Tuesday, January 31, 2012

மகாதேவன் சேவை மூலம் மக்கள் சேவை

                             இந்து சமயத்தின் பழமையையும் பெருமைகளையும் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் , மக்களுக்கு அது ஆற்றும் சேவைகளை  அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் நான்காவது ஆண்டாக, இம்முறை, சென்னையில் இந்து சமய ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி விமரிசையாக நடந்தது. 150 -க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர்  இதற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

பொருள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிக்கும் ஆன்மீகக் கண்காட்சிக்கும் உள்ள வேற்றுமை நன்றாகவே தெரிந்தது. இங்கு வந்தவர்களின் ஆன்மீக தாகம் நன்றாகவே வெளிப்பட்டது. என்னதான் வைத்திருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பவர்களை விட, தங்களுக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களே அதிகம் காணப்பட்டார்கள். சிலருக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்! ஒரு பெண்மணி ருத்ராக்ஷம் அணிவதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார். ' பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா; எவ்வளவு பெரிய அளவு வரை அணியலாம். தாலியோடு இணைத்து அணியலாமா; படுப்பதற்கு முன் கழற்றி வைத்து விட வேண்டுமா; ஒரிஜினல் ருத்ராக்ஷத்தை எப்படித் தெரிந்து கொள்வது; எத்தனை முகம் கொண்ட ருத்ராக்ஷம் அணியலாம் " இப்படி ஏராளமான கேள்விகள். இவ்வளவுக்கும் பதில் தெரிந்து கொண்ட பிறகு அவர்களாகவே முன்வந்து ருத்ராக்ஷம் வாங்கிச் சென்றபோது அவர்கள் முகத்தில் திருப்தி நிலவியது. ஒரு ஸ்டாலில் இலவசமாகவே ருத்ராக்ஷம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஓரிடத்தில் பழைய சிவாலயங்களில் திருப்பணி செய்ய வேண்டியது பற்றியும் ,மற்றொறு இடத்தில் அச்சிவாலயங்களில் தீபம் ஏற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். வேறொர் இடத்தில் ஒரு செடியின் இலையைக் கொண்டே தீபம் ஏற்ற முடியும் என்று சொல்லி, அச் செடியை விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில முக்கியப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வளவுக்கும் இடையில் www.shaivam.org அமைத்திருந்த அரங்கம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் சிவத்தொண்டு ஆற்றும் இணைய தளம் இது. 5000 த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அருமையாக வடிக்கப் பெற்றுள்ளன. மாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பற்றிய முழுத் தகவல்கள், பன்னிரு திருமுறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,புராணங்கள் ஆகியவற்றின் மூல பாடங்கள், தமிழிலும் வட மொழியிலும் உள்ள துதிப் பாடல்கள், பதிவு செய்யப்பட பாடல்கள், வீடியோ காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட 24 மணி நேர ரேடியோ -- இப்படிச்  சிவனருளை வாரி வழங்குகிறது இந்த இணைய தளம். இராப்பகலாக இதற்கு உழைப்பவர்கள் இக்கண்காட்சியில் அந்த இணைய  தள நிகழ்ச்சிகளையும் பதிவுகளையும் காட்டி அருமையாக விளக்கியது பாராட்டுக்குரியது. இதை மற்றவர்களும் வீட்டிலிருந்தே கண்டு பயன் பெறுவது ஒன்றே அவர்களுக்குச்  செய்யும் கைம்மாறு.

ஒரு பெண்மணி கண்ணீர் மல்கத் தனது குறையையும் வெளியிட்டார்: " எனக்கு 60 வயது ஆகிறது.குழந்தைகள் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள். நானோ கோயில்களில் தொண்டு செய்வதில் பெரிதும் ஆர்வம்  காட்டுபவள். இதைக் கண்டு என் குடும்பத்தோர் பரிகாசம் செய்கிறார்கள். எனக்குத் தேவாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தோர் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்வேன்" இப்படி அப்பெண்மணி புலம்பியது நெகிழ வைத்தது. உலகத்தவர்கள் தன்னைப் பித்தன் என்று எள்ளி நகையாடியது பற்றிக் கவலைப் படாத மாணிக்கவாசகர் தன் நெஞ்சில் இறைவனை  நீங்காமல் கண்டதுபோல் நமக்குப் பக்குவம் ஏற்படவில்லையே. இறைவா, நீயே இதற்குத் துணை செய்ய வேண்டும்.  

Saturday, January 14, 2012

என்றும் புதியது


வேதமே தர்மத்திற்கு மூலம் என்றும் அதை ரக்ஷித்தால், அது நம்மை ரக்ஷிக்கும் என்று சொல்லுவார்கள். ரக்ஷிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை நசிப்பதையும் , கேவலப் படுத்துவதையும் அல்லவா பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலும் திரை உலகம் இச் செயலைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தபோதிலும் கண்டிப்பவர்களைக் காணோம். அண்மையில் ஒரு திரைப் படத்தில் கதாநாயகனைக் காட்டும்போது புருஷ சூக்தம் ஒலிக்கப் படுவதாக ஒரு இணைய தளத்தில் வெளியான செய்தியை ஒரு பெண் சுட்டிக் காட்டியிருந்தார். பெண்ணாக இருந்தாலும் வேத தர்மத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை மற்றவர்களும் காட்டினால் நல்லது.

முன்பெல்லாம் கூடுமானவரையில் ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது கேட்பார் இல்லாமல் போனதால்  கோயில் வளாகத்துக்குள் ஆடல் (?) பாடல் (?) காட்சிகள் படமாக்கப் படுகின்றன. இவ்வளவு ஏன்? கோயில் மேல் தளக் கூரையில் இவற்றை எடுக்கிறார்கள். சின்னத்திரைக்காட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால், கோயிலுக்கு வரும் பக்தர்களை படப்  பிடிப்பு நடப்பதால் விரட்டி அடிப்பதே. இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும்  கோயில் நிர்வாகிகள் இந்தப் பாவத்திற்குத் துணை போகிறார்கள்.கும்பாபிஷேகம் செய்வது கோவிலைப் புனிதப் படுத்துவதற்கு என்று சொல்லிக்கொண்டு கூடவே இப்பாவங்களையும் அனுமதிப்பதால் அக்குடமுழுக்கு செய்தும் பலன் ஏதும் இருக்காது. கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? அதிலும் கேவலமான நடனங்களும், கோவிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத பாடல்களும் படமெடுக்கும் போ து நமது பண்பாடு எங்கே ஒளிந்து கொண்டது? தொட்டதற்கெல்லாம் நாகரிகம், பண்பாடு என்று முழங்குபவர்கள் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?   இது அடுத்தவர்களின் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகத்  தோன்றவில்லையா? மத நம்பிக்கையையும் சடங்குகளையும் இழிவு படுத்துவதை  சட்டம் எப்படித் தடுக்கப் போகிறது? இதற்கு நீதிமன்றங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

இன்னும் ஒரு மனித உரிமை செயலை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. போகி பண்டிகையின் போது ,பழையன போக்கலும் புதியன புகுத்தலும் என்று சொன்னாலும் சொன்னார்கள் , தற்போது அதை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்கள் , தங்கள் வீட்டிலுள்ள பழைய துணிமணிகளையும் வேண்டாத சாமான்களையும் விடியற்காலையில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தத் தீயில் , ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களும் அடங்கும். ஊரே புகைமண்டலம் ஆகி விடுகிறது.வெளியில் போனால் மூச்சு திணறுகிறது. மாசுக் கட்டுப் பாடு வாரியமும் ,காவல் துறையும் என்ன செய்வார்கள் ,பாவம்! ஊ த வேண்டுமே என்று சங்கை ஊ துகிறார்கள். இப்படி அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் நமது பண்பாடா? சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வெறும் குரல் கொடுத்தால் போதாது. இக்குரல் உதட்டளவில் நில்லாமல் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.

தற்கால நிலையைப் பார்க்கும் போது வேறு விதமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது. பழைய நல்ல பழக்க வழக்கங்களைப் போக்காமல், புதியன என்று சொல்லிக்கொண்டு நம் கலாசாரத்தைப் புதைக்கும் திரைப்படங்களையும்,சீரியல்களையும் , ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே இப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக ஆக்கும். தீய எண்ணங்களை எரிப்பதும் ,பழையதாகத் தோன்றினாலும் என்றும் புதியதாக நிற்கும் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, ஒளிவீசச் செய்வதுவே  நம்மைப் புனிதப்படுத்தும். குப்பைகளைக் கொளுத்தும் தீயாக போகிப் பண்டிகை நின்று விடக்கூடாது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விலைமதிக்கமுடியாத சிந்தனைகளைப் புடம் போட்டுப் பார்க்கும் ஞானத் தீயாக அது இருக்கட்டும்.வேதமும் வேள்வியும் ஆன ஞான பரமேச்வரன் இப்படிப்பட்ட ஞானத்தை நம் எல்லோருக்கும் வழங்கி அருள வேண்டும்.

Tuesday, January 10, 2012

"பத்திரிகை தர்மம்"


                               "தர்மம்" என்ற வார்த்தையைத்தான் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்!  " யுக தர்மம்" , "யுத்த தர்மம்" என்பதுபோலப் பத்திரிகைகாரர்களும் "பத்திரிகை தர்மம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்கள்.   இந்த "தர்மம்" அந்த பத்திரிகையை நடத்துபவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். சமூகத்திற்குப் பிடித்ததாகவோ,பயன் படுவதாகவோ இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. "சமூக நீதி" என்று ஒரு சொல் இருக்கிறதே தவிர, அதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். வாசகர்கள் எழுதும் கருத்துக்களோ,கட்டுரைகளோ இந்த "தர்மத்தை" ஒட்டியிருந்தால் ஒரு வேளை பிரசுரிக்கப் படலாம்.

   மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய  செய்திகள் எவை என்பதில் ஒரு காலத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மறந்தும் தீய எண்ணங்களை மக்கள் மனத்தில் ஊன்றி விடக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல் பட்டார்கள். சமூகத்தில் நடைபெறும் குற்றம்,குறைகளை  சுருக்கமாக வெளியிடுவார்களே தவிர , அதற்குக் கண்ணும் காதும் வைத்து எழுதமாட்டார்கள். இப்பொழுதோ, "உரத்த சிந்தனை" என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதித் தங்கள் கருத்துக்கு ஒத்து வெளிவரும் செய்தித்தாள்களிலும் , பத்திரிகைகளிலும் அச்சேற்றுகிறார்கள்.  இதற்குப் பெயர், "வித்தியாச சிந்தனை"யாம். "எதார்த்தமாம்.

    வித்தியாசமாக எழுதினால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள் என்பது தவறான கருத்து. நல்ல எழுத்துக்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய புத்தகங்களை இன்றும் எவ்வளவு பேர் விரும்பி வாங்குகின்றனர் என்பதைச்  சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். ஆன்மீகக் கட்டுரை எழுதினால் ,"சிலிர்ப்பூட்டும் அனுபவம்"   என்று எழுத வேண்டும் என்பதில்லை. உண்மையான பக்தனுக்கு அவை தாமாகவே சிலிர்ப்பூட்டுபவை அல்லவா?

   சுற்றி வளைத்துக் கடைசியில் விஷயத்திற்கு வருவோம். வழிபாட்டு முறைகளிலும் ,அவை நடைபெறும் கோயில்களிலும் மக்கள் கூட்டம் சேரும் போது ஆர்வத்தின் காரணமாகச் சில கருத்து வேறுபாடுகளும் ,தள்ளு - முள்ளுகளும் ஏற்படுவது இயற்கை. இவற்றையெல்லாம்  சம்பந்தப் பட்டவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர , பெரிதாக்கக் கூடாது. தாரை-தம்பட்டைகளை பூஜை நேரத்தில் பெரிதாக ஒரு கோஷ்டியினர்  சிதம்பரம்  நடராஜர் சன்னதியில் ஒலிக்கச் செய்ததாகவும் , தீட்சிதர்கள் அதற்கு ஆக்ஷேபித்ததாகவும் ,அதைத்  தொடர்ந்து "தள்ளு-முள்ளு " ஏற்பட்டதாகவும், ஜனவரி பத்தாம் தேதியிட்ட செய்தித் தாள்  வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தித்தாளின் "பத்திரிகை தர்மம்"தான் என்ன? இது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறார்களா? படிப்பவர்களுக்கு ,இப்படித் தடுத்துவிட்டர்களே என்ற அனுதாபமும் , தடுத்தவர்கள் மீது கோபமும் வர வேண்டும் என்பது நோக்கமா?  உண்மை, உண்மையாக இருக்கும் வரை உரைகல்லே தேவை இல்லை. இது  போன்ற சலசலப்புகள் எந்த மதத்தில் தான் இல்லை? அவை எல்லாம் வெளி வருகின்றனவா ?

பூஜை நேரத்தில் தில்லையில் ஒலிக்கப் படும் பெரிய மணியின் நாதமும் , நந்தி அருகில் அன்பர் பலர் ஒலிக்கும் சிறு சலங்கைகளின் ஒலியும் அந்த சூழலைச் சிவலோகம் என ஆக்கும் போது , மேன்மேலும்  ஒசைகள் தேவையா என்று யோசிப்பது நல்லது. இதனால் இசைக்குழு அன்பர்கள் மன வருத்தம் அடையாமல் பெரூமான் தேரில் வீதி வலம் வரும்போது தாரை -தம்பட்டை போன்ற வாத்தியங்களை வாசிக்கலாம். பக்தர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதுகூட, பாரம்பர்யமாக இறைவன் முன் வாசிக்கப் படும் நாதஸ்வர இசைக்குப் பங்கம் வராமல் ,சற்றுத் தொலைவில் இருந்து ஒலிக்கலாம்.

    சன்னதியில் பக்தி பரவசம் ஏற்படுவதற்கு அருகிலுள்ள சூழ்நிலையும் ஒரு காரணம். அவை நமது பக்தியை மேலும் வளர்க்கத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாக ஒரு போதும் அமைந்து விடக்கூடாது. இன்னிசை வீணையும் ,யாழும், வேத ஒலியும், தோத்திர  ஒலியும் , அன்பர்களை மெய்மறக்கச்செய்து இறைவனோடு ஒன்றாக்கும் அற்புதத்தைத் திருவாசகம் நமக்குக் காட்டுகிறது. ஆகவே, சைவ அன்பர்கள் தங்களால் இயன்ற சிவப் பணியை  பிற அன்பர்களும் விரும்பும் வகையில் ஆற்றி வந்தால் எந்த வேறுபாடுகளும் தோன்றாது. சூடான செய்திகளுக்குக் காத்திருக்கும் மீடியாக்களும் மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் செய்திகள் வெளியாவதைத் தவிர்த்து, ஒற்றுமைக்கு வித்திட வேண்டும்.  மக்கள் ஒற்றுமையும் நலனுமே தேச நலன் என்ற ஒரே தர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அதுவே உண்மையான " பத்திரிகை தர்மம் " ஆகும்.

Friday, December 23, 2011

கோயில் யானைகள்

யானையை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது என்பது என்னவோ உண்மை தான். பக்தர்கள் அதனை வினாயகராகவும் ,குழந்தைகள் அதை வியப்புடனும் பார்க்கின்றார்கள். பெரிய கோயில்களில் நுழைந்தவுடன் யானையைப் பார்த்துவிட்டுத்தான் சுவாமி தரிசனத்திற்குப் போகிறோம். அது நம் தலையைத் தொடும்போது ஏற்படும் அனுபவம் தனிதான். சிறு குழந்தைகளை அழ-அழ அதன் மத்தகத்தின் மீது ஏற்றி உட்கார வைத்துவிட்டுக் கீழே இறக்குவார்கள் பாகன்கள். கேரளத்தில் சுமார் ஐநூறு கோயில்களில் யானைகள் பராமரிக்கப் படுகின்றன என்கிறார்கள். தமிழகத்திலும் பெரிய தேவஸ்தானங்களில் யானைகள் இருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் யானைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் போருக்குச் செல்பனவாகவும் இருந்தன. அரசன் யானை மீதிருந்தே போரிட்டு மாண்டால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று சிறப்பிக்கப் படுகிறான். மேலும், எடையுள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் யானைகள் பயன் படுத்தப்பட்டன. காட்டில் வெட்டப் பட்ட மரங்களை நதிக்கரைக்கு இழுத்துச் செல்ல யானைகள் உபயோகிக்கப்பட்டன. யானைகளின் லக்ஷணங்கள், அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி நூல்களும் இயற்றப்பட்டன. கோயில்களுக்கென்று விடப்பட்ட யானைகள் அருகிலுள்ள நதியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரவும், திருவிழாக்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. சில ஆலயங்களில் கஜ பூஜைகள் நியமத்துடன் நடைபெற்றன.இன்னும் சொல்லப்போனால், குருவாயூர் ஆலயத்திலிருந்த கேசவன் என்ற யானையின் படம் பல வீடுகளில் பூஜை அறையை அலங்கரிக்கிறது.

தற்காலத்தில் கோயில் யானைகளின் நிலையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய பிராணியை நாட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. " யானையைக் கட்டித் தீனி போடுவது போல" என்றும், "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசுகிறோம். கோயில் யானைகள் வயிறார சாப்பிடுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆறுகளில் அமிழ்ந்து குளிக்க வேண்டிய யானைகளை கோயில் வளாகத்தில் குழாய் நீரால் குளிப்பாட்டுகிறார்கள். பிறகு கோயிலைச் சுற்றி ஒரு வலம். கொடிமரத்தடியில் நின்று சன்னதியை நோக்கி துதிக்கையால் வணக்கம் தெரிவித்து விட்டு மடப்பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறது. மூன்று நான்கு உருண்டைகளாக சாத உருண்டைகள் வாய்க்குள் திணிக்கப் படுகின்றன. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது, கொடிமரத்தருகில் போடப்பட்ட தென்னை மட்டையைத் தின்றபடியே, வருவோரிடம் பாகனுக்காக எடுக்கப்படும் பிச்சை. ஒரு காலையும் கனத்த இரும்புச் சங்கிலியால் கட்டிவிடுகிறார்கள். அப்படிக் கட்டப் படும் காலும் காலின் அடிப்புறமும் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

பழக்கப் படுத்தப்பட்ட யானைகளே சில சமயம் மிரளுவதும், மதம் வந்து ஓடுவதும் உண்டு. இந்தமாதிரி சமயங்களில் பல பாகன்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு யானை, பாகனை மிதித்துத் துதிக்கையால் வீசியெறிந்து கொன்றதாகச் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவும் நடந்தும். யானையின் அருகில் பலத்த வெடி சப்தமும்,வான வேடிக்கையும், செண்டா போன்ற வாத்தியங்களும் தொடர்ந்து முழங்குகின்றன. விழாக்காலங்களில் யானையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது யானை மிரண்டால், மக்களே ஒருவர்மேல் ஒருவர் மிதிபட்டு உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் படங்களோடு செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன(அவற்றில் ஒரு சில படங்களையே இப்பதிவில் காண்கிறீர்கள்.அவர்களுக்கு நம் நன்றி உரியது.)

தமிழக அரசு, கோயில் யானைகளைப் புத்துணர்ச்சி(!) முகாமுக்காக 48 நாட்கள் முதுமலை காட்டில் பாகன்களோடு அனுப்பி வைக்கிறது. இவற்றை லாரிகளில் ஏற்றும் சிரமம் ஒரு பக்கம். திரும்பிவந்தபிறகும் இதே உண்டைகட்டியும், கால்சங்கிலியும் தொடரும் தானே? இங்குதான், தற்கால சூழ்நிலையில் கோயில்களுக்காக யானைகள் தேவைதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருவானைக்காவல் போன்ற யானை வழிபட்டதாகப் புராணங்களில் கூறப்படும் தலங்களில் மட்டும் அந்த ஐதீகத்திற்காக யானைகள் பராமரிக்கப்பட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஒரு யானையைப் பராமரிக்க ஆகும் செலவில் பல பசுக்களைக் கோயில்வளாகத்தில் வளர்க்கலாம். அவற்றால் பயனும் உண்டு.(யானையால் என்ன பயன் என்பது வேறு விஷயம்) . மக்களுக்கு-- குறிப்பாக பாகன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவும் முடிகிறது. பசுமாடுகளைப் பராமரிக்க ஒரு சிலரை நியமிக்கலாம். கால நடை மருத்துவர் மூலம் அவற்றின் நலனையும் பேணலாம். யானைகளுக்கும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். அவற்றிற்கு உண்மையிலேயே "புத்துணர்ச்சி" கிடைக்கும். அரசாங்கப் பணமும் மிச்சமாகும்.

Thursday, December 1, 2011

ஆண்டவனே கதி


பல கோயில்கள் "கமர்ஷியலாக" ஆகி வருவதாக அங்கலாய்த்துக் கொள்வோர்கள் உண்டு. அப்படி ஆகாத கோயில்கள் ஏராளமாக இருக்கும்போது அங்கு ஏன் செல்லக்கூடாது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மின்சாரக் கட்டணம் என்று வரும்போது அரசாங்கமும் கோயில்களைக் "கமர்ஷியல்"களாகவே பார்க்கிறது. வீடுகளுக்கான கட்டணத்தையே கோயில்கள் செலுத்திக் கொண்டு இருந்ததை "கமர்ஷியல்" கட்டணமாக அரசு உயர்த்தியபோது ஒருசிலர் அதிருப்தி தெரிவித்தபோது, " சுவாமிக்குப் பின்னால் ஒளி வட்டம் இருப்பது போல் படம் போடும் போது மின் விளக்கு எதற்கு?" என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஏளனம் பேசியவரும் உண்டு.

தற்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த உத்தேசித்திருக்கும்போது, குறைந்த கட்டணத்தையும், பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்தையும் உயர்த்த சிபாரிசு செய்யப்படுகிறது. எல்லாக் கோயில்களும் பழநியோ,திருச்செந்தூரோ,மதுரையோ அல்ல. எந்த விதமான வருமானமும் இல்லாத கிராமக் கோயில்கள் ஏராளம். நிலங்களில் இருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் தவிக்கும் ஆலயங்கள் ஏராளம். நிலைமை இப்படி இருக்கும் போது, மின்கட்டண உயர்வை அக்கோயில்கள் எப்படி சமாளிக்க முடியும்? .  அரசுக்குப் பரிந்துரைக்கும் குழு இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

வீடுகளுக்கான மின் கட்டணமும் உயர்வதைத் தட்டிக்கேட்போர் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளும் இருக்கின்றன. ஆலயங்களோ அனாதையாக விடப்படுகின்றன.இவ்வளவு ஆன்மீகவாதிகளும்,மடாதிபதிகளும் இருந்தும் யாரும் அதிருப்தி தெரிவிக்கக் காணோம்.மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு, மடங்கள் வெளியிடும் பத்திரிகைகளுக்கும் தபால் தலை கட்டணத்தை உயர்த்தியபோது, திருவாதிரையான் திருவருட்சபை , அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதன் நகல, திருவாவடுதுறை ஆதீன மாத இதழான "மெய்கண்டார்"ல் வெளியாயிற்று.

ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பெரும்பாலும் அப்பூஜைகள் பகலிலேயே நடக்கின்றன என்றாலும் கிணற்று/ ஆழ் துளை நீரைப் அபிஷேகத்திற்காகப்பயன்படுத்த வேண்டி மின்சார மோட்டார் வேண்டியிருக்கிறது. மழைக் காலங்களில் பகல் நேரத்திலேயே கோயிலுக்குள் கும்மிருட்டாக இருப்பதால் மின் விளக்குகள் தேவைப் படுகின்றன. பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வரவில்லையா எனக் கேட்கலாம். உண்மைதான். எண்ணெய் வாங்க மன்னர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்கள் கைப்பற்றப்பட்டு விட்ட தற்காலத்தில் இது சாத்தியமில்லாமல் போய் விட்டது அல்லவா? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தும், "மின்சார நிதி" என்று மக்களிடம் கை ஏந்தவேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டு விட்டன நம் ஆலயங்கள்? ஒரு பல்பு செயலிழந்து போனால் உபயகாரர் யாராவது வாங்கிக்கொடுத்தால் தான் அதற்கு விடிவு காலம்.

இப்படிப்பட்ட துர்பாக்கியக் காலகட்டத்தில் பக்தர்கள் செய்யக்கூடியதும் உண்டு. குறைந்த மின் செலவு ஆகும் பல்புகளை ஆலயத்திற்கு வழங்கலாம். சூரிய ஒளிமூலம் மின்சாரம்  பெறும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இரவு நேரத்தில் ப்ராகாரங்களுக்காவது ஒளி இவ்விதம் பெற முடியும். தேவையற்ற இடங்களில் மின்சாரம் வீணாவதைத் தடுப்பதாலும் மின் கட்டணம் குறையும்.

மின் வெட்டுக்களும், மின் கட்டண உயர்வும் இருக்கும்போது, கோயில்களைப் பாதுகாக்கும் "பாதுகாப்பு அலாரங்களுக்கு" என்ன வேலை? பழையபடி பாதுகாப்பின்றிக் கிடக்க வேண்டியதுதான். இவ்வாறு அக்கறையின்றி விடப்பட்ட ஆலயங்களுக்கு என்னதான் தீர்வு? தோன்றாத்துணை ஆகிய இறைவனுக்காக நீதி மன்றங்களில் முறை இடலாம். எதற்கெல்லாமோ நிலுவை பெறப் படும் இக்காலத்தில் இதற்குக் கிடைக்காமலா போய்விடும்?  ஆனால் இப்பொதுநல வழக்கை இறைவனுக்காகத் தொடுப்போர்தான் இல்லை. அனாதை ஆகிவிட்ட ஆலயங்களுக்கு அந்த ஆண்டவனே கதி.

Friday, November 25, 2011

தெரிந்த புராணமும் திரிக்கப்படும் "கதைகளும்"

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் எழுதும் ஆன்மீகக் கட்டுரைகள் பிழை இல்லாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கடைசிபக்கத்தை எப்படியோ நிரப்பி விடுகிறார்கள். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதும் இல்லை. அண்மையில் ஒரு ஆன்மீக இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர், "நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க" என்ற தலைப்பில் தனக்குத் தோன்றிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்!

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நந்தனாருக்காக நந்தி விலகியதைப் பற்றித்தான். புராணத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு, நந்தியை சிவபெருமான் விலகச் சொன்னார் என்று மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இது நடந்த இடம் தில்லை என்று எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் திருப்புன்கூர் சிவலோகநாதர் சன்னதியின் முன்னால் இருக்கும் பிரம்மாண்டமான நந்தியே விலகியது என்பதை," புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளி.." என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

இக்காலத்தில் குறுக்கே மறைத்துக் கொண்டு நின்றால், "நந்தி மாதிரி" மறைப்பதாகத் தவறாகக் கூறி வருகிறார்கள். சிவாலயங்களிலாவது நந்திக்குப் பின்னால் நின்றால் கொம்புகளுக்கு நடுவழியாகப் பெருமானை தரிசிப்பார்கள். பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு முன்னால் கைகூப்பி நிற்கும் கருடாழ்வாரைச் சுற்றி சன்னதியே கட்டியிருப்பதைப் பார்க்கலாம். இப்படி இருந்தும், "கருடன் மாதிரி குறுக்கே மறைப்பதாகக் " கூறுகிறார்களா என்ன?


சரி! இனி அவர் எழுதியுள்ள பட்டீஸ்வரம் கதைக்கு வருவோம். சம்பந்தர் சிவிகையில் வருவதைக் காண "எம்பெருமாட்டி ஆசைப்பட்டாளாம்." அத்தலத்தில் இறைவன் முன்பிருக்கும் நந்திகள் சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம். இதோடு விட்டால் பரவாய் இல்லை. நந்தியைத் தள்ளிவைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா" என்று ஒரு அறிவு ஜீவி கேட்டதாக வேறு எழுதியிருக்கிறார். அவர் கேட்டதாகவே இருக்கட்டும். அக்கேள்வி உலகம் முழுவதுக்கும் தெரிந்துதான் ஆக வேண்டுமா? இதெல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். " நம்பிக்கை --- அதானே எல்லாம்?" என்று ஒரு நகைக்கடை விளம்பரம் செய்வதையுமா இவர் டீ.வீ யில் பார்க்கவில்லை?


"தெரிந்த புராணம் ... தெரியாத கதை" என்ற தலைப்பில் அதே ஆன்மீக இதழின் வேறு ஒரு பக்கத்தில் , தனது பெயரின் முன் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு ஒருவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. பைரவரையும் பிக்ஷாடனரையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருக்கிறார். " பரமேஸ்வரனே பாவம் செய்த கதை" என்று வேறு எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. முதலில் இவருக்குத் தெரியாத/ படித்திராத புராணத்தைக் கூறுவோம். பதினெட்டுப் புராணங்களை நமக்குத்தந்த வியாச பகவான், அவற்றுள் ஒன்றான ஸ்காந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டம்,தக்ஷ காண்டத்தில், சிவாம்சமான பைரவ மூர்த்தி, பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவனது அகந்தையை அகற்றி, அவனது கபாலத்தில் விஷ்ணு தனது நெற்றியைப் பிளந்து, ரத்தத்தால் நிரப்ப முற்பட்டபோது மூர்ச்சை ஆகவே, மாங்கல்யப் பிச்சை கேட்ட மஹாலக்ஷ்மிக்கு இரங்கி விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். சிவனுக்குப் பிரமகத்தி தோஷம் வந்ததாகக் கூறவில்லை.


பிக்ஷாடன மூர்த்தம் என்பது தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகக் கொண்ட கோலம். இதற்கும் பைரவ மூர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?? எந்த தெய்வத்தையும் இழிவு படுத்தாமல் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இன்ன இன்ன கோத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய ஆலயங்கள் என்றும், இன்ன ராசி மற்றும் இன்ன நக்ஷத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதட்டும். அப்படியாவது சிலர் அக்கோயில்களுக்குப் போகிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது.


ஆன்மீக உலகில் மலைகள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவரவர்கள் பிரபலங்களாகிவிட்டால் போதும்.பிறகு ஆன்மிகம் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பிரசுரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் தான் தயாராக இருக்கிறார்களே?

Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?



ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?