Friday, January 25, 2013

கோயில்கள் புத்துயிர் பெற....


கோயில்களில் உண்டியல் மற்றும் பிற காணிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது அவை முறைப்படி செலவழைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை. கடந்த மூன்று மாதங்களில் முடிகாணிக்கை மூலமாக மட்டும் திருப்பதி கோயிலுக்கு   ரூ 29 கோடி வசூலாகியிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதேபோலத் திருத்தணி  , பழனி,மதுரை, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் மாதம் தோறும் பலலக்ஷங்களில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக விசேஷ நாட்களிலும், ஐயப்பன் சீசனிலும் இத்தொகை பல மடங்கு அதிகரிக்கிறது. வாகனங்களை வெளியில் நிறுத்துவதற்கு ரூ 50 வசூலிக்கப் படுவதாக ஒரு பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சாதாரண நாட்களில், அதிலும், சொல்லும்படியாக தரிசனத்திற்கு வருவோர் இல்லாத காலங்களிளும்கூட  வாகன நிறுத்தக் கட்டணம் ரூ 10 முதல் ரூ 25 வரை  வசூலிக்கப்படுகிறது. இலவசக் காலணி  பாதுகாக்கும் இடத்திலும் கையை நீட்டுகிறார்கள். சிறப்புத் தரிசனக் கட்டணம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இவ்வாறு அதிக வருமானம் வரும் கோயில்களிலிருந்து மட்டும் மாதம் பல கோடிகளைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியத் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது. நித்திய பூஜைகளும், திருவிழாக்களும்  அன்பர்கள் ஆதரவிலேயே நடைபெற்றுவிடுகிறது. பிரபல ஆலயங்களின் திருப்பணி, கும்ப்பாபிஷேகம் ஆகியவற்றையும் பக்தர்களே செய்துவிடும் போது, ஆலய துப்புரவு,சிப்பந்திகளின் சம்பளம் போன்றவற்றுக்கு மட்டுமே இக்கோவில்களுக்கு செலவு ஆகிறது. இப்பெரிய கோயில்களின் உபகோயில்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுவது உண்மை தான். அவை சிறு கோயில்களாக இருந்தால் வழங்கப்படும் தொகை சொற்பமே. திருப்பணிக்கு ஆகும் செலவில் சுமார் கால்பங்கு கூடத் தரப்படுவதில்லை.
இனி இதற்குத் தீர்வுதான் என்ன? சிதம்பரம் கோயில் இதற்கு வழிகாட்டியாக விளங்கியது. அதுவும் தற்போது அறநிலையத் துறையின் மேற்பார்வையில் வந்து விட்டது. உண்டியல் இல்லாமலேயே, நடராஜப் பெருமானுக்கு அன்பர்கள் ஆதரவுடன் தினப்படி பூசையும்,எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெற்று வந்தன. இப்போதோ உண்டியலைக் கொண்டுவந்து வருமானம் பார்க்கிறார்கள்!

சிந்தனைக்காக சில தீர்வுகள்:
* அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, நான்குபேர் கொண்ட ஒரு குழு மாநிலத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் கண்காணிக்க வேண்டும். இதில் ஒரு IAS அதிகாரியும், ஒரு மடாதிபதியும், ஒரு அனுபவம் மிக்கவரும் ஆன்மீகவாதியுமான தொழிலதிபரும், பிரபலமான இறைத் தொண்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும்.   இக்குழுவினது ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இதில் இடம்பெற்ற நபர்  சுழற்சி முறையில் மீண்டும் ஆறு ஆண்டுகள் கழித்தே வர முடியும். இக் குழு குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி ஆலோசனைகளும்,தீர்ப்புகளும் வழங்கி, அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

* பிரபலமான கோயில்கள் சுமார் இருபதின் கீழ் மாநிலக் கோயில்களின் நிர்வாகம் கொண்டுவரப்படுவதுடன் அவை தன்னாட்சிக் கோயில்களாக அறிவிக்கப்பட வேண்டும். இதனால், கிளைக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் தலைமைக் கோயிலையே சாரும். இத்தலைமைக் கோயில்களின் வருமானம் அரசுக்குச் செலுத்தப்படாமல், அந்தத்  தலைமைக் கோயில்களின் வங்கிக்  கணக்கிலேயே இருக்க வேண்டும். இதிலிருந்தே, தலைமைக் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் செலவுகள் ஏற்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தலைமைக் கோயிலுக்கும் நியமிக்கப்படும் அதிகாரி, அரசியல் தொடர்பு இல்லாத , சமய நம்பிக்கை உள்ள நபராக இருக்க வேண்டும்.

* தலைமை அதிகாரி, அக்கோயிலின் உபகோவில்களை மாதம் ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும்.

" ஒவ்வொரு தலைமைக் கோவிலின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

* தரிசனக் கட்டணம் முற்றிலுமாக நீக்கப் படவேண்டும்.

* பிற காணிக்கைக்கான   கட்டணங்கள்  ஏழைகளும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும்.

* வண்டிகள் நிறுத்த ரூ 5 வசூலித்தால் போதுமானது. அதை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது உயர்த்துவது, உயர் மட்டக் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது.

கீழ்க் கண்ட கோயில்களைத் தலைமைக் கோயில்களாக வருமான {அடிப்படையில்) அறிவிக்கலாம்:

திருத்தணி, சென்னை (கபாலீஸ்வரர் கோயில்), காஞ்சிபுரம்(வரதராஜர் கோயில்) , திருவண்ணாமலை, சமயபுரம், செட்டிகுளம்/கலியபெருமாள் கோயில், ஸ்ரீரங்கம்,சுவாமிமலை, மதுரை, பழனி, திருக்குற்றாலம்,திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களின் ஆலயங்கள் இவ்வாறு அந்த அந்த மண்டலங்களுக்கான தலைமைக் கோயில்களாக அமையக்கூடும்.

இந்த அமைப்பால், நிலங்களிளிருந்தும், கோயில் வீடுகளிலிருந்தும் வர வேண்டிய வருமானம் முறைப்படுத்த வகை செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பை அந்தந்த மண்டலத் தலைமை அதிகாரிகளே ஏற்கவேண்டும்.

* தலைமைக் கோயில்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கை, தணிக்கை செய்யப்பட்டபின் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட வேண்டும்.

* சிப்பந்திகளின் சம்பளம் முறைப்படுத்தவும், கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி எழுந்த சிந்தனைகள் சிலவே. சமயச் சான்றோர்கள் மற்றும் தக்கோர்கள் இன்னும் எத்தனையோ பரிந்துரைகள் வழங்குவர். இவற்றை எல்லாம் அரசு தயங்காமல் ஏற்க முன்வந்தால் நமது ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

3 comments:

  1. சிவாயநம,


    அய்யா, தங்களின் பரிந்துரை மிகவும் வரவேற்கதக்கது!

    எல்லாம் வல்ல சிவபெருமான் திருவருளால் அவை யாவும் நிறைவேற வேண்டும்!

    ReplyDelete
  2. அருமையான யோஜனைகள். அரசாங்கம் இதை கவனித்தால் மிஹவும் நல்லது.

    ReplyDelete
  3. every entrant of the temple should donate , atleast one rupee or two rupee to the temple hundi, which is quite affordable to every one. There is no compulsion, but they should be requested to give this small donation.
    A small drop is the big ocean.
    I am sure at least the collection in big temples will cross 30 thousand per day.
    PROF DR V NAGARAAJAN DSc.,DM
    NEUROLOGIST , MADURAI.

    ReplyDelete