Tuesday, March 18, 2014

மங்கையர் திலகம்

                                                                                                      Pic courtesy: Shaivam.org
பெண் என்றாலே கருணையின் வடிவம் என்றும் உயர்ந்த குணங்களின் இருப்பிடம் என்றும் ஆன்றோர் கருதினர். ஒரு உருவமோ,ஒரு நாமமோ இல்லாத பரம்பொருளை ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் இரண்டும் கலந்த அர்த்த நாரீச வடிவிலும் வழிபடுகிறோம். பாலை மட்டுமல்ல. நல்ல குணங்களையும் புகட்டும் குணவதியாகவும் தாய் கருதப்படுகிறாள். அத்தாயை விடச் சிறந்த தயாபரன் இறைவன் ஒருவனே.  தாய் அன்புக்காக ஏங்குபவர்க்கு அவன் ஒருவனே தாயும் ஆக முடியும். திருச்சிராப்பள்ளியிலும் வட குரங்காடுதுறையிலும் இறைவனே பிரசவ காலத்தில் உதவியதை இது காட்டுகிறது.

 இப்படி அகில உலகங்களுக்கும் தாயான ஈசனே தனது திருவாயால் " அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்கால் அம்மையார். கணவனே தன்னை வணங்கிய பிறகு மானுட உடலைத் துறந்து பேய் வடிவம் வேண்டிப்பெற்ற புனிதவதி அவர். அறுபத்துமூவர் திருவுருவங்களுள் அம்மையார் ஒருவர் மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படுவார். அதேபோல், திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்துச்  சைவம்  தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியும் பெருமை மிக்கவர். " எங்கள்  தெய்வம்" என்று சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டவர்.

இவ்வளவு வானளாவிய புகழ் வாய்ந்த மங்கையர் குலத்தின் தற்போதைய நிலை என்ன? பெண் உரிமை , பெண் சுதந்திரம், ஆட்சியில் ஒதுக்கீடு, என்றெல்லாம் குரல்கள் ஒலித்தும் உண்மையில்    பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லையே! அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வணங்கப்படவேண்டிய பெண்மை இப்படி விபரீதங்களைச் சந்திக்க வேண்டியதற்குப்  பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எப்போது நமது வாழ்க்கை முறையில் நமக்கு ஒத்துவராத மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோமோ அப்பொழுதிலிருந்தே  இதுபோன்ற விளைவுகளைச்  சந்திக்க ஆரம்பித்து விட்டோம்.

உயர் கல்வியும்,வேலை வாய்ப்புக்களும் பெண்களுக்கு விளைவித்துள்ள நன் மைகளைவிடத் தீமைகளே  அதிகம் என்கின்றனர். பெற்றோர் பலர்  தமது பெண்கள் அடங்காமல் போய்விட்டதாகப் புலம்புகின்றனர். தற்காலச் சூழலில் சிக்காமல் பெண்களை வளர்க்காது  விட்டதன் பலன் இது என்றும் கருதுகிறார்கள். முன்பு திரைப்படத்தோடு நின்றது இப்போது வீடு தேடி வந்து விட்டது. மதியம் குறைந்தது நான்கு மணி நேரமாவது தாய்மார்கள் மெகா சீரியல்கள் பார்க்கிறார்கள். இரவு குடும்பத்தோடு நள்ளிரவு வரை பார்த்துவிட்டுக் காலை ஏழு மணி வரை தூங்குவது அதை விடக் கொடுமை. அத்தனை தொடர்களிலும் காட்டப்படுவது ஓயாத அழுகையும்,பழி வாங்குவதும் எழுதவே கை கூசும் சதித் திட்டங்களுமே . தான் விரும்பிய ஒருவனை மணக்கமுடியாமல் பெற்றோரின் நிர்பந்தத்திற்காக வேறொருவனை மணந்த ஒரு பெண் , தன்னை சந்திக்க வந்த தனது தந்தையிடம் என்ன பேசுகிறாள் தெரியுமா? " உனக்கு அறிவு இருக்கா?  உன்னை வெட்டி போட்டுடுவேன். கோவில் என்று கூட பார்க்க மாட்டேன். உன்னை நாற  அடிச்சுடுவேன்"  என்பன அவள் கக்கிய விஷ  வார்த்தைகளில் சில. வசனம் எழுதுபவர்கள் தங்களது பேனாவை விஷத்தில் தோய்த்து எழுதுகிறார்கள் போல் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம், பணம் ,... பெண் குழந்தைகள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?  விளம்பரம் தந்து ஆதரிக்கும் பொறுப்பற்ற கம்பெனிகள் நம் நாட்டில் ஏராளம். மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் விளம்பரங்கள் வந்து குவிகின்றன. இதற்கு சென்சார் இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப் போகிறது?

ஆனால் அடிப்படைக் காரணம் பெண்களிடமே இருக்கும்போது அடுத்தவர்களைக் குறை கூறி என்ன பயன்?  எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று பெண்கள் கிளம்பிவிட்ட போது யாரை நொந்து கொள்வது?  இப்படியாவது சம்பாதிக்க வேண்டுமா? தாங்கள் அழிவதோடு மற்ற இளம் குழந்தைகளையும் அல்லவா இந்த அற்ப வலையில் விழச் செய்கிறார்கள்! இந்த மாயையில் முதியவர்கள் கூட மயங்கி விடுகிறார்களே ! செல்போனும் டிவி யும் செய்துள்ள நன்மைகளை விட அநியாயங்களே மிக மிக அதிகம். கண்ட கண்ட பாடல்களைப் பதிவு செய்துகொண்டு ஓடும் பஸ்ஸில் பெண்கள் மத்தியில் அவற்றை அலற விடும் மாணவர்களை சக பிரயாணிகளோ , நடத்துனரோ தட்டிக் கேட்பதில்லை. அக்கிரமத்திற்கு எல்லை இல்லாமல் போய் விட்டது. பத்திரிகைகளும் இவற்றை அரங்கேற்றம் செய்கின்றன. எப்படியாவது பத்திரிக்கை விற்றால் போதும்.

தாய்க்குலம் என்று வாயளவில் பேசினால் போதாது. அக்குலம் எப்படிச் சித்தரிக்கப்படுகிறது என்று தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது என்? இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டியது என்ன என்பதை சிந்திப்போம். தனது குலப்பழக்க வழக்கங்களைக் கற்று அவற்றைப் பின்பற்றுதல்,   இளமையில் இருந்தே தெய்வபக்தியோடு இருத்தல் , தீய சக்திகளைப் புறக்கணித்தல் போன்ற நற்குணங்களோடு திகழ வேண்டும். சத்ரபதி சிவாஜியின் தாயாரைப் போல் நல்ல மகனை நாட்டுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் தேசத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இல்லா விட்டால் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை ஆகிவிடும்.

காரைக்கால் அம்மையாரை நினைத்தவுடன் நம் மனம் புனிதமடைவதை அனுபவத்தால் அறியலாம். பங்குனி சுவாதியன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் நடைபெறும் வழிபாட்டின்போது, அம்மங்கையர்  திலகத்தின் அருளால் நம் பெண் குழந்தைகள் எல்லாப் பேறும் பெற்றுப் பெரு   வாழ்வு வாழ வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்போம். புனிதவதியார் அருளால் பெண்மணிகள் மேலும்  புனிதமாகிப் பிரகாசிக்கட்டும்.

1 comment:

  1. செல்போனும், டிவியும் செய்துள்ள நன்மைகளை விட தீமைகள் மிக அதிகம்தான். தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருவதும் மிகவும் வேதனைக்குறிய ஒன்று. காரைக்கால் அம்மையாரை நினைக்க நம் மனம் இந்த வேதனைகளிலிருந்து சிறிது விடுபடுவதும் இறைவனுக்கு நம் மீதுள்ள கருணைதான் என்று நினைக்க தோன்றுகிறது..உங்கள் எழுத்துக்களும் அவற்றை சுட்டிக்காட்டி எங்களை நல்வழிபடுத்துவதால் அதுவும் இறைவனின் கருணைகளின் ஒன்றான " தீமைகள் குறித்த எச்சரிக்கை" என்றே நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete