Monday, April 14, 2014

ஆகம வழி நிற்போம்

 சிவபெருமானை  ஆகமமாகவே ஆனவன்  என்கிறார் மாணிக்கவாசகர். " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்கிறது திருவாசகம். நம் தென் தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்கள் ஆகம வழிப்படி அமைக்கப்பெற்றவை. அதை மாற்றம் செய்வதோ அல்லது புதிதாகக் கட்டப்படும் சிவாலயங்களை ஆகமத்தை ஒட்டாமல்  தமக்குப் பிடித்தவகையில் மாற்றிக்கொள்வதோ  பெரும்  பிழையே ஆகும். சிவாலய நிர்மாணம் என்பது எந்தெந்த சன்னதிகள் ஆலயத்தின் எவ்விடத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஆகமங்கள் மூலம் அறிகிறோம்.

வட நாட்டில்  போற்றப்படும்  சில தெய்வங்களையும் , மகான்களையும் வடிவமைத்து நமது சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்கின்றனர் சிலர். இப்படிச் சொல்வதால் அத்தெய்வங்களையும் மகான்களையும் போற்றக்கூடாது என்பது அர்த்தமல்ல. வேண்டுமானால் அவர்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டிக் கொள்ளட்டும். சிவாலயத்திற்குள் சன்னதி அமைக்க வேண்டாமே! அதேபோல் நம்மூரில் வாழ்ந்த மகான்களுக்கும் சிலை அமைத்து சிவாலயங்களில் வைக்கக் கூடாது.

வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று எண்ணி என்னென்னவோ புதுமைகளை செய்யத் துணிந்து விட்டார்கள். கேட்டால் எங்கும் இல்லாத வகையில் இங்கு அமைக்கப்படுகிறது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளும் துணை போகின்றன.

வட நாட்டில் செய்யாத பூஜை முறைகளை எல்லாம் அந்தப் பக்கத்து மூர்த்திகளை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு பால்,தயிர்,பஞ்சாமிர்தம் ,விபூதி,சந்தனம் முதலிய பொருள்களால் அபிஷேகம்  செய்து பின்பற்றுகிறார்கள்.. அப்படிச் செய்யும்போது வேத முழக்கமும் ஒலிக்கிறது. இம்முழக்கத்தை எத்தனையோ கிராமக் கோயில்கள் கேட்பதற்குக் காத்துக் கொண்டு இருக்கின்றன!

இப்படிப் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகான்களின் சன்னதிகள் பிரபலப்படுத்தப்பட்டு, மூல மூர்த்தியின் சன்னதியின் பால் கவனம் குறைய ஆரம்பித்து விடுகிறது.. பணம் வசூலாகிறது என்றால் இதுபோன்ற சன்னதிகளை அமைக்க வேண்டுமா? இருக்கிற சன்னதிகளைப் பராமரித்தாலே போதுமானது என்று உணர மாட்டார்களா?

அருள் நூல்களில் காணப்படும் வாசகங்களைத் தமக்குப் பிடித்த தெய்வங்கள் மற்றும் மகான்களின் பெயரில் மாற்றிக் கொள்ளும் போக்கையும் காண்கிறோம். யார் மனத்தையும் புண் படுத்தக்கூடாது என்பதால் இங்கு விரிவாக அது பற்றிச் சொல்ல வேண்டாம். தங்களுக்கு உள்ள பக்தியைக் காட்டிக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது இப்படிச் செய்வானேன்?  

விநாயகருக்கும் முருகனுக்கும் புதியதாக யாரும் புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் என்று ஆறு கோயில்களை அடையாளம் காட்டுகின்றனர். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் என்பதோடு , எட்டாவது படை வீடு வரையில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பஞ்ச பூதத் தலங்கள் என்றால் எங்கள் மாவட்டத்திலும் பஞ்ச பூதத்  தலங்கள் உண்டு என்கிறார்கள். நவக் கிரகங்கள் வழிபட்ட கோயில்கள் என்றால் சென்னையைச் சுற்றிலும்கூட  நவக் கிரகக் கோயில்கள் உண்டு என்கிறார்கள். இப்படியே போனால் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கு நமது முன்னோர் சுட்டிக் காட்டிய கோயில்கள் எவை என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும்.

இதேபோலத்தான் சிவாலயங்களில் ஆகமத்திற்கு உட்படாத சன்னதிகளை அமைப்பதும். ஆன்மீகப் பெரியோர்களும் சிவாசார்யப் பெருமக்களும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாநகரங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நிறைய நடைபெற்றாலும் கிராமப் பகுதிகளில் அவ்வாறு இல்லை என்று எண்ணிக் கொண்டு     இருந்தோம். இப்போது அங்கேயும் தவறுகள் அரங்கேறுகின்றன. இத்தகைய தவறுகள் கண்டிப்பாகத் திருத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அவை வேரூன்றி விடும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று வாதிட ஆரம்பித்து விடுவர். ஆகமங்கள் அர்த்தமற்றவைகளாக ஆகிவிடக்கூடாது. " ஆகம சீலர்க்கோர் அம்மானே" என்று  சுந்தரர் கூறுவதால் ஆகமத்தின் சிறப்பும் பெருமானின் பெருமையும் ஆகமங்களைப் போற்றுவோரின் பெருமையும் ஒருங்கே வெளிப்படுகிறது அல்லவா?

3 comments:

  1. iyya,
    Nalla karuthu.. unmaiyil sivanai thavira veru theivam illai endearing manica vasagathai kuripitalaame iyya..

    ReplyDelete
  2. Thank you for expressing this.

    It is pretty bad to see the Lord Shiva temples getting converted to accommodate the fancy worships, which more at whims and frenzies of some affluent who in the name of spirituality spoil the ambiance. You are spot on when you say, there is no objection to create a temple of their own for all these unconventional worship. All we are requesting is please do not spoil the temples of Lord Shiva.

    Namahshivaya

    Love,
    Ganesh

    ReplyDelete
  3. சென்னையைச் சுற்றிலும் உள்ள நவக் கிரகக் கோயில்களில் உள்ளவர்கள் ஒரு கோவிலிருந்து அடுத்த நவகிரக கோயில்களுக்கு வழியும் சொல்லி தருவார்கள்.... அதை ஒவ்வொரு கோவிலிலும் மேப் மூலமாக வரைந்து இருப்பார்கள் நான் பார்த்து இருக்கிறேன் அவை எல்லாம் உண்மை கிடையாதா?...o my god......

    ReplyDelete