Friday, October 31, 2014

" முன்னவனே , முன் நின்று அருள் "


ஆலயத் திருப்பணி செய்பவர்களை " திருப்பணிச் செல்வர் " என்றும்    திருப்பணிச் சக்கரவர்த்தி " என்றும் தற்காலத்தில் பட்டங்கள்  தந்து கௌரவிக்கிறார்கள்.  உண்மையில் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே செல்வந்தர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அளவில் இதனைச் செய்த மன்னர்களுக்கும், அண்மைக்காலத்தில் திருப்பணிகள் பல செய்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் கிடைக்காத கெளரவம் இது. காளஹஸ்தி கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரையும் திருப்பணிச் செட்டியார் என்றுதான் அழைத்தார்கள். இதுவோ  பட்ட மழை பொழியும் காலம்!.

உண்மையில்,இந்தப் பட்டங்களுக்கெல்லாம் சொந்தக்காரன் யார்  தெரியுமா? பரமேச்வரன் தான். அவன்தான் " செல்வன்"  " சக்கரவர்த்தி " என்ற  புகழுக்கெல்லாம் உரியவன். திருஞான சம்பந்தரும் , " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்றார். கையில்  செல்வமே இல்லாத அடியார்  ஒருவர்  வீதிதோறும் கையில் பாத்திரம் ஏந்தியவராக, " சிவ தர்மம் " என்று அறைகூவி, அதனால் கிடைத்ததைக்கொண்டு கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலைத் திருப்பணி செய்தார்.  கண் இரண்டும் இல்லாத தண்டியடிகள் நாயனார், திருவாரூர் கமலாலயத்தில் கயிறைப் பிடித்தவாறு  மெதுவாக இறங்கிக் கைகளால் மணலை  வாரிக் கரையில் சேர்க்கும் தூர்வாரும் தொண்டினைச் செய்து வந்தார். நமிநந்தி அடிகள் நாயனாரோ, அக்குளத்து நீரால் தியாகேசப் பெருமானுக்குத் தீபம் ஏற்றினார். திருக்குளத்தின் மகிமையும், அதில் திருப்பணி செய்த அருளாளர்களின் பெருமையும் அளவிடற்கரியது.

திருவாரூரில் " கோவில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி  " என்பார்கள். அத்திருக் குளத்தைக் கமலாலயம் என்பார்கள். சோழர் காலத்தில் அது "தீர்த்தக் குளம் என்று அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் முதலிய விசேஷ நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதும் இங்குதான். இதில்  64 புனித கட்டங்கள் இருப்பதாகக் கூறுவர். திருவாரூர்த் திருக் கோயிலையே  கமலாலயம் என்று கூறுவதும் உண்டு. வன்மீக நாதர் சன்னதிக்குப் பின்புறம் மகாலக்ஷ்மியின் சன்னதி உள்ளது. திருமகள் பூஜித்ததால் திருவாரூர், கமலாபுரம், ஸ்ரீ புரம் ,   கமலா நகரம்,ஸ்ரீ நகரம் என்றெல்லாம் போற்றப்படுவது இந்த ஊர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விட்டது. பெரிய மனிதர்கள் வரை எல்லோரும் பார்த்தும் அதனைச் சரி செய்ய வில்லை. சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றின் இன்னொரு பகுதியும் இடிந்து விட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராததாலோ என்னவோ, அரசின் இந்து சமய அறநிலையத்துறையே முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டெண்டர் விவரம் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது. மேற்குப் புறம் உள்ள சுவற்றைத் திரும்பக் கட்ட உத்தேச மதிப்பீடு ரூ 7644018 என்று வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையில் கும்பாபிஷேகமே செய்து விடலாமே என்று கேட்கத்தான் செய்வர். உயரம் குறைவாக உள்ள அச் சுவருக்கு இவ்வளவு ஆகுமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படியே ஆனாலும், வேலையின் தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. இப்படி ஒப்பந்தம் செய்து விடப்பட்ட வேலைகளின் தரத்தைத் தான் அற நிலையத்துறைக் கோயில்களில் பார்க்கிறோமே!

கட்டுமானப் பொருள்களை அறநிலையத் துறை வழங்கி, உபயதாரர்கள் , கட்டும் பணியைத் தகுந்த ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் வேலையின் தரம் நிச்சயம் நன்றாக இருக்கும். ஒதுக்கப்பட்ட தொகை தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா என்று நினைக்கக் கூடும். நம்மில் எத்தனை பேர்  இது பற்றிக் கவலைப் படுகிறோம்?   ஏதாவது,யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தானே கண்ணை மூடிக்கொண்டு செயலற்று இருக்கிறோம்!

ஆயிரம் வேலி நிலங்களைக் கொண்டது எனப்படும் இப்பெருங் கோயில் இப்படி உரிய வருவாய் இன்றி அரசையும், உபயதாரர்களையும் நம்பும்படி ஆகிவிட்டது  கொடுமையிலும் கொடுமை. குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்றில் கோயில் நிலத்திலிருந்து நெல் தவறாமல் வழங்க ஏற்படுத்திய சாசனத்தைப் படித்தால், அந்த வருமானம் இக்காலத்தில் இருந்தால் தியாகேசனது கோயில் திருப்பணிக்கோ, தேர் திருப்பணிக்கோ, திருக்குளத் திருப்பணிக்கோ , திரு விழாக்கள் நடத்துவதற்கோ , கும்பாபிஷேகம் செய்யவோ யார் தயவும் வேண்டியதில்லை தானே !

தில்லையைப்போல் திருவாரூரிலும் அறநிலையத் துறை ஒதுங்கிக் கொண்டு இறை அன்பர்களால் ஆலய நிர்வாகம் நடைபெற்று முறைப்படி வருவாய் வசூலிக்கப்பெற்றால் இது சாத்தியமே ! நடக்குமா என்று கேட்கலாம்.    "முன்னவனே முன் நின்றால்  முடியாத பொருள்  உளதோ " என்றபடி வீதி விடங்கப் பெருமான் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். அதற்கு நாம் உரியவர்களாவதுதான் முக்கியம். " முன்னவனே,  முன் நின்று அருள் என்று எல்லோருமாக வேண்டினால் தியாகேசன் நிச்சயம் செவி சாய்த்து அருளுவான்.   

Tuesday, October 21, 2014

" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே "

அனைவருக்கும் இன்ப மயமான தீபாவளி வாழ்த்துக்கள், அதென்ன " இன்ப மயமான தீபாவளி " என்று கேட்கலாம். உலகில் அனைவரும் இன்பத்தை மட்டுமே விரும்புவர். " இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று திருமுறையில் சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக்காட்டுவர்.. யாருக்கு எந்நாளும் இன்பமே வரும்  என்று யோசித்தால், திருமுறையிலிருந்தே விடை கிடைப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.. மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்க வேண்டும்:
 " பெருந்துறைப் பெருமான்,  உன் நாமங்கள் பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது உடைத்து ? என்பது திருவாசகம். அதாவது இறைவனை பக்தி செய்து, அவனது நாமங்களையே எப்போதும் இடைவிடாமல்  பேசுபவர்களுக்கு  ( " சிவாய நம  என்று இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று ஔவையார் சொன்னபடி) ஒவ்வொரு நாளும் இன்ப மயம் தான். அப்படிப்பட்ட பக்குவவான்களுக்குத் துன்பத்தையும் இன்பமாகவே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு எந்த வித அச்சமோ, பாவமோ, நோயோ  அண்டாது. இதைதான் சம்பந்தரும்,  "அச்சம் இலர்  பாவம் இலர் கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு நோயும் இலர் " என்று அருளினார்.  ஒருக்கால் வினைப்பயன் காரணமாக நோய் வந்தாலும் அவர்கள் இறைவனது நாமங்களையே உச்சரிப்பர். இதனை ,   " நோயுளார்  வாய் உளன் " என்றார்  ஞான சம்பந்தர் .

ஆனந்த மயமான தீபாவளிப் பண்டிகையன்று  எத்தனையோ  பேர்  அம்மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போகிறது என்பதனையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பண்டிகை தினத்தன்று ஆஸ்பத்திரிகளில் நோய்வாய் பட்டுக் கிடப்போர்  , பண்டிகைச்  செலவுகளுக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல் கவலைப் படுவோர், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்போர் , உறவினர்  எவரேனும் ஓர் ஆண்டுக்குள் உயிர் நீத்திருந்தால் பண்டிகை இல்லாமல் போகும் நிலை என்று இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்நன்னாளில் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது.  அவர்களும் இனி வரும் ஆண்டுகளில் ஏனையோருடன் மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிவபெருமானுக்கு உகந்த சதுத்தசி தின இரவில் உதயத்திற்குச் சற்று முன்பாக இதனைக் கொண்டாடி அவனருளைப் பெறுகிறோம். இறைவன் ஒளி மயமானவன் . ஒளி வடிவானவன். ஒளிக்கு ஒளி தருபவன். சூரியன்,சந்திரன் ,அக்னி ஆகிய மூன்றும் அவனது திருக் கண்கள். எனவே உலகுக்கு ஒரு சுடராய் நிற்கும் அப்பெருமானை தீப ஒளியில் வழி  படுவது மிகவும் பொருத்தம் தானே!  " சோதியே,சுடரே,சூழொளி விளக்கே" என்றும், " ஒளி வளர் விளக்கே " என்றும் ,        " கற்பனை கடந்த சோதி" என்றும் திருமுறைகள் அவனது பெருமையைப் பேசுகின்றன.

கல்விக்கூடங்களில் புன்சென் பர்னர் (Bunsen Burner) என்பதைக் கொண்டு பொருள்களைச் சூடேற்றுவதைப் பலரும் கண்டிருப்பர். அதனை ஒரு நிலைக்குக் கொண்டு வரும் போது, நீல நிறத்தோடு சுடர் எரிவதைக் காணலாம். அதை விட முக்கியம், அச்சுடருக்குள் மற்றொரு சுடரும் தெரிவதைக் காண முடியும். "சோதியுட் சோதி" என்று பரமேச்வரனைத் திருவிசைப்பா வருணிப்பது அப்போது நினைவுக்கு வர வேண்டும். அவனோ சுயம் பிரகாசனாகத் திகழ்பவன்.

ஆகவே, தீப ஒளியைக் காணும் போதெல்லாம், ஒளிக்குக் காரணனாக விளங்கும் சிவனது கருணையை நன்றியுடன் தியானிக்க வேண்டும்.  "தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே, திருவையாறு அகலாத செம்பொற்   சோதி"  என்று அப்பர்  பெருமான் கூறுவதும் இதன் காரணமாகத் தான்.
  சிவசன்னதியில் விளக்கிட்டால் ஞானம் உண்டாகும் என்று தேவாரம் உணர்த்துகிறது. அரச பதவியும் கிடைக்கும் என்று வேதாரண்யத் தல  புராணமும்   கூறுகிறது. வேதாரண்யம் சிவாலயத்தில் தீபத்து நெய்யை ஒரு எலி உண்ண  வந்தபோது, அதன் மூக்கு,  தீபச் சுடரில் பட்டுவிடவே, அதற்குச் சுட்டுவிட்டது. அதனால், மூக்கைப் பின்னுக்கு அது இழுத்துக் கொண்டபோது, தீபத் திரியும் சிறிது வெளிவர, அத்தீபம் முன்பைவிட அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வேதாரண்யப்பெருமான் அந்த எலி, தீபத்தைத் தூண்டிவிட்டதாகக் கொண்டு, அதனை அடுத்த பிறவியில் மகாபலி என்ற அரசனாக்கினார். இதனால், சிவசன்னதியில் விளக்கேற்றுவதன் சிறப்பை அறியமுடிகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்பார்கள். நாம் அங்கு சென்று அந்த அழகைக் கண் குளிரத்  தரிசிக்க வேண்டாமா?

தீபாவளித் திருநாளன்று நம் இல்லங்களிலும், அருகிலுள்ள சிவாலயத்திலும் அகல் விளக்கினை ஏற்றுவோம். வினைகள் அகல வேண்டுவோம்.  விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்ற நிலை இனிமேல் ஒரு கோவிலில் கூட நிகழக் கூடாது. இதனை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்கலாம். எல்லாவற்றையும் நம் சுகத்திற்காகவே அமைத்துத் தந்த இறைவனுக்குப் பிரதியாக இதைக் கூட செய்யக் கூடாதா? 

Thursday, October 2, 2014

ஆலயத் தூய்மை

நியமம்  என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் நம்மை வகுத்துக் கொள்வது எனலாம். ஒரு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பின்னர் விட்டுவிடுவதை எப்படி நியமம் என்று சொல்ல முடியும்? சண்டேச நாயனார் அருகிலுள்ள மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவி, சிவபூஜையில் தூய பசும் பாலால் அபிஷேகித்து வருவதைத் தினமும் பின்பற்றிவந்ததாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மார்க்கண்டேயரது சிவபூஜையும் அப்படித்தான்.            ' நித்தலும் நியமம் செய்து " என்று அதனைச் சிறப்பிப்பார் அப்பர் பெருமான். நியமங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆகார நியமம்,ஆசார நியமம் என்று இப்படிப்பட்டவை நம்மை ஒழுங்குபடுத்தவே ஏற்பட்டுள்ளன. அகத் தூய்மை, புறத் தூய்மை என்பார்களே, அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை /அனுபவித்ததை இப்பொழுது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சரஸ்வதியின் படம் மாட்டியிருப்பார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்தியும், தூய வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்தும் ,தூய வெண்ணிற அன்னம் அருகிருக்க,  தூய நீரோடையின் அருகில் தேவியானவள் ,புத்தகத்தையும், மாசில் வீணையையும் ஏந்திய அருட்கோலம் அது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளே தூய்மையின் வடிவமாகவும் தூய்மையின் இருப்பிடமாகவும் காட்சி அளிப்பது போல் தோன்றியது. நம்மை அறியாமலே, அத் தூய்மைக்குத் தலை வணங்கத் தோன்றியது.அதன் பலன் தானோ என்னவோ திடீரென்று ஒருநாள் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குவந்து அவ்வகுப்பிலேயே தூய்மையாக உடை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருபவன் என்று அறிவித்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றது இன்னமும் பசுமையான நினைவாகவும் சரஸ்வதி தேவியின் கருணையாகவும் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.  இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று நாட்டையே தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ்வாறு  பழைய நினைவைத் திரும்பிப்பார்க்க நேரிட்டது.

சுத்தம்,சுகாதாரம் என்று பள்ளிக்கூடங்களில் சொல்லிப்பார்த்தோம். சுத்தம் சோறு போடும் என்று எழுதியும் வைத்தோம். கண்ட இடங்களில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கண்டித்தும் பார்த்தோம். தெருக்களைக் குப்பைக்கூடங்களாக்குவதையும் , ஆறுகளை மாசுபடுத்துவதையும் தவிக்கவேண்டும் என்று ஆண்டு தோறும் கத்தியும் பார்க்கிறோம். கடற் கரை  மணல் களங்கப் படுத்தப்படுகிறது. கண்டு கொள்வாரைக் காணோம்! தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது? எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்? ஒருவேளை அசுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ?

மனத்தூய்மையே இல்லாதபோது புறத் தூய்மை எங்கிருந்து வரும்? தெய்வம் குடிகொள்ளும்  கோயிலுக்கு   உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம்?  இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது.  வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச்  சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை! கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல  கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால்   அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு   மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூடம் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா? எனவே , கோயில்கள் அமைதிக் கூடங்களாக விளங்கத் தூய்மைதான் முதல் படி. இதை மக்களும், நிர்வாகிகளும் உணருவது எப்போது?     

Monday, September 29, 2014

மூலவர் தனி நபரா ?

இவர் தனி நபரா ?
ஒரு கால கட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்த கோயில்கள் பலவற்றின் தல வரலாற்றுப் புத்தகங்களில், அந்த ஆலயங்களின் சொத்து விவரமும் ஆண்டு வருமானமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது அவ்விவரம் தரப்படுவதில்லை. அண்மையில் சில ஆலயங்களின் முழு விவரங்களை  வலைத்தளத்தில் தரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பூர்த்தி அடையப் பல்லாண்டுகள் காக்க வேண்டியிருக்கும்.

சமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது ? இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.

கிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர்? அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள்? எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள்? அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா? அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை? வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு  நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத்  தான்  எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ ? இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா ? . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது?

சொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: "கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர்  சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை  அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். "  சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்:  " செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் .  இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் ."  இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.  

Friday, September 12, 2014

சிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்?

                                                                                                        படம்: நன்றி,தினமலர்
ஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே  முன்பும்  சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன.  இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு  காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான  ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 இனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள்? ஒவ்வொரு ஆலயமும் தகுந்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.

களவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ  அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா? கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர்? இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.

உற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில்  பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.

அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில்  சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா?

நிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் "கடத்தல் மன்னன் " என்ற பட்டம் தந்து  "கௌரவிக்கிறார்கள்" இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

Friday, August 29, 2014

எளிய கடவுள்

விநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.

பிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.
மிக எளிமையாகச்  செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.

மண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால்  ஐந்து ரூபாய்க்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை  இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள்.  குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.

இத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை! செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று  காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது!
கையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக்  கேட்பவர்களுக்குப்  பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்?

எனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய  கலாச்சாரத்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத்  தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.  

Tuesday, August 26, 2014

திருச்செந்தூரில் நடந்த அட்டூழியம்

திருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர்  இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி  தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.

தெய்வமே! உன் கோயிலிலா இப்படி??
கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை  ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு  அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்களின்  மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா? தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா? அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது,  தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான்  முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.