Thursday, November 5, 2015

இயலும் இசையும்

மயிலாடுதுறை கடைமுகத்தில் நாதஸ்வர வித்துவான்கள் 
புகழ் ஏணியின் உச்சியில் ஏறிவிட்டால் எதை வேண்டுமானாலும் மக்களிடம் பேசலாம் என்னும் காலம் இது. அப்படி இருக்கும்போது,தான் மேலே ஏறிவந்த படிகளை மிகச் சிலரே திரும்பிப் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பணிவோடு பேசுபவர்கள் பெறும்  மதிப்பைக் காட்டிலும் வித்தியாசமான அணுகுமுறை என்று கூறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களே பத்திரிகைகள் மூலமும் தொலைக் காட்சி மூலமும் அதிக வரவேற்பையும் மதிப்பையும்  பெறுகிறார்கள் !

இசைக்கு ஆதாரமாக விளங்குவது இயல். அதுவும் பக்தி பாவத்தோடு இசைக்கப்படும் போது மேலும் மெருகூட்டப்படுகிறது.   ஒரு முன்னணி     கர்நாடக சங்கீதக்காரர்  ஒரு தினசரிக்கு சமீபத்தில் தந்துள்ள  பேட்டியில் இசைதான் பிரதானம் என்றும் பக்தி , சாகித்தியம் ஆகியவை அடுத்தபடிதான் என்றும் சொல்லியிருக்கிறார். இவர் பாடும் பாடல்கள் பக்தியோடு பாடப்பெற்றவை . பணத்திற்காகப் பாடப் பெறாதவை. அழியா வரம் பெற்றவை. ஒரே பாடலைத் திரும்பத்திரும்ப எத்தனை பேர் எத்தனை முறை பாடினாலும் அலுப்பைத் தராதவை. வாய்ப்  பாட்டின் மூலம்   பக்தியைக்  கேட்பவருக்கு ஊட்டக் கூடியவை. அவற்றோடு இசையும் சேரும்போது  கேட்போரைப் பரவசப் படுத்துபவை. இவர் சொல்லும் இக்காலப் பாடல்களுக்கு  இந்தப் பெருமைகள் உண்டா? அவை தற்காலிகமாகக் கேட்போரை  லயிக்க வைப்பது உண்மைதான். ஒரு  கால கட்டத்திற்குமேல் அவை தாமாகவே மக்களிடமிருந்து விலகிக் கொள்ளக் கூடியவை என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு கருத்துக் கூற மாட்டார்கள்.

எல்லா இசையும் இசை ஆகி விட முடியாது. தற்காலிகமாக மக்களைத் தன்  பக்கம் ஈர்க்கும் இசையையும், காலம் காலமாக நிலைத்து நின்று மக்களை இறை உணர்வு ஊட்டி நல்வழிப் படுத்தும் இசையையும் ஒன்றாகவே கருதுவதால் ஏற்பட்ட குழப்பம் இது. " நல்லிசையாளன்  புல்லிசை கேளா நற்றமிழ் ஞான சம்பந்தன் " என்று  தேவாரம் கூறுகிறது. நல்லிசையும் புல்லிசையும் வேறு வேறு என்று இப்பொழுதாவது உணருவார்களாக.
படித்ததெல்லாம் / கற்றுக்கொண்டதெல்லாம்  பக்திப் பனுவல்கள். ஆனால் வெளியிலோ  இறை நம்பிக்கை தனக்கு  இல்லை என்று கூறிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அப்படியானால் பணம் சம்பாதிப்பதற்காகப் போடும் வேஷம் என்று கருதலாமா? என்னவோ இவர்கள் இல்லாவிட்டால் கர்நாடக இசை குடிமுழுகிப் போய் விடுவதுபோல அறிக்கை விடுவதும் , மக்களும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கொடுமையிலும் கொடுமை. சபாக்காரர்களும் ரசிகர்களும் தன்  காலில் வந்து விழவேண்டும் என்ற இறுமாப்பில் பேசுவதாகத்தானே அர்த்தம்? கொஞ்சம் நாள் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைத்தால்   தானாகவே  திருந்தி விடுவர். ஆனால் அது நடக்கக் கூடியதா? இவர்களைத்தான்  அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் உட்பட எல்லோரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்களே!

தன்னால் ஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகத்தை யாழில் இசைக்க முடியவில்லை என்றவுடன் அந்த யாழையே முறிக்கச் சென்றார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவ்வாறு இசைக்குள் அடங்காதது தெய்வப் பனுவலாகிய இயல் என்பதைக் காட்டி அருளியவர் ஞானசம்பந்தர்.  இசை ஒன்றே போதும் என்பவர்கள் வெறும் ஆலாபனை செய்து கொண்டு இருக்க வேண்டியது தானே! இயல்,இசை இரண்டும் இறைவனின் கொடைகள். இரண்டும் இணைந்து பக்தி உணர்வோடு இசைப்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. கொட்டும் மழையிலும் பக்தியோடு சுவாமி புறப்பாட்டில் மல்லாரி வாசிக்கும் நாதஸ்வர வித்துவான்கள் எங்கே, இவர்கள் எங்கே!  உள்ளம் உருகி ,சொற்ப வருமானம் இருந்தபோதும் இறைவனது சன்னதியில் பக்திப் பாடல்களைப் பாடும் ஒதுவா மூர்த்திகள் எங்கே,இவர்கள் எங்கே!

எனது வழி  தனி வழி என்று பேசுபவர்களை ஒருக் காலும் திருத்த முடியாது. கருத்து சுதந்திரம் அவர்களுக்குத் துணை நிற்கும். அக்கருத்துக்களைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் பிறருக்கும் திணித்து அவர்களைத்  திசை மாறச் செய்வதைச் சுட்டிக் காட்டாமல் இருக்கலாமா?  

1 comment:

  1. மிகவும் அருமை! நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. "பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே" என்பதை அந்த முன்னணி கர்நாடக சங்கீதக்காரர் அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சனம்.

    போகட்டும் கண்ணதாசனின் கீழ்காணும் பாடல்வரிகளையாவது அவரை ஒருமுறைக் கேட்கசொல்லுங்கள்.

    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
    (பாட்டும் நானே..)

    அசையும்..பொருளில்..இசையும் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    எதிலும் இயங்கும் இயக்கம் நானே
    என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
    ஆலவாயனொடு பாடவந்தவனின்
    பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும் நானே)

    ReplyDelete