Friday, April 18, 2014

மயிலையில் கலை விழா

ஆடலரசனான நடராஜப் பெருமானை ந்ருத்த ராஜா என்று வடமொழியில் கூறுவர். அவன் ஆடும் சிற்றம்பலம் ந்ருத்த சபை என்றும் அப்பெருமான் சபா நாயகன் என்றும் அடியார்களால் போற்றப்படுவதைக் காணலாம்.  அவனது திருவடிகளோ " மலர் சிலம்படிகள்" . அதாவதுசிலம்பினை அணிந்த பொற்பாதங்கள். அத்திருவடியைக் கண்ட கண் கொண்டு வேறொன்றைக் காணவும் வேண்டுமோ என்பார் அப்பர் சுவாமிகள். அக்குஞ்சித  பாதத்தைத் தரிசிக்கப் பிறவியும் வேண்டுவது என்றார் அவர். எனவே, ஆடற்கலை பயிலும் மாணாக்கர்கள் சலங்கையைக் காலில் கட்டிக்கொள்ளும்போதே ஆனந்த தாண்டவ மூர்த்தியின் நினைவு வரவேண்டும். அவனிடமிருந்து வந்த கலை அல்லவா இது?

பல ஆலயங்களில் கலை விழா நடத்துகிறார்கள். ஆனால் அமைப்பாளர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் விழாவானால் சிவபெருமானைப் பற்றிய சொற்பொழிவோ, இசை நிகழ்ச்சியோ அல்லது நடன அரங்கோ நடத்தலாம். அதேபோல் நவராத்திரியை ஒட்டிய நிகழ்ச்சிகள் அம்பிகை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தெரிந்தவர்கள் என்பதற்காகவோ அல்லது சிபாரிசு செய்யப்பட்டதாலோ சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவாலயமாக இருந்தால் சிவன், அம்பிகை, விநாயகர், முருகன், அடியார்கள் ஆகியோருக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதேபோல், பெருமாள் கோயிலாக இருந்தால் ராமாயணம், பாரதம்,பாகவதம் போன்ற புராண சொற்பொழிவுகளை நடைபெறச்செய்யலாம். ஒரே ஆலயத்தில் சிவ - விஷ்ணு சன்னதிகள் இருந்தால் மேற்கூறிய எல்லாவற்றையும் நடத்துவது பொருத்தமாக இருக்கும். சிவாலயத்தில் நடைபெறும் கலை விழாவில் சிவ சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவது பொருத்தம்.

மயிலாப்பூர் கபாலீச்வரர் கோயிலில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெறும் கலை விழாவில் முதல் நாள் (18.4.2014) அன்று, வெங்கடாத்திரி வைபவம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. "மயிலையே கயிலை கயிலையே மயிலை " என்று சொல்லிக்கொண்டு இவ்விதம் பொருத்தமற்ற நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. கயிலையில் வெங்கடாத்திரி வைபவம் நடைபெறுகிறதா? இல்லையே! அதனைப் பார்த்தசாரதி திருக்கோயிலில் நடத்தினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! விழாக்குழுவினர் யோசிக்க வேண்டும். நிகழ்ச்சியின் மீதோ, அமைப்பாளர்கள் மீதோ அல்லது ஆலய நிர்வாகத்தின் மீதோ நமக்குச் சற்றும் காழ்ப்பு உணர்ச்சி இல்லை. இருக்கப்போவதும் இல்லை. செய்வதைத் திருந்தச் செய்யலாம் என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத நேர்ந்தது. குறை கூறும் எண்ணம் அறவே இல்லை.இதனைச் செயல் படுத்த வேண்டியவர்கள் ஆடல் பயிலும் மாணாக்கர்களே . ஆடற் கலைக்கே அதிபதியான சபாபதியை முன்னிட்டு மயிலையில் நடனம் நடைபெற்றால் அதுவே கயிலையாகப் பரிணமிக்கும் என்பதில் ஐயம் இல்லை.   

4 comments:

  1. Is the temple just a venue or the patron of the event?

    ReplyDelete
  2. It should not be either a venue or patron of such events.

    ReplyDelete
  3. As a venue, Tempe is earning money. So they don't bother about principles and interests but principle and interest

    ReplyDelete