு. நம் ஊர்க் கோவிலுக்கு நாம் தான் முன்னின்று பணி செய்ய வேண்டும். அடுத்தவர்கள் துணை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித் துணை செய்ய முன்வருபவர்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

நாம் கோவிலுக்குச் செல்வதால் கோவிலுக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் விளைய வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யப்போக வேண்டும்.அப்பொழுது நமக்கும் அடியார்களுடன் இணைந்து பணி ஆற்றும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. சுய நல எண்ணம் நம்மை விட்டு நீங்கத் தொடங்கி விடும். செய்து பார்த்தால் தானே அதன் அருமை புரியும்?  

No comments:

Post a Comment