Saturday, November 29, 2014

தாய் மொழியும் வட மொழியும்

மொழி என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலித்துப் புரியவைப்பதற்காகவே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் வாழும் இடம் தாண்டி வேறோர் இடத்தில் வேறு மொழி பேசப்படுமானால் அம்மொழியையும் தேவையானால் கற்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் அங்கு உள்ளோரிடம் நம் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அவ்வளவே. அதை விட்டு விட்டுத் துவேஷ அடிப்படையில் இதைப் பிரச்சனை ஆக்குவது வாடிக்கை ஆகி விட்டது.

ஒருவனது தாய் மொழி காலத்தால் மிகவும் பழையதாக இருக்கலாம். எல்லா மொழிகளும் ஒரே காலகட்டத்தில் தோன்ற முடியாது. மேலும் நாளடைவில் அவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. அதை வைத்துக்கொண்டு பிற மொழிகளை வெறுப்பதோ,ஒதுக்குவதோ முறை ஆகாது. நமது தாய் மொழியில் பற்று இருக்க வேண்டுவது அவசியம் தான். சூழ்நிலைகளால் மொழி ஏற்கப்படாமலோ, வளர்ச்சி பெறாமலோ ஆகி விடலாம். அந்தக் கோபத்தைப் பிற மொழிகளிடம் காட்டுவது எப்படி நியாயமாகும்?

பணம் பணம் என்று அலையும் இக்காலத்தில், தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்படி , பள்ளிப் படிப்பிலேயே அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பெற்றோருடைய பங்கும் உண்டு. வேலைக்குப் போனபின் , படித்தவை பெரும்பாலும் மறந்து விடுவது வேறு விஷயம்! அதே நேரத்தில், வழக்கில் பிற மொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.காலம் காலமாக கட்டிக் காத்த மொழி அழிந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு ஏற்படுகிறது. மொழியை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதால் மட்டும் என்ன சாதிக்க முடிந்தது?

பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் ஹிந்தியைக் கற்பதைக்  காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது மொழிகளைக் கற்காமல் ,பிற நாட்டு மொழிகளைக்  கற்கிறார்கள். அந்த நாடுகளுக்குச்  சென்றால் பயன் படுமாம்! அப்படி எத்தனை பேர் போகப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படிப் போவோர்களுக்காக இங்கு இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டு மொழிகளைப் புறக்கணிக்கவேண்டுமா?

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு அதன் இலக்கியங்களில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதிலும் பக்தி இலக்கியங்களால் அம்மொழி வளம் பெற்றதை ஒருக்காலும் மறக்கலாகாது. பக்தி இலக்கியங்களை ஒதுக்குவதும் தமிழை ஒதுக்குவதும் ஒன்றே. தெய்வத்தமிழ் என்ற தனிச் சிறப்பு இதன் மூலமே பெறப்பட்டது. இதேபோன்று, காலத்தால் மிகப்பழையதும், பக்தி இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆன வட மொழியை நாம் போற்ற வேண்டும். இந்தியத் தாய்நாட்டில் ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பொதுவாக இருப்பதுபோல் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாக இருந்து மக்களை இணைக்கிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக  சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்  என்று புரியவில்லை.பிற நாட்டு மொழிகளைக் கற்றால் தான் கெளரவம் என்பதாலா? ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்கள்? மொழி துவேஷத்தைத் தவிர வேறு காரணம் புலப்படவில்லை.

வட மாநிலத்தவர் இங்கு வந்து திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசும் போது மட்டும் காது குளிரக் கேட்கிறோம்.  நம் வீட்டுக் குழந்தைகள் திருக்குறள் , தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வத்தமிழ் நூல்களைக் கற்க வழி வகுக்கிறோமா என்று ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் இது. அதுவரையில் தமிழ், வட மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றிவந்தனர். கோயில்களில் வழிபாட்டை வட மொழி ஆகமப்படியும் , தோத்திரத்தைத் தமிழ் மறைகளாலும் செய்து வந்த காலம் போய் இரண்டும் கெட்டு விடும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு மணலிலோ , சிலேட்டுப் பலகையிலோ தாய்மொழியில் கையைப்பிடித்துக் கொண்டு எழுதச் சொல்வர். விஜயதசமி அன்று சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பள்ளியில் சேர்ப்பார்கள். இப்பொழுது, குழந்தை பேச ஆரம்பித்தது முதல் ஆங்கிலத்தையே போதிக்கும் பெற்றோர்கள் இருக்கும்போது எதை நொந்து கொள்வது?

எல்லா மொழியாலும் துதிக்கப் படுபவன் இறைவன் என்கிறது சம்பந்தர் தேவாரம். திருவொற்றியூர்  இன்னம்பூர்  ஆகிய ஊர்களில் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்று பெயர். அப்படியானால் அப்பெருமான் தமிழ் மொழியை மட்டும் அறிந்தவனாகக் கொள்ள முடியுமா? தாய் மொழி எதுவானாலும் எல்லா மாநிலத்திற்கும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் பொதுவானதாக உள்ளது. எல்லா மாநிலத்தவர்களையும் வழிபாட்டு அளவில் இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது.எனவே அம்மொழியைப் பள்ளிக்கூட அளவில் எட்டாம் வகுப்பு அளவிலாவது தெரிந்து கொள்வது நல்லது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர். முடிந்தால் மக்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும். மக்களைப் பிரிக்கும் பாவச்செயலில் இறங்க வேண்டாம். கலைவாணியின் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாக.      

No comments:

Post a Comment