Saturday, April 26, 2014

சிலைத் திருட்டைத் தடுக்க முடியாதா?

அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தரன் என்ற ஊரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உற்சவ விக்கிரகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரபரப்புச் செய்திகளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கும் பத்திரிகைகளும்  வழக்கம்போல செய்தியை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து ஓய்ந்து விட்டன. ஆனால், கொள்ளைக்காரனுக்குக் "கடத்தல் மன்னன்" என்று பட்டம் மட்டும் தவறாமல் கொடுத்து வருகிறார்கள்! சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மட்டும் விசாரணை நடத்தி வந்தது. கொள்ளைக்காரன் சுபாஷ் கபூர் என்பவனைக் கைது செய்து விசாரித்ததில் இச்சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரிய வந்து, அவற்றை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவபுரம்,திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் சிலைகளும் கடத்தப்பெற்று , லண்டனில் வழக்கு நடைபெற்ற பின்னர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. இவ்வாறு பல்லாண்டுகளாக இத்திருட்டுத் தொழில் நடைபெற்றும், நமது அறநிலையத்துறையும்,ஊர்மக்களும் ஏன்  அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதவுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தெரிந்தும் நிர்வாக அதிகாரி என்ன செய்து கொண்டு இருந்தார்? ஊர்மக்களாவது கதவைப் பழுது பார்க்கக் கூடாதா? மெய்க்காவல் செய்பவர் எல்லாக் கோயில்களிலும் இல்லையா? அப்படியானால் ஐந்தடி உயரமான மூர்த்தி களவாடுவதற்குள்  கூக்குரல் எழுப்பலாம் அல்லவா? மணியையாவது ஓலிக்கச் செய்யலாம் அல்லவா? சோதனைச்சாவடிகள் தூங்கிக் கொண்டு இருந்தனவா? வெளி நாட்டுக்குக் கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பப்படும் சரக்குப்       பெட்டிகள் ஸ்கேன் செய்யப்படுவதில்லையா; அல்லது அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களுக்கு  உடந்தையா? இப்படிப் பல கேள்விகள் கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பறிகொடுத்து விட்டுப் புலம்புவதை விட, சிலை கடத்தலைத் தடுக்க அரசு என்ன செய்கிறது என்பதே முக்கியம். சிலை பாதுகாப்பு மையங்கள்  அமைத்திருக்கிறோமே என்று அறநிலையத் துறை உடனே பதில் சொல்லும். கோவில் தோறும் இருக்க வேண்டிய மூர்த்திகளை இவ்வாறு கும்பலாக ஒரே இடத்தில் வைத்துப் பூட்டிவிடுவது  எந்த விதத்தில் நியாயம்? அரசு எடுத்துக்கொண்டு போனாலும், கொள்ளைக்காரன் எடுத்துக்கொண்டு போனாலும் கடைசியில்,கோயிலில் அம்மூர்த்திகள் இல்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை! பாதுகாப்பு  மையங்களில் அபிஷேகம் இன்றிப் பாசியும் தூசியும் பிடித்துக் கிடக்கும் அவற்றைக் காண்போர் இதயம் கலங்கும். இதுவே அச்சிலைகளுக்கு நிரந்தரமான புகலிடமாக இருந்தால் காலப்போக்கில் எந்த ஊர் விக்கிரகம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பாதுகாப்பு மையங்களில் செய்யப்படும் பாதுகாப்பை(?) ஒவ்வொரு கோவிலிலும் செய்தால் என்ன? வலுவான சுவரும் ,கதவும், உறுதியான பூட்டும், பாதுகாப்புக் கேமெராவும் அவசர கால அலாரமும் , மெய்க்காவலர் ஒருவரும் இருந்து விட்டால் எப்படிக் களவாட முடியும்? உற்சவ மூர்த்தி அறையை இருவர் தனித் தனி சாவிகள் போட்டால் மட்டுமே திறக்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்.எத்தனையோ கோவில்களில் சுற்றுச் சுவர் இல்லாது இருந்தும் அறநிலையத்துறை மெத்தனமாகவே இருக்கிறது. இவர்கள் சுவர் கட்டுவதற்குள் எஞ்சியுள்ள சிற்பங்களும் சிலைகளும் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது.  பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஆலயங்களின் உபரி நிதியிலிருந்து இதைச் செய்ய முடியாதா? முடியாது என்றால் அதற்கென்று ஒரு அரசுத் துறையும்,அதிகாரிகளும் எதற்கு என்று மக்கள் கேட்கத்தான் செய்வார்கள்.  

5 comments:

  1. Dear Sir

    Unfortunately most of the time, it is is an 'insider' job. Sivapuram Nataraja peruman moortham was a clear example. Last year at Thirupugalur.

    If the Australian museum paid INR 30 crores for Natarajar, the value of idols in Thiruvarur and Kumbakonam would exceed 1000 of crores.

    I dont know how many of them have been replaced like Sivapuram because all are just having paper 'price' tags for identification

    Namashivaya

    ReplyDelete
    Replies
    1. In the absence of representation or protest from the people it is quite understandable why the Govt is inactive. Even if the Govt takes legal action to bring back the stolen idols, they are not restored in the respective Temples for want of a secured vault. Hence it is high time for the Govt to ensure safety of the idols in their original places. How many of us share the concern by forwarding the temple related issues among friends and relatives?

      Delete
  2. அரசுத் துறையும்,அதிகாரிகளும் அலட்சியம் என்பதையே குறிக்கோளாக வைத்திருப்பது மிகப்பெரிய தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது என்பது வேதனையான செய்தி.

    ReplyDelete
  3. ஐயா, செப்பு அல்லது ஐம்பொன் சிலைகளை வேண்டுமானால் ’ஸேப்’ பில் வைக்க முடியும். இங்கு தான் கற்சிலைகளையே கடத்துகிறார்களே. பரிவார தெய்வ சிலைகளை விட்டு வைக்கவில்லையே! ஊர் மக்கள் தங்களூர் கோயில்களை தங்கள் சொத்தாக மதிக்க வேண்டும் அப்பொழுது தான் இதைப் போன்ற திருட்டு குறையும்.
    ஜி.கே.கௌசிக்

    ReplyDelete